தண்ணி வரல !

காலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்!’ ’என்ன ப்ரச்னை? வாட்டர் மோட்டார் வேலைசெய்யவில்லையா?’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது!’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் லட்சணம் இப்படித்தானிருக்கிறது. காலை எழுந்தவுடன் ஒரு வாக் போனால் எதிர்ப்படுவது தண்ணீர் டேங்கர்கள்தான். இந்தத் தண்ணீர் டேங்கர்களும் இப்போதெல்லாம் சொன்னவுடன் வருவதில்லை. உங்கள் அவசரத்தைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அவர்களது ’ரெகுலர்’ கஸ்டமர்களைக் கவனித்துவிட்டு அப்புறம்தான் உங்களிடம் வருவார்களாம். அவர்கள் ராஜ்யத்தின் நியதிகள். வேறு வழியில்லை. அவஸ்தையிலிருப்பவன் அனுசரித்துத்தான் போகவேண்டும்.

ஒருகாலத்தில் இந்தியாவின் ’கார்டன் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட அழகான, சிறு நகரமாக இருந்தது இது. இன்று காலத்தின் கந்தர்வகோளத்திற்கேற்ப, ஊதி, ஓவராகப் பெருத்து நடக்கமுடியாமல் தள்ளாடுகிறது. கடந்த 15 வருடங்களாக பெங்களூர் கண்ட அபரிமித ‘வளர்ச்சி’யின் பின்விளைவு இது. City planning என்றெல்லாம் வெளிநாடுகளில்தான் சொல்கிறார்கள். நமது நாட்டில் இதைப்பற்றி ஆரம்பித்தால் ’அப்படீன்னா என்ன?’ என்று திருப்பிக்கேட்பார்கள் தெள்ளுமணிகள். கொள்ளையடிப்பதும், சுருட்டுவதும், சூறையாடுவதையும் தவிர வேறெந்தத் திட்டமும் இங்கே அரசாள்பவர்களிடம் இருந்ததில்லை. எப்படியாவது நாற்காலியைக் கைப்பற்றிவிடவேண்டும் எனத் துடிக்கும் எதிர்க்கட்சிக்காரர்களிடமும் இல்லவே இல்லை. இனியாவது வருமா என்கிற நம்பிக்கையும் நமக்கில்லை. எந்த ஒரு மாநிலத்தையும் கட்சியையும் குறிப்பிட்டு இதனைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதுதான் சுதந்திரத்துக்குப்பின் ஒரு நாடாக இந்தியா அனுபவித்துவருவது.

அன்று சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் ரியல் எஸ்டேட், BBMP, லோக்கல் கவுன்சிலர் என்று உலவுகின்ற ஆசாமி. சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் லொகாலிட்டிக்கு அருகில் புதிய ப்ராஜெக்ட் வரப்போகிறதாம். வேறென்ன? கட்டிடங்கள்தான். வில்லாக்கள் அமையவிருக்கின்றன என தூரத்தில் கைகாண்பித்தார். ’அங்கே ஒரு குளம் இருக்கிறதே!’ என்றார் இன்னொருவர். ‘அது அவர்களின் அலுவலகக் கோப்பில், மேப்பில்தான் இருக்கிறது!’ என்று சிரித்தார் இவர். ’இப்போது போய்ப்பாருங்கள். கொஞ்சம் ஈரம் தென்படலாம். மற்றபடி மூடியாச்சு. குளமெல்லாம் போயே போச்சு!’ என்றார் ரொம்ப சாதாரணமாக. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு வயிற்றைக் கலக்கியது. ’மெட்ரோலைன் போடுகிறோம், ரோடை அகலப்படுத்துகிறோம் என்று 50-60 வருட வயதான நாட்டு மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியாயிற்று. புறநகர்ப்பகுதிகளிலும் மரங்கள், பச்சைவெளிகள் வேகமாக மறைந்துவருகின்றன. புதிய புதிய ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகள் முளைக்கின்றன. அசுரவேகத்தில் வளர்கின்றன. லேக்வியூ அபார்ட்மெண்ட்ஸ் எனப் பெயர்ப்பலகை தெரிகிறது. அபார்ட்மெண்ட் முழித்துக்கொண்டு உற்றுப்பார்க்கிறது. லேக் எங்கே? ஏரிகள், நீர்த்தேக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருடங்களாகிவிட்டன. அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடு கட்டிட முதலாளிகளின் சுற்றுச்சூழல் வேட்டை. அவர்களது ப்ராஜெக்ட் ப்ரோஷர்களைப் (brochure) பார்த்தால் கட்டிடங்களுக்கு மத்தியில் அல்லது ஒருபகுதியில் 70% பச்சைவெளி எனப்போட்டிருக்கும். என்னவோ பெங்களூர் ஏற்கனவே பாலைவனமாக இருந்ததுபோலவும் இந்த மேதாவிகள்தான் வந்து எல்லாவற்றையும் பச்சையாக்கி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுபோலவும் விளம்பரம். என்ன ஒரு அயோக்கியத்தனம். மிஞ்சி மிஞ்சிப் போனால், கொஞ்சம் நல்லபேர் வாங்கியிருக்கும் சில கட்டிட கம்பெனிகளின் ப்ராஜெக்ட்டுகளில் கொஞ்ச மரங்களை அழகுக்காக நட்டுவைத்திருப்பார்கள் முகப்பில். எத்தகைய மரங்கள்? வெளிநாட்டு மண்ணின் கூறுகொண்ட பனை ஜாதி மரங்கள், ஈச்சை மரங்கள் போன்றவை. வேம்பு, பூவரசு, பூங்கொன்றை, ஆல், அரசு, மா, தென்னை போன்ற நிலத்தை செழுமைப்படுத்தி, சுற்றுச்சூழலை சீர்படுத்தும், பறவையினங்களுக்கு உணவுதரும், புகலிடமாகும் நாட்டுமரங்களின் இடத்தில் தூண் தூணாகப் பனை, ஈச்சை மரங்கள். ஒரு குருவி, காகம்கூட இவற்றின்மேல் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ஒண்டுவதற்கு நிழலாவது சரியாகக் கிடைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை.

இப்படி ஆங்காங்கே புதிய புதிய கட்டிடங்கள், கான்க்ரீட் மலைகள் தினந்தினம் எழும்பிக்கொண்டே இருக்கின்றன பெங்களூரில். அங்கு வசிக்கும், வசிக்கப்போகும் மக்களுக்குக் குடிப்பதற்கு, புழங்குவதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? நகராட்சித் தண்ணீர் இணைப்பு பெரும்பாலான குடியிருப்புப்பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கட்டிட வளாகத்திற்கும் ஆழ்துளைக் கிணறுகளின் மூலமாகத் தண்ணீர் வசதி ஆரம்பத்தில் கட்டிட முதலாளிகளால் செய்துதரப்படுகிறது. ஏற்கனவே ஊரில் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகளைத் தூற்று மூடியாயிற்று. மரங்களை வெட்டி, விற்று ஏப்பம் விட்டாயிற்று. முறையாக மழைவருவதும் பொய்த்துப்போக ஆரம்பித்து விட்டது. தண்ணீருக்காக பூமியை சதா தோண்டிக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? ஆழ்துளைக்கிணறுகள் எத்தனை நாளைக்குத் தாங்கும்? இரண்டு வருடங்களுக்குப்பின் நீர்வற்றி, வெறும் துளைதானே மிச்சமிருக்கும். நிலத்தடி நீர் என்பதும் கானல்நீராகிவிடுமே? நகரம் இவ்வளவு வேகமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகியிருக்கிறது. எவனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இத்தனை நடந்துகொண்டிருக்கையிலும், புதிய கட்டிட முயற்சிகளை சீர்படுத்த, சில குடியிருப்புப்பகுதிகளிலாவது சூழல் நலம் கருதி மேற்கொண்டு கட்டுமானங்களைத் தவிர்க்க, தடைவிதிக்க, அரசிடமிருந்து எந்த ஒழுங்குமுறையும், வரையறையும் இல்லை. சட்டதிட்டங்கள் இயற்றப்படுவதாக, முயற்சிகள் செய்யப்படுவதாகத் தோன்றவில்லை. அரசியல்வாதிகளின், அரசியல் அமைப்புகளின் பேச்சில் இவை இருக்கலாம். காரியத்தில் ஒரு மண்ணும் இல்லை.

இப்படிப் பெரிதாக வாயைத் திறந்துவைத்து, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் என எல்லா நலன்களையும் கபளீகரம் செய்து பூதாகாரமாக வளர்ந்துவரும் நகரில், ஏற்கனவே வசிப்பவர்களும், புதிதாகக் குடியேறியவர்களும் தொடர்ந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது. குடிநீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை எப்படியோ தங்களால் இயன்ற அளவுக்குப் பூர்த்திசெய்ய முயற்சித்தபடி.

**

One thought on “தண்ணி வரல !

Leave a comment