காலையில் பார்க் ஈரமாக இருந்தது. ராத்திரி மழையின் விளைவு. நாலு ரவுண்டு சுற்றி வந்தபின், ஓரமாகக் காத்திருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். கொஞ்சம் காத்து வாங்குவோம். ஆகாயத்தில் அழகு. பூமியில் சிலிர்ப்பு. பறவைகளின் சலசலப்பு.
ஆ..ஜா ஸனம்..
மதுர சாந்தினீ மே ஹம்..
.. ..
ஜூம்னே லகேகா ஆஸ்மா..ன்
ஜூம்னே லகேகா ஆஸ்மான்
50-களின் ராஜ்கபூர்-நர்கீஸ் படப்பாட்டை மொபைலிலிருந்து மென்னலைகளாகப் பரவவிட்டு ஆழ்வாரானேன்.
Bheegi.. bheegi.. ராத் மே(ன்)
Dil கா.. dhaaman.. thaam லே(ன்)..
கோயி.. கோயி.. Zindagi..
ஹர்தம் தேரா.. நாம் லே(ன்)..
.. ..
Zindagi ஹை இக் ஸஃபர்
கௌன் ஜானே கல் kidhar..
– உருக்கிக்கொண்டிருந்தார்கள் லதாவும், ரஃபியும்.
‘என்னாச்சு நேத்திக்கி?’ திடுக்கிட்டுக் குரல் வந்த பக்கம் திரும்ப, ஓ, இவரா?
’என்னாச்சு?’ என்றேன் ப்ளேட்டைத் திருப்பிப்போட்டு. சாந்தினியிலிருந்து அவசரமாகத் திருப்பப்பட்ட அதிர்ச்சி நீங்காமல்.
பாகிஸ்தான் ஜெயிச்சிடுச்சா? ஃபைனலா?
ஓ..! இல்ல.. காலி!
அப்பவே நெனச்சேன். எதுவேணாலும் நடக்கும்னு.
ஆமா.. கிரிக்கெட்ல..
ஷோயப் மாலிக் நிதானமா அடிச்சிக்கிட்டிருந்ததைப் பாத்தேன்.. அப்பறமா முடியல. தூங்கிட்டேன்!
நானுந்தான். அசந்துட்டேன். அப்புறம் அர்த்த ராத்திரிலே எழுந்து கடசி வரைப் பாத்தேன்.
ஃபைனல்ல சொல்லமுடியாது. பங்களாதேஷ் ஜெயிச்சாலும் ஜெயிச்சிரும்..
ஜெயிச்சா, நாகின் டான்ஸ் பாக்கலாம்!
சிரித்தார். ‘கிரிக்கெட்ல இப்பல்லாம் எதுவும் சொல்றதுக்கில்ல.. ‘ கையசைத்து நகர்ந்தார் அந்தப் பெண்மணி.
அது சரி, இந்த மாமிக்கு (65-ஐ நெருங்கலாம் வயசு) கிரிக்கெட்டில் இவ்வளவு இஷ்டமா? மேட்ச்சை பத்தரை மணிவரை பார்த்தும் இருக்கிறாரே! எப்படித்தோன்றியது இவருக்கு, என்னிடம் கிரிக்கெட் அப்டேட் தெரிந்துகொள்ளலாம் என்று. இவரிடம் எதுவுமே சரியாகப் பேசியதில்லையே இதுவரை நான். (வேறு யாரிடமும் நான் பேசி, அவர் கேட்டிருக்கவும் முடியாதே. நான் வாயைத் திறந்தால்தானே?) அடிக்கடி பார்க்கில் பார்க்க நேர்வதால், சில சமயங்களில் கையசைப்பார், சிரிப்பார். ’ஆச்சா?’ என்பார். அதாவது பெஞ்சிலே ஒக்காந்திருக்கீங்களே .. ரவுண்டு முடிஞ்சுதான்னு அர்த்தம். அல்லது கேட்டுக்கு அருகில் சந்திக்கையில் ‘கெளம்பிட்டீங்களா!’ இவ்வளவுதானே. இப்போது எப்படி இந்தக் கிரிக்கெட் திடீர்னு..
எந்த நேரத்திலும் ஆச்சரியம், அதிர்ச்சி தருபவர்கள் இந்தப் பெண்கள். ஜாக்ரதையாக இருப்பது நல்லது. சரி, நர்கீஸிடம் திரும்புவோம்..
**