ஐபிஎல்2023: முதல் போட்டியில் குஜராத் வெற்றி

குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் குதூகல IPL ஆரம்ப விழா நேற்று (31-3-23). தங்களுக்குத் தெரிந்த ‘கிரிக்கெட்டை ஆடி’ மஹா ரசிகர்களை சூடேற்றிவைத்த இந்தியத் திரைவானின் இளம் நட்சத்திரங்கள் – ரஷ்மிகா மந்தனா. தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia). சுஃபி, வெஸ்டர்ன் பாடகர் அரிஜித் சிங் ஆட்டத்திற்குத் துணையாகக் குரல்கொடுத்தார். ரசிகர்களின் ஆனந்தம்பற்றிக் கேட்கவும் வேண்டுமா!

அரங்கேறி நடமாடும் மங்கை… போல

அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்..!

-ஆடும் அணங்குகள் தமன்னா, ரஷ்மிகா மந்தனா

தோனியின் காலில் விழும் (வடக்குப் பழக்கம்) பிரபல பாடகர் அரிஜித் சிங்

(என்னதான் சிரிப்போ!) – ரஷ்மிகா, தமன்னா

முதல் மேட்ச். பாண்ட்யாவின் குஜராத் டைட்டன்ஸ் vs தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். பாண்ட்யா டாஸ் ஜெயித்து பௌலிங் என்று சொல்ல, தோனியின் மஞ்சள் வீரர்கள் மைதானத்தில் பேட்டுடன். ருதுராஜ் கெய்க்வாட் சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் மனதிலிருந்து ரஷ்மிகாவையும், தமன்னாவையும் மறையும்படி செய்துவிட்டார்! அப்படி ஒரு விளாசல். குறிப்பாக பாண்ட்யா, (அயர்லாந்தின் ஜோஷுவா லிட்டில், ஜோஸப் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை கடைந்துஎடுத்துவிட்டார் கடைந்து. முகமது ஷமியும், ரஷீத் கானும் மட்டுமே அவரது ஆவேசத்திலிருந்து தப்பித்தார்கள். இருந்தும், சதம் வரவில்லை அவரிடம். 4 பௌண்டரி, 9 சிக்ஸர், 92-ல் அவுட். மொயீன் அலி கொஞ்சம் சேர்த்தார்.

CSK’s Gaikwad: Sublime innings

தோனி இவ்வளவு கடைசியில் வந்திருக்கக்கூடாது எனத் தோன்றியது. 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் வந்திருந்தால் இன்னும் ரன் சேர்ந்திருக்கும். ராயுடு, ஜடேஜா, ஷிவம் துபே எல்லாம் ஃப்லாப் ஷோ. ஆனாலும், அஹமதாபாத் ஸ்டேடிய ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்துதான் வைத்திருந்தார் மகேந்திர சிங் தோனி. அவர் அடித்த ஒரு சிக்ஸரே, ரசிகர்களின் முகங்களை மினுமினுக்கவைத்தது. காமிரா காண்பித்தது. இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 178 என்றது சென்னையின் ஸ்கோர்.

வ்ரித்திமான் சாஹாவும், ஷுப்மன் கில்லும் துவக்கினார்கள் குஜராத்தின் அக்கவுண்ட்டை. வேகம் காட்டமுயன்ற சாஹா 25-ல் வெளியேற்றப்பட்டார். முதன்முறையாக இம்பேக்ட் ப்ளேயர் (impact player) ரூல் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஐபிஎல்-இல். ரூலின்படி, ஆரம்ப 11-ல் இருக்கும் ஒரு வீரருக்கு பதிலாக, போட்டியின் தருணத்தை பொருத்து அணியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு இம்பாக்ட் ப்ளேயர் உள்ளே வந்து ஆடலாம். பௌலிங், பேட்டிங் செய்யலாம். ஏற்கனவே இரண்டு அணியாலும் அறிவிக்கப்பட்ட தலா 5 இம்பேக்ட் ப்ளேயர்களிலிருந்து ஒருவர் தான் இதற்கு கேப்டனால் தேர்வுசெய்யப்படவேண்டும். ஆனால், வெளியேற்றப்பட்ட வீரர் திருப்பி வந்து ஆட்டத்தில் கலந்துகொள்ளமுடியாது என்பதும் நிபந்தனை. முதலில் இதைப் பயன்படுத்தியது தோனி. குஜராத் பேட்டிங்போது, வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேயை (Tushar Deshpande), பேட்ஸ்மன் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக உள்ளே வரச் செய்தார். ஆனால் தேஷ்பாண்டே அப்படி ஒன்றும் இம்பாக்ட் ஏற்படுத்திவிடவில்லை!

Player of the Match: GT’s Rashid Khan

புதிதாக ஐபிஎல் ஆட வந்த சிஎஸ்கேயின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தனது அருமையான யார்க்கர், லெக்-கட்டர்களுடன் குஜராத்தின் வேகத்தை மட்டுப்படுத்தித் திணறவைத்தார். 3 முக்கிய விக்கெட்களைப் பிடுங்கி வீசினார்.

ஃபீல்டிங்கில் அடிபட்ட வில்லியம்ஸனுக்குப் பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக பேட்ஸ்மன் சாய் சுதர்ஷனை குஜராத் பேட்டிங்போது உள்ளே அழைத்தார் பாண்ட்யா. சாய் வேகமாக 22 அடித்துவிட்டு வெளியேற, விஜய் ஷங்கர் 27 அடித்தார். ஷுப்மன் கில் தன் ஃபார்மை உறுதிசெய்தவாறு விறுவிறுவென 63 என விளாசி குஜராத்திற்கு டாப் ஸ்கோர் கொடுத்தார். இருந்தும், டெத் ஓவர்களில் சென்னை ஜெயிக்க வாய்ப்பிருப்பதுபோல் மேட்ச் வித்தை காட்டியது. ஆனால் ரஷீத் கான் 19-ஆவது ஓவரில் சிக்ஸர், பௌண்டரி விளாசி சென்னையை அடக்க, கடைசிஓவரில் ஒரு சிக்ஸ், பௌண்டரி என குஜராத் வெற்றிக்கு வழிசெய்தார் ராஹுல் தெவட்டியா. 182/5. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் மூன்றாவது தொடர் வெற்றி இது. சிஎஸ்கே! அடுத்த சந்திப்புல திருப்பிக் கொடுத்திருங்கப்பா!

இன்று (1-4-23) சனிக்கிழமை. Double header. முதலில் (3:30 pm) பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸையும், அடுத்த போட்டியில் (7:30 pm) லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸையும் சந்திக்கின்றன. 3 புதிய கேப்டன்கள் – டெல்லிக்கு டேவிட் வார்னர், பஞ்சாபுக்கு ஷிகர் தவன், கொல்கத்தாவுக்கு நிதிஷ் ரானா. லக்னோவுக்கு கே.எல்.ராஹுல் என்பது தெரிந்ததே!

WPL, IPL .. கிரிக்கெட் ரசிகர்களின் யோகம்!

கத்தி போச்சு, மாங்கா வந்தது டும் டும் டும்.. ! – என்பதுபோல WPL போய், IPL உள்ளே நுழைகிறது நாளை (31-3-23) அகமாதாபாத் மைதானத்தில், கிரிக்கெட் ரசிகர்களின் மனவெளியில்.

மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி WPL கோப்பையை வென்று, WPL-ன் முதல் எடிஷன் போட்டிகளை சில நாட்களுக்கு முன் மும்பையில் முடிவுக்குக் கொண்டுவந்தது. பெண்களுக்கான முதல் டி-20 லீக் கிரிக்கெட் சேம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக ஆரம்பித்து நடத்தியதிலும்,எதிர்பார்த்ததைவிட ரசிகர்களின் ஆதரவு, ஆரவாரம் மைதானங்களில் பொங்கியதாலும் இந்திய கிரிக்கெட் போர்டும், அணி உரிமையாளர்களும், கமர்ஷியல் ஸ்பான்சர்களும் ஏகப்பட்ட குஷியில் இருக்கிறார்கள்.

WPL players: Smriti Mandhana, Nat Sciver-Brunt, Jemimah Rodrigues

கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை அணிக்கு ரூ.6 கோடி பரிசுப்பணமாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை. இவற்றைத் தாண்டி டூர்னமெண்ட்டின் சிறப்பு வீராங்கனை (ஹேலி மேத்யூஸ்)- ரூ.5 லட்சம், ப்ளேயர் ஆஃப் த ஃபைனல் (நாட் ஸிவர்-ப்ரண்ட்) ரூ.5 லட்சம், திறன்வாய்ந்த புதிய வீராங்கனை (யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia) ரூ.5 லட்சம், சிறந்த கேட்ச் பிடித்த வீராங்கனை (ஹர்மன்ப்ரீத் கௌர்) ரூ.2 1/2 லட்சம், ஃபைனல் மேட்ச்சில் சிறந்த பவர் ஹிட்டர் (ராதா யாதவ்) விருதுக்காக ரூ.1 லட்சம் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டு 2023-க்கான கோலாகல WPL விழா மார்ச்சில் நிறைவடைந்தது .

Above: IPL bowlers – Washington Sundar, Natarajan, Ashwin, Shardul Thakur

நாளை(31-3-23) ஆரம்பமாகிறது ஆண்களுக்கான கிரிக்கெட் ஆட்டபாட்டம். அதாவது, நம்ம IPL ! முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (கேப்டன்: ஹார்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (கேப்டன்: எம்.எஸ்.தோனி) -உடன் மோதுகிறது. இரு அணிகளுக்கும் தீவிர ரசிகர்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிறையப்பேர். ஆதலால், போட்டி அதிஆர்வமாக கவனிக்கப்படும். குஜராத் அணியில் பாண்ட்யாவோடு, நியூஸிலாந்தின் கில்லாடி(!) கேன் வில்லியம்ஸன், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், முகமது ஷமி, ராஹுல் தெவாட்டியா, சாய் கிஷோர் ஆகியோர் பலம் காட்டுகிறார்கள். போன வருடம் பத்து போட்டிகளில் தோற்று பரிதாபமாகக் காட்சியளித்த சிஎஸ்கே-யில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், இங்கிலாந்தின் மொயீன் அலி, தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியஸ் (Dwaine Pretorius), அம்பதி ராயுடு ஆகியோர் முஷ்டியை உயர்த்தி நிற்கிறார்கள். தோனி முதல் மேட்ச்சில், காயம் காரணமாக ஆடமாட்டாரோ என்றொரு வதந்தி!தொடரின் பின்பகுதியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சென்னை அணியில் சேர வாய்ப்பு. அஹமதாபாதின் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் முதல் போட்டியிலேயே பொறிபறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை ஆட்டமாடிய பெண்களைக் கொஞ்சம் மனதிலிருந்து அகற்றிவிட்டு, ஆடவிருக்கும் ஆண்வீரர்களை இனி கவனிக்கப் பாருங்கள், கிரிக்கெட்டின் போதை பக்தர்களே! உங்களுக்கு சுக்ர தெசைதான் இப்போது…

**

ஜொலித்த சூர்யா. விக்கித்துப்போன லங்கா !

ஸ்ரீலங்காவுக்கு எதிரான டி-20 தொடரை முடிவு செய்யும் 3-ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது, அதுவும் ரொம்பச் சரியாகச் செய்தது திருப்திகரமாய் அமைந்தது. இஷான் கிஷன் எளிதாக விழுந்தாலும், தன் இரண்டாவது மேட்ச்சை ஆடிய ராஹுல் த்ரிப்பாட்டி (Rahul Tripathi) லங்கா கேம்ப்பின் மீதான தாக்குதலை ஆரம்பித்துவைத்தார். 16-இல் 35 விளாசி வெளியேறிய த்ரிப்பாட்டிக்குப் பின்  உள்ளே நுழைந்தார் ஸ்கை (SKY). அடுத்த முனையில் ஷுப்மன் கில் (Shubman Gill) நிதானம்.

A hint of Surya’s fireworks !

சில பந்துகளை கவனித்துவிட்டு கில், சூர்யா சில பௌண்டரிகளை அடிக்க, பதற்றத்தில் வேகவேகமாக பௌலிங்கை மாற்றினார் லங்கா கேப்டன் ஷனகா. சூர்யாவுக்கு ஆவேசம் வந்துவிட்டால், எதிரி பௌலர்கள் மைதானத்தை விட்டு ஓடிவிடுவதே நல்லது! ஆனால் அவர்கள்,  ஸ்பின், ஸ்லோ டெலிவரி, wide outside the off-stump என்றெல்லாம் வெரய்ட்டி காண்பிக்க முயல, வந்ததே கோபம் சூர்யாவுக்கு. சுற்ற ஆரம்பித்துவிட்டார் பேட்டை. ஸ்கோர் திடீரென எகிற, ஸ்ரீலங்கா பௌலர்கள், ஃபீல்டர்கள் அடிக்கடி ஆகாசம் பார்க்கவேண்டியதாயிற்று. குறிப்பாக, மதுஷன்காவையும் கருணரத்னேயையும் ஒரு பிடி பிடித்தார் அவர். உட்கார்ந்தவாறும், தரையில் படுத்து உருண்டும் பறக்கவிடப்பட்ட சிக்ஸர்கள், குஜராத் ரசிகர்களை போதையில் கிறுகிறுக்கவைத்தன. மொத்தம் 7 பௌண்டரிகள், 9 சிக்ஸர்கள். வெறும் 45 பந்துகளில் பிடி, சதம் என்றார் சூர்யா. கிடுகிடுத்துப்போனது லங்கா. ஒரு பக்கம் கில் (46), ஹூடா (4), பாண்ட்யா (4) என வெளியேற, அக்‌ஷர் பட்டேலின் (21, 9 பந்துகள்) துணையோடு இறுதிவரை அவுட் ஆகாமல் விளாசிய சூர்யா 112 நாட் அவுட் (51 பந்துகள்)..

ஸ்ரீலங்காவுக்கு இலக்கு 229 ! நாங்களும் காண்பிப்போம் அதிரடி என்பதாக ஆரம்பித்தது லங்கா. கொஞ்சம் ரன் ஏற, விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிய ஆரம்பித்தன. இந்த மேட்ச்சிலும் ஆடவைக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் பௌலிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்ததாகத் தோன்றியது. 5 நோபால்களுக்கு பதில் 4 வைட் ! அவ்வப்போது பாண்ட்யா எச்சரிப்பது தெரிந்தது. எனினும் 2.4 ஓவர்தான் அவருக்கு வந்தது அதில் 3 விக்கெட்! ஆச்சர்யம். பாண்ட்யா, சாஹல், மாலிக் ஆளுக்கு 2 எடுக்க, ஸ்ரீலங்கா நிலைகுலைந்தது. 17-ஆவது ஓவரில் 137 ரன்களில் அதன் ஸ்கோர் மடிந்தது.

ஒரு கட்டத்தில் இது Surya Vs Sri Lanka என்று ஆகிவிட்டிருந்தது என்றார் கேப்டன் பாண்ட்யா. கோச் ராஹுல் ட்ராவிட் புகழ்ந்தார் சூர்யாவை இப்படி: ”சிறுவயதில், இளம் கிரிக்கெட் வீரனாக வளர்ந்துகொண்டிருக்கையில், நல்லவேளையாக நான் ஆடியதை நீ பார்த்திருக்கமாட்டாய் என நினைக்கிறேன். நிச்சயம் என் ஆட்டத்தைப் பார்த்திருக்கமாட்டாய்! “

இந்தியாவுக்கு தொடர் வெற்றி. இதுவரை உள்நாட்டு டி-20 தொடரை ஸ்ரீலங்காவிடம் தோற்றதில்லை இந்தியா.

ஆட்டநாயகன் விருதை எதிர்பார்த்தாற்போல் சூர்யா சுருட்ட, தொடர்நாயகன் விருதை வென்றார் அக்‌ஷர் பட்டேல். Consistent performance.

ஒருநாள் தொடர் ஜனவரி 10-ல் அஸாம் தலைநகர் குவஹாட்டியில் ஆரம்பம். இரவு-பகல் கூத்து!

**

SL-IND டி-20: மும்பை த்ரில், Pandya’s gamble!

கடைசி ஓவர் களேபரம் நேற்று (03-01-23)வங்கெடேயில். 13 எடுக்கவேண்டும் ஸ்ரீலங்கா வெற்றிக்கு. தான் போட்டிருக்கவேண்டிய ஓவரை அக்‌ஷர் பட்டேலிடம் கொடுத்தார் கேப்டன் ஹார்திக் பாண்ட்யா. ஸ்ரீலங்காவிற்கு ஆச்சர்யம். களத்தில் விளாசும் ஆல்ரவுண்டர் கருணரத்னே, டெய்ல்-எண்டர் ராஜிதா. இன்னும் 2 விக்கெட்வேறு கையில். நாம் ஜெயிச்சிட்டோம் என்று SL dugout ரிலாக்ஸ் ஆகி, கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு மும்பையின் இரவில் அமர்ந்திருந்தது!

அக்‌ஷரின் முதல் பந்து வைட். 2-ஆவதில் ராஜிதா ஒரு ரன். 3-ஆவதை வைட் என நினைத்து கருணா சும்மா இருக்க, அது வைட் இல்ல தம்பி..dot ball! 4-ஆவதை (legal 3rd) தூக்கி விளாச, சிக்ஸர்! ஸ்ரீலங்கா பக்கம் சட்டெனத் திரும்பிய முள்! 3-பந்தில் 5 ரன்தான் தேவை. மேட்ச் போச்சு இந்தியாவுக்கு –ரசிகர்கள் பதற்றம். அப்படியே பட்டேலும், கிஷனும் டென்ஷன் முகத்தோடு கேப்டனுடன் வாக்குவாதம். ஏன் எங்கிட்ட கொடுத்தே .. நீயே போட்டிருக்கலாம்ல என்று பட்டேல் கேப்டனைக் கேட்டது போல, நீ போட்றபடி போடு.. தோத்தா அதுக்கு நான்தான் பொறுப்பு.. போ.. போய்ப் போடு என்று பாண்ட்யா சொல்வதுபோல் உடல்மொழிகள் துல்லியமாக ஸ்க்ரீனில்.  அடுத்த பந்து அக்‌ஷரின் dot ball ! 2-ல் 5 தேவை. யார்க்கர்போல 5-ஆவதை அக்‌ஷர் வீச, 2 ரன் எடுக்க ஆசைப்பட்டு ராஜிதா ரன் அவுட். ஹூடா த்ரோவில் அக்‌ஷர் காரியம். கடைசிப்பந்தில் 4 தேவை ஸ்ரீலங்காவிற்கு. 109 கி.மீ.யில் வேகத்தோடு போட, மிட்-ஆனில் ஃபீல்ட் ஆனது. அதே ஹூடா. இப்போது த்ரோ விக்கெட்கீப்பருக்கு. ஒரு ஃப்ளாஷில் காரியத்தை முடித்த கீப்பர் கிஷன். மதுஷன்கா ரன் அவுட். லங்கா ஆல் அவுட்160. 2 ரன்னில் த்ரில் வெற்றி இந்தியாவுக்கு என்றது ஸ்கோர்போர்டு!

ஆட்டத்திற்குப் பிறகான நேர்காணலில் பாண்ட்யா : ’வேண்டுமென்றேதான் கடைசி ஓவரை அக்‌ஷரிடம் கொடுத்தேன். அவர்கள் 13 ரன் அடிக்கலாம். நாம் தோற்கலாம். இருந்தாலும் நெருக்கடி  சிச்சுவேஷனை உண்டாக்கி சோதித்துப் பார்க்க எண்ணம். அக்‌ஷர் கடைசி ஓவர் ப்ரெஷரை சாமர்த்தியமாகக் கையாண்டார்.’ என்றார். 4 விக்கெட் எடுத்த புது வேகப்பந்துவீச்சாளர் ஷிவம் மாவிக்கும் பாராட்டு .

முதல் ஓவரில் கிஷன் அடித்த 16 ரன்கள், ஏதோ ஸ்கோர் 180-190 வரை போகப்போகிறது என்கிற கற்பனையை ரசிகர்களிடம் ஓஹோவென வளர்த்துவைத்தது. அடுத்தடுத்து ஹுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்ஸன் என ஒற்றை இலக்க சரிவுகள் இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா பௌலர்கள் கொடுத்த செட்பேக்ஸ். கிஷனும், பாண்ட்யாவும் மிடில் ஓவர்களைத் தாக்குப்பிடித்து வண்டி ஓட்ட, இறுதி ஜோடியான தீபக் ஹூடாவும், அக்‌ஷர் பட்டேலும்தான் நெருக்கடியை சமாளித்து, இந்தியாவை 150-ஐக் கடக்கவைத்தார்கள். 23 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 43 நாட் அவுட் என மிரட்டிய ஹூடா ப்ளேயர் ஆஃப் தி மேட்ச். அக்‌ஷர் 31 நாட் அவுட், , கிஷன் 37, பாண்ட்யா 29. தன் முதல் டி-20 மேட்ச்சை ஆடிய Gill, ஏழேடுத்து ஏமாற்றம். சூர்யா, சாம்ஸன் சல்லீஸாக வீழ்ந்ததில் லங்காவுக்கு ஆனந்தம்.

எதிரியின் ரன்-அவுட்டில் ஆனந்தப்படும் பாண்ட்யா, பட்டேல்! (மேலே)

இலக்கைத் துரத்திய ஸ்ரீலங்காவும் ஆரம்பத்தில் சரிந்தது ஷிவம் மாவியிடம். ஆனால் இந்திய ஸ்பின்னர்களை வெளுத்தது. பாண்ட்யா, ஷிவம், மாலிக் ஆகியோரிடம் லங்கா பேட்ஸ்மன்கள் பயந்து பின்வாங்கினார்கள் என்பதும் தெரிந்தது. 144, 145 என வீசிக்கொண்டிருந்த உம்ரான்  மாலிக், திடீரென 155 கி.மீ. (record ball) ஒன்றை ஏவி, வேக ரன்னெடுத்த ஸ்ரீலங்கா கேப்டன்  ஷனகாவை (45) சாஹலிடம் கேட்ச் கொடுக்கவைத்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். ஹஸரங்கா, கருணரத்னா க்லெவர் பேட்டிங்.  இந்திய அணியில், சாஹல், சாம்ஸன், ஹூடா ஆகியோர் அபார ஃபீல்டிங். Super keeping by Ishan Kishan. Lot of saves behind the wicket in a low-scoring match.

Scores (20 overs): India 162/5.  SL 160 all out.Player of the match: Deepak Hooda

**

கிரிக்கெட்: இந்தியா தானே தேடிக்கொண்ட தோல்வி

நேற்றைய ஆட்டம், ஆஸ்திரேலியாபோன்ற ஒரு professional outfit-ஐ அவர்களது சூழலிலேயே எதிர்நோக்க, மல்லுக்கட்ட,  தேவைப்படும் பாடங்களைப் படிக்கவில்லை. அல்லது அதற்கான முழுமுனைப்பு இந்திய அணியிடம் இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த மந்தப் போக்கு அடுத்த மேட்ச்சுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், ஒரு-நாள் தொடரை இந்தியா பரிதாபமாக இழப்பது உறுதி.

போஸ்ட்-மார்ட்டம் தேவையில்லை. சில  விஷயங்களைக் கவனித்தால் போதுமானது.

வழக்கம்போல் கோஹ்லி டாஸைத் தோற்றாயிற்று. ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் எப்படி நிதானமாக ஆரம்பித்து 150+ வரை இழப்பின்றி ஸ்கோரை கொண்டுசென்றார்கள். பின் வந்தவர்கள் எப்படி இந்தியாவின் பிரதான பௌலர்களைத் தாக்கி ரன் மலையை எழுப்பினார்கள் என்பதை சாஸ்திரி+கோஹ்லி டீம் கவனித்ததா? அல்லது பஜியா, பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு அசட்டு ஜோக்கடித்து, ஒருவருக்கொருவர் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தார்களா பெவிலியனில்? தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவின் திட்டமிட்ட பேட்டிங் வியூகங்களுக்கு, ஒத்து ஊதுவதாக அமைந்தது இந்திய பௌலிங்! ஸ்பின்னர் சாஹலையும், வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையும் சிட்னியில் சமாளிக்க போதுமான ஹோம்-வர்க் செய்திருந்தார்கள் எதிரிகள். முகமது ஷமியை  மட்டுமே அவர்களால் தொடமுடியவில்லை. ஷமி 3/59. ஜடேஜாவுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும் எகானமி-ரேட் மோசமில்லை. மற்றவர்கள்? ஒரு ஸ்பின்னர் -that too, team’s leading  wicket taker- 10 ஓவர்களில் 89 ரன் கொடுத்ததாக அனேகமாக சரித்திரம் இல்லை என நினைக்கிறேன். சாஹலை எப்படியும் நொறுக்கித்தள்ளினால்தான் இந்தியாவின் பௌலிங் தாக்கத்தை வரும் தொடர்களில் வெகுவாகக் குறைக்கமுடியும் எனத் திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள் நேற்று. பும்ரா பொதுவாக தாக்கும் பௌலர். 2-3 விக்கெட்டுகளாவது அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். நடக்கவில்லை. செய்னி ஒரு அனுபவமில்லாத பௌலர். வியூகமில்லாத வேகம் விக்கெட்டைத் தராது என்று அவரிடம் யாரும் சொல்லவில்லைபோலும். சாஹலும், செய்னியும் 10 ஓவர்களில் முறையே 89, 83 ரன்கள் கொடுத்தார்கள். எடுத்தது ஆளுக்கு ஒரு விக்கெட். பும்ராவும் பெரிசாக செய்யவில்லை. அவரும் எடுத்தது 1. கொடுத்தது 73. இப்படியான பௌலிங்கில் எதிர்டீமின் இரண்டுபேர் சதமடித்து, ஆஸ்திரேலியா 374 எடுக்காமல் வேறென்ன செய்யும்?

சிட்னியில் இந்திய ரசிகர்கள் !

375 -ஐத் துரத்திய, அல்லது அப்படி ஆரம்பத்தில் காண்பித்துக்கொண்ட இந்திய பேட்டிங் நிலை, எப்படியானது? டாப்-ஆர்டர் லட்சணம்: மயங்க் அகர்வால் 22, கோலி 21, ஷ்ரேயஸ் 2, ராஹுல் 12. உருப்படுமா? 350+ இலக்கை குறிவைக்கிற அழகா இது? கோஹ்லியின் 21 -ல் ஒரு கேட்ச் ட்ராப் வேற. அவர் ஆடியது அவர் இன்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை விட்டுவரவில்லை என்பதையே காட்டியது. ஷ்ரேயஸ் ஐயருக்கு பௌன்சர் ப்ரச்னை. மயங்கும், ராகுலும் ஃபீல்டர் எங்கே நிற்கிறான் எனத் தேடிக்கொடுத்தார்கள் கேட்ச்சை. பௌன்சர்களில் காலியானார்கள் அகர்வால், கோஹ்லி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர். Hardik Pandya was the only silver-lining. பாண்ட்யாவின் 90, தவன்-74 இல்லாவிட்டால் இந்தியா 250-க்குள் சரிந்து இன்னும் பரிதாபமாகப் பிதுங்கியிருக்கும்.

முன்பெல்லாம் டெண்டுல்கர், யுவராஜ், சேஹ்வாக், ரெய்னா  போன்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள், இக்கட்டான நிலையில், அவ்வப்போது சில ஓவர்களும் போடுவார்கள். ரெகுலர் பௌலரிடம் சிக்காத விக்கெட்டுகளையும் சமயத்தில் தூக்கி, அணிக்கு ஒரு ஆசுவாசம் தருவார்கள். ஏற்கனவே ஏற்பட்ட முதுகுப்பிரச்னையால் பாண்ட்யா பௌலிங் செய்வதில்லை இப்போது. நேற்றைய ஆட்டத்தில்,  இந்திய அணியில் ஆறாவது பௌலர், அதாவது பார்ட்-டைம் பௌலர் இல்லாதது பெரும் ப்ரச்னையானது. ஐந்து முக்கிய பௌலர்களில் யாராவது ஒருவருக்கு காயம், அல்லது செமயா அடிவாங்கினால், கேப்டன் அழைக்க என  அந்த 6-ஆவது ஆள், ஆல்ரவுண்டர் அல்லது பௌலிங்கும் கொஞ்சம் தெரிந்த பேட்ஸ்மன் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு. ஏகப்பட்ட ரன்கொடுத்துவிட்டு, கடைசி ஓவரில் கையை உதறிக்கொண்டு ஓடிய சாஹல்.. அடிவாங்கித் திணறிய பும்ரா, செய்னி.. பெப்பே என முழித்துக்கொண்டிருந்த கேப்டன் கோஹ்லி.. சகிக்கவில்லை..

சரி, இந்தியாவின் ஃபீல்டிங்? கேவலம். 3 கேட்ச்சுகள் வெண்ணெய்க்கைகளில் பட்டு வழுக்கித் தரைசேர்ந்தன. மடத்தனமான இந்திய ground fieldingவேறு ஆஸ்திரேலிய ஸ்கோர் வேகமாக ஏற அனுமதித்தது. இந்தியாவின் உடல்மொழி, ஒரு டாப்-லெவல் கிரிக்கெட் மேட்ச் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்ச்சியே இல்லாததுபோல் இருந்தது.

அடுத்த போட்டி நாளை இதே மைதானத்தில். சாஸ்திரி-கோஹ்லியின் மண்டையில் இப்போது ஊர்வதென்ன? நேற்றும் ஆசையாகக் கொடிதூக்கி வந்திருந்தார்கள், நாளையும் வருவார்கள் இந்திய ரசிகர்கள். அவர்களுக்குக் கொண்டாட என, இனிவரும் போட்டிகளில் ஏதாவது இருக்குமா?

**

கிரிக்கெட் உலகக்கோப்பை: முஷ்டியை உயர்த்திய இந்தியா !

நேற்று (09-06-19) லண்டனின் ஓவல் மைதானத்தில் ஒரு  high-scoring மேட்ச்சில்,  36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தூக்கி வீசியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி, கடுமையாகவே அமைந்தது. சில சிறப்பு அம்சங்களை மட்டும் கவனிக்கலாம்.

இந்தியா முதலில் பேட் செய்கையில், அதிகவனமாக ஆரம்பித்தது. முதல் பவர் ப்ளேயில் (10 ஓவர்கள்) விக்கெட் இழக்காமல், ஒரு அஸ்திவாரம் அமைத்துக்கொண்டு, பிறகு தாக்கலாம் என்பது வியூகம். நேற்று இந்தியாவின் நாள் – வியூகம் க்ளிக் ஆனது! ரோஹித், விராத் கோலி அரைசதங்கள், தவன் சதம் என அமர்க்களமாக இருந்தாலும் கடைசி 10 ஓவர்களை நெருங்குகையில் பேட்டிங் இன்னும் வேகமெடுத்தாலொழிய சரியான இலக்கை எதிரிக்குக் கொடுக்கமுடியாது என்கிற எண்ணம் கோஹ்லியின் மனதில் அரித்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

Hardik Pandya

37-ஆவது ஓவரில் ஷிகர் தவன் விழுந்தவுடன், கே எல். ராஹுல் வந்திருக்கவேண்டும். பெரிதும் பேசப்பட்ட 4-ஆம் எண் ஆட்டக்காரரின் நிலையில் ஹர்தீக் பாண்ட்யாவை அழைத்தார் கோஹ்லி. பௌலரைப்பற்றி சிந்திக்காமல், இறங்கியவுடன் விளாசும் தன்மைவாய்ந்த உலகின் மிகச் சில வீரர்களுள் பாண்ட்யாவும் ஒருவர். A freakish streak in him all the time.. கோஹ்லி எதிர்த்திசையில் ஆடிக்கொண்டிருக்க, சில பந்துகளிலேயே வெடித்தார் பாண்ட்யா. ஆஸ்திரேலியாவின் நேற்றைய சிறந்த பௌலரான கம்மின்ஸை (Pat Cummins) ஏறிவந்து, அவருடைய தலைக்குமேலே சிக்ஸர் தூக்கியும், ஆஃப் சைடில் பௌண்டரி  விளாசிய விதமும் ஆஸ்திரேலியாவை நடுங்கவைத்தது. அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை என்பது வேறுவிஷயம். 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளென, வெறும் 27 பந்துகளில் 48 விளாசல். கோஹ்லிக்கும் இந்தியாவுக்கும் அந்த நேரத்தில் அதுதான் தேவையாக இருந்தது. பாண்ட்யாவுக்குப்பின் வந்த எம் எஸ் தோனி தன் பழையபாணியை மறக்கவில்லை. 14 பந்துகளில் 27 ரன்கள் அவரிடமிருந்தும் பறக்க, ஆஸ்திரேலியா பதறியது. இடையிடையே விக்கெட்டுகள், கோஹ்லி உட்பட விழுந்தும் இந்தியா உயர்ந்து எழும்பியது. 352 என இந்தியா ஸ்கோரை முடித்துக்கொண்டு, ’வந்து விளையாடிக் காமிங்கடா பாக்கலாம்! –  என்றது ஆஸ்திரேலியாவை!

அதிரடிக்குப் பேர்போன டேவிட் வார்னர், அரைசதம் கடந்தாலும், மிக மந்தமான பேட்டிங் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமரிசகர்களைக் கடுப்பேற்றினார். அதிரடியாவது, மண்ணாவது,  விட்டால்போதும் என்றாகிவிட்டது, ஃபின்ச் (Aaron Finch), கவாஜா, மேக்ஸ்வெல் போன்ற ஒவ்வொரு ஆஸ்திரேலிய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனுக்கும். நின்று ஆடி ரன் சேர்த்த ஸ்டீவ் ஸ்மித்,  69 எடுத்து அவுட் ஆகையில் ஆஸ்திரேலியாவுக்கு ஏறவேண்டிய மலையுச்சி உயரத்தில் மிக உயரத்தில் தெரிந்து பயமுறுத்தியது. புவனேஷ்வர், சாஹல், குல்தீப் என இந்திய பௌலர்களுக்கு வேகமாக விக்கெட் விழவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவைத் துள்ள  விடவில்லை. கடும் கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலிய அதிரடிகளை அழுத்திவைத்திருந்தார்கள். வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக ஒரேயடியாக ஆட்டம்போட்ட நேத்தன் கூல்ட்டர் நைலை (Nathan Coulter-Nile), 9 பந்துகளில் கழுத்தை  நெறித்து வெளியேற்றினார்  பும்ரா (Jasprit Bumrah). எதிர்பாராதவிதமாக, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே (Alex Carey) 35 பந்துகளில் 55 எனத் தூள்கிளப்பினார். அதைத்தவிர,  ஆஸ்திரேலியாவிடம் அவிழ்த்துவிட வேறொன்றுமில்லை. டெத் ஓவர்களை (death overs) பும்ராவும், புவனேஷ்வரும் அபாரமாக வீச (49-ஆவது ஓவரில் பும்ரா கொடுத்தது ஒரு ரன் – அதுவும் தோனியின் மிஸ்ஃபீல்டிங்கினால் விளைந்தது!), அழுத்தம் உச்சத்தைத் தொட, விக்கெட்டுகள் நொறுங்கின. ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத தோல்வி. நீலத்திற்கு முன், மஞ்சளினால் ஆட்டம் காண்பிக்க முடியவில்லை. ரிஸல்ட்!

சில சுவாரஸ்யங்கள்:

1. Ball tampering கேஸில் மாட்டி, ஒருவருட ban-ற்குப்பின் ஆட வந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பௌண்டரி எல்லையில் ஃபீல்ட் செய்துகொண்டிருக்கையில் இந்திய ரசிகர்களின் ஒரு குழு cheat ! .. cheat ! எனக் கூச்சலிட்டு கலவரப்படுத்தினர். இந்தியக் கேப்டன் கோஹ்லி தன் ஜெர்ஸியைக் காண்பித்து ’எங்களை ஆதரித்துக் கோஷமிடுங்கள். அவரைத் தொந்திரவு செய்யவேண்டாம்’ என ரசிகர்களை நோக்கி சைகை செய்தும், ரசிகர்கள் நிறுத்தவில்லை. ஆட்டம் முடிந்தபின் இந்திய ரசிகர்களின் இந்த செய்கைக்காகத் தான் மன்னிப்பு கேட்பதாக ஸ்மித்திடம் கூறினார் கோஹ்லி.

2. ஆஸ்திரேலியா பேட் செய்கையில் பும்ரா வீசிய முதல் பந்து டேவிட் வார்னரின் லெக்ஸ்டம்பிற்குக் கிஸ் கொடுத்துச் சென்றது பெய்ல்களுக்கு(bails) அது பிடிக்கவில்லை போலும். கீழே விழவில்லை! வார்னர் தப்பித்தார்.

3. ஆஸ்திரேலிய லெக்-ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa) ஒவ்வொரு முறை பந்துவீசுவதற்கு முன்னும் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிடுவார். பின் பந்தைத் தேய்ப்பார். வீசுவார். பாக்கெட்டுக்குள் என்ன? ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள். Ball tempering? (இப்போதுதான் இரண்டு ஆஸ்திரேலியர்கள் ஒருவருட தண்டனைக்குப்பின் ஆடத் திரும்பியிருக்கிறார்கள்). ஆஸ்திரேலிய கேப்டன் Finch விளக்கினார்: ஜாம்ப்பா தன் பாக்கெட்டுக்குள் hand-warmers வைத்திருந்தார். அதைத்தான் தொட்டுக்கொண்டார்! ஜாம்ப்பாவிற்கு விக்கெட் ஏதும் விழாததால், இது இத்தோடு விடப்பட்டது..

ஆயினும் ட்விட்டர்க்காரர்கள் சீறினார்கள். ஒருவர் : Australians were, are and will be cheaters..! இது ரொம்பவே ஓவர். ஆஸ்திரேலியா உலகக்கோப்பையின் வலிமையான அணிகளில் ஒன்று. நாம் ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம்..

**

க்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.

முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.

பதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள்! ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.

மூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன்! ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ! அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.

விடாது போராடிய பாண்ட்யா-கேதார்:
அடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ!. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா? பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.

3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது?

**

க்ரிக்கெட்: புனேயில் கோஹ்லி, கேதார் சரவெடி !

நேற்று (15-1-17), புனேயில் நடைபெற்ற முதல் ஒரு-நாள் க்ரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோரின் ரன் மழையால், இந்தியா பெரிய இலக்கைத் தகர்த்து வென்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் அருமையாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடக்க இங்கிலாந்து குஷியானது. ’ஆடு மனமே ஆடு… இது பேட்டிங் பிட்ச்சுதான் ஆடு !’ என்று அதற்குள் பாட்டு கிளம்பியிருக்கவேண்டும். இந்தியாவின் பலம் எனக் கருதப்பட்ட அஷ்வின், ஜடேஜா ஸ்பின் ஜோடியை இங்கிலாந்தின் பேட்ஸ்மன்கள் அனாயாசமாக துவம்சம் செய்தார்கள். ஆனால் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராய், ஜடேஜாவின் ஸ்பின் ஆகாத ஒரு நேர்ப்பந்தை தாக்க முன்னே பாய, பந்து டிமிக்கி கொடுத்து தோனியிடம் தஞ்சமாகி ஸ்டம்ப் செய்யவைத்தது. ராய் 73. முதலில் மெதுவாகத் துவங்கினாலும், ஜோ ரூட் ஸ்கோரை சீராக உயர்த்த ஆரம்பித்தார். சுவாரஸ்ய மிகுதியால், ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்தை மிட்விக்கெட்டுக்குத் தூக்கப்போக, ஹர்தீக் பாண்ட்யாவின் அருமையான கேட்ச்சில் 78 ரன்னில் காலியானார். இந்திய பௌலர்கள் தடுமாறிக்கொண்டிருக்கையில், பாண்ட்யா மட்டும் சிறப்பாக வீசினார். கேப்டன் மார்கனையும், பட்லரையும் விரைவில் தூக்கி வீசி, இங்கிலாந்து மிடில் ஆர்டரைக் குலைத்தார். 300 க்குள் இங்கிலாந்தை நிறுத்திவிடலாம் என கோஹ்லி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். வெங்கலக் கடையில் யானை புகுந்ததுபோல கிடுகிடுத்து 5 சிக்ஸர்களை விளாசி 40 பந்துகளில் 62 எடுத்தார். இங்கிலாந்து ஸ்கோர் 350-ஐ எட்டிவிட, கோஹ்லியின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.

351-ஐத் துரத்த எத்தனித்த இந்தியாவின் ஆரம்பமே அபத்தம். துவக்க வீரர்கள் எப்போது வந்தார்கள், போனார்கள் என்றே தெரியவில்லை. கோஹ்லி 3-ஆம் நம்பரில் இறங்கி நிலைமையைச் சீர் செய்ய முனைந்தார். ஆனால், மறுபக்கம் பெரிசுகளான யுவராஜ் சிங்கும், தோனியும் அசட்டுத்தனமாக ஆடி அவுட்டாகிச் செல்வதை வேதனையுடன் பார்க்கவேண்டிவந்தது. இந்தியா சரிய, ஸ்கோர் 63. இழப்பு 4 விக்கெட்டுக்கள். ம்ஹூம்..! உருப்புடுகிற வழியாகத் தெரியவில்லை.

ஆனால் அடுத்து இறங்கிய கேதார் ஜாதவ் எதிர்பாராத வகையில், கோஹ்லியின் வெற்றி முனைப்புக்கு உறுதுணையாக ஆனது ஆச்சரியம். விராட் கோஹ்லி வேகம் காட்ட, கேதார் ஜாதவ் பொறுமையாக ஆடித் துணையிருப்பார் என நம்பிக்கை பிறந்த நிலையில், கேதார் தன் கேப்டனையும் அதிரடியில் மிஞ்சி புனே ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தார். விராட்டும், கேதாரும் பட்டாசு கிளப்ப, இந்திய ஸ்கோர் சீறிப்பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத இங்கிலாந்து குழம்பிக் கிறுகிறுத்தது. 5-ஆவது விக்கெட்டிற்கு 200 ரன் அதிரடியாக சேர்க்கப்பட்டது. தன் 27-ஆவது சதத்தைக் கடந்து 122 ரன்(5 சிக்சர்கள்) எடுத்திருக்கையில், அசால்ட்டாக அடித்த ஒரு ஷாட் மிட்-ஆஃபில் லட்டு மாதிரி இறங்க, கேட்ச் கொடுத்து தலையைச் சிலுப்பிக்கொண்டு வெளியேறினார் இந்தியக் கேப்டன்.

இங்கிலாந்தின் நம்பிக்கை திரும்பிவரும்போல் இருந்தது. அடுத்துவந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா நிலைமையைப் புரிந்துகொண்டு நிதானமானார். எதிர்முனையில், கேதார் ஜாதவ் தன் புயல் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால் காலில் ஏற்பட்ட சுளுக்கு அவரை நொண்டவைத்து நோகவைத்தது. ஓடுவதற்கு சிரமப்பட்டு பந்தை அவ்வபோது தூக்கி அடித்து ரன் சேர்த்தார். அப்படி ஒரு முயற்சியில் 120 ரன்னில்(4 சிக்சர்கள்) கேட்ச் கொடுத்து கேதார் அவுட் ஆனதும், இங்கிலாந்தின் முகம் மலர்ந்தது.

ஆனால் அசராத பாண்ட்யா, கழுகுபோல் மறுமுனையில் காத்திருந்தார். அவ்வப்போது பௌண்டரி விளாசி இந்தியாவை வெற்றி நோக்கி செலுத்துவதில் மும்முரமாயிருந்தார். இந்த நிலையில் ஜடேஜா ஒரு சாதாரணப்பந்திலேயே கேட்ச் ஆகி விழுந்தார். 7 விக்கெட்டுகள் காலி. அஷ்வின் மைதானத்தில் இறங்குகையில், ஜெயிக்க சொற்ப ரன்களே தேவைப்பட்டது. எனினும் க்ரிக்கெட்டில் ஒன்றையும் நம்பமுடியாதே என்கிற கவலை ரசிகர்களில், குறிப்பாகப் பெண்முகங்களில் படபடப்பாய்த் தெரிந்தது. அஷ்வினும் பாண்ட்யாவும், ரிஸ்க் எடுக்காமல் சிங்கில்களாகத் தட்டி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தனர். 7 ரன் தான் தேவை என்கிற நிலையில் 48-ஆவது ஓவரின் கடைசி பந்தை திடீரென சிக்ஸருக்குத் தூக்கி ஆரவாரத்தை ஆரம்பித்துவைத்தார் பாண்ட்யா. அடுத்து வந்த 49-ஆவது பந்தின் முதல் பந்தை மொயின் அலி வீச, அஷ்வின் ’என்னாலும் முடியும் தம்பி!’ என்றார். பந்து உயர்ந்து ஸ்டேடியத்துக்குள் சீறியது; இந்தியா வென்றது.

மஹாராஷ்ட்ராவின் ரஞ்சி கேப்டன் கேதார் ஜாதவ், புனே ரசிகர்களோடு சேர்ந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த தன் வயசான பெற்றோர்முன் ஆட்ட நாயகன் விருதை வென்றது சந்தோஷம்.

விராட் கோஹ்லி இந்திய ஒரு-நாள் க்ரிக்கெட் அணிக்கு கேப்டனானபின் விளையாடிய முதல் போட்டியும் வெற்றியாக முடிந்தது. 2016-ல் ஆரம்பித்த கோஹ்லியின் சுக்ர திசை தொடர்கிறது எனத் தெரிகிறது !

**

டி-20 ஆசியகோப்பை: பாகிஸ்தானைக் கசக்கிப் பிழிந்த இந்தியா

பங்களாதேஷின் மீர்பூரில் நேற்று (27-2-2016) நடந்த ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. `இந்தியா-பாகிஸ்தான் க்ளாசிக்` என இரண்டு நாடுகளின் மீடியாவினால் வெகுவாக பில்டப் கொடுக்கப்பட்ட மேட்ச். உண்மையும் அதுதான். இந்த இரண்டு நாடுகளும், சர்வதேச போட்டிகளில் எப்போதாவதுதான் மோதுகின்றன. ஆதலால் இருதரப்பு கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சம். இவர்கள் மோதினால் களத்தில் அனல் பறக்கும். பறந்தது நேற்றும்.

Hottest match of the Asia Cup. மேட்ச் ஆரம்பிக்குமுன்பே இருதரப்பிலும் வீரவசனங்கள் வீசப்பட்டன. இந்திய பேட்டிங்கை திணறவைப்பதற்கென பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டினால் வடிவமைக்கப்பட்டது மீர்பூரின் க்ரீன்பிட்ச். ஆசியகோப்பையின் முதல் மேட்ச்சில் இந்தப் பிட்ச்சிலேயே, ரோஹித், பாண்ட்யாவின் அதிரடியால் இந்தியா 166 ரன்கள் விளாசியது. தாக்குப்பிடிக்க முடியாமல், தான் விரித்தவலையில் தானே சிக்கி உயிரைவிட்டது பங்களாதேஷ். அதே க்ரீன் பிட்ச் இன்றும் மிரட்டியது. பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சுக்குப் புகழ்பெற்ற டீம் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. வகாப் ரியாஸ், முகமது சமி, முகமது இர்ஃபான். கூடவே, சூதாட்டத்தில் சிக்கி, சில ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த முகமது ஆமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில். அவரது அதிவேகப்பந்துவீச்சு, கூர்மையானது, சவாலானது என்பதை இந்தியர்கள் அறிந்தே இருந்தார்கள். இந்தியாவை க்ரீன் பிட்ச்சில், வேகத்தினால் நொறுக்கத் திட்டமிட்டிருந்தது பாகிஸ்தான்.

டாஸை வென்ற தோனி, பாகிஸ்தானை முதல் பேட்டிங்குக்கு அனுப்பினார். பாகிஸ்தான் அசால்ட்டாக இறங்கியது. இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்படி? 35 வயதான ஆஷிஷ் நேஹ்ரா. கர்வம் மிகுந்த பாகிஸ்தானிகளுக்கு, அனுபவமில்லாத புதுக் கன்னுக்குட்டிகளாகத் தோன்றிய பும்ரா, பாண்ட்யா. பூ! இவ்வளவுதானா? இன்னிக்கு இந்தியாவை நொறுக்கிருவோம் என்கிற மிதப்பில் இருந்தனர் பாகிஸ்தானிகள். அவர்கள் ஆட்டத்தை துவக்கிய விதம் அதனைச் சொல்லிற்று. நேஹ்ரா முதல் விக்கெட்டை எளிதாக தூக்கியும், பாகிஸ்தான் ஸ்கோர் வேகமாக 20-ஐத் தாண்டியது. அந்த சமயத்தில், பாகிஸ்தான் அறிந்திராத ஜஸ்ப்ரித் பும்ராவின்(Jasprit Bumrah) பந்துவீச்சின் துல்லியம் பாகிஸ்தானின் மனதில் திகிலைக் கிளப்பியது. அவருடைய குழப்பும் ஆக்‌ஷன், வேகம், யார்க்கர் எல்லாம் சேர்ந்து பாகிஸ்தானின் வயிற்றைப் பிசைந்தது. 22-வது ரன்னில் இரண்டாவது பாகிஸ்தான் விக்கெட்டை பிடுங்கினார் பும்ரா. அவருடைய 3 ஓவர்களில், 2 ஓவர்களைப் பாகிஸ்தானிகளால் தொடக்கூட முடியவில்லை. மெய்டன் ஓவர்கள். சுழலுக்கு மீர்பூர் மைதானம் துணைபோகாது. எனினும் ஜடேஜா, யுவராஜ் சிங், அஷ்வின் இறக்கப்பட்டனர். ஜடேஜா ரன் கொடுப்பதில் கஞ்சன் ஆனார். 2 விக்கெட்டுகளையும் கைபற்றினார், பாகிஸ்தானின் நிலைமை மோசமாகியது. ஜடேஜா, கோஹ்லி இவர்களின் ஃபீல்டிங் மைதானத்தில் தூள் கிளப்பியது. குர்ரம் மன்சூரும், டி-20 ஸ்பெஷலிஸ்ட்டான பாக். கேப்டன் ஷஹீத் அஃப்ரிதியும்(Shahid Afridi) வேகமாக ரன்–அவுட்செய்யப்பட்டனர். மத்திய, கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யாவின்(Hardik Pandya) பந்துவீச்சு அபாரம். 3 விக்கெட்டுகளை சுருட்டி எறிந்தார். பாக். விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது மட்டுமே சிறப்பாக ஆடி 25 ரன் சேர்த்தார். தட்டுத்தடுமாறி 83 ரன்னெடுத்து சுருண்டது; இந்தியாவை நினைத்து மருண்டது பாகிஸ்தான்.

84 என்கிற எளிதான இலக்குடன் ஆட வந்த இந்தியாவுக்கு அதிர்ச்சி, ஆமீரின் வடிவில் காத்திருந்தது. 147 கி.மீ வேகம், யார்க்கர், இன்-ஸ்விங்கர் என அனல் கக்கினார் ஆமீர். துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே இருவரையும் ரன் ஏதும் எடுக்கவிடாமல், முதல் ஓவரிலேயே வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன், ரெய்னா ஒரு முட்டாள்தனமான ஷாட்டை உயர அடித்து கேட்ச் கொடுத்து இந்தியாவின் தலைவலியை அதிகப்படுத்திவைத்தார். விராட் கோஹ்லியோடு சேரவந்தார் யுவராஜ் சிங். முகமது இர்ஃபான், முகமது ஆமீர் ஜோடியின் பிரமாத பந்துவீச்சு இருவரையும் தடுமாறவைத்தது. பாகிஸ்தானின் ஃபீல்டிங்கும் நன்றாக அமைந்துவிட, ரன்கள் வர சண்டித்தனம் செய்தது. பௌண்டரி, சிக்ஸர் எல்லாம் அடிக்கமுடியும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. ஆமீரின் துல்லியவேகம், ஷார்ட்-பிட்ச் பௌலிங்கினால் யுவராஜுக்கு மூச்சு போய் வந்தது. அவர் நின்று விளையாடினார் என்பதைவிட, நாட்டியமாடினார் என்று சொல்லலாம். ஆமீர், இர்ஃபான், ரியாஸ் இவர்களின் ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு குனிவதும், வளைவதும், நெளிவதுமாக பொழுதைப்போக்கினார் யுவராஜ். அடுத்த முனையில் வாய்ப்புக்காகக் காத்திருந்த கோஹ்லி, ஆமீரின் கடைசி ஓவர், ரியாஸின் ஆரம்ப ஓவர்களில் திடீரெனப் பட்டாசாய் வெடித்தார். பௌண்டரிகள் பறந்தன. அவருடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தும் க்ளாசிக் க்ரௌண்ட் ஷாட்டுகளால், சரிந்திருந்த இந்திய ரசிகர்கள் எழுந்து உட்கார்ந்தனர். மூவர்ணக்கொடிகள் மீண்டும் உயர்ந்தன; அசைந்தன.

49 ரன்களில் கோஹ்லி அவுட்டாகையில் வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டது.ஹர்தீக் பாண்ட்யா பூஜ்யத்தில் காலியாக, தோனி வந்தார். அடித்தார் பௌண்டரி. வெற்றி மேடையில் இந்தியா ஏறி நின்றது. விராட் கோஹ்லி ஆட்ட நாயகன்.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சில் தான் கில்லாடி என மீண்டும் நிரூபித்தது. எங்கள் பேட்டிங் இதற்கெல்லாம் சளைத்ததல்ல என்று நெஞ்சை நிமிர்த்தியது இந்தியா. விராட் கோஹ்லி குறிப்பிட்டதுபோல், உலகின் அருமையான வேகப்பந்துவீச்சாளர்களில் பாகிஸ்தானின் முகமது ஆமீர் ஒருவர் என்பதை நேற்றைய போட்டி காண்பித்தது. இந்திய புதுமுகங்களான பும்ராவும், பாண்ட்யாவும் ப்ரெஷர் மேட்ச்சுகளிலும் தங்களால் வெளுத்துவாங்கமுடியும் எனச் சாதித்துக் காட்டினர். இந்த டி-20 மேட்ச்சில் ஒரு விசித்திரம்: இரண்டு அணியிலிருந்தும் ஒரு சிக்ஸர்கூட வரவில்லை! இன்னுமொரு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் க்ளாசிக் பசித்திருந்த ரசிகர்களுக்கு அமோக விருந்தாக அமைந்து விட்டது.

**

டி-20: ராஞ்சியில் இந்தியா வெற்றிமுகம்

ராஞ்சி (ஜார்கண்ட்)-யில் நேற்று(12-2-16) நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், தோனியின் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, ஸ்ரீலங்கா இந்தியாவிடம் நொறுங்கியது !

ஆக்ரோஷமே, உன் பெயர்தான் இந்தியாவா!

புனேயின் க்ரீன் டாப் பிட்ச்சிற்கு நேர் எதிரானது, பந்து அதிகம் குதிக்காத ராஞ்சியின் ஸ்லோ பிட்ச். டாஸ் வென்ற ஸ்ரீலங்கா, இந்தியாவை முதல் பேட்டிங்கிற்காக இறங்கச் சொன்னது. ஏற்கனவே தலையில் அழுந்தக் குட்டுப்பட்டிருந்த இந்திய வீரர்கள், இம்முறை தங்களின் சுயரூபத்தைக் காண்பிக்க வந்திருந்தனர் போலும். துவக்க வீரர் ஷிகர் தவணின் ஆவேசத் தாக்குதலில் அது தெளிவானது. பூனேயில் ஸ்ரீலங்க பௌலிங் ஹீரோவான கசுன் ரஜிதா (Kasun Rajitha) குறிவைத்து நையப் புடைக்கப்பட்டார். இந்திய துவக்க ஆட்டக்காரர்களின் கோபத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஸ்ரீலங்க பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10, 11 ரன்களை தாரை வார்த்தனர். 25 பந்துகளில் 7 பௌண்டரி, 2 சிக்ஸர் என அரைசதம் விளாசி இந்தியாவுக்கு செம துவக்கத்தைத் தந்தார் தவண். அடுத்த பக்கத்தில் ரோஹித் ஷர்மா 36 பந்துகளில் 43 ரன் என புழுதிபறக்கவிட்டார். 11 ஓவர்களில் இந்திய ஸ்கோர் 100-ஐத் தாண்டியிருந்தது. ரோஹித், ரஹானேவுக்குப் பின் வந்த சுரேஷ் ரெய்னா-ஹர்தீக் பாண்ட்யா(Hardik Pandya) ஜோடி கியரை மாற்றியது. வேகம் மேலும் எகிற, ராஞ்சி ரசிகர்களுக்கு போதை தலைக்கேறியது. அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அனாயாசமாக விளாசி, 12 பந்துகளில் 27 ரன் எடுத்து ஸ்ரீலங்காவை கிடுகிடுக்கவைத்தார் பாண்ட்யா. ரெய்னா 19 பந்துகளில் 30 ரன் (5 பவுண்டரிகள்). வேகத்தைத் துரத்திய இருவரும் வீழ்ந்தனர் அடுத்தடுத்த பந்துகளில். அடுத்து வந்த, பழைய ரெப்யுடேஷனில் ஓடும் வண்டியான யுவராஜ் சிங், ஒரு பந்து கூடத் தாங்கவில்லை. திசரா பெரேராவின் அருமையான ஹேட்ரிக்(hat-trick). இருந்தும் அது இந்திய ஸ்கோரை பாதிக்கவில்லை. தோனியும், ஜடேஜாவும் மீதமுள்ள பந்துகளை இங்கும் அங்குமாக ஓட்டி, இந்தியாவின் ஸ்கோரை 196-க்கு எடுத்துச் சென்றார்கள்.

ஸ்பின் தாண்டவம்

190-ஐத் தாண்டிய டி-20 இலக்கு, எந்த ஒரு அணிக்கும் சிம்ம சொப்பனம்தான். கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 10 ரன் அடித்தாகவேண்டும் வெற்றிக்கு. இந்தியர்களை முதலில் பேட்டிங்கில் இறக்கி வாங்கிக் கட்டிக்கொண்ட ஸ்ரீலங்கா, இப்போது வெகுவாக அரண்டுபோயிருந்தது தெரிந்தது. அவர்களின் அணியில் அனுபவமிக்க திலகரத்னே தில்ஷன் (Tilakaratne Dilshan) சேர்க்கப்பட்டிருந்தும் ஒரு புண்ணியமும் இல்லை. தில்ஷன் ஸ்பின் பௌலிங்கை மிக நன்றாக ஆடக்கூடியவர்தான். இருந்தும் ரிஸ்க் எடுத்தார் மகேந்திர சிங் தோனி. ஸ்பின்னர் அஷ்வினுக்கு, புதிய பந்துடன் முதல் ஓவர் பௌலிங்கைக் கொடுத்தார். தன் மேல் கேப்டன் வைத்த நம்பிக்கைக்கு, அஷ்வின் இரண்டாவது பந்திலேயே பதில் சொன்னார். அஷ்வினின் சாதுர்யமான லெக்-ப்ரேக் வித்தியாசமாக வந்து தரை இறங்கியது. அஷ்வினை நொறுக்க தில்ஷன் கோட்டுக்கு வெளியே எகிற, பந்து அவரை டபாய்க்க, பெயில்களை மின்னலெனப் பறக்கவைத்தார் தோனி. அடுத்த இரண்டு விக்கெட்டுகள் நேஹ்ராவிடம் வேகமாக உயிரைவிட்டன. ரசிகர்கள் எழுந்து ஆட்டம்போட, 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என ஸ்ரீலங்கா பீதியில் உறைந்தது.

ராஞ்சியில் காட்டாதே மூஞ்சி!

கேப்டன் தினேஷ் சண்டிமாலும் கபுகதேராவும் ஜோடி சேர்ந்து திறமை காட்ட முயன்றனர். ஆனால் அப்போது, அஷ்வின், யுவராஜ், ரெய்னா, ஜடேஜா என இந்தியாவின் ஸ்பின் தாண்டவம் அரங்கேறியிருந்தது. புயலில் சிக்கிய தோணியானது ஸ்ரீலங்கா. சண்டிமால், கபுகதேரா இருவரும் ஜடேஜாவின் ஒரே ஓவரில் மைதானத்தை விட்டுவிட்டு ஓடினர். அஷ்வினின் ஒரு துல்லிய ஓவரில் ஷனகாவும், பெரேராவும் பரிதாபமாகப் பலியாயினர். அதற்கப்புறம் வந்தவர்களில் சிரிவர்தனா பரவாயில்லை. மற்றவர்கள் காலூன்ற இந்தியா விடவில்லை. 16-ஆவது ஓவர் வரை ஜஸ்ப்ரித் பும்ராவின் (Jasprit Bumrah) கைக்கு வரவில்லை பந்து. இறுதிச்சடங்கை விரைவில் முடிக்க எண்ணிய தோனி, பும்ராவிடம் பந்தை எறிந்தார். பும்ரா தன் இரண்டாவது ஓவரில் முடிச்சை ஒரேயடியாக இறுக்க, இரண்டு ஸ்ரீலங்க விக்கெட்டுகள் உயிரைவிட்டன. 127 ரன்களில் முடிவுக்கு வந்தது ஸ்ரீலங்காவின் கதை.

69 ரன் வித்தியாசத்தில் வென்று, தான் உலகின் நம்பர் 1 டீம் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்றது இந்திய அணி. இப்படிக் காண்பிப்பதற்கு, பூனேயில் அது தன் தலையில் வாங்கிக்கொண்ட குட்டு பயன்பட்டது! கிரிக்கெட் விசித்திரமான ஒரு ஸ்போர்ட். அதைவிடவும் வினோதமானது இந்திய அணி.

**