U-19 Cricket World Cup : கை நழுவிய கோப்பை

தென்னாப்பிரிக்காவில் நேற்று இரவு முடிந்த ஃபைனலில் இந்தியாவைத் தோற்கடித்த பங்களாதேஷ், முதல்தடவையாக U-19 உலகக் கோப்பையை வென்றது. Potchefstroom -ன் ஸென்வெஸ் பார்க் மைதானத்தில் கிரிக்கெட் நடந்தது என்பதைவிட, வாய்ச்சவடால்களும், வெறித்தனங்களும் அரங்கேறியிருக்கிறது. குறிப்பாக  ஃபைனலின் கடைசிப் பகுதியில் காணப்பட்ட வன்மம், ஐசிசி-யின்  கடும் கவனத்துக்கு வந்திருக்கிறது. பங்களாதேஷின் கொண்டாட்டம் என்பது மைதானத்தில் ரௌடித்தனம் என்கிற அளவுக்குப் போய்விட்டது எனவே தோன்றுகிறது. Their reaction was dirty – என்று ‘லேசாக’க் குறிப்பிட முனைகிறார் இந்தியக் கேப்டன் ப்ரியம் கர்க் (Priyam Garg). பங்களாதேஷ் கேப்டன் அக்பர் அலி ”What happened, should not have happened. I am sorry on behalf of the team..” என்று தடுமாறிச் சொல்லியிருக்கிறார். மேட்ச் ரெஃப்ரீயிடம் முறையீடு செய்யப்போன, அதிர்ச்சியிலிருந்த இந்திய மேனேஜ்மெண்ட்டிடம், மேட்ச்சின் video footage-ஐப் பார்த்து முடிவெடுக்கவிருப்பதாக சமாதானப்படுத்தியிருக்கிறது ஐசிசி.

Bangladesh lifts U-19 World Cup

கிரிக்கெட் கோணத்தில் பார்க்க, மேட்ச்சில் என்னதான் நடந்தது? டாஸ் வென்ற பங்களாதேஷ், முதலில் பந்துவீச்சு என்றது. மைதானத்தின் ஈரப்பதம் வேகப்பந்துவீச்சுக்கு இசைவானது என்கிற அதன் முடிவு சரி என்றவாறு, அதீத நிதானம் காட்டி ஆட ஆரம்பித்து ரன் எடுக்கமுடியாமல் தடுமாறியது இந்தியா.  இரண்டாவது ஓவரிலேயே பங்களாதேஷ், தங்கள் எதிரியான இந்திய அணியை எப்படி அணுகப்போகிறது என்கிற ஹிண்ட் கிடைத்தது. ஷொரிஃபுல் இஸ்லாமின் பந்தொன்றை முன் வந்து தடுத்தாடினார் திவ்யான்ஷ் சக்சேனா.  உடனே பாய்ந்து வந்து பந்தை எடுத்த இஸ்லாம் ஏதோ  ரன் -அவுட் செய்யமுயற்சிப்பதாகக் காட்டி சக்ஸேனாவின் தலையை நோக்கி வேகமாகப் பந்தை எறிந்தார். சக்ஸேனா உடனே குனிய, பந்து விக்கெட்கீப்பரிடம் சென்றது. இங்கே நிற்கவில்லை இஸ்லாம். சக்ஸேனாவை நெருங்கி, அவர் முகத்துக்கெதிரில் ஏதோ முணுமுணுத்துக் கடுப்பேற்றியது தெரிந்தது. மேட்ச் முழுதும் இஸ்லாம் அளவுமீறிய sledging-ல் ஈடுபட்டு இந்திய பேட்ஸ்மன்களின் கவனத்தைக் கலைக்க முயன்றார். (இறுதியில் நடந்த fracas-லும் ஷொரிஃபுல் இஸ்லாமின் பங்கு தனித்து வெளிப்பட்டது.)

