கிரிக்கெட்: இந்தியா தானே தேடிக்கொண்ட தோல்வி

நேற்றைய ஆட்டம், ஆஸ்திரேலியாபோன்ற ஒரு professional outfit-ஐ அவர்களது சூழலிலேயே எதிர்நோக்க, மல்லுக்கட்ட,  தேவைப்படும் பாடங்களைப் படிக்கவில்லை. அல்லது அதற்கான முழுமுனைப்பு இந்திய அணியிடம் இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த மந்தப் போக்கு அடுத்த மேட்ச்சுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், ஒரு-நாள் தொடரை இந்தியா பரிதாபமாக இழப்பது உறுதி.

போஸ்ட்-மார்ட்டம் தேவையில்லை. சில  விஷயங்களைக் கவனித்தால் போதுமானது.

வழக்கம்போல் கோஹ்லி டாஸைத் தோற்றாயிற்று. ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் எப்படி நிதானமாக ஆரம்பித்து 150+ வரை இழப்பின்றி ஸ்கோரை கொண்டுசென்றார்கள். பின் வந்தவர்கள் எப்படி இந்தியாவின் பிரதான பௌலர்களைத் தாக்கி ரன் மலையை எழுப்பினார்கள் என்பதை சாஸ்திரி+கோஹ்லி டீம் கவனித்ததா? அல்லது பஜியா, பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு அசட்டு ஜோக்கடித்து, ஒருவருக்கொருவர் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தார்களா பெவிலியனில்? தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவின் திட்டமிட்ட பேட்டிங் வியூகங்களுக்கு, ஒத்து ஊதுவதாக அமைந்தது இந்திய பௌலிங்! ஸ்பின்னர் சாஹலையும், வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையும் சிட்னியில் சமாளிக்க போதுமான ஹோம்-வர்க் செய்திருந்தார்கள் எதிரிகள். முகமது ஷமியை  மட்டுமே அவர்களால் தொடமுடியவில்லை. ஷமி 3/59. ஜடேஜாவுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும் எகானமி-ரேட் மோசமில்லை. மற்றவர்கள்? ஒரு ஸ்பின்னர் -that too, team’s leading  wicket taker- 10 ஓவர்களில் 89 ரன் கொடுத்ததாக அனேகமாக சரித்திரம் இல்லை என நினைக்கிறேன். சாஹலை எப்படியும் நொறுக்கித்தள்ளினால்தான் இந்தியாவின் பௌலிங் தாக்கத்தை வரும் தொடர்களில் வெகுவாகக் குறைக்கமுடியும் எனத் திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள் நேற்று. பும்ரா பொதுவாக தாக்கும் பௌலர். 2-3 விக்கெட்டுகளாவது அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். நடக்கவில்லை. செய்னி ஒரு அனுபவமில்லாத பௌலர். வியூகமில்லாத வேகம் விக்கெட்டைத் தராது என்று அவரிடம் யாரும் சொல்லவில்லைபோலும். சாஹலும், செய்னியும் 10 ஓவர்களில் முறையே 89, 83 ரன்கள் கொடுத்தார்கள். எடுத்தது ஆளுக்கு ஒரு விக்கெட். பும்ராவும் பெரிசாக செய்யவில்லை. அவரும் எடுத்தது 1. கொடுத்தது 73. இப்படியான பௌலிங்கில் எதிர்டீமின் இரண்டுபேர் சதமடித்து, ஆஸ்திரேலியா 374 எடுக்காமல் வேறென்ன செய்யும்?

சிட்னியில் இந்திய ரசிகர்கள் !

375 -ஐத் துரத்திய, அல்லது அப்படி ஆரம்பத்தில் காண்பித்துக்கொண்ட இந்திய பேட்டிங் நிலை, எப்படியானது? டாப்-ஆர்டர் லட்சணம்: மயங்க் அகர்வால் 22, கோலி 21, ஷ்ரேயஸ் 2, ராஹுல் 12. உருப்படுமா? 350+ இலக்கை குறிவைக்கிற அழகா இது? கோஹ்லியின் 21 -ல் ஒரு கேட்ச் ட்ராப் வேற. அவர் ஆடியது அவர் இன்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை விட்டுவரவில்லை என்பதையே காட்டியது. ஷ்ரேயஸ் ஐயருக்கு பௌன்சர் ப்ரச்னை. மயங்கும், ராகுலும் ஃபீல்டர் எங்கே நிற்கிறான் எனத் தேடிக்கொடுத்தார்கள் கேட்ச்சை. பௌன்சர்களில் காலியானார்கள் அகர்வால், கோஹ்லி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர். Hardik Pandya was the only silver-lining. பாண்ட்யாவின் 90, தவன்-74 இல்லாவிட்டால் இந்தியா 250-க்குள் சரிந்து இன்னும் பரிதாபமாகப் பிதுங்கியிருக்கும்.

