மூன்றாவது டி-20 ஐ 12 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. மேத்யூ வேடின் (Mathew Wade)அதிரடி பேட்டிங்கிற்கு கொஞ்சம் மேலேயே போய் பதில் தந்தார் கேப்டன் கோஹ்லி. Class act. ஆனால் போதவில்லை. மிடில்-ஆர்டர் நொறுங்க, பாண்ட்யாவும் 20 ரன்னில் விழுந்ததால், இந்தியா வெல்ல இயலவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஆஸ்திரேலிய பௌலர்கள் (குறிப்பாக ஸ்பின்னர் ஸ்வெப்ஸன்) அபாரமாக வீசி இந்தியர்களைத் தடுமாறவைத்தார்கள். அவர்கள் இந்தியாவைவிட ஒரு படி மேலேயே இருந்தார்கள். ஜெயித்ததே நியாயம்!
2-1 என்று தொடர் இந்தியாவின் கையில் வந்தது. தொடர் நாயகன் ஹர்திக் பாண்ட்யா நடராஜனின் கையில் தன் விருதைக் கொடுத்து ’நீ தாம்ப்பா இந்த விருதுக்கேற்ற ஆளு!’ என்று உணர்ச்சி வசப்படுகிறார். தொடர் கோப்பையை கேப்டன் கோஹ்லியும் அவரிடம் கொடுத்து நிற்க, வீரர்கள் வெற்றிமுகம் காட்டிப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நடராஜனுக்குத் தலை சுற்றியிருக்கும்! Natarajan is the find of the series, no doubt என்கிறார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர். இப்படியே இவர் தொடர்ந்தால், அடுத்த ஆண்டின் டி-20 உலகக்கோப்பைக்கான அணியின் வியூகங்களில் இவர் இடம்பெறலாம் என்கிறார் கோஹ்லி. ஆஸ்திரேலிய மைதானத்தில் ஷமி, பும்ராபோன்ற அனுபவ வீரர்களே தத்தளிக்கையில், எதிரி யார் எனத் தலையைப் பிய்த்துக்கொள்ளாமல், துல்லியம், variations, கடின உழைப்பு என மட்டும் மனதைக் குவியவைத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார் நடராஜன். சாய்த்தபின்பு? கூச்சலோ, கொண்டாட்டமோ ஏதுமில்லை. பந்தை எடுத்துக்கொண்டு அடுத்து வீசப்போவதைப்பற்றி சிந்தித்தவாறே செல்லும் நடராஜன். இதில் கபில்தேவின் சாயல். இந்தியர்கள் புகழ்வது இருக்கட்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் பெரிசுகளும், இந்தக்காலத்தில் காணக்கிடைக்காத அந்த எளிமையை, பண்பை கவனிக்கத் தவறவில்லை.

டெஸ்ட் மைதானத்திற்கு கதை மாறுகிறது டிசம்பர் 17-லிருந்து. முதல் டெஸ்ட் அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில் இரவு-பகல் ஆட்டம். இந்திய பேட்டிங் கோஹ்லி, புஜாரா, ரஹானே, ராஹுல் என மையம் கொள்ளும். துவக்கத்தில் ப்ரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால் – இருவரில் ஒருவர் நுழைய வாய்ப்பு. அனேகமாக வ்ருத்திமான் சாஹா விக்கெட்கீப்பராக பங்களிப்புசெய்வார். இந்தியாவின் பௌலிங் ஆஸ்திரேலியாவின் வலிமையான பேட்டிங்கிற்குப் பெரிதாக சவால் விடுக்கும் எனத் தோன்றவில்லை. வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவோடு, உமேஷ் யாதவ் மற்றும் அனுபவம் இல்லாத, ஆனால் சாதிக்க ஆசைப்படும் முகமது சிராஜ் (ஐபிஎல் பெங்களூர் அணி) இருக்க வாய்ப்பு. ஒருவேளை சிராஜ் சேர்க்கப்படவில்லை எனில், நவ்தீப் செய்னி வரலாம். ஒரே ஒரு ஸ்பின்னர்தான் இந்திய அணியில் இருப்பார். அந்த நிலையில் அனுபவ வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு. சிட்னி டெஸ்ட்டில் இரண்டு ஸ்பின்னர்கள் ஆடலாம். அப்போது அஷ்வினோடு ஜடேஜா சேர்ந்துகொள்வார். ஜடேஜாவின் வலிமையான பேட்டிங் அணிக்கு உகந்தது. காயத்திலிருப்பதால், முதல் டெஸ்ட்டிற்குள் அவர் நுழைவதற்கான வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது.
முதல் டெஸ்ட்டிற்குப் பின் கோஹ்லி விடுவிக்கப்படுவதால், அவரிடத்தில் ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறலாம். கோஹ்லியில்லாத இந்திய அணிக்கு அஜிங்க்யா ரஹானேதான் கேப்டன். இந்தத் டெஸ்ட் தொடர், இந்தியாவுக்கு வேறொரு கதையைச் சொல்லக்கூடும்.
**