’ழ’ கவிதைகள் அனைத்தும், ஒரே புத்தகமாக

தமிழின் புதுக்கவிதைகளுக்காக எனப் பிரத்யேகமாக கவிஞர் ஆத்மாநாம் அவர்களால் மே 1978-ல் துவக்கப்பட்டு, விட்டு விட்டு அக்டோபர் 1988 வரை வெளிவந்தது ‘ழ’ சிற்றிதழ். மொத்தம் 28 இதழ்கள் ஒரு காலகட்டத்தின் தரமான புதுக்கவிதைகள் சிலவற்றை அடையாளம் காட்டின. நவீனத் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், ஆத்மாநாமின் 1984 மறைவுக்குப்பின்,  ‘ழ’ வின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டின் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் கண்டுகொள்ளாத (ஒருவகையில் அது நல்லதுதான்) புதுக்கவிதைகளோடு, அம்ரீதா ப்ரீத்தம் போன்ற பிறமொழிக்கவிஞர்களின் படைப்புகளும்,  புதுக்கவிதையின் வளர்ச்சி தொடர்பான குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், ஞானக்கூத்தன் ஆசிரியராயிருந்த ‘ழ’ வில் வெளிவந்தன 1984-லிருந்து 1988 வரை.

கவிதைகளில் உள்ளார்ந்த ஆர்வம் காட்டுவோருக்கு:  

‘ழ’ இதழ்களில் ஆத்மாநாம் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதிவந்த ராஜகோபாலனிடமிருந்து பழைய அச்சு இதழ்களைப் பெற்று, அமேஸானில் கிண்டில் புத்தகங்களாக ஏற்றி வெளியிட்டுவந்தார் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன். ஒவ்வொரு இதழாக, தனித்தனியாக ’ழ’ கிண்டிலில் கிடைத்துவந்தது. இலவசத் தரவிறக்கம் சில  செய்திருக்கிறேன். வாங்கியுமிருக்கிறேன். இப்போது, ‘ழ’வின் இணையாசிரியரான கவிஞர் ராஜகோபாலன், விமலாதித்த மாமல்லனின் உதவியுடன் ‘ழ’ இதழ்கள் அனைத்தையும் ஒரே கிண்டில் புத்தகமாக அமேஸானில் வழங்கியிருக்கிறார். விலை ரூ.200. கவிதைகள், கவிதை குறித்த படைப்பாளிகளின் கட்டுரைகள் என 500 பக்கங்களுக்கும் மேலாக விரிகிறது இந்நூல்.

எத்தனையோ வெட்டிச் செலவுகளுக்குப் பணம் காணாமற்போய்விடுகிறது ஒவ்வொரு மாதமும் நமக்கு. இஷ்டமுள்ளோர் இதனை வாங்கிப் படிக்கலாம். என்ன.. ஒரு புத்தகம் ரூ.200.. ஆ! – என வியர்த்துக்கொட்டும் சிலருக்காகவும், மற்ற கவிதாப்ரியர்களுக்காகவும் சலுகையாக,  21-10-2020 (பகல் 12:30)-லிருந்து 23-10-20 (பகல் 11:59) வரை இலவசமாகக் கிடைக்கிறது  ‘ழ’ கிண்டில் புத்தகம். கிடைக்கிறதே என்று வெறுமனே தரவிறக்கம் செய்துவிட்டு, ஆயிரம் வேலைகளில் மும்முரமாகி மறந்துவிடாமல், தனியே உட்கார்ந்து கொஞ்சம் வாசித்துப்பாருங்கள்.  ஏதாவது வெளிச்சம் கிட்டக்கூடும்…

சரி, ஓவராக விளக்கியாயிற்று. இரண்டு  ‘ழ’ கவிதைகள் :

மேசை நடராசர்
-ஞானக்கூத்தன்

மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்களல்ல. கிங்கரர் அல்ல.

எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கருத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப்படுத்துக்கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுதுபார்க்க
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக்கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும்
சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்.

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறிவிடாமல்
ஆடிக்கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்

**

பயணம்
-சுரேசன்

பலரும்
கூட்டமாய் முடமாகிவிடுகிறீர்கள்.
ஏதோ
குறிப்பிட்ட ஒரு கணத்தில்
நான் மட்டும் சிலரோடு
ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு கணத்தையும்
சந்தித்துக்கொண்டே

படிமம் எனக்கென்று
எதுவும் தேவையில்லை
இதுதான் நானென்று
எதுவும் முடிவில்லை

இது
இன்று இனிப்பது
நாளை கசக்கும்
இயல்பான வாழ்க்கை

**