என்ன செய்தார்கள் தமிழர்களென்று உனக்கு மூக்குக்குமேல் வந்தது இப்படி ஒரு கோபம்? ஏனிந்தக் கடும் குரோதம்? மேலும் மழைக்கு வாய்ப்பாமே? ஏன்? சென்னையில், சுற்றுப்புறத்தில், எங்கேயாவது தரை தெரிகிறதா, வானிலிருந்து பார்க்கையில்? இயற்கைப் பெரும் சக்தியே! என்றுதான் தணியும் உன் கொலைவெறி ? இப்படியெல்லாம் இயற்கையை நோக்கிக் கேட்டு விம்முகிறது பாழும் மனம்.
தீபாவளிக்கு முன்னிருந்தே ஆரம்பித்தது மழை. ஏதோ கொஞ்ச நாள் பெய்யும், விட்டுவிடும் எனத்தான் எதிர்பார்த்தார்கள் சென்னைவாசிகள். மூன்று வாரங்கள் முடிந்தன. மேலிருந்து கொட்டுவது நின்றபாடில்லை. நிற்குமா? நிர்மூலந்தானா என்கிற பயம் கவ்விக்கொண்டது. நகரின் பிரதான ஏரிகளில் தண்ணீர் ஏறி ஆபத்தான அளவைத் தாண்டியாகிவிட்டது. தண்ணீரே கண்டிராத பேர்மறந்துபோன ஏரிகளெல்லாம் நிறைந்தன, உடைந்தன. குளங்கள், குட்டைகள் காணாமற்போய்விட்டன. நகரில் முன்பு சாலைகள் என்பதாக ஏதும் இருந்ததா என்பதே சென்னை மக்களுக்கு மறந்துபோய்விட்டது. இப்படி ஒரு வெறுப்புத் தாக்குதலா இயற்கையிடமிருந்து?
தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற வெள்ளத்தடுப்பு, அணைகளில் நீர்க்கட்டுப்பாடு, பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி என ஆரம்பத்திலிருந்தே இயன்றவரை இயங்கிக்கொண்டிருக்கிறது. அரசின் அனைத்து சேவைத் துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் விடுப்பு மறுக்கப்பட்டு அனைவரும் 24-மணி நேர மக்கள் சேவைக்காக பணிக்கப்பட்டுள்ளனர். இப்படி ஒரு வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து என்பதே இல்லாமல் போய்விட்ட நிலையில், தண்ணீரில் தவிக்கும் வெவ்வேறுபகுதி மக்களை அடைவதெப்படி? வெள்ளப்பெருக்கினூடேயும் கூடுமானவரை அரசுப் பேருந்துகள் இரவு, பகலாக இயங்கிவருகின்றன. 24-மணிநேர அவசரகால அடிப்படையில் விடாது பணி செய்யும் ராணுவம், தேசியப்பேரிடர் நிவாரணப் படை, தீயணைப்புப்படை,ஓட்டுநர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற அத்தியாவசிய சேவை அதிகாரிகள்/ஊழியர்களின் நிலைமையையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்களின் குடும்பங்களில் என்னென்ன பிரச்சினைகளோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
நோய்வாய்ப்பட்டவருக்கு உதவியாகவும், நோய்த் தடுப்பிற்கெனவும் நிலவேம்புக்கஷாயம், நிலவேம்புச்சாறு கலக்கப்பட்ட மூலிகைக்குடிநீர் இதுவரை 24.61 லட்சம் தமிழ்நாடு அரசின் சுகாரத்துறை வழங்கியிருக்கிறது. இந்தப் பணி, விட்டுவிட்டு மழைபெய்துகொண்டிருந்த, டெங்கு காய்ச்சல் வர ஆரம்பித்த அக்டோபரிலேயே துவக்கப்பட்டுவிட்டது. சாலைகள் வெள்ளநீரால் மூடப்படுமுன், எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் ஆம்புலன்சில் டாக்டர், செவிலியர் உதவியுடன் நோய்க்கு மருந்து மற்றும் தண்ணீர்-தொடர்பான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது பாராட்டுக்குரிய விஷயம். ஜெயலலிதாவின் அரசு ஆபத்தான பகுதிகளில் மின்சார சப்ளையை முன்கூட்டியே நிறுத்தி வைத்திருக்கிறது. மின்சார ட்ரான்ஸ்மிட்டர் எல்லாம் வெள்ளநீரில் அமிழ்ந்திருக்கும் நேரத்தில், தண்ணீரில் நிற்கும் மக்கள் மின்சாரம் தாக்கி இறந்துவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கை இது. இயற்கைப் பேரிடரின்போது இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும், மாநில அரசு இத்தகைய முன்னெச்செரிக்கைப் பணி செய்ததில்லை.
