ஒரு ஹோமத்தின்போது …

 

பெங்களூர் ஜெயநகர். ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கோயில். காலை 10 மணிப்போல் ஆரம்பித்த சுதர்ஷன ஹோமம் மெல்ல முன்னேறுகிறது. அர்ச்சகர்களும், சார்ந்தவர்களும் நிதானமாக மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறார்கள்.  அமைதியான சூழலில், மந்திர ஒலி அலையலையாகப் பரவி வியாபிக்கிறது.

ஹோமகுண்டத்தின் முன்னே,  ஒரு வரிசையில் பெண்கள். எதிர்வரிசையில் ஆண்கள். ஒரு குட்டிப்பையன் -நாலு வயசு இருக்கலாம்- அம்மாபக்கம் அப்பாபக்கம் என, ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டிருக்கிறான். இடையிலே அவனது அப்பா பிடித்து உட்காரவைத்து ஒரு சுலோகத்தை சொல்லவைக்கிறார். கொஞ்சம் சொன்னான். இன்னும் சொல்லு.. என்கிறார் தந்தை. தெரில ! – என்கிறான். மறுபடியும் திமிறி அந்தப் பக்கத்துக்குத் தாவல். கீழே உட்கார முடியாததால், அப்பாவுக்குப் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் தாத்தாவிடம் இப்போது வந்து சிக்கிக்கொண்டான்! பேரப் பிள்ளையை சார்ஜ் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார் பெரியவர். இழுத்து மடியில் உட்காரவைக்கிறார்..

விஷமம் பண்ணக்கூடாது ஒரு எடத்துல ஒக்காரணும்!

ம்ஹூம்.. அங்கே போய் ஒக்காந்துக்கறேன்..

ஸ்…அங்கயும் இங்கயுமா ஓடக்கூடாது. கோவிச்சுக்குவா!

யாரு ?

அங்க பார். அந்த மாமா !

அங்க என்ன நடக்கறது?

ஹோமம் நடக்கறது ..

இது எப்போ முடுயும்..?

டேய் ! மந்த்ரம் சொல்றார் பாரு  மாமா.  கேளு..

ஏன் ஃபாஸ்ட்டா சொல்லமாட்டேங்கிறா ?

மந்த்ரம்லாம் மெதுவாதான் சொல்லணும்.

ஏன்?

அப்பதான் உம்மாச்சி காப்பாத்துவார்..

அங்க ஒக்காந்துண்டு  என்ன பண்றா?  எனக்கு  அங்கே போகணும்..

அங்கேலாம் போகக்கூடாது.

ஏன் ?

ஃபயர்! அதுக்குள்ளேயிருந்து நெருப்பு வருது பாத்தியா!

நெருப்பு எப்பிடி அங்கேருந்து வர்றது?

அந்த மாமா நெய்ய விடறார்!

நெய்யா! எனக்கு உன்னும் தெரியலயே

அடேய்.. அவர் கையில பார்றா .. லாங் ஸ்பூன்

அது .. ஸ்பூனா?

ம்.. உட்டன் (wooden) ஸ்பூன்.. அதுலேர்ந்து நெய் விடறார்.

நெய்ய ஏன் அதுக்குள்ள விடறார்?

அப்பதான் நெருப்பு  பெரிசா மேல வரும்.

பையனின் கண்களில் மின்னும் ஆச்சரியம் .

நெருப்பு.. எம்பி எம்பி மேல வர்றது !

ம்..

கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் நழுவி ஓடிவிட்டான். எதிர்வரிசை அம்மாவிடம் போய் உட்கார்ந்துகொண்டான்.

ஹோமம் முடியும் தருவாயில்..  மீண்டும் தாத்தாவின் மடியில் பேரன்.

அங்க என்ன பண்றா ?

பாத்துண்டே இரு.. தெரியும்!

ஐயோ!

என்னடா?

அந்த மாமா.. வாழப்பழத்தத் தூக்கி  நெருப்புலே போட்டுட்டார் !

ம்..

ஏன் போட்டார் ?

அதப் பார் ! அவர் கையில..

ஆப்பிள்!  ஆ! அதயும் போட்டுட்டாரே நெருப்புக்குள்ள ..

ம்..

ஏன் இப்பிடிப் பண்றார் அந்த மாமா ?

அதுல்லாம் உம்மாச்சிக்கு.

அவர்தான் நெருப்புக்குள்ள போட்டுட்டாரே…

நெருப்புக்குள்ளதான் உம்மாச்சி வந்து ஒக்காந்திருக்கு.

நெருப்புக்குள்ளயா ! எனக்கு  உன்னும் தெரியலயே..

நம்ப கண்ணுக்குத் தெரியாது.

எப்பிடி?

மந்த்ரம் சொன்னா இல்லியா? அப்போ நைஸா.. நெருப்புக்குள்ள வந்து உம்மாச்சி ஒக்காந்திருக்கும்.

அப்பறம்?

அப்பறம் யாருக்கும் தெரியாம.. போய்டும்!

நெஜமாவா!  – பையன் கொழுந்துவிட்டெறியும் ஜுவாலையை கண்மலரப் பார்க்கிறான்..

சுதர்ஷனுக்கு தீபாராதனை செய்கிறார் அர்ச்சகர்.

எல்லாரும் கன்னத்துல போட்டுக்கறா பாரு! – எதிர்வரிசையை காண்பித்து சொல்கிறார் தாத்தா.

நீயும் கன்னத்துல போட்டுக்கோ..

போட்டுக்கொள்கிறான் சிறுவன்.

கைகூப்பு! காப்பாத்து..ன்னு பெருமாள சேவிச்சுக்கோ !

பெருமாளையும், கூட்டத்தையும் மாறி மாறிப் பாத்துக்கொண்டே கைகூப்புகிறான் குழந்தை.

**

 

காலையில் .. அதிகாலையில் ..

 

அதிகாலையில் தூக்கம் கலைந்தது. பறவைகள் முன்னமேயே எழுந்திருந்து வினோத சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தன. நாம் போடும் சத்தங்களைப்பற்றி அவைகள் என்ன நினைக்கின்றனவோ தெரியாது. பறவைகளின் பாஷை புரியாததும் நல்லதிற்குத்தானோ!

தூக்கம் கலைந்ததே தவிர, உடனே எழுந்து உட்காராமல் படுத்திருந்தேன். பக்கத்தில் படுத்திருந்த மொபைலை எழுப்பிப் பார்த்தேன். வாட்ஸப்பில் (மொபைலே இப்போதெல்லாம் வாட்ஸப்பிற்காகத்தானே. ’இல்லை செல்ஃபீக்காகத்தான்!’ என பலர் கத்துவதும் கேட்கிறது). ஒரு பெண் தன் ஸ்ரீரங்க அனுபவம் பற்றி விவரித்திருந்தார். பெருமாளை தரிசித்துவிட்டு திரும்புகையில் முனியப்பன் கோட்டை வழியாக வர நேர்ந்ததாம். அங்கே முனியப்பன் சன்னிதியில் பலிபீடத்தில் சுருட்டு புகைந்துகொண்டிருந்ததாம். அருகில்வேறு முரட்டு ஆசாமி ஒருவர் நின்றிருந்தாராம். அதைப்பற்றிக் கேட்கலாம் என்றால் தைரியம் வரவில்லையாம். பக்கத்தில் மாரியம்மன் சன்னிதியிலும் பூஜை.  ஸ்ரீரங்கனின் வளாகத்திலேயே முனியப்பனும், அம்பாளுமா  என ஆச்சரியப்பட்டு, அந்தக் காலைநேரத்தில் நம்மையும் ஸ்ரீரங்கம்பற்றி சிந்திக்கவைத்திருந்தார் அம்மணி. புண்ணியம் அவருக்கு. நமது தெய்வீக சிந்தனையைப்பற்றிய பிரக்ஞையோ,  தாக்கமோ ஏதுமில்லாப் பறவைகளின் அதிகாலைப் பிரசங்கம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. அவைகளின் அனுபவங்கள், தத்துவவிசாரங்கள் என்னென்னவோ?

ஒருவாறாக எழுந்திருந்து பால்கனிக்கு வந்தால்,  மெல்ல வருடியது குளிர்க்காற்று. அடடா, இந்த எதிர்பாரா சுகம்.. கருமேகங்கள் படர்ந்திருக்கும் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்புப் படித்திருக்கையில் பள்ளி அணியுடன் கொடைக்கானல் சென்றிருந்ததும் அங்கு முதலில் அனுபவித்த அந்த மலைப்பிரதேச குளிர்ச்சியும் மனதில் வந்தன. புதுக்கோட்டையிலிருந்து கொடைக்கானலுக்கான பஸ் பிரயாணம், மாணவ, மாணவியரைக் கண்மாற்றாமல் பார்த்துப் பார்த்துக் கூட்டிச்சென்ற ஆசிரியைகள்,  கொடைக்கானலின் நட்சத்திர ஏரியில் படகோட்டம், ஸில்வர் காஸ்கேட்  (Silver Cascade) எனும், அந்த வயதில் பெரும் பிரமிப்பை ஊட்டிய கண்ணுக்கிதமான அருவி, பில்லர் ராக்ஸ் (Pillar Rocks) என அழைக்கப்படும் தூண்களாய் எழுந்து நிற்கும் மலைக்குன்றுகள்.. உடம்பை மெல்ல வருடிக் கிளுகிளுப்பூட்டிய அந்த, அதுவரை அனுபவித்திராக் குளிர்ச்சி..  புதுக்கோட்டையில் ராஜ வம்சத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ பிரஹதாம்பாள் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து சுற்றுலாவில் வந்திருந்ததால், கொடைக்கானலில் இருந்த புதுக்கோட்டை  அரண்மனையை சுற்றிப் பார்க்கக் கிடைத்த அந்த அரிய வாய்ப்பு என அந்த பெஙகளூர் அதிகாலை கொடைக்கானல் காட்சிகளை வேகவேகமாகக் காட்டிச்சென்றது. இந்த மனம் – நமது சூட்சும உடம்பு – இருக்கிறதே,  அது நினைத்தால்,  எங்கிருந்தாவது நம்மை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு, எங்கேயாவது கொண்டுபோய் நொடியில் சேர்த்துவிடும். அங்கே கொஞ்சம் நாம் திளைத்திருக்கையில், திடீரென புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடும். அதன் இஷ்டமா, நம் இஷ்டமா !