முன்பெல்லாம் டெண்டுல்கர், யுவராஜ், சேஹ்வாக், ரெய்னா  போன்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள், இக்கட்டான நிலையில், அவ்வப்போது சில ஓவர்களும் போடுவார்கள். ரெகுலர் பௌலரிடம் சிக்காத விக்கெட்டுகளையும் சமயத்தில் தூக்கி, அணிக்கு ஒரு ஆசுவாசம் தருவார்கள். ஏற்கனவே ஏற்பட்ட முதுகுப்பிரச்னையால் பாண்ட்யா பௌலிங் செய்வதில்லை இப்போது. நேற்றைய ஆட்டத்தில்,  இந்திய அணியில் ஆறாவது பௌலர், அதாவது பார்ட்-டைம் பௌலர் இல்லாதது பெரும் ப்ரச்னையானது. ஐந்து முக்கிய பௌலர்களில் யாராவது ஒருவருக்கு காயம், அல்லது செமயா அடிவாங்கினால், கேப்டன் அழைக்க என  அந்த 6-ஆவது ஆள், ஆல்ரவுண்டர் அல்லது பௌலிங்கும் கொஞ்சம் தெரிந்த பேட்ஸ்மன் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு. ஏகப்பட்ட ரன்கொடுத்துவிட்டு, கடைசி ஓவரில் கையை உதறிக்கொண்டு ஓடிய சாஹல்.. அடிவாங்கித் திணறிய பும்ரா, செய்னி.. பெப்பே என முழித்துக்கொண்டிருந்த கேப்டன் கோஹ்லி.. சகிக்கவில்லை..

சரி, இந்தியாவின் ஃபீல்டிங்? கேவலம். 3 கேட்ச்சுகள் வெண்ணெய்க்கைகளில் பட்டு வழுக்கித் தரைசேர்ந்தன. மடத்தனமான இந்திய ground fieldingவேறு ஆஸ்திரேலிய ஸ்கோர் வேகமாக ஏற அனுமதித்தது. இந்தியாவின் உடல்மொழி, ஒரு டாப்-லெவல் கிரிக்கெட் மேட்ச் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்ச்சியே இல்லாததுபோல் இருந்தது.

அடுத்த போட்டி நாளை இதே மைதானத்தில். சாஸ்திரி-கோஹ்லியின் மண்டையில் இப்போது ஊர்வதென்ன? நேற்றும் ஆசையாகக் கொடிதூக்கி வந்திருந்தார்கள், நாளையும் வருவார்கள் இந்திய ரசிகர்கள். அவர்களுக்குக் கொண்டாட என, இனிவரும் போட்டிகளில் ஏதாவது இருக்குமா?

**

அமீரகத்தில் ஐபிஎல்

ஐபிஎல் இந்தியாவில் நடந்தாலென்ன, அமீரகத்திலோ, அமெரிக்காவிலோ,  ஆஃபிரிக்காவிலோ நடந்தால்தானென்ன.. கொரோனா கால குழப்பங்களுக்கிடையே, ஐபிஎல்-ஐ நடத்த முடிந்ததே ஒரு பெரும் சாதனை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மனும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னரும் நேற்று துபாயில்(Dubai) இதையே கூறினார். இந்திய மற்றும் அமீரகக் கிரிக்கெட் போர்டுகள் பாராட்டுக்குரியவர்கள். மாசக்கணக்கில் முடங்கியிருந்தும்  துருப்பிடித்துவிடாமல், ஃபிட்டாக வந்து விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆரோக்யமாக இருங்கள், அதிரடியாக ஆடுங்கள். மைதானத்தில் உட்கார்ந்திருப்பது ஐபிஎல் நிர்வாகிகள், அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் மட்டும்தானா.. இருக்கட்டுமே. கண்காணா ரசிகர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள், இறைவனைப்போலவே! டி-20 மேஜிக் தெறிக்கட்டும் எங்கும்..

கோவிட்-19 தாக்குதல்.. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆடாததால் சிஎஸ்கே பலவீனமடைந்துவிட்டதாக ஒருபக்கமாகக் கிளம்பிய விமரிசனம், புலம்பல்.   எல்லாவற்றையும் தாண்டி, செப்டம்பர் 19-ல் நடந்த ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. உலகக்கோப்பைக்கான தேர்வில் தேர்வுக்கமிட்டி மற்றும் கோஹ்லி & கோ.வினால் தவிர்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு(71),  சிஎஸ்கே-வுக்காக மிடில்-ஆர்டரில் விளாசி தன் ஆட்டத்தரத்தை மீண்டும் நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூப்ளஸீ(Faf du plessis 58 N.O.) இறுதிவரை கவனமான ஆட்டத்தைக் காண்பித்தார். சென்னை அணியை கோட்டைக் கடக்கவைத்தார். மும்பை அணியில் க்விண்ட்டன் டி காக் (Quinton de Kock)(33) மற்றும் சௌரவ் திவாரி(42) ஓரளவு ஆடியும், சென்னையை சாய்க்கப் போதுமானதாக இல்லை. ரோஹித் சொற்ப ரன்களில் கவிழ்க்கப்பட்டார். பௌலர்களில் பியூஷ் சாவ்லா (ஸ்பின்னர்) மற்றும் லுங்கி இங்டி (வேகப்பந்துவீச்சாளர்) சென்னைக்காக ஜொலித்தார்கள்.