இந்தியாவின் அளவுக்கதிகமான தடுப்பாட்டம் அதை நிர்கதியில் கொண்டுபோய்விடும் என துவக்கத்திலேயே சிக்னல் கிடைத்தது. முதல் பவர் ப்ளேயில் (1-10 ஓவர்கள்) இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 26 ரன்கள்.  முட்டாள்தனமான அணுகல். அடுத்த கட்டங்களிலும் இந்த ‘கவனமான’ ஆட்டம் தொடர்ந்தது. ஜெய்ஸ்வால் மட்டும் அவ்வப்போது ஆவேசமாக மட்டையை சுழற்றினார். திலக் வர்மா (நம்பர் 3) பொறுப்பாக, ஆனால் மெதுவாக ரன் சேர்க்க முயன்று 38 ரன்னில் அவுட்டானார். அடுத்தமுனையில் வலிமை காண்பித்த   ஜெய்ஸ்வாலோடு, சேர்ந்து ஆட ஒரு பேட்ஸ்மன் கிடைத்தால்தானே. கேப்டன் ப்ரியம் கர்க், சித்தேஷ் வீர், அன்கொலேகர் ஆகியோர் தெண்டம். 20-30 ரன் எடுக்கக்கூட மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களால் முடியவில்லை என்றால் பங்களாதேஷுக்கு சவாலான ஒரு டோட்டலை எப்படிக் கொடுக்கமுடியும்? 22 ரன் எடுத்து விக்கெட்கீப்பர்-பேட்ஸ்மன் ஜுரெல் வீழ்ந்தவுடன், தொடர்ந்து சரிவுகள். போதாக்குறைக்கு மடத்தனமான ஒரு ரன்-அவுட் வேறு. அன்கொலேகரும், ஜுரெலும் தேவையில்லாத சிங்கிள் எடுக்க முயன்று, ஒரே பக்கத்தில் கோட்டைத் தொடமுயற்சித்த அபத்தக் காட்சி! யாருக்கு ரன் -அவுட் கொடுப்பது என்றே ஆன்-ஃபீல்டு அம்பயர்களால் முடிவு செய்ய முடியவில்லை! இதுவா உலகக்கோப்பை  ஃபைனலில் பேட்டிங் செய்கிற லட்சணம்? ஜெய்ஸ்வால் மட்டும் ஒளிர்ந்தார். அபாரமாக ஆடி, 88 ரன் எடுத்து அவர் அவுட் ஆனவுடன், அடுத்துவந்த இந்திய பேட்ஸ்மன்கள் விழித்தார்கள். க்ரீஸில் ‘நிற்க’ முயன்றார்கள். பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சு – குறிப்பாக ஷொரிஃபுல் இஸ்லாம் – அவர்களை அங்கே தங்கவிடவில்லை. ஆஃப் ஸ்பின்னர் ரகிபுல் ஹாஸன் (Rakibul Hassan)  அளவாக, அருமையாக வீசி இந்தியர்களை இறுக்கினார். சிங்கிள்  எடுத்தாலே சாதனை என்கிற அளவிற்கு போய்விட்டிருந்தது நிலைமை! இறுதியில் கடைசி 7 இந்திய விக்கெட்டுகள் 21 ரன்களில் பறிபோனதென்றால், பார்த்துக்கொள்ளுங்கள். 177-ல் இந்தியா ஆல் அவுட். அவிஷேக் தாஸ் 3, ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்கள்.

ப்பூ..! 178 தானா எடுக்க வேண்டும் உலகக்கோப்பையை வெல்ல! பங்களாதேஷிற்கு ஒரே குஷி. துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய வேகப்பந்துவீச்சை அனாயாசமாகத் தாக்கி ரன் சேர்த்தார்கள். இந்தியாவின் ஸ்பின் ஸ்டாரான ரவி பிஷ்னோய் வரும்வரை ஆட்டம்போட்டார்கள். பிஷ்னோய் லெக்-ஸ்பின் 5 ஓவர் போட்டார். 4 பங்களாதேஷ் பேட்ஸ்மன் உடனடியாக பெவிலியன் வாபஸ்! Classic leg spin on show. இதில் ஜுரெல் நிகழ்த்திக்காட்டிய மின்னல்வேக ஸ்டம்பிங்கும் அடங்கும். தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போலிருந்தது இப்போது பங்களாதேஷிற்கு. பிஷ்னோய் ஒரு பக்கம் பங்களாதேஷிகளைப் போட்டு இறுக்க, அடுத்தபக்கத்தில் இந்திய வேகப்பந்துவீச்சு நேரங்காலம் தெரியாமல் சொதப்பியது.  எக்ஸ்ட்ரா ரன்கள்வேறு இந்தியாவின் நிலையை மோசமாக்கியது. தொடையில் தசை இறுக்கம் எனச் சொல்லி பாதியில் வெளியேறியிருந்த பர்வேஸ் இமோன்  இப்போது திரும்பிவந்து ஆடினார். பிஷ்னோயின் கடைசி இரண்டு ஓவர்களை ஜாக்ரதையாகத் தடுத்தாடி, விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். கேப்டன் அக்பர் அலி விவேகத்துடன் அதிரடியைத் தவிர்த்து சிங்கிள் சிங்கிளாக ஓடியதோடு, எதிர் நிற்கும் பேட்ஸ்மனை நிதானப்படுத்திக்கொண்டு ஆடியது பங்களாதேஷ்  வெற்றிக்கு வழிவகுத்தது. இறுதிப் பகுதியில் சுஷாந்த் மிஷ்ரா 2 மற்றும் ஜெய்ஸ்வால் ஒரு  விக்கெட் வீழ்த்தியும் பங்களாதேஷை நிறுத்த இந்தியாவால் முடியவில்லை. ஃபீல்டிங்கும் மோசம். இமோன் 47-ல் விழுந்தார். பங்களாதேஷ் ஸ்கோர்  163/ 7 என இருக்கையில், மழைவந்து பூச்சி காட்டியதால், ஆட்டம் கொஞ்சநேரத்துக்கு  நிறுத்தப்பட்டது. திரும்பி பங்களாதேஷ் வருகையில், DL-முறையின்படி அவர்கள் 170 எடுத்தால் வெற்றி என்ற நிலை. பங்களாதேஷ் பதற்றம் காட்டாது தட்டித் தட்டி வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடிய அணி. கேப்டன் அக்பர் அலி 43 நாட்-அவுட். பங்களாதேஷுக்கு முதல் உலகக்கோப்பை இது.  அக்பர் அலி பங்களாதேஷின் overnight hero !

ஆட்டநாயகனாக பங்களாதேஷின் அக்பர் அலி, தொடர் நாயகனாக இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருதுபெற்றனர்.

Tailpiece :  இறுதிக்கட்ட டிராமாபற்றி தங்களுக்கு வந்த வாசகர் கருத்துகளில்,  ‘டாப் கமெண்ட்’- ஆக   ’டைம்ஸ் ஆஃப் இண்டியா ‘ நாளிதழ் இதனை வெளியிட்டுள்ளது :

”Hateful people overall. No class, no manners, whatsoever. Winning 1 or 2 matches out of hundreds of matches, that too in under 19, when India’s Sr team has beaten them black and blue so many times but never behaved like wild animals. This speaks a lot about their upbringing, education and overall traits as human beings. Shameful is a very soft word for them.”

 ..

U-19 உலகக்கோப்பை : பாகிஸ்தானை விரட்டிவிட்ட இந்தியா

கடும்போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட செமிஃபைனலை இந்திய வீரர்கள் அனாயாசமாகக் கையாண்டு, பாகிஸ்தானை துவம்சம் செய்துவிட்டார்கள். கிரிக்கெட் பண்டிட்கள்கூட இப்படி ஒரு பாக். annihilation-ஐ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 250-280 வரையான ஸ்கோரை மனதில் கொண்டு நிதானமாக ஆடத் துவங்கியது. 250 என்கிற ஸ்கோரை பாகிஸ்தான் எட்டினால், அது இந்தியாவுக்கு சவாலாக முடியும் என்று ஆரம்பத்திலிருந்தே வர்ணனையாளர்கள் உதிர்த்துவந்தார்கள்! துவக்க ஆட்டக்காரர் ஹைதர் அலியின் 56 மற்றும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்த பாக். கேப்டன் ரொஹெய்ல் நாஸிரின் 62 ஆகியவற்றைத் தவிர, இந்த 50-ஒவர் மேட்ச்சில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து காண்பிக்க ஒன்றுமில்லை!  இந்திய பௌலர்கள் மிகவும் துல்லியமாக வீசி, பாக். பேட்ஸ்மன்களை நெருக்கிக்கொண்டே இருந்தார்கள். பாகிஸ்தான் தூக்கி அடிக்க முயல்கையில் அவர்கள் அவுட் ஆகி வெளியேறினார்கள். அருமையான இந்திய ஃபீல்டிங்கும் துணைநின்றது. சக்ஸேனாவின் ஒற்றைக் கை டைவிங் கேட்ச் டாப்-க்ளாஸ். திணறி, மூச்சுவாங்கிய பாகிஸ்தான்,  172-ல் உயிரை விட்டது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சுஷாந்த் மிஷ்ரா 3 விக்கெட், கார்த்திக் தியாகி மற்றும் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட், அன்கொலேகர் மற்றும் ஜெய்ஸ்வால் தலா ஒரு விக்கெட்  எனப் பாகிஸ்தானை சித்திரவதை செய்தார்கள்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

173 என்கிற இலக்குடன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்ஸேனா (Divyaansh Saxena)வுடன், இந்தியா சவாலை ஏற்று ஆட ஆரம்பித்தது. பாகிஸ்தான் எடுத்தஎடுப்பிலேயே ஆக்ரோஷமாக வேகப்பந்து வீசி இந்திய துவக்கத்தை சிதைக்க முயன்றது. ஜாக்ரதையாக ஆடிய இந்திய துவக்க வீரர்கள், பிரதானமாக சிங்கிள்ஸ், அவ்வப்போது ஒன்றிரண்டு பௌண்டரி என கூலாக முன்னேறிக் கொண்டிருந்தது பாகிஸ்தானுக்குக் கடுப்பை ஏற்படுத்தியது. என்ன முட்டிமோதியும், விக்கெட்டோ விழுவதாயில்லை. பாக். கேப்டன் நாஸிர், வேகம், ஸ்பின் என மாற்றி மாற்றி வியூகம் அமைக்கப் பார்த்தார். பாச்சா பலிக்கவில்லை. அதற்குள் அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால், தான் யாரென பாகிஸ்தானியருக்குக் காண்பிப்பதில் முனைந்தார். ஷார்ட்-பிட்ச் பௌலிங் போட்டு முகத்துக்கு நேராக பந்தை எகிறவைத்து எரிச்சலூட்டிய பாக். பௌலர் அப்பாஸ் அஃப்ரீதி (Abbas Afridi)யை, குறிவைத்துத் தாக்க ஆரம்பித்தார். போதாதற்கு ஸ்பின்னர் ஆமீர் அலியும் ஜெய்ஸ்வாலின் கோபத்திற்குப் பலியாக, பாக். ஃபீல்டிங் குழம்பித் தடுமாறியது. பௌண்டரி, சிக்ஸர் எனப் பறந்தன. அடுத்த முனையில் சக்ஸேனா அதிநிதானமாக தட்டிக்கொண்டே  வந்து 50-ஐத் தொடுகையில், 80-ஐத் தாண்டி சீறினார் ஜெய்ஸ்வால். இறுதியில் ஜெய்ஸ்வாலின் ஒரு அனாயச சிக்ஸரில்,  இலக்கைத் தாண்டியது இந்தியா.

உலகக்கோப்பையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் முதல் சதம் இது : 105 ரன்கள், 8 பௌண்டரி, 4 சிக்ஸர்களுடன். ஆட்டநாயகன் விருதும் கையில் வந்தது. IPL 2020-க்காக இவரை வாங்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் குஷியாகியிருக்கும்! கூட ஒத்துழைத்து பாக். பௌலர்களை மழுங்கவைத்த சக்ஸேனாவும் (59 நாட்-அவுட்) பாராட்டுக்குரியவர். இந்தியா  விக்கெட் இழப்பு ஏதுமின்றி ஜெயித்து, பாகிஸ்தானை உலகக்கோப்பையைவிட்டு விரட்டிவிட்டது! பாகிஸ்தானின் கோச், மேனேஜர் முகங்கள் பார்க்க சகிக்கவில்லை. பாக். ரசிகர்கள் போன இடம் தெரியவில்லை. தங்களது நாட்டில், பாக். பௌலர்கள் கடும் விமரிசனத்துக்கு உட்படுவார்கள். கேப்டன் ரொஹெய்ல் நாஸிர், ஹைதர் அலி ஆகியோர் நன்றாக ஆடியவர்கள்; யாரும் குறை சொல்லமுடியாது.

நாளை (6-2-2020) நடக்கவிருக்கும் இரண்டாவது செமிஃபைனலில் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியோடு இந்தியா, U-19 உலகக்கோப்பைக்கான ஃபைனலில் பிப்ரவரி 9 அன்று ஆடும். ஞாயிறு மதியம் 1.30 (IST) ’ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3’ நினைவிலிருக்கட்டும் !

**

இந்தியா – பாகிஸ்தான் : U-19 உலகக்கோப்பை

இன்னுமொரு Clash of the Titans ..  இந்தியா – பாகிஸ்தான் யுத்தம்! இன்று (04-02-2020) தென்னாப்பிரிக்காவின் போட்ஷெஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom)  மைதானத்தில் விளையாடப்பட்டு வருகிறது, இரு பரம எதிரிகளுக்கிடையேயான செமிஃபைனல் மேட்ச். இரு தரப்பிலும் துடிப்பான இளம் வீரர்கள். காலிறுதியில் வலிமையான ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா எனத் தூக்கிக் கடாசிவிட்டு இந்தியா அரையிறுதியில் நுழைந்திருக்கிறது. பாகிஸ்தான் அணியும் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே எனக் கடந்து இந்தியாவை முக்கியமான மேட்ச்சில் சந்திக்கிறது.

இந்திய அணியின்  பேட்ஸ்மன்களில் பிரதானமானவர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ப்ரியம் கர்க் (Priyam Garg) (கேப்டன்), திலக் வர்மா, த்ருவ்  ஜுரெல் (Dhruv Jurel, WK) என்போர். 140 கி.மீ.க்கு மேல் பந்துவீசும் கார்த்திக் தியாகியோடு, ஆகாஷ் சிங், சுஷாந்த் மிஷ்ரா ஆகியோர் வேகப்பந்துவீச்சில் கவனிக்கத்தக்கவர்கள். திறன்காட்டிவரும் ஸ்பின்னர்கள் ரவி பிஷ்னோய் (Ravi Bishnoi) மற்றும் மும்பையின் அதர்வா அன்கொலேகர் (Atharva Ankolekar, Allrounder) தூள் கிளப்ப வாய்ப்பிருக்கிறது – பாகிஸ்தான் ஸ்பின்னை அருமையாக ஆடும் என்றபோதிலும். துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் லெக்ஸ்பின் பௌலரும்கூட. (ரவி பிஷ்னோய் ஏற்கனவே ஐபிஎல் 2020-ல் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார்.) வெஸ்ட் இண்டீஸின் வர்ணனையாளர் இயான் பிஷப் இவரை Wizard of the Ball என அழைக்கிறார்! பிஷ்னோயும், தியாகியும் பாகிஸ்தானுக்கெதிராக என்ன செய்யவிருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

இந்தியாவுடனான செமிஃபைனலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததாக பாகிஸ்தான் சொல்கிறது. ரொம்ப சரி! பாகிஸ்தான், தங்கள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரொஹெல் நாஸிர் (Rohail Nazir), ஹைதர் அலி, முகமது ஹாரிஸ் போன்ற பேட்ஸ்மன்களை நம்பியுள்ளது. பௌலிங்கில் முகமது வாஸிம், இர்ஃபான் கான், முகமது ஆமீர் கான் (வேகப்பந்து வீச்சாளர்கள்) மற்றும் ஆமீர் அலி, காஸிம் அக்ரம் ஆகிய ஸ்பின்னர்கள் பிரதானமானவர்கள்.

இதனை எழுதிக்கொண்டிருக்கையில், பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது. 2 விக்கெட் இழப்பிற்கு 95 என நிதானம் காட்டுகிறது. ஹைதர் அலி அரைசதம்! பாகிஸ்தானி ரசிகர்கள்,  தென்னாப்பிரிக்க மாணவர்களுக்கு பாகிஸ்தானிய கொடிகளைக் கொடுத்து, ‘பாகிஸ்தான்..பாகிஸ்தான்’ கோஷம் போடவைத்து மைதானத்தைக் கலகலப்பாக்கிவருகிறார்கள். இந்திய ரசிகர்களில் சில சர்தார்ஜிகள், சில பள்ளி மாணவர்கள் என சிறு கூட்டம் மூவர்ணக் கொடியை அசைத்துவருகிறது.. தென்னாப்பிரிக்காவின் அந்தப்பகுதியில் இந்திய, பாகிஸ்தான் ரசிகர்கள் மிகக்குறைவுதான். இருந்தாலும் மேட்ச் த்ரில்லிங்காகப் போக வாய்ப்பிருக்கிறது.. பார்ப்போம்.

**

ஏலம் ! ஐபிஎல் 2020

 

19 டிசம்பர் 2019-ல், கொல்கத்தாவில் கோலாகலமாக நடந்த ஐபிஎல் (IPL-Indian Premier League) ஏலத்தை ஸ்டார் நெட்வொர்க்கில் பார்த்துக் களித்தேன். 8 ஐபிஎல் அணிகளும் முக்கியமெனத் தாங்கள் கருதிய போனவருடத்திய வீரர்கள் 10-15 பேரைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை ஏலத்தில் தூக்குவதில் போட்டிபோட்டன. ஏலத்தில் இருந்த 338 கிரிக்கெட் வீரர்களில் இந்திய மற்றும் அந்நியநாட்டு வீரர்கள் பலர். அதிரடி பேட்ஸ்மன்கள், ஆக்ரோஷ பௌலர்கள், ஆல்ரவுண்டர்களோடு, விக்கெட்கீப்பர்கள் சிலர்  என சுவாரஸ்யக் கதம்பம். ஏலத்தில் எடுக்கப்படவேண்டியவர்கள்இந்த 338-லிருந்து, 73 பேர்கள்தான்.   சிறந்த வீரர்கள் அல்லது அணியின் தேவைக்கேற்றவர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்காக நான், நீ என போட்டாபோட்டி ஆரம்பமானது.

SRH -இன்
காவ்யா !

அந்தந்த அணியின் ஜெர்ஸி நிறத்திற்கேற்ப அணியின் உரிமையாளர்கள் அல்லது தேர்வாளர்கள், ஆலோசகர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகள்-மேஜைகள் – ஒரே வண்ணமயம்தான். பளிச்சென்று தெரிந்தவை பஞ்சாபின் சிவப்பு மேஜை, சென்னை(CSK)யின் மஞ்சள், கொல்கத்தா(KKR)வின் பர்ப்பிள், மும்பை(MI)அணியின் நீலம். மும்பை அணிக்கென நீத்தா அம்பானி (Nita Ambani) பிரதானமாக பளபளவென அமர்ந்திருந்தார்! பஞ்சாபிற்காக ஒவ்வொரு வருட ஏலத்தின்போதும் வந்து, கூந்தலை இடது வலதாகக் கோதி அலையவிடும் , அணி உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்த்தா (Preity Zinta) வராதது ஏமாற்றம் வேடிக்கை பார்ப்பவருக்கு. கொல்கத்தா அணிக்கானவர்களில் முன்னாள் பாலிவுட் பிரபலம் ஜூஹி சாவ்லா வெள்ளையில் வந்து அமர்ந்திருந்தார். இருந்தும் டிவி பார்ப்போர் மற்றும் பார்வையாளர்களின் கண்கள் அடிக்கடி மேய்ந்தது ஹைதராபாத் அணியின் பக்கம்தான். என்ன விசேஷம்? அங்கே ஒரு மஞ்சள் முகம். துறுதுறு யுவதி! யாரது என்கிற க்யூரியாஸிட்டி இந்தியர்களின் மண்டையைப் பிளந்துவிடுமே! பின்னர் தெரிந்தது. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் சொந்தக்காரரான கலாநிதி மாறனின் மகள். காவ்யா. வெள்ளைப்பல்வரிசை மின்ன அடிக்கடி சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், ஏலத்தைத் தூக்கிவிட்டுக்கொண்டும் ஆனந்தமாக இருந்தார். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ஆசை என்பதோடு, ‘ஸன் குழும’த்தில் மியூஸிக் இன்-சார்ஜாம் காவ்யா. உபரி தகவல்.   

மேடையில் ஏலம்கூவுபவர் (auctioneer) ஒவ்வொரு செட் செட்டாக அமைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களிலிருந்து ஒரு சீட்டை வாங்கி, குறிப்பிட்ட வீரரின் பெயரை, ஏற்கனவே அணிகளுக்குக் கொடுக்கப்பட்ட பட்டியல்படி வரிசைஎண்ணோடு  மைக்கில் அறிவிக்கிறார். சில சமயங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என (அவருக்குப் பிடித்த?) நாட்டின் பெயரையும் சொல்வதுண்டு. மற்றபடி ஏலத்திற்கு விடப்படும் வீரர் ஒரு பௌலரா, பேட்ஸ்மனா என்று சொல்வதில்லை. புகழ்பெற்ற வீரர் பெயர் வரும்போது இது பிரச்னையில்லை. 22-23 வயதிற்குக்கீழ்ப்பட்டவர்கள், Under-19 அணிவீரர்கள் பெயர் தலைகாட்டும்போது, யாரப்பா இது, பேட்ஸ்மனா, பௌலரா எனக் குழப்பம் ஏற்படுகிறது. டிவியில் ஓரத்து விண்டோவில், இதுவரை அவர் ஆடிய ஆட்டம்பற்றி கொஞ்சம் புள்ளிவிபரம் தெரிகிறது! அணிக்காரர்கள், வீரரின் எண்ணை வைத்து, தங்கள் பட்டியலில் அவரின் விளையாட்டுக் கதையைப் பார்த்துக்கொள்கிறார்கள்.   உடனே ஒவ்வொரு மேஜையைச்சுற்றிலும் படபட ஆலோசனை, லேப்டாப்பில் அந்த வீரர் பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்தல், தலையைச் சொறிதல், பக்கத்திலிருப்பவர் காதில் ஓயாத கிசுகிசு, யார் முதலில் கையைத் தூக்குகிறார்கள் என நோட்டம்விடல், தானும் 10, 20 லட்சமெனத் தூக்கிவிட்டுப் பார்த்தல், நேரம் பார்த்து அமுங்கிவிடல் – என ஒரே அமர்க்களம். இந்த மாதிரிக் கூத்துகளிடையே இந்திய, அந்நிய வீரர்கள் விலைபோனார்கள்.

சின்னப்பையன் ஜெய்ஸ்வால் !

ஏலத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின் (Chris Lynn)-ஐ மும்பை இண்டியன்ஸ் ஆரம்பத்தொகையான (player’s base price) ரூ.2 கோடிக்கே வாங்கியது. நீத்தா அம்பானியின்  முகத்தில் மலர்ச்சி! கடந்த சீசனில் KKR-அணிக்கு விளையாடிய அதிரடி வீரர் இந்த லின். ராபின் உத்தப்பா, மற்றும் ஜெயதேவ் உனாட்கட்டை (Jayadev Unadkat) ராஜஸ்தான் ராயல்ஸ், தலா ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. Good buys. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) இங்கிலாந்து கேப்டன் அய்ன் மார்கனுக்கு(Eoin Morgan) ரூ.5.25 கோடி கொடுத்தது அதிகம்தான். பார்க்கலாம். ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்சை(Aaron Finch), விராட் கோஹ்லி தலைமை தாங்கும் பெங்களூரு அணி ரூ.4.4 கோடிக்கு வாங்கியது. அவரது திறமைக்கு அது சரியான விலை. இங்கிலாந்தின் ஜேஸன் ராய், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.1.5 கோடிக்கு மலிவாகத் தூக்கப்பட்டார். இந்திய டெஸ்ட் வீரர்களாக முத்திரை குத்தப்பட்ட புஜாரா, விஹாரி ஆகியோரை எந்த அணியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி ஆகியோரும் ஏலம் போகவில்லை. Sad.

இரண்டாவது ரவுண்டிலிருந்து, ஏலம் வெகுவாக சூடுபிடித்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) பெங்களூர், டெல்லி அணிகளுக்கிடையே புகையைக் கிளப்பினார். மாறி மாறி இரு அணிகளும் விலையை உயர்த்த, 14.75 கோடிவரை ஏற்றிவந்த டெல்லி, தடாலென்று விலகிக்கொண்டது! உள்ளே புகுந்தது கொல்கத்தா. பெங்களூரோடு கடும்போட்டி போட்டு, ரூ.15.5 கோடிக்கு கம்மின்ஸை வாங்கியது. இந்த அளவுக்கு இவருக்கு hype தேவைதானா? கம்மின்ஸ் தன் வேகத்தை ஆட்டத்தில் காண்பிப்பாரா? விக்கெட்டுகள் விழுமா,  இல்லை, KKR-ன் ஷாருக் கானுக்கு நாமம் தானா!

அதிக விலைக்குப்போன மேலும் சில வெளிநாட்டு வீரர்கள்: போனவருடம் ஐபிஎல் ஆடாத, ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்(Glenn Maxwell) ரூ. 10.75 கோடி (பஞ்சாப்), தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் க்றிஸ் மோரிஸ் (Chris Morris) ரூ. 10 கோடி (பெங்களூர்), முதன்முதலாக ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வெஸ்ட் இண்டீஸின் பௌலர், ‘சல்யூட்’ புகழ் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) ரூ. 8.25 கோடி (பஞ்சாப்), ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேத்தன் கூல்டர்-நைல் (Nathan Coulter-Nile) ரூ.8 கோடி(மும்பை), வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மன் ஹெட்மயர் (Shimron Hetmyer) ரூ. 7.75 கோடி (டெல்லி).

போனவருட வீரர்களை அதிகமாகக் கழட்டிவிடாமல் வைத்துக்கொண்டதால், கொஞ்ச இருப்புப் பணத்துடன் உட்கார்ந்து, மற்றவர்கள் பணத்தை விசிறி ஏலம் எடுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), திடீரென ஒரு சமயத்தில் உள்ளே புகுந்து, இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் சாம் கர்ரன் (Sam Curran)-ஐ ரூ.5.5 கோடிக்கு வாங்கியது. நல்ல பர்ச்சேஸ்தான். ஆனால் சென்னை, ஸ்பின்னர் பியுஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி கொடுத்தது அசட்டுத்தனம். சென்னையிடம் ஏற்கனவே ஜடேஜா, ஹர்பஜன், கரன் ஷர்மா ஆகிய ஸ்பின்னர்கள் உண்டு.  இறுதியில் பணம் கரைந்துவிட்ட நிலையில், முதல் ரவுண்டில் ஏலம்போகாத TNPL ஸ்டாரான ஸ்பின்னர் சாய் கிஷோரை, 20 லட்ச ரூபாய்க்கு மலிவாக வாங்கிப் போட்டது சென்னை.  தமிழ்நாட்டின் இன்னுமொரு TNPL ஸ்பின்னரான, வித்தியாச ஆக்‌ஷன் காட்டும் வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு, கொல்கத்தா அணியினால் வாங்கப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ‘சாய்ஸ்’ ஆக இருந்திருக்கும்.

பெரிசு: ப்ரவீன் டாம்பே

 இந்தியாவின் 19-வயதிற்குக் கீழ்ப்பட்டோரின் கிரிக்கெட் அணியிலிருந்து சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டது நேற்றைய விசேஷம்.  இந்திய U-19 கிரிக்கெட் கேப்டன் 19-வயது ப்ரியம் கர்க் (Priyam Garg) மற்றும் 22-வயது அதிரடி ஜார்கண்ட் பேட்ஸ்மன் விராட் சிங் ஆகியோர் தலா ரூ. 1.90 கோடிக்கு ஹைதராபாத் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்கள். கோச் வி.வி.எஸ். லக்ஷ்மணுடன் பேசியபின், நம்ப காவ்யா செய்த வேலை! மேலும், லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பஞ்சாப் அணியினால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் பார்த்துக்கொண்டிருக்குமா? இந்திய U-19-அணிக்காகத் தேர்வாகியிருக்கும் 17-வயது பேட்ஸ்மன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  (Yashaswi Jaiswal) -ஐ ரூ.2.40 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் 19-வயது கார்த்திக் தியாகியை ரூ.1.30 கோடிக்கும் வாங்கியது. எதிர்காலத்தை மனதில் கொண்டு இரு இளைஞரையும் அணியில் இணைத்துக்கொண்டதாக ராஜஸ்தான் விளக்கியது. உத்திரப்பிரதேசத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 15 வயதுவரை பானி-பூரி விற்றுவந்த சின்னப்பையன் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாமா?

இளசுகளா பார்த்து அணிக்குள் அள்ளிப்போட்டா எப்படி? பழுத்த பழத்தை யாராவது வாங்கவேண்டாமா? ப்ரவீன் டாம்பே (Pravin Tambe) என்கிற லெக்-ஸ்பின்னரை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி. டாம்பேக்கு வயசு? சும்மா 48-தான்!

**