இருள் விலக எத்தனித்த நேரத்தில், ஆகாசத்தில் நீலம், வெள்ளை, சாம்பல் என்று விதவிதமான வண்ணங்கள். இன்னும் சூரியன் எழுந்திருக்கவில்லை. ஞாயிறுதான் இன்று.. போனால் போகிறது. கொஞ்சநேரம் படுத்திருக்கட்டும். ஆதவன் ஆனந்தமாக இழுத்துப் போர்த்திக்கொண்டான்போலும். இன்னும் கீழ்வானம் சிவக்க ஆரம்பிக்கவில்லை. பாவம், சித்தநேரம் தூங்கட்டும். முழித்தபிறகு தலைக்குமேலே ஆயிரம் வேலைகள் இருக்கின்றன அவனுக்கு. தயவு, தாட்சண்யமின்றி ஆற்றவேண்டிய, அவனுக்கு விதிக்கப்பட்ட தினக் கடமைகள்..

**

உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் !

வந்தால் எல்லா முகூர்த்தங்களும் சேர்ந்தார்ப்போல வரும்! வழக்கம் தான் இது. இன்று விளையாட்டு ரசிகர்களுக்கு அப்படி ஒரு நாள். FIFA உலகக் கால்பந்துக்கோப்பை ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. முதல் போட்டி (ரஷ்யா-சௌதி அரேபியா), ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் இந்திய நேரம் இரவு 8.30க்கு நிகழ்கிறது. அதற்கு 11 மணி நேரம் முன்பு அதாவது காலை 9.30 மணிக்கு பெங்களூரில் நிகழவிருக்கிறது இந்தியா –ஆஃப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க முதல் கிரிக்கெட் டெஸ்ட். கிரிக்கெட் உலகின் பெரிசுகள் லிஸ்ட்டில், அதாவது ’டெஸ்ட்’ போட்டிகள் விளையாடும் நாடுகளின் அணியில் முதன்முதலாக ஆஃப்கானிஸ்தானும், அயர்லாந்தும் இந்த வருடம் ஐசிசி-யினால் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கெதிராக இன்று விளையாடவிருக்கும் போட்டி மூலம், தன் ‘டெஸ்ட்’ சகாப்தத்தைத் தொடங்குகிறது ஆஃப்கானிஸ்தான். அதுதான் விசேஷம். என்ன மாதிரியான நாள் இது பார்த்தீர்களா, இந்திய ரசிகர்களே ..

பெங்களூர் டெஸ்ட்டில் ஆஃப்கானிஸ்தான் குறைந்த பட்சம் மூன்று ஸ்பின்னர்களை மைதானத்தில் இறக்கிவிடும். சுழல்பந்துவீச்சு அவர்களின் அசுர பலம். வரிசையாக வைத்திருக்கிறார்கள். கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் (Asghar Stanikzai), ஆஃப்கன் ஸ்பின்னர்கள் இந்திய ஸ்பின்னர்களைவிட சிறந்தவர்கள் என ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட்டை பத்திரிக்கையாளர்முன் நேற்று வீசியிருக்கிறார். உலகப் புகழ்பெற்றுவிட்ட (ஒரு-நாள், டி-20 போட்டிகளில்) ரஷித் கான், ஐபிஎல்-புகழ் முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஸ்பின் பௌலர்கள் அவர்களிடம் இருப்பதால் ஒரு குஷி! ஆஃப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சு இந்தியாவிற்கு பெரிய பிரச்னை ஏதும் செய்துவிடாது எனத் தோன்றுகிறது. டெஸ்ட் கத்துக்குட்டிகளின் பேட்டிங் எப்படி? முகமது நபி, முகமது ஷேஹ்ஸாத் (Mohamed Shahzad), கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் மற்றும் ரஹ்மதுல்லா. ஸமியுல்லா ஷென்வாரியும் மிடில்-ஆர்டரில் நின்று ஆடக்கூடும். முதல் இன்னிங்ஸில் ஒரு மரியாதைக்குரிய ஸ்கோரை ஆஃப்கானிஸ்தான் எட்டவேண்டுமெனில் இவர்களில் குறைந்த பட்சம் இரண்டு பேராவது இந்திய பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு திறனாக ஆடவேண்டும். பொறுமையை மிகச் சோதிக்கும் டெஸ்ட் விளையாட்டு இவர்களுக்கு புதிதாகையால், நிச்சயம் சிரமப்படுவார்கள். இருப்பினும் ஓரிருவர் நிதானம் காட்டி ஆடினால், அரை சதம் தட்டலாம்.

இந்திய அணிக்கு அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குகிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில், உமேஷ் யாதவோடு, புதிய பௌலராக நவ்தீப் செய்னி (Navdeep Saini) இறக்கப்படுவாரா அல்லது இஷாந்த் ஷர்மா ஆடுவாரா? காலையில்தான் தெரியும். இந்திய ஸ்பின்னர்கள் ஜடேஜாவும் அஷ்வினும் நிறைய பெங்களூர் பிட்ச்சில் களியாட்டம் போடுவார்களோ? இந்தியா இன்னிங்ஸை ஆரம்பிக்கையில், எதிர்த்துவிளையாடுவது புதுமுகங்கள்தானே என்ற மிதப்பில் ஆட ஆரம்பித்தால், ஆஃப்கானிஸ்தானின் தரமான ஸ்பின்னர்கள் பெண்டெடுத்துவிடுவார்கள். புஜாரா, ரஹானே, விஜய் நின்று, நிதானம் காட்டி ஆடவேண்டியிருக்கும். வ்ருத்திமான் சாஹா காயத்தினால் விலகியதால், 2010-க்குப்பின் இந்தியாவிற்காக டெஸ்ட் ஆட வந்திருக்கிறார் தமிழ்நாட்டின் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக். அபூர்வமாக வந்திருக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டால், அவருக்கும் அணிக்கும் நல்லது. மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான போட்டி காத்திருக்கிறது.

சரி, இப்போது. ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து. போட்டிகளை இவ்வருடம் நடத்தும் ரஷ்யா மிகவும் எளிதான க்ரூப்பான ‘ஏ’ குரூப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சௌதி அரேபியா அதன் எதிரி. ஐரோப்பாவின் ஏனைய வலிமையான அணிகளோடு ஒப்பிடுகையில், ரஷ்ய கால்பந்து அணி அவ்வளவு சிறப்பான நிலையில் இல்லை. ரஷ்யா கவனமாக ஆடாவிட்டால், சௌதி அரேபியா தூக்கி எறிந்துவிடும்.

ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய கால்பந்து வீரர்கள்: ரஷ்யாவின் இகோர் அகின்ஃபீவ் (Igor Akinfeev) அபாரமான கோல்கீப்பர். அவரைத்தாண்டி பந்தை கோலுக்குள் அனுப்புவது எதிர் அணிக்குப் பெரும் சவாலாகும். அணியின் செண்டர்-பேக் (Centre-back) ப்ளேயரான ஸெர்கெய் இக்னாஷெவிச் (Sergei Ignashevich) 38 வயதிலும் அபாரமாக ஆடிவருபவர். அணியின் 22-வயது இளம்புயல் அலெக்ஸாண்டர் கோலொவின் (Aleksandr Golovin). அருமையாகத் தாக்கிவிளையாடி ரஷ்யாவுக்கு கோல் வாய்ப்புகளைத் தரும் வீரர்.

சௌதி அரேபிய அணியில் முக்கியமான வீரர்களாக கோல்கீப்பர் அப்துல்லா அல் மயோஃப் (Abdullah al Mayouf), மற்றும் அணியின் கருப்பின வீரர்களான ஒஸாமா ஹவ்ஸாவி (osama hawsawi), ஒமர் ஹவ்ஸாவி(Omar Hawsawi), யாஸர் அல்-ஷாரானி (Yasser Al Shahrani) போன்றோரைக் குறிப்பிடலாம். திறன்மிகு இளம் வீரர்கள் சிலருமுண்டு.

ரஷ்யாவா, சௌதி அரேபியாவா – உலகக்கோப்பையின் ஆரம்ப மேட்ச் யாருக்கு? இரவில் தெரியும். ரஷ்ய மற்றும் உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரே கோலாகலம்தான் இனி!

**

நித்தம் நித்தம் மாறுகின்ற நகரம்

பெங்களூரில் ஒரு ஃப்ளாட் வாங்க முயற்சிக்கும் நண்பரோடு இரண்டு வாரங்கள் முன்பு ஒரு ப்ராஜெக்ட்டிற்கு விசிட் அடித்தேன். ’கே.ஆர்.புரம் தாண்டி ஹோஸ்கோட்டே சாலையில கொஞ்சதூரம்போயி, மெயின் ரோடிலிருந்து இடதுபக்கமா திரும்பி ஒன்றரை கிலோமீட்டர்தான் சார் எங்க ப்ராஜெக்ட். நல்ல லொகேஷன் சார்!’ என்றார் கம்பெனி ஆசாமி. ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் கடந்த 15 வருடங்களாக பெங்களூரில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெங்களூர் மார்க்கெட்டில் ப்ரெஸ்டீஜ், ஷோபா, ப்ரிகேட் (Brigade), பூர்வாங்கரா என்று கட்டிடத்தொழில்வெளியில் ஜாம்பவான் ப்ளேயர்களுக்கு முன் தங்களை நிறுவிக்கொள்ளும் ஸ்ரீராமின் சிறப்பு முயற்சிகளில் ஒன்றாக இது இருக்கலாம். ப்ராஜெக்ட்பத்தி ஃபோனில் விஜாரித்த நண்பர் ‘அனுப்புய்யா காரை. வந்துபார்க்கிறோம்!’ என்று சொல்லிவிட்டு ’நீயும் வா, போய்ப்பாத்துட்டு வந்துருவோம்!’ என்று என்னையும் கூட்டிச்சென்றார்.

அந்த ப்ராஜெக்ட்டின் ஃபீல்ட் இன்-சார்ஜ் எங்களை வரவேற்று தன் ஆஃபீஸுக்கு அழைத்துச் சென்றார். ஃப்ளோர்-ப்ளானில் வெளிப்பட்டது 2, 2.5, 3 BHK வகைகள். 50-லிருந்து 80 லட்சம் ரூபாய் வரை வாங்குபவர் கழட்டிவைக்கவேண்டியிருக்கும். ’பேண்ட் நழுவிக் கீழே விழுந்துடாமக் கவனிச்சுக்கோப்பா’ என்றேன் நண்பரிடம். நடந்துகொண்டிருக்கும் வேலை, சாம்பிள் ஃப்ளாட் என்று ஒரு ரவுண்டு காண்பித்து, கட்டிடவேலைகளுக்காக ஸ்ரீராம் பயன்படுத்தும் பொருட்களின் தரம், வேலைநேர்த்தி என்று சொல்லி முடிக்கும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். கட்டிடப் பகுதியையும் தாண்டி அகன்ற வெளி இருந்தது. 17-மாடி டவர்களுள்ள அதில் இரண்டு ஃபேஸ்கள். முதல் ஃபேஸில்(phase) 1200 ப்ளாட்டுகள். ’இந்த டிசம்பரில் பொசஷனுக்குத் தயாராகிடும் சார்’ என்றார். ’மாடி வீட்டிலிருந்து ஏரியல் வியூ எப்படி இருக்குன்னு கொஞ்சம் பாத்தாத் தேவல’ என்றேன். ஆபரேஷனல் எலவேட்டரில் (elevator) ஏறி 14-ஆவது மாடிக்குச் சென்றோம். எலவேட்டரிலிருந்து அந்த ஃப்ளாட்டில் நுழையமுடியாதபடி ‘ஞொய்’ என்று ஒரே மொய்ப்பு சத்தம். என்ன அது மேலே.. பெரிசா? கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது ஒரு பெரிய பை போல தேன்கூடு! உள்ளே வேலைசெய்துகொண்டிருந்த மேஸ்திரி சொன்னார்: ’ஒரு நிமிஷம் நின்னு வேல செய்யமுடியல சார்.. கையெல்லாம் பாருங்க, கொட்டிவச்சிருக்கு! ‘ என்று கைகாட்டி பயமுறுத்தினார். அந்த ஃப்ளோரில் இறங்கவேண்டாம் என்று முடிவுசெய்து அடுத்த மாடியில் இறங்கினோம்.

மூன்று பெட்ரூம் ஃப்ளாட் அது. டிராயிங் ரூம், கிட்ச்சன், பெட்ரூம், பாத்ரூம், பால்கனி என்று நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நண்பருக்குத் திருப்தி. பால்கனிக்கு வந்து வெளியே பார்த்தோம். ‘ஏரியல் வியூ’ நன்றாக இருந்தது. ‘வெட்டவெளியா, கொஞ்சம் மரங்களோட இருக்கிறதால பாக்க இப்ப நல்லாத்தான் இருக்கு. நாளைக்கு இந்த மரங்களையெல்லாம் வெட்டி துவம்சம்பண்ணி, இங்கெல்லாம் பொட்டிக்கடைகள், ஆட்டோ ரிப்பேர் ஷாப்புகள், ரோட்சைட் ரெஸ்டாரண்ட்டுகள்லாம் மொளைக்குமில்ல. அப்ப என்ன ஆகும் இந்த ‘வியூ!’ என்று ’மிஸ்டர் ஸ்ரீராமை’ச் சீண்டினேன். ‘அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்! நீங்க பாக்கற ஏரியா சுமார் 60 ஏக்கர். எங்க ப்ராப்பர்ட்டி. இத பூரா ஒரு டவுன்ஷிப்பா மாத்தப்போறோம். உள்ளுக்குள்ளேயே ஜிம், ஸ்விம்மிங் பூல், ஜாகிங் ஏரியாவோட, கான்ஃபரன்ஸ் ஹால், யுடிலிட்டி ஸ்டோர், க்ளினிக், டென்னிஸ் கோர்ட் எல்லாம் நாங்க கொடுப்போம். கசமுசா கடைங்கல்லாம் சுத்திவர வர்ற சான்ஸே இல்ல !’ என்று ஊக்கமளித்து என் நண்பரின் முகத்தைப் ப்ரகாசப்படுத்தினார். கீழே இறங்கினவுடன், பெங்களூரின் ஏப்ரல் வெயிலையும் பொருட்படுத்தாமல், ’வாங்க, வெட்டவெளில ஒங்க ஏரியால கொஞ்சம் நடப்போம்; மேற்கொண்டு சொல்லுங்க!’ என்று அவரை இழுத்தேன். நண்பருக்கு ஏசி ரூமில் உட்கார்ந்து டீ குடித்துப்பேசலாம் என்ற சிந்தனை. நான் விடவில்லை.

வெளிப்பகுதியில் நடந்தபோது பூவரசு, வேம்பு போன்ற சிலவகையான நாட்டு மரங்கள்- 5-6 வயதான இளமரங்கள்- நின்று காற்றில் சொகுசாக ஆடுவதைப் பார்த்தேன். ‘ அதுவா மொளச்சிருக்கு. இதையெல்லாம் வெட்டிப்புடாதீங்க. நாட்டு மரங்க, நல்ல காத்து மனுஷனுக்கு முக்கியம்!’ என்றேன். அவர் பதில் சொல்லுமுன் ‘இப்ப வர்ற மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டுகளின் விளம்பரங்கள்ல 70% ஓபன் ஏரியா, க்ரீன் ஏரியான்னுல்லாம் ஒரேயடியா ரீல் சுத்தறாங்களே! உள்ளேபோய் பாத்தா நாலு பனை, ஈச்சை மரங்கள நட்டு, காகிதப்பூச்செடிகளை ஓரத்துல வச்சு சீன் காட்றானுங்க! ஒங்க கத எப்படி?’ அவரை நெருக்கினேன். ‘சார், நீங்க எங்க ப்ராஜெக்ட் எதயாவது பாத்துருக்கீங்களா?’ என்றார். ‘ஆமா, ஐடிபிஎல் ஏரியால ஒன்னு பாத்தேன். பரவாயில்ல!’ என்றேன் அதிகமாக மார்க் கொடுக்க விரும்பாத ஆசிரியரைப்போல. ’சார் அது 12 வருஷப் புரானா ப்ராஜெக்ட். இப்பல்லாம் நெறய அமெனிட்டீஸ் ஸ்ரீராம்ல தர்றோம்’ என்றார். ’’நான் இப்ப ஒங்க அமெனிட்டீஸைப்பத்தி கேக்கல. எல்லா பில்டர்ஸும் அதல்லாம் தந்துதான் ஆகனும். இல்லாட்டி ஃப்ளாட்ட விக்கமுடியாது. கட்டிடத்தை சுத்திலும் மரம், செடிகொடி வளக்கிறதப்பத்தி, green environment-பத்தி ஒங்க ப்ளான் என்ன!’

நண்பருக்கு வியர்க்க, கம்பெனி அலுவலர் சொன்னார்: ’ஹாட்டா இருக்கு சார்! வாங்க, பேசிகிட்டே நம்ம ரூமுக்குப் போவோம். இதுல நெறய க்ரீன் ஏரியா இருக்கு, சார். மரக்கன்றுகள் வாங்கி நட்டாச்சு. உட்புறப்பாதைகள், கட்டிட அமைப்புகள் தவிர்த்து மரங்கள் செடிகொடிகளுக்கான க்ளீயர் ப்ளான் இருக்கு சார். கவலப்படாதீங்க’ என்றார். ‘ஒரு ரிக்வெஸ்ட். முடிஞ்சா ஒங்க மேனேஜ்மெண்ட்டுக்கு பாஸ் பண்ணுங்க. அழகா இருக்குன்னு வெறும் வெளிநாட்டுப் பனமரங்கள வரிசையா நட்டுவச்சுட்டுப்போயிடாம, கொஞ்சம் வேம்பு, கொன்றை, பூவரசு போன்ற நாட்டு மரங்களையும் கலந்து வையுங்க. மண்ணுக்கேத்த மரங்கதான் மனுஷனுக்கும், பறவைகளுக்கும் நல்லது செய்யும். ஏற்கனவே இருக்கிற மரங்க சரியான இடத்தில இருந்தா அப்புடியே விட்டுடச் சொல்லுங்க. இல்லாட்டி இடம் மாத்தி நட்டுவையுங்க. அழிச்சிராதீங்க!’ என்று கேட்டுக்கொண்டேன். ‘கஸ்டமர் ஒபீனியனுக்கு மதிப்பு கொடுப்போம்; செய்யறோம் சார்!’ என்றார் அவர்.

டீ வந்தது. குடித்துக்கொண்டே ’இப்ப இவரோட பேசுங்க.. இவருதான் வீடு வாங்கப்போறவரு!’ என்றேன் நண்பரைக் காண்பித்து.

**

தண்ணி வரல !

காலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்!’ ’என்ன ப்ரச்னை? வாட்டர் மோட்டார் வேலைசெய்யவில்லையா?’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது!’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் லட்சணம் இப்படித்தானிருக்கிறது. காலை எழுந்தவுடன் ஒரு வாக் போனால் எதிர்ப்படுவது தண்ணீர் டேங்கர்கள்தான். இந்தத் தண்ணீர் டேங்கர்களும் இப்போதெல்லாம் சொன்னவுடன் வருவதில்லை. உங்கள் அவசரத்தைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அவர்களது ’ரெகுலர்’ கஸ்டமர்களைக் கவனித்துவிட்டு அப்புறம்தான் உங்களிடம் வருவார்களாம். அவர்கள் ராஜ்யத்தின் நியதிகள். வேறு வழியில்லை. அவஸ்தையிலிருப்பவன் அனுசரித்துத்தான் போகவேண்டும்.

ஒருகாலத்தில் இந்தியாவின் ’கார்டன் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட அழகான, சிறு நகரமாக இருந்தது இது. இன்று காலத்தின் கந்தர்வகோளத்திற்கேற்ப, ஊதி, ஓவராகப் பெருத்து நடக்கமுடியாமல் தள்ளாடுகிறது. கடந்த 15 வருடங்களாக பெங்களூர் கண்ட அபரிமித ‘வளர்ச்சி’யின் பின்விளைவு இது. City planning என்றெல்லாம் வெளிநாடுகளில்தான் சொல்கிறார்கள். நமது நாட்டில் இதைப்பற்றி ஆரம்பித்தால் ’அப்படீன்னா என்ன?’ என்று திருப்பிக்கேட்பார்கள் தெள்ளுமணிகள். கொள்ளையடிப்பதும், சுருட்டுவதும், சூறையாடுவதையும் தவிர வேறெந்தத் திட்டமும் இங்கே அரசாள்பவர்களிடம் இருந்ததில்லை. எப்படியாவது நாற்காலியைக் கைப்பற்றிவிடவேண்டும் எனத் துடிக்கும் எதிர்க்கட்சிக்காரர்களிடமும் இல்லவே இல்லை. இனியாவது வருமா என்கிற நம்பிக்கையும் நமக்கில்லை. எந்த ஒரு மாநிலத்தையும் கட்சியையும் குறிப்பிட்டு இதனைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதுதான் சுதந்திரத்துக்குப்பின் ஒரு நாடாக இந்தியா அனுபவித்துவருவது.

அன்று சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் ரியல் எஸ்டேட், BBMP, லோக்கல் கவுன்சிலர் என்று உலவுகின்ற ஆசாமி. சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் லொகாலிட்டிக்கு அருகில் புதிய ப்ராஜெக்ட் வரப்போகிறதாம். வேறென்ன? கட்டிடங்கள்தான். வில்லாக்கள் அமையவிருக்கின்றன என தூரத்தில் கைகாண்பித்தார். ’அங்கே ஒரு குளம் இருக்கிறதே!’ என்றார் இன்னொருவர். ‘அது அவர்களின் அலுவலகக் கோப்பில், மேப்பில்தான் இருக்கிறது!’ என்று சிரித்தார் இவர். ’இப்போது போய்ப்பாருங்கள். கொஞ்சம் ஈரம் தென்படலாம். மற்றபடி மூடியாச்சு. குளமெல்லாம் போயே போச்சு!’ என்றார் ரொம்ப சாதாரணமாக. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு வயிற்றைக் கலக்கியது. ’மெட்ரோலைன் போடுகிறோம், ரோடை அகலப்படுத்துகிறோம் என்று 50-60 வருட வயதான நாட்டு மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியாயிற்று. புறநகர்ப்பகுதிகளிலும் மரங்கள், பச்சைவெளிகள் வேகமாக மறைந்துவருகின்றன. புதிய புதிய ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகள் முளைக்கின்றன. அசுரவேகத்தில் வளர்கின்றன. லேக்வியூ அபார்ட்மெண்ட்ஸ் எனப் பெயர்ப்பலகை தெரிகிறது. அபார்ட்மெண்ட் முழித்துக்கொண்டு உற்றுப்பார்க்கிறது. லேக் எங்கே? ஏரிகள், நீர்த்தேக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருடங்களாகிவிட்டன. அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடு கட்டிட முதலாளிகளின் சுற்றுச்சூழல் வேட்டை. அவர்களது ப்ராஜெக்ட் ப்ரோஷர்களைப் (brochure) பார்த்தால் கட்டிடங்களுக்கு மத்தியில் அல்லது ஒருபகுதியில் 70% பச்சைவெளி எனப்போட்டிருக்கும். என்னவோ பெங்களூர் ஏற்கனவே பாலைவனமாக இருந்ததுபோலவும் இந்த மேதாவிகள்தான் வந்து எல்லாவற்றையும் பச்சையாக்கி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுபோலவும் விளம்பரம். என்ன ஒரு அயோக்கியத்தனம். மிஞ்சி மிஞ்சிப் போனால், கொஞ்சம் நல்லபேர் வாங்கியிருக்கும் சில கட்டிட கம்பெனிகளின் ப்ராஜெக்ட்டுகளில் கொஞ்ச மரங்களை அழகுக்காக நட்டுவைத்திருப்பார்கள் முகப்பில். எத்தகைய மரங்கள்? வெளிநாட்டு மண்ணின் கூறுகொண்ட பனை ஜாதி மரங்கள், ஈச்சை மரங்கள் போன்றவை. வேம்பு, பூவரசு, பூங்கொன்றை, ஆல், அரசு, மா, தென்னை போன்ற நிலத்தை செழுமைப்படுத்தி, சுற்றுச்சூழலை சீர்படுத்தும், பறவையினங்களுக்கு உணவுதரும், புகலிடமாகும் நாட்டுமரங்களின் இடத்தில் தூண் தூணாகப் பனை, ஈச்சை மரங்கள். ஒரு குருவி, காகம்கூட இவற்றின்மேல் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ஒண்டுவதற்கு நிழலாவது சரியாகக் கிடைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை.

இப்படி ஆங்காங்கே புதிய புதிய கட்டிடங்கள், கான்க்ரீட் மலைகள் தினந்தினம் எழும்பிக்கொண்டே இருக்கின்றன பெங்களூரில். அங்கு வசிக்கும், வசிக்கப்போகும் மக்களுக்குக் குடிப்பதற்கு, புழங்குவதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? நகராட்சித் தண்ணீர் இணைப்பு பெரும்பாலான குடியிருப்புப்பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கட்டிட வளாகத்திற்கும் ஆழ்துளைக் கிணறுகளின் மூலமாகத் தண்ணீர் வசதி ஆரம்பத்தில் கட்டிட முதலாளிகளால் செய்துதரப்படுகிறது. ஏற்கனவே ஊரில் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகளைத் தூற்று மூடியாயிற்று. மரங்களை வெட்டி, விற்று ஏப்பம் விட்டாயிற்று. முறையாக மழைவருவதும் பொய்த்துப்போக ஆரம்பித்து விட்டது. தண்ணீருக்காக பூமியை சதா தோண்டிக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? ஆழ்துளைக்கிணறுகள் எத்தனை நாளைக்குத் தாங்கும்? இரண்டு வருடங்களுக்குப்பின் நீர்வற்றி, வெறும் துளைதானே மிச்சமிருக்கும். நிலத்தடி நீர் என்பதும் கானல்நீராகிவிடுமே? நகரம் இவ்வளவு வேகமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகியிருக்கிறது. எவனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இத்தனை நடந்துகொண்டிருக்கையிலும், புதிய கட்டிட முயற்சிகளை சீர்படுத்த, சில குடியிருப்புப்பகுதிகளிலாவது சூழல் நலம் கருதி மேற்கொண்டு கட்டுமானங்களைத் தவிர்க்க, தடைவிதிக்க, அரசிடமிருந்து எந்த ஒழுங்குமுறையும், வரையறையும் இல்லை. சட்டதிட்டங்கள் இயற்றப்படுவதாக, முயற்சிகள் செய்யப்படுவதாகத் தோன்றவில்லை. அரசியல்வாதிகளின், அரசியல் அமைப்புகளின் பேச்சில் இவை இருக்கலாம். காரியத்தில் ஒரு மண்ணும் இல்லை.

இப்படிப் பெரிதாக வாயைத் திறந்துவைத்து, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் என எல்லா நலன்களையும் கபளீகரம் செய்து பூதாகாரமாக வளர்ந்துவரும் நகரில், ஏற்கனவே வசிப்பவர்களும், புதிதாகக் குடியேறியவர்களும் தொடர்ந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது. குடிநீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை எப்படியோ தங்களால் இயன்ற அளவுக்குப் பூர்த்திசெய்ய முயற்சித்தபடி.

**

பெங்களூர் டெஸ்ட்: இந்தியாவின் ’பழிக்குப்பழி’ வெற்றி

சுழல் தந்த திடீர் திகில் க்ளைமாக்ஸில் ஆஸ்திரேலியாவை சரணடையவைத்து இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சைக் கைப்பற்றிவிட்டது இந்தியா. பெங்களூரில் பந்துவீச்சு, வார்த்தைவீச்சு என அனல் பறக்க ரசிகர்களை, கிரிக்கெட் விமரிசகர்களை எகிறவைத்த அதிரடிப்போட்டி, இரண்டு அணிகளையும் வெகுவாக சூடேற்றியிருக்கிறது. தொடர் 1-1 என்று சமன்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த களமான ரான்ச்சி (16-03-2017) பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

புனேயின் பிட்ச் போலில்லாவிட்டாலும், இதுவும் ஸ்பின்னிற்கு துணைபோகும்தான் எனத் தயார்செய்துகொண்டுதான் ஆஸ்திரேலியா பெங்களூரின் சின்னசாமி ஸ்டேடியத்தில் கால்வைத்தது. புனேயில் இந்திய ஸ்பின்னர்களுக்குத் தண்ணிகாட்டி, இந்திய பேட்டிங்கை முறித்து ஒரேயடியாக வீழ்த்திவிட்டதில் கண்ட பெருமிதம் ஆஸ்திரேலியர்களின் முகத்தில் வெளிச்சமாய்த் தெரிந்தது. கோஹ்லியின் தலைமையிலான இந்தியாவோ அடிபட்ட நாகமெனக் கொதித்திருந்தது. அது எப்போது சீறும், எப்போது கொட்டும் எனத் தெரியாத ஆஸ்திரேலியர்கள் கோஹ்லியையும் மற்றவர்களையும் ஆட்டத்தினூடே கமெண்ட் அடித்து, அவர்களது கவனத்தைக் கலைத்துச் சீண்டுவதில் சுகம் கண்டனர். கோஹ்லியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவதாக இல்லை. தீவிரக் க்ரிக்கெட்டோடு, கடும் உளவியல் அழுத்தப்போட்டியும் அரங்கேறியிருந்தது பெங்களூர் மைதானத்தில். ’நீயா! நானா! பார்த்துவிடுவோம்!’ என்று புஸ்..புஸ் என்று ஒருவர்மீது ஒருவர் நெருப்புப்புகை விட்டுக்கொண்டிருந்த வரலாற்றுப்போட்டி!

இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்ததே தவிர அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. போட்டியின் முதல்நாள் காலையில் முரளி விஜய்க்குக் காயம் என அறிவிக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார். பதிலாக, ஐந்து வருடங்களுக்குப்பிறகு தலைகாட்டிய அபினவ் முகுந்த் (தமிழ்நாடு கேப்டன்) கே.எல்.ராஹுலுடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார். ரன் சேர்க்க மறந்துபோனார். கேப்டன் கோஹ்லி? அவருக்கும் பேட்டிங் மறந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆஸ்திரேலியர்கள் கேலிசெய்வதற்கு ஏதுவாக, அற்பத்தனமாக ஆடி அவுட்டானார். புஜாரா, ரஹானே, அஷ்வின், சாஹா, ஜடேஜா ..இவர்களெல்லாம் எதற்காக மட்டையைப் பிடித்துக்கொண்டூ மைதானத்தில் இறங்கினார்கள் என்றே தெரியவில்லை. நேத்தன் லயனின் (Nathan Lyon) அபார சுழல்வீச்சில் இந்தியர்கள் தவிடுபொடியானார்கள். கே.எல்.ராஹுல் மட்டும், வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார் போலும். பெருங்கவனத்துடன் போராடி ஆடினார். கடைசியில் துணையாக சரியாக ஜோடி இல்லாத நிலையில், நேத்தன் லயனைத் தூக்கி அடிக்க முயற்சித்து 90 ரன்களில் அவுட்டானார். லயனுக்கு 8 விக்கெட்டுகள். இந்தியா வெறும் 189. முதல் நாள் பேட்டிங் ஆடிய லட்சணம் இது. ஸ்மித் & கம்பெனியின் குதூகலத்திற்கு ஓர் எல்லையில்லை.

தொலையட்டும்; ஆஸ்திரேலியா ஆடவருகையில் அவர்களை நமது ஸ்கோரை நெருங்கவிடாமல் நொறுக்கித்தள்ளியிருக்கவேண்டாமா? அதுதான் இல்லை. ஆஸ்திரேலியாவின் ப்ரமாதமான 20-வயது துவக்கவீரர் மேட் ரென்ஷா (Matt Renshaw) (60), ஷான் மார்ஷ் (66), மேத்யூ வேட்(Mathew Wade)(40) என்பவர்களின் முதுகில் சவாரிசெய்த ஆஸ்திரேலியா, முன்னேறி 276 அடித்துவிட்டது. அஷ்வின் அருமையாகப் போட்டும், ரன்கொடுப்பதைக் குறைக்கமுடிந்ததே தவிர, விக்கெட் சரியவில்லை. ஆனால் கோஹ்லியால் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ரவீந்திர ஜடேஜா, 6 விக்கெட்டுகளை அனாயாசமாக வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 85 ரன் முன்னிலை என்ற நிலையில், இந்தியா இந்த மேட்ச்சிலும் காலி என்பதே பெரும்பான்மையோரின் சிந்தனையாக ஆகியிருந்தது.

வெடிப்புகள் தெரிய ஆரம்பித்த இத்தகைய பிட்ச்சில் மூன்றாவது நாள் ஆடுவது எளிதானதல்ல. அதுவும் தடவிக்கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மன்கள் என்ன செய்வார்கள் என்று எல்லோரும் யூகித்திருந்தார்கள். ஆனால் கதை கொஞ்சம் வித்தியாசமாக அமைந்துவிட்டது. முதல் நாளில் துல்லியமாக வீசி இந்தியாவை எளிதில் சுருட்டிய நேத்தன் லயனை, இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ஆடிவிட்டார்கள் நம்மவர்கள். அவருக்கு ஒரு விக்கெட்டும் விழவில்லை. புனேயில் இந்தியாவை அதிரவைத்த ஓ’கீஃப் இங்கே பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. இருந்தும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாஸ்ல்வுட்டின்(Josh Hazlewood) ப்ரமாத பந்துவீச்சில் இந்திய விக்கெட்டுகள் பலியாகிக்கொண்டிருந்தன. கே.எல்.ராஹுல் பொறுப்பாக ஆடி இன்னுமொரு அரைசதம் எடுத்துத் துணையிருந்தார். செத்தேஷ்வர் புஜாரா(Cheteshwar Pujara) அபாரமாக ஆட, கோஹ்லியைப்போலவே இதுவரை ஃப்ளாப்-ஆகிக்கொண்டிருந்த ரஹானே இந்த முறை முழித்துக்கொண்டு ஒழுங்காக ஆடினார். இந்தியாவுக்கு எதிர்பாராத 118-ரன் பார்ட்னர்ஷிப் அமைய, ஆஸ்திரேலியாவின் தலைவலி ஆரம்பித்தது. 4-ஆவது நாளில் தொடர்ந்து ஆடிய இந்தியா வழக்கம்போல் வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 92, ரஹானே 52, சாஹா 20(நாட் அவுட்). இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் திறமையான பந்துவீச்சு மற்றும் கூர்மையான ஃபில்டிங்கிற்குமுன் போராடி 274 எடுத்ததே நம்பமுடியாததாக இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு தரப்பட்டது 188 ரன் இலக்கு. 4-ஆவது, 5-ஆவது நாட்களில் இதனை அடைந்துவிட்டால் தொடரில் அசைக்கமுடியாத ஒரு வலுவான நிலை அதற்கு கிடைத்துவிடும். கடினமான இலக்குதான். இருந்தும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள், குறிப்பாக ரென்ஷா, ஸ்மித், ஹாண்ட்ஸ்கோம்ப் (Peter Handscomb), ஸ்டார்க் என்று நல்ல ஃபார்மில் இருப்பதால் நம்பிக்கையுடன் ஆட ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. அஷ்வினிடம் மீண்டும் விழுந்தார் வார்னர். (இதுவரை அஷ்வின் வார்னரை டெஸ்ட்டுகளில் 9 தடவை அவுட் ஆக்கியுள்ளார். ஜோடிப்பொருத்தம்!) ரென்ஷா இஷாந்திடம் காலியாக, 2 விக்கெட்டுக்கு 42 வெறும் 9 ஓவர்களில். வேகமாகப் போய்க்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு ப்ரேக் கொடுக்க நினைத்து அஷ்வினைத் திருப்பிக் கூப்பிட்டார் கோஹ்லி. அஷ்வினிடம் விக்கெட்டை இழக்காமல் தடுத்து ஆடவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் பொதுவான இந்தத் தொடருக்கான ப்ளான். முதல் இன்னிங்ஸில் 49 ஓவர்கள் போட்டும் அஷ்வினுக்கு இரண்டே விக்கெட்டுகள்தான். ஆனால் இதுவோ 4-ஆவது நாள் விளையாட்டு. அஷ்வினைத் தடுத்து ஆடுவது பிரச்னையை உண்டுபண்ணும் என நினைத்து அடித்து ஆட ஆரம்பித்தார் ஸ்மித். இந்த சமயத்தில் ஷான் மார்ஷ் உமேஷ் யாதவிடம் எக்கச்சக்கமாக மாட்டினார். DRS கேட்டிருக்கவேண்டும். ஸ்மித் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் மார்ஷ் வெளியேற, 67-க்கு 3 விக்கெட் என்றானது. பயப்பட ஒன்றுமில்லை 7 விக்கெட் பாக்கியிருக்கிறது 120 ரன் தானே எடுக்கவேண்டும். ஆனால் உமேஷ் யாதவின் யார்க்கர்-நீளப் வேகப்பந்துகள் எகிற மறுத்து, கீழே தடவிச்சென்று பேட்ஸ்மனின் பாதத்தில் மோதி மோசம் செய்தன. அப்படி ஒரு பந்தில் ஸ்மித் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டார். DRS review கேட்கலாமா வேண்டாமா என்பதாக எதிரே நின்றிருந்த ஹாண்ட்ஸ்காம்போடு பேசினார். தவறில்லை. ஆனால் மேலும் குழம்பி, மைதானத்தில் (டிவி-யோடு உட்கார்ந்திருக்கும்) தங்கள் அணியினரிடமிருந்து இதுகுறித்து சிக்னல் பெற முயன்றார் ஸ்மித். This is not at all allowed. இந்தப் பித்தலாட்டத்தைக் கவனித்த கோஹ்லி இடையிலே புகுந்து சீற, அம்பயர் நைஜல் லாங் ‘நோ!..நோ!’ என அலறிக் குறுக்கிடவேண்டிவந்தது. (மேட்ச் முடிந்தபின்னும் கோஹ்லி இந்த சர்ச்சைபற்றி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் தில்லுமுல்லுபற்றி, நேர்காணலில் ஓபனாகப் போட்டுத்தள்ள, இது ஒரு பெரும் சர்ச்சையாகி விஸ்வரூபமெடுத்துள்ளது. உலகெங்கும் நிபுணர்களும், பழைய புலிகளும் இதனைக் கூர்மையாகக் கவனித்துவருகின்றனர்.) ஸ்மித் வேறுவழியின்றி நடையைக் கட்டுகையில் ஸ்கோர் 74-க்கு 4 ஆனது. ஆஸ்திரேலியாவின் பதற்றம் தெளிவாகத் தெரிந்தது. இந்தியாவின் உற்சாகமோ கோஹ்லியின் வடிவில் பொங்கித் தெறித்தது!

குழப்பத்தைத் தலையில் சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா ஆடிக்கொண்டிருந்தது. மிட்ச்செல் மார்ஷ் அவுட் ஆகையில், 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கு ஜெயிக்க 87 ரன்களே தேவைப்பட்டது. இன்னும் 5 விக்கெட்டுகள் கைவசம். வண்டியை இலக்கை நோக்கி ஓட்டிவிடலாம் எனத்தான் ஆஸ்திரேலியா நினைத்திருக்கவேண்டும். ரசிகர்களையும் இப்படியான சிந்தனையே ஆட்கொண்டிருந்தது. ஆனால் அந்த மாலையில், அஷ்வினின் கணக்கோ வேறுவிதமாக இருந்தது. ஹாண்ட்ஸ்காம்ப், வேட், ஸ்டார்க் எனப் பிடுங்கி எறிந்து ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை முறித்தார் அஷ்வின். ஆரம்பித்தது கோஹ்லியின் ருத்ர தாண்டவம். ரசிகர்களின் பக்கம் திரும்பி கைகாட்டி ஏத்திவிட்டார் மனுஷன்! ரசிகர்கள் போதையில் எழுந்தாட, இந்தியக்கொடிகளும் சேர்ந்துகொண்டன. ஆஸ்திரேலியாவின் மூடுவிழா நடந்துகொண்டிருந்தது. கடைசி இரண்டு விக்கெட்டுகளான ஓ’கீஃபையும், லயனையும் முறையே ஜடேஜாவும், அஷ்வினும் லபக்க, ஆஸ்திரேலியாவின் பெங்களூர் தீர்த்த யாத்திரை, இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது.

இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியாவின் தரப்பிலிருந்து ஒரே அலட்டல், பீற்றல் வெளிப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் கருண்நாயரை ’டக்’ அவுட் செய்த ஆவேசத்தில் ஸ்டார்க் அவர் முன்னே சென்று ‘கமான்!’ என்றதோடு, மேலும் முன்னேறி ‘நாலெழுத்து’ கெட்டவார்த்தையை அவர் மீது வீசினார். கருண் நாயரிடமிருந்து ரியாக்ஷன் இல்லை. புஜாரா, கோஹ்லி விளையாடுகையில் கிண்டல்கள் அதிகமாக இருந்தது. முதல் நாளில் இந்தியாவின் 8 விக்கெட்டுகளை, குறிப்பாக விராட் கோஹ்லியின் விக்கெட்டையும் சாய்த்த ஸ்பின்னர் நேத்தன் லயன் குஷி மூடில் கூறியது இது: ’’எங்களுக்குத்தெரியும். பாம்பின் தலையை வெட்டிவிட்டால் உடல் சரிந்து விழுந்துவிடும் என்று!’’. ஆட்டம் முடிந்தபின் பேசுகையில், தன் தலைமையில் இது மிகவும் இனிப்பான வெற்றி என்று கூறிய கோஹ்லி, ஆஸ்திரேலியாவை சீண்டத் தவறவில்லை. ’தலை வெட்டப்பட்டாலும் இந்தப் பாம்பு கொட்டிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!’ என்றார். ’என் விக்கெட்டை எடுத்துவிட்டதாலேயே இந்தியாவை எப்போதும் ஜெயித்துவிடமுடியாது. மற்றவர்கள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்வார்கள். நாங்கள் ஒரு அணி !’ என்றார் மேலும்.

வீரவசனங்கள் பேசியாயிற்று. மார்ச் 16-ல் தொடங்கும் ரான்ச்சி (ஜார்கண்ட்) கதை எப்படிச் செல்லுமோ ! இந்தியா பெங்களூர் டெஸ்ட்டை வென்றுவிட்டதே ஒழிய, அதன் பேட்டிங் ப்ரச்சினைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதை மறந்துவிடமுடியாது. குறிப்பாக கோஹ்லி நேரே வரும் பந்தை சரியாக யூகிக்காமல், அவசரப்பட்டு மட்டையை மேலேதூக்கி, எல்பிடபிள்யூ ஆகிற அசட்டுத்தனத்திலிருந்து விரைவில் விடுபடவேண்டும். அவர் நன்றாக பேட்டிங் செய்துவிட்டு வாயைத் திறந்தால் நல்லது . இருந்தாலும், எப்படியும் இந்தியாவை ஜெயித்துவிடவேண்டும் என்று மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் ஏதேதோ செய்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியா போன்றதொரு அணியை எதிர்கொள்கையில், இந்தியக் கேப்டனாக அவர் பேசாமல் இருக்கமுடியாதுதான் !

**

ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சேம்பியன்

ஐபிஎல் 2016-ன் இறுதிப்போட்டியில் (பெங்களூர், 29 மே, 2016) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இறுதிப்போட்டியில் பங்குகொண்ட இரு அணிகளுக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை :அவற்றின் கேப்டன்களான விராட் கோஹ்லியும், டேவிட் வார்னரும் (David Warner) துவக்க ஆட்டக்காரர்கள். தங்கள் அணிக்கு சிறப்பாக துவக்கம் தந்த அதிரடி ஆட்டக்காரர்கள். இருவரின் கடும் முனைப்பு, உழைப்பு, தலைமைப்பண்பு இவைதான் அவர்களின் அணிகளை இறுதிப்போட்டிக்கு இட்டு வந்தது என்றால் மிகையில்லை.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் தந்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே குறைவான ஸ்கோரில் வீழ்ந்திருந்தால் ஹைதராபாத் வெல்வது கடினமாகப்போயிருக்கும் 8 பௌண்டரி, 3 சிக்ஸர் என 69 விளாசித் தள்ளி அவுட்டான வார்னர், நெற்றியில் சிந்தனைக்கோடுகளுடன் பெவிலியன் திரும்பினார். தனக்கு அப்புறம் வேறு யாரும் அணியைத் தாங்கிப் பிடிப்பார்களா என்கிற கவலை. பயந்ததுபோலவே, மிடில் ஆர்டர் தடுமாறியது. இருந்தும் யுவராஜ் சிங் நன்றாக ஆடி 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அடுத்து ஒவ்வொருவராக வெளியேற, ஒரு சமயத்தில் ஹைதராபாத் 185-ஐத் தாண்டாதுபோல் இருந்தது. பெங்களூரின் ஷேன் வாட்சன் மிக மோசமாக 20-ஆவது ஓவரை வீச, ஹைதராபாத்தின் பென் கட்டிங் (Ben Cutting), அவரைக் கிழித்தெறிந்தார். ஆல்ரவுண்டர் கட்டிங் 15 பந்துகளிலேயே 3 பவுண்டரி, 4 சிக்ஸர் என 39 ரன் விளாசி, ஹைதராபாத்தை 208 ரன் உச்சத்துக்கு கொண்டுசென்றார். கட்டிங் அடித்த ஹிமாலய சிக்ஸர் ஒன்று ஸ்டேடியத்தையே கடந்து எம்.ஜி.ரோடில் போய் விழுந்தது (117 மீட்டர்).சீரியஸான முகத்துடன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த வார்னரின் முகம் மலர்ச்சி கண்டது.

209 என்கிற இலக்கு எந்த ஒரு அணியையும் அயரவைக்கக்கூடியது. இதனை நேரடியாக சந்திக்க இறங்கினார்கள் பெங்களூரின் விராட் கோஹ்லியும், க்ரிஸ் கேய்லும் (Chris Gayle). இதற்குமுன் பெங்களூர் பெற்ற சிறப்பான வெற்றிகளின் முக்கியமான பேட்டிங் ஹீரோக்கள் கோஹ்லியும், டி வில்லியர்ஸும் (AB de Villers) தான். இந்த இருவரையும் அணியின் Batman, Superman என வர்ணித்திருந்தார் கேய்ல். இதுவரை அவ்வளவு சரியாக விளையாடாத கேய்ல், சின்னஸ்வாமி ஸ்டேடியத்தின் 38000 ரசிகர்களுக்குமுன், அந்த இரவில் ருத்ர தாண்டவம் ஆடினார். ஆக்ரோஷமாக 4 பௌண்டரி, 8 சிக்ஸர்களைப் பறக்க விட்டு பெங்களூர் ரசிகர்களைக் கிறுகிறுக்கவைத்தார். ஒரு சமயத்தில் பெங்களூர் அணி, 11 ஓவர்களிலேயே, விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்திருந்தது. 38 பந்துகளில் 76 என சீறிய கேய்ல், பென் கட்டிங்கின் வேகப்பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் கோஹ்லி சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். கோஹ்லியும், கேய்லும் ஆடுகையில் அது ஐபிஎல் போட்டிகளின் முத்திரை பேட்டிங்காகத் தோன்றியது. 209 என்கிற உயர் இலக்கு, எளிதாக எட்டப்பட்டுவிடும் என எல்லோரையும் நினைக்கவைத்தது. இருவரின் வீழ்ச்சிக்குப்பின், அணியை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய ஸ்டார் பேட்ஸ்மன் டி வில்லியர்ஸ், கேஎல்.ராஹுல், ஷேன் வாட்சன் ஆகியோர் தங்கள் முயற்சியில் துரதிர்ஷ்டவசமாகத் தோல்விகண்டனர். ஐந்தே ரன்களில் டிவில்லியர்ஸ் அவுட் ஆனபோது, சோனி சேனலில் நவ்ஜோத் சித்துவின்(Navjot Sidhu) கமெண்ட்: `என்ன செய்வது? மனிதர்தான் இவர். கடவுள் இல்லையே!`

அட்டகாசமாக ஆரம்பித்த பெங்களூர் அணி, தடுமாறி முன்னேறியது. இறுதியில் ஜெயிப்பதற்கு, 3 ஓவர்களில் 35 தேவைப்பட்டது. ஸ்டூவர்ட் பின்னியும்(Stuart Binny), க்றிஸ் ஜார்டனும்(Chris Jordan) எதிர்பாராதவிதமாக ரன்–அவுட் ஆகிவிட, பெங்களூர் 200 ரன்கள் வரைதான் செல்ல முடிந்தது. ஹெல்மெட்டிற்குள் பெங்களூரின் சச்சின் பேபி, குழந்தைபோல் அழுவது தெரிந்தது. இருபது வருடம் முன்பு, 1996-ல் பாம்பேயில் நடந்த உலகக்கோப்பை செமி-ஃபைனலில் இந்தியா தோல்வியைச் சந்தித்தபோது, இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் வினோத் காம்ப்ளி கண்கலங்கி அழுதது நினைவுக்கு வந்தது!

8 ரன் வித்தியாசத்தில் ஐபிஎல். கோப்பையை முதன்முறையாக வென்றது வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கணிசமாகக் குவிந்திருந்த ஹைதராபாத் ரசிகர்கள், பெங்களூரின் இரவில் கூச்சலிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர். டேவிட் வார்னரின் சிறப்பான தலைமைப்பண்பு, தனிப்பட்ட உழைப்பு, பௌலர்களின் பிரமாதமான பங்களிப்பு ஆகியவையே ஹைதராபாத்தின் இந்த உன்னத வெற்றிக்குக் காரணம். ஆல்ரவுண்டர் பென் கட்டிங் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

தன் அணியின் கடுமையான உழைப்பே வெற்றிக்குக் காரணம் என்றார் டேவிட் வார்னர். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை சர்வதேசத் தரம் வாய்ந்தவர் எனப் புகழ்ந்தார். ஹைதராபாதின் மெண்ட்டரான(mentor) விவிஎஸ். லக்ஷ்மண், கேப்டன் டேவிட் வார்னர் அணியின் இளம்வீரர்களுக்கு உத்வேகமாகவும், முன்னோடியாகவும் திகழ்பவர் என்றார். ஹைதராபாத் அணியின் சிறப்பான பௌலிங் அந்த அணி வென்றதற்கு முக்கிய காரணம் என்றார் பெங்களூரின் கேப்டன் கோஹ்லி. தொடர் முழுதும் ஹைதராபாத்தின் புவனேஷ்வர் குமார் மற்றும் ஆஷிஷ் நேஹ்ரா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். கோப்பையை வென்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.15 கோடியும், ஃபைனலில் தோற்ற பெங்களூர் அணிக்கு ரூ.10 கோடியும் இந்திய கிரிக்கெட் போர்டு பரிசுகளாக வழங்கியது.

ஐபிஎல்-2016 – சாதனையாளர்கள் :

அதிகபட்ச ஸ்கோர் (அணி): ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 248/3 (குஜராத் லயன்ஸுக்கு எதிராக)
அதிகபட்ச ரன்கள்: விராட் கோஹ்லி(பெங்களூர்): 973. (டேவிட் வார்னர்(ஹைதராபாத்) 848)
அதிகபட்ச சதங்கள்: விராட் கோஹ்லி: 4
அதிவேக அரை சதம்: 17 பந்துகளில் 50 ரன்கள் -இருவர்: க்றிஸ் மாரிஸ் (டெல்லி), கரன் போலார்ட்(மும்பை)
அதிகபட்ச சிக்ஸர்கள்: விராட் கோஹ்லி: 38 (டி வில்லியர்ஸ்(பெங்களூர்) 37)
அதிகபட்ச பௌண்டரிகள்: டேவிட் வார்னர் 88 (விராட் கோஹ்லி 83)
அதிகபட்ச விக்கெட்டுகள்: புவனேஷ் குமார் (ஹைதராபாத்) 23 (17 போட்டிகள்)
அதிகபட்ச விக்கெட்டுகள் (சுழல்பந்துவீச்சு): யஜுவேந்திர ச்சஹல்(பெங்களூர்) 21 (13 போட்டிகள்)

**

இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது ?

நண்பர் ஜிஎம்பி-யின் ‘எங்கள் வீட்டு மாமரம்’ (http://gmbat1649.blogspot.in) படித்தபிறகு, இளம்பிராயம் நோக்கி, இழந்துவிட்ட ஆகாயம் நோக்கி வேகமாகப் பாய்ந்தது மனது. அமைதியான கிராமப்புற வாழ்க்கையின் காட்சிக்கோப்புகளை எடுத்துவைத்துக்கொண்டு, மீள்பார்வை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தெரியும். எதுவுமே நம்மோடு எப்போதும் இருக்கப்போவதில்லை. அல்லது கூட வரப்போவதுமில்லை. ஆதலால் காணொலிக்கோப்புகளை உடனுக்குடன் தயார் செய்து ஆழடுக்குகளில் பதுக்கிவைப்பது அதன் வழக்கம். ஏதோ, அதனால் முடிந்த காரியம்!

இப்போது பேசவந்தது இந்த மனதின் சாதுர்யம், சாகசம் பற்றி அல்ல. நாலாபுறமும் நாம் காணும் நாசகார காரியங்கள் பற்றி; சுற்றுச்சூழல் சிதைவு பற்றி. பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத கூறுகளில் ஒன்றான தொழிற்பெருக்கத்திற்கென, நாட்டின் குளிர்ச்சியான குக்கிராமங்கள் தடயம் தெரியாமல் காணாமல்போகுமாறு செய்யப்பட்டுவிட்டன. அதனிடத்தில், மழைக்காளான்களாய் முளைத்துவருகின்றன தொழிற்பேட்டைகளும், போதிய வசதியில்லாப் புறநகர்ப்பகுதிகளும். அசுரவேகத்தில் பெருநகரங்களாக உருமாறுகின்றன சிறு நகரங்கள். தவிர்க்கவியலாத, சூழல்நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில், சரியான ஆரோக்யமான நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின்றி, கான்க்ரீட் மலைகள் ஆங்காங்கே, தாறுமாறாகப் பொங்கி, கூட்டம் கூட்டமாக எழுந்து நின்று மனிதனின் ஆரோக்கிய வாழ்வையே அச்சுறுத்தும் அவல நிலை உண்டாகிவிட்டிருக்கிறது.

முன்னர், அக்கம்பக்கத்தில் பச்சைப்பசேலென்று வளர்ந்து சூழ்ந்திருந்தருந்த, குளிர்ச்சிதரும் நாட்டு மரங்களான ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை, பூவரசு, பூங்கொன்றை போன்ற பூ, காயெனப் பொழிந்துதள்ளிய மரங்கள், பணம்பண்ணும் முதலைகளின் பேராசைக்கெனக் காவுகொடுக்கப்பட்டுவிட்டன. கொடுக்கப்பட்டும் வருகின்றன. ஒருகாலத்தில் ஏரிகளால், குளம், குட்டைகளால், நீர்நிலைகளால், நிழல்தரும் மரங்களால் நிறைந்திருந்த, மனிதனுக்கான அழகான வாழ்விடங்களாக இருந்த சிறுநகரங்கள், ரியல் எஸ்டேட்காரர்களின் தீக்கண்கள்பட்டு, சிதைந்து சின்னாபின்னமாகி வருவதை நம் கண்முன்னே காண்கிறோம். ‘கார்டன் சிட்டி’ என்று ஆசையாக ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று நாட்டின் மற்றுமொரு ‘கான்க்ரீட் சிட்டி’ என்றாகிவிட்டது. பத்தோடு பதினொன்று. அத்தோடு இது ஒன்று. குறுகிய காலகட்டத்திலேயே, கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்.

நமது கிராமங்கள், நகரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கென, தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள் வரையமுடியாத, செயலாக்கமுடியாத, எதையும் உருப்படியாக செய்ய விரும்பாத அரசியல்வாதிகளால் மனித வாழ்வு சீர்குலைந்துவிட்டது. மனிதனோடு சேர்ந்து வாழநேர்ந்த துர்ப்பாக்கியம் கொண்ட ஜீவன்களான, ஆடு, மாடுகள், பறவைகள் என, இவைகளின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். இவைகளின் வாசம், வாழ்வாதாரத்துக்கு, நீர்நிலைகள், நிழல், காய்கனிதரும் மரங்கள், செடிகொடிகள் முக்கியமல்லவா? சிலருக்குப் பணம் காய்ப்பதற்காக, இவைகள்தானே கொடூரமாகப் பலியாக்கப்பட்டுவிட்டன. அல்லது பலியாகிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக எங்கும் நிறைந்து காணப்படும் சிட்டுக்குருவிகளை, இப்போதெல்லாம் காண்பதே அறிதாக இருக்கிறதே, கவனித்தீர்களா? அதிகாலையிலும், மாலையிலும் இப்போதெல்லாம் கேட்காத பறவைகளின் கீச்கீச்சு சப்தங்களுக்காக மனம் ஏங்குகிறது.

நாட்டை ஆள்வதற்கென நாம் ஓட்டுப்போட்டு அனுப்பிவைத்த அரசியல் வாதிகள், பசப்புவார்த்தைப் பேடிகள் பெரும்பணத்தை லஞ்சமாக ரியல் எஸ்டேட் பேய்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, நம் சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை, சிதைக்க அனுமதித்துக்கொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் சீராக நடக்கிறது சீரழிவு. இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பெங்களூரில், மூன்றாவது அடுக்குமாடிவீட்டின் பால்கனியிலிருந்து சிந்தனையோடு சுற்றுவெளியைப் பார்க்கிறேன். குத்துக்குத்தாக தனிவீடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கிடையே, ஆங்காங்கே கொஞ்சம் பச்சைத் திட்டுகள் இன்னும் தெரிகின்றன. ஒரு இளம் வேப்ப மரம், ஆலமரம், பெயர்தெரியாத சில மரங்கள் – இன்னும் பெரிதாகவில்லை- தூரத்தில் சிறுகூட்டமாக யூகலிப்டஸ் மரங்கள்.. தெரியாத்தனமாக விட்டுவைத்திருக்கிறார்களோ? சந்தோஷம் தலைதூக்குகிறது. கூடவே பயமாகவும் இருக்கிறது.யார் கண்ணாவது பட்டுவிடாமல் இருக்கவேண்டுமே !
**

கிரிக்கெட் ப்ரேமி

அலைபேசியில் வந்த மகளிடம்
ஆவலாய்க் கேட்டேன்
பெங்களூரில் இன்னுமா
பெய்கிறது மழை
அவளைப்பற்றிய அக்கறை
உண்டுதானெனினும்
அடுத்த நாள் மேட்ச்
நடக்குமா நடக்காதா

**

கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு அப்பால்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாட்களில் அதிரடியாக வென்றுவிட்டது கோஹ்லி தலைமையிலான இந்தியா. மொஹாலி ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு படுசாதகமாக இருந்ததுதான் காரணம். எனினும் தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் (de Villiers), ஆம்லா, டூ ப்ளஸீ(du Plessis) போன்ற ஜாம்பவான்கள் இருக்கையில், போட்டி மூன்று தினங்களுக்குள் முடிந்துவிடும் என யாரும் நினைக்கவில்லை.

என்னதான் நடந்தது? தென்னாப்பிரிக்கா இதனை எதிர்பார்க்கவில்லையா? அதிர்ச்சிகளை நிச்சயமாக எதிர்பார்த்துத்தான் மொஹாலி மைதானத்தில் இறங்கியது. ஆல்ரவுண்டர் டூமினி(Duminy) (ஸ்பின்னரும் கூட) காயத்தினால் ஆடாதது தென்னாப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம். ஆனால், அந்த அணியில் இம்ரான் தாஹிர் தவிர, ஆஃப் ஸ்பின்னர் ஹார்மர், இடதுகை ஸ்பின்னர் டீன் எல்கார் (Dean Elgar) ஆகியவர்கள் இந்திய மைதானத்தின் நிலையைக் கருத்தில்கொண்டே சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் மொத்தம் 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள். இது தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களின் குறிப்பிடத்தக்க சாதனை என்பதை மறுக்கமுடியாது.

இந்தியாவின் 201(முதல் இன்னிங்ஸ்), 200(இரண்டாவது இன்னிங்ஸ்) ஒன்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னே, பிரமாதமான, சவாலான ஸ்கோர்கள் இல்லை. ஆனால், முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஆம்லா, டிவில்லியர்ஸ், எல்கார் தவிர வேறு யாரும் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து இந்திய சுழலைச் சரியாக சமாளித்து விளையாட முடியவில்லை. அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்க்க, தென்னாப்பிரிக்கா 184-ல் மூட்டையைக் கட்டியது. மூன்றாவது நாளன்று தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா 218 என்ற இலக்கை வைத்தது.

டென்ஷனும், எதிர்பார்ப்புகளும் ஏற, பௌலிங்கை ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை வைத்துத் துவக்கியது இந்தியா. மைதானத்தின்மீது கோஹ்லிக்கு அவ்வளவு நம்பிக்கை! தென்னாப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரராக பௌலர் ஃபிலாண்டர்(Philander)-ஐ அனுப்பியது. அஷ்வினையும், ஜடேஜா, மிஷ்ராவையும் கூட மொஹாலியில் தடுத்து ஆடுவது கடினம். ஆகவே, அடித்துத் துரத்த ப்ளான்! ஆனால் சட்டியில் பருப்பு வேகவில்லை. தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் இந்திய ஸ்பின்னர்களின் இடைவிடாத தாக்குதலில் (குறிப்பாக ஜடேஜா-5 விக்கெட்) நிலைகுலைந்தன. ஆம்லாவும், டி வில்லியர்ஸும் போராட முயன்று காலியானார்கள். தென்னாப்பிரிக்கா எதிராட்டம் ஆடமுடியாமல் 109-ல் சுருண்டுவிட்டது. ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவைச் சாய்த்த தென்னாப்பிரிக்காவுக்கு, முதல் டெஸ்ட்டில் சரியான அடி.

இந்த வெற்றியினால் இந்தியா பெரிய டீம் என விஸ்வரூபம் எடுத்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை. வெற்றியின் ஊடேயும், இந்திய பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இயங்கவில்லை என்கிற நிதர்சனம் கண்முன்னே நின்று கலக்கம் தருகிறது. முரளி விஜய் மற்றும் புஜாரா மட்டுமே நிலைத்து நம்பிக்கையுடன் விளையாடிய வீரர்கள். கேப்டன் கோஹ்லி, ரஹானே, ஷிகர் தவன்(Shikar Dhawan) (இரண்டு இன்னிங்ஸிலும் பூஜ்யம்) – இவர்கள் தந்தது பெரும் ஏமாற்றமே. இந்த ஸ்திரமற்ற இந்திய பேட்டிங் அடுத்த டெஸ்ட்டில் (பெங்களூர்) என்ன செய்யும்? தொடரில் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆதலால், சில மாறுதல்கள் அணியில் தேவைப்படுகின்றன.

இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் ஃபார்மில் இல்லை என்பது மொஹாலியில் நன்றாகவே தெரிந்தது. அடுத்த டெஸ்ட்டில், அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் ரிசர்வ் துவக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராஹுல் சேர்க்கப்பட்டால் அணிக்கு பலமுண்டாகும். அதேபோல், விக்கெட்கீப்பர் சாஹாவின் விக்கெட் கீப்பிங்கும், பேட்டிங்கும் முதல் டெஸ்ட்டில் சோபிக்கவில்லை. அவருடைய இடத்தில் ரிசர்வ் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா பெங்களூரில் ஆடுவது நல்லது. வேறு எந்த மாறுதலும் தேவையில்லை எனத் தெரிகிறது. அடிபட்ட நாகம் போலிருக்கிறது தென்னாப்பிரிக்கா. போதிய மாற்றங்கள் அவர்கள் அணியிலும் செய்யப்படும். டூமினி அனேகமாக அடுத்த மேட்ச்சில் ஆடுவார். மிகுந்த முனைப்புடன் தென்னாப்பிரிக்கா பெங்களூரில் நுழையும்.

இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய ஆட்டக்காரர்கள், குறிப்பாக பேட்ஸ்மன்கள் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதைப் பொறுத்திருக்கும் நமது வெற்றி வாய்ப்பு. முதல் மேட்ச்சில் வென்றுவிட்டோம் என்கிற இறுமாப்பில் சாய்ந்து உட்கார, அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்னும் போகவேண்டிய தூரம் பாக்கியிருக்கிறது.
**