தற்போதுள்ள சூழலில், வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, டிவி, சமூகவலைத்தளங்களைப் பார்த்துக்கொண்டு வியாதியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் யாருக்கும் பைத்தியம் பிடித்துவிடும். ஜாலியான ஆள்கூட தளர்ந்து ஒடுங்கிவிடுவான்! முழுக்குடும்பமே வீட்டில் ஒருசேர அமர்ந்திருக்கும் அதிசய காலகட்டத்தில், அவர்கள் பார்க்க, கேட்க, மனோரஞ்சகமாக ஏதாவது டிவி-யில் வரவேண்டாமா – செய்திகள், சினிமா தவிர்த்து? அதுவும் நமது நாட்டின் இதிகாசம், புராணம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் குடும்பத்து அங்கத்தினர்கள் ஒரு சேர உட்கார்ந்து ரசிக்கலாமே! மனசும் பீதி, நோய்ச் சிந்தனையிலிருந்து விலகி, கொஞ்சம் அமைதியாகும். புராண புருஷர்களை, யுவதிகளை, அவர்தம் வாழ்வு, போராட்டம், வாழ்வியல் நேர்மை, தர்மம் என்றெல்லாம் மனது சிந்திக்க ஆரம்பிக்கும். மக்களின் சிந்தனைத் தளம், பதற்ற நிலையிலிருந்து தற்காலிகமாவது, ஆரோக்யமான நிலைக்கு உயர்த்தப்பட வாய்ப்புண்டு. உள்ளேயே அடைந்துகிடந்து தின்பது, தூங்குவது,வீட்டுவேலைகள் தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை. இந்நிலையில், மனதிற்கு சந்தோஷம், அமைதி தரும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் அல்லவா?
மத்திய அரசின் தகவல், தொடர்புத்துறை இதைப்பற்றி சிந்தித்திருக்கிறது. ட்விட்டரில் சில நாட்களாக வந்துகொண்டிருந்த கோரிக்கைகளும் காரணம். 25-30 வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷன் மூலமாக ஒளிபரப்பட்ட பாப்புலர் சீரியல்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றை மீண்டும் திரைக்குக்கொண்டுவந்தால்.. மக்கள் வரவேற்கக்கூடும். நல்ல சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் மீண்டுவரும் வாய்ப்பையும் ஏற்படுத்தலாம். ’தனித்திருக்கும்’ குடும்பங்களுக்கு இந்த சமயத்தில் இத்தகைய சேவை தேவையாயிற்றே.
பரிசீலித்தது, முடிவு எடுத்தது அமைச்சகம். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன் அதிகாரபூர்வ ட்வீட் மெசேஜில் அறிவித்துவிட்டார். ஜனங்களின் கோரிக்கைப்படி, தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம் வருகிறது. நாடெங்கும் ரசிகர்கள், சாதாரண மக்கள் படுகுஷி. கோரிக்கை வைத்த நெட்டிசன்களுக்கும் சிக்ஸ் அடித்த த்ரில்!
இன்றிலிருந்து தினமும் காலை 9 மணியிலிருந்து 10 வரை மற்றும் மாலை 9 -லிருந்து 10 வரை, ’DD National’ தேசீய சேனலில் ’ராமாயணம்’ – மக்களைக் கவர்ந்த புகழ்பெற்ற டிவி தொடர் மறுஒளிபரப்பாகிறது. இன்றே மதியம் 12-லிருந்து 1 வரை, பிறகு இரவு 7 -லிருந்து 8 வரை தினந்தோறும் இன்னொரு இதிகாசமான ‘மகாபாரதம்’ மறு ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இது காட்டப்படவிருக்கும் சேனல் ’டிடி பாரதி’ (DD Bharti). இதுவரை இந்த சேனல்களை தங்கள் லிஸ்ட்டில் சேர்க்காதவர்கள் இப்போது இணைத்துக்கொள்ளுங்கள். குடும்பம் பார்த்து மகிழட்டும்.
நிதிஷ் பாரத்வாஜ்
**