இரண்டாவது IPL மேட்ச்! பஞ்சாப் – டெல்லி மோதல். என்ன சொல்வது இந்த மேட்ச்சைப்பற்றி.  முதலில் ஆடிய டெல்லி ஆரம்பத்திலேயே திணறித் தடுமாறியது. பஞ்சாபின் பௌலிங் -குறிப்பாக முகமது ஷமியின் வேகம்- தூள்கிளப்பியது. ஷ்ரேயஸ் ஐயர் 39, ரிஷப் பந்த் 31 அடித்து நிலைமையை சரிசெய்யமுயன்றும் போதாதுபோல் தெரிந்தது. இறுதிக் கட்டத்தில் நுழைந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்(53) மைதானத்தைக் கொளுத்திவிட்டார். 150-ஐத் தாண்டி இரண்டே ஓவர்களில் டெல்லியைக் கொண்டு சென்றார். டெல்லியின் 157/8 பஞ்சாபை நிறுத்த முடியுமா?

பேட்டிங்கில் பஞ்சாப் அணி ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை.  விக்கெட்டுகள் சரிய (டெல்லிக்காக முதல் தடவையாக ஆடும் அஷ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்), மயங்க் அகர்வால் மட்டும் தனியொரு ஆளாக எதிர்த்தாடினார். வெற்றிக்கு 13 ரன் என்று கடைசி ஓவரில் நுழைத்தார் பஞ்சாபை. அதிலும் 12 ரன்களை அவரே எடுத்தும்விட்டார். இன்னும் இரண்டு பந்துகள் 1 ரன் தேவை என்கிற வெற்றிமுகம். ப்ரீத்தி ஸிந்தாவின் முகத்தில் தாமரைப்பூ! ஆனால், கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டத்தின் கதையை, தோசையைத் திருப்பிப் போட்டதுபோல் போட்டுவிட்டார் டெல்லியின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு பஞ்சாப் டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தார். குலை நடுங்கியது பஞ்சாபுக்கு. மேட்ச் டை(tie), Super Over !

எலிமினேட்டர் சூப்பர் ஓவரில் பஞ்சாபைத் தெறிக்கவிட்டார், முதலில் ஓவர் போட்ட டெல்லியின் சூப்பர் ஓவர்-ஸ்பெஷலிஸ்ட் ககிஸோ ரபாடா (Kagiso Rabada). மூன்று பந்துகளில் 2 ரன் கொடுத்து,  பஞ்சாப் கேப்டன் ராகுலையும், நிகோலஸ் பூரனையும் (Nicholas Pooran) தூக்கிவிட்டார். தன் பதிலில் டெல்லி, எளிதாக 3 ரன் எடுத்து மேட்ச்சை வென்றது.

இத்தோடு முடியவில்லை கதை. ஐபில் கமிஷனிடம் பஞ்சாப் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கடைசி ஓவரில் பஞ்சாபின் க்றிஸ் ஜார்டன் எடுத்த 2 ரன்களில் ஒரு ரன்னைத்தான் அனுமதித்தார் அம்பயர் நிதின் மேனன். ரன் ஓடுகையில் ஜார்டன் கோட்டை பேட்டினால் சரியாகத் தொடவில்லையாம். ஆனால் ’ரீ-ப்ளே’ என்று ஒன்று இருக்கிறதே.. டெக்னாலஜி! அது காட்டிவிட்டது உண்மையை. ஜார்டனின் பேட் கோட்டிற்குள்தான் வைக்கப்பட்டது! இந்த தவறான ரன் -கழித்தல் இல்லாதுபோயிருந்தால், பஞ்சாப் 20-ஓவர்களிலேயே ஜெயித்திருக்கும். வீரேந்திர சேஹ்வாக்கும் அம்பயரின் தவறைச் சாடியுள்ளார்.

Dev Dutt Padikkal

நேற்று (21-9-20) துபாயில் நடந்த பெங்களூர் Vs ஹைதராபாத் போட்டியில் சுறுசுறுப்பு அதிகமில்லை. பெங்களூர் அணி,  கர்னாடகாவின் 20-வயது ஓப்பனர் தேவ் தத் படிக்கல் (Dev Dutt Padikkal) – ஆரோன் ஃபிஞ்ச் ஜோடியுடன் பேட்டிங்கