பொறுப்பற்று அலையும் COVIDIOTS !

கொரோனாவின் கோரத்தாண்டவம் நாட்டிலும், உலகெங்கும். நாட்டின் தரைவழி எல்லைகளை மூடி, வெளிநாட்டு விமான வருகைகளை நிறுத்தி, தொடர்ச்சியாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துகளை ரத்து செய்து, மாநிலங்களும் தங்களுக்கிடைய எல்லைகளை மூடி, பொதுப்போக்குவரத்தை நிறுத்தி, இந்திய ரயில்வேயும் தன் மாபெரும் ரயில் சேவையை நிறுத்தி, இப்படி எத்தனை எத்தனையோ செயல்பாடுகள், அமுல்படுத்தப்பட்ட அரசுக் கட்டுப்பாடுகள். கூடவே இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், சோதனைகள், நோய் ஆய்வுச்சாலைகள், நாடெங்கும் லட்சணக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மருத்துவப் படுக்கைகள். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அவசரநிலையில் உண்மையில் இயங்குகின்றன. ஆனால் எல்லா நன்முயற்சிக்கும், பொதுமக்களிடமிருந்தும் 100 சதவிகித ஒத்துழைப்பும் தேவை அல்லவா?

வெளிநாட்டிலிருந்து ஓசைப்படாமல் நுழைந்துவிட்டவர்களை, ‘ஹோம் க்வாரண்டைன்’ என கையில் மையால் ஸ்டாம்ப் செய்து அனுப்பியும், வீட்டில் மூடிக்கொண்டு கிடக்காமல், ஊர் ஊராக அலையும் பொறுப்பற்ற ஜென்மங்களை போலீஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டிப் பிடித்துவருகிறது. ஒரு உலகளாவிய மெடிக்கல் எமர்ஜென்சி நிலையில், நாட்டில் வேகமாகப்பரவும் விசித்திரக்கூறுகளை உடைய ஆபத்தான ஒரு நோயை, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதின் மூலமே (Social distancing) ஒவ்வொருவரும் எதிர்க்கவேண்டும். தன்னை, தன் குடும்பத்தை, வாழும் சமூகத்தைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என எத்தனை முறைதான் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து, நாட்டின் பிரதமர், முதல் அமைச்சர்கள் மூலம் அறிவிப்பது, கேட்டுக்கொள்வது. மருத்துவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், மீடியா வழியாகவும் விளக்குவது? விதவிதமாக, குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் சொல்லிக்கொடுப்பது? கடந்த வாரங்களில் இப்படி ஒரு massive public exercise, விழிப்புணர்வு இயக்கமாக நாடெங்கும் செயல்படுத்தப்பட்டும், எல்லோருக்கும் நிலைமையின் தீவிரம் இன்னும் புரியவில்லை போலிருக்கிறதே. குறிப்பாக பீஹார், உபி போன்ற மாநிலங்களில் பலருக்கு ஏறமாட்டேன் என்கிறதே மண்டையில்? மண்டையைப் போட்டபின் என்னத்தைப் புரிந்துகொள்வார்கள் இவர்கள்?

ஊரடங்கை மீறியவர்களுக்கு குஜராத் போலீஸ் தண்டனை!
ஊரடங்கு, ’லாக்டவுன்’(lockdown) சமயங்களில், அனுமதிக்கப்பட்ட சொற்ப நேரத்தில் கடைக்குச் சென்று அத்தியாவசியப்பண்டங்களை வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொண்டால் தப்பில்லை. ஒருவாரத்திற்காவது காய்கறி, உணவுப்பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வது குடும்பங்கள் விஷயத்தில் வழக்கம்தான். ஆனால், மாஸ்க், ஸானிடைஸர், டிஷ்யூ, டாய்லெட் சோப், குனைன் மருந்துகள், யூகலிப்டஸ் ஆயில் என ஒரேயடியாக ஸ்டோர்களிலிருந்து கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக்கொண்டு வீட்டில் அடுக்கி அழகுபார்ப்பது, முட்டாள்தனம் அல்லாமல் வேறென்ன? அதேபோல், ’வெளியே போகக்கூடாது, வீட்டிலுள்ளேயே கிடந்து உன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்க உதவி செய்’ எனப் பச்சையாகச் சொல்லப்பட்டபோதும், உத்தரவிடப்பட்டபோதும், அவ்வப்போது நைசாக வீட்டிலிருந்து வெளியே நழுவுவது, நாலைந்து பேராக முடிச்சு, முடிச்சாக மூலையில் நின்று கதைப்பது, இளிப்பது, டூவீலர், கார்களில் ஊர்வலம் செல்ல முயற்சிப்பது என்பதெல்லாம் கேவலமான, பொறுப்பற்ற செயல்களல்லவா? சமூகவிரோதச் செயல்கள் என அரசுத்துறைகளால் இவை வகைப்படுத்தப்படும். தண்டனை கிடைத்தால் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி முட்டாள்களாக நடந்துகொள்ளும் ஆசாமிகளைக் குறிப்பிட, ஒரு புதிய ஆங்கில வார்த்தை சிருஷ்டிக்கப்பட்டுவிட்டது ட்விட்டர் உலகத்தில். Covidiot ! கோவிடியட். எப்படி இருக்கு! ‘கோவிட்-19’ வியாதியின் ஆபத்து நிலையிலும், முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் மூதேவிகளைக் குறிக்கும் சொல். Covid+idiot. இத்தகைய கோவிடியட்-கள் பிரதானமாக உலவும் பிரதேசங்கள் பீஹார், உ.பி.போன்றவை எனத் தெரியவருகிறது. பெங்களூரிலும் சில இடங்களில், ஊரடங்கி இருக்காமல், இரவில் மக்கள் உல்லாசமாகத் திரிந்ததாகவும் செய்தி இப்போது உலவுகிறது. அநாகரீகம். அவமானம்.

**