நிற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் எமகாத மழையினால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்வருகிறது. ரன்வேயிலும் தண்ணீர் நுழைந்துவிட்ட சென்னை விமானநிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்வதற்கும் வழியில்லை என்கிற பரிதாப நிலை. தேசியப்பேரிடர் தடுப்புப்படை, ராணுவம், கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியவை மத்திய அரசினால் மக்கள்சேவைக்கென முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோதி வான்படை விமானத்தில், அரக்கோணம் ராணுவ விமானதளத்தில் வந்திறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்று, சென்னையின் வெள்ளநிலையைப் பார்வையிட்டார். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவும் ஹெலிகாப்டர் மூலம் நீரில் அமிழ்ந்திருக்கும் சென்னை நகர்ப்பகுதிகளைப் பார்வையிட்டார். இக்கட்டான இந்த நேரத்தில், மத்திய அரசு அனைத்து அவசர உதவிகளையும் தமிழ்நாட்டிற்கு வழங்கும் எனக் கூறியதோடு, முன்பு கொடுத்த ரூ.939 கோடிக்கும் மேலாக, 1000 கோடி ரூபாயை அவசர உதவியாகத் தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
தற்போது இந்திய ராணுவத்தினர் சென்னை புறநகர் பகுதிகளில், வீடுகளிலும், மருத்துவனை மனைகள், மற்றும் பொது இடங்களிலும் சிக்கியுள்ள மக்களைப் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். இன்று மாலைவரை, சுமார் 10000-க்கும் மேலானோர் ஆபத்தான பகுதிகளிலிருந்து ராணுவம், கடற்படை மற்றும் தேசியப் பேரிடர் பாதுகாப்புப் படைகளினால் மீட்கப்பட்டுள்ளனர். விசாகபட்டினத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் ராஜாலி, உணவு, மருந்து சப்ளையுடன் சென்னை துறைமுகத்துக்குப் பாயுமாறு மோதி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய வான்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உச்சியில், தனிவீடுகளின் மொட்டைமாடிகளில் தஞ்சம் புகுந்தோருக்கு உணவு, மருந்துப் பொட்டலங்களை வீச ஆரம்பித்துவிட்டது. இன்னலுற்ற மக்களின் துயர்துடைக்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பங்கு எப்போதும்போல் சிறப்பானது. பெரிதும் பாராட்டப்படவேண்டியது. மேலும் மக்கள் பணிக்கென, ராணுவ வீரர்கள் பெங்களூர், சிகந்தராபாத், ஹைதராபாத் பகுதிகளிலிருந்து சென்னைக்கு உடனடியாக அனுப்பப்பட மோதி அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய அவலநிலையில், சாதாரண மக்களின் மனோதைரியம், எந்தவிதபேதமும் இன்றி, ஒருவருக்கொருவர் உதவும் பண்பு ஆகியவை தங்கள் கவனத்துக்கு வந்ததாக நெகிழ்ச்சியோடு பாராளுமன்றத்தில் கூறினார் அமைச்சர் வெங்கய்யா நாயுடு. தனிமனிதர்களும், தன்னார்வக்குழுக்களும், அமைப்புகளும் பாதிக்கப்பட்டோருக்கு, உணவுப்பொட்டலங்கள் வழங்கி தங்களால் ஆனதை செய்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது. மனித அவலத்தோடு, எத்தனையோ கால்நடைகளும், வளர்ப்புப் பிராணிகள், கோழிகளும் கொடும் வெள்ளத்தில் மாய்ந்துவிட்டன. சென்னையிலிருந்து இயங்கும் ப்ளூ க்ராஸ்(Blue Cross) என்கிற வளர்ப்பு விலங்குகளுக்கு வாழ்வு/மருத்துவ உதவிசெய்யும் நிறுவனமும் தன்னாலியன்றதை செய்துவருகிறது.
`ஊரு ரெண்டுபட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்` என்றொரு பழமொழி உண்டு. அப்பாவி மக்கள் சொல்லவொண்ணாத் துன்பத்தில் தவிக்கும் இந்நிலையிலும், சில அரசியல் கட்சிகள், குழுக்கள், அரசையும் மற்றவர்களையும் மிகையாகக் குறைகூறி, ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் பொதுமக்களுக்கு எரிச்சலூட்டி, தங்களுக்காக அரசியல் ஆதாயம் செய்ய முனைகின்றனர். நமது அரசியல் வாழ்வின் தீரா அபச்சாரம் இது. இத்தகைய அபத்தங்களைத் தாண்டி, மாநில மத்திய அரசு இயந்திரங்கள் முனைப்போடும், கடமையுணர்வோடும் தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது கண்கூடாகத் தெரிகிறது. தண்ணீர் வடிய ஆரம்பித்திருக்கும் சென்னையின் அபூர்வமான சிலபகுதிகளில், பாழ்பட்ட தொடர்புச்சாலைகளும், நெடுஞ்சாலைகளும் வேகமாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன, சென்னையிலிருந்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்த சாலைவழி போக்குவரத்தும் பெரும் முனைப்புடன் தமிழ்நாடு அரசினால் சீர்செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை, மருத்துவசதிகள் போதிய அளவில் வேகமாக பாதிக்கப்பட்டவர்களைப் போய்ச்சேர, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன என்கிற தகவலும் அண்மையில் கிட்டியுள்ளது. மனதிற்கு ஆசுவாசம் தரும் விஷயம் இது.
இயற்கைத் தன் குரோதத்தை மறந்து, சற்றே தழைந்துபோனால்தான் மனிதனும் ஏதாவது முயற்சிக்க முடியும். பாவப்பட்ட சென்னை மற்றும் சுற்றுப்புறத்துக்கும், மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் ஓரளவாவது விமோசனம் கிட்ட வாய்ப்பாக இருக்கும். களத்தில் இறங்கி பணிசெய்ய, அரசு இயந்திரத்துக்கு நிதி வசதியோடு, போதுமான அவகாசம், சரியான காலநிலையும் தேவை அல்லவா. இந்நிலையில், மேலும் மழை அடுத்த 48 மணிநேரத்தில் கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களைத் தாக்கும் என்கிற அறிவிப்பு பதைக்கச் செய்கிறது. கொட்டிக்கொண்டே இருந்தால் அரசும் எங்கேதான் போய் முட்டிக்கொள்ளும்?
சோதனைமேல் சோதனை.. போதுமடா சாமி!
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி!
(கண்ணதாசன்)
**
விரைவில் சீராக ஆண்டவனை வேண்டுகிறேன்…
LikeLiked by 1 person
உண்மை
LikeLiked by 1 person
இருந்தாலும் தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்தே நிறைய தவறுகளை விட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் .
LikeLike
gokulathai indiradinamirundu kulir mazhaiyil katha kannan eano chennai vasigalai kakka varavillai!. sodhanai than
LikeLiked by 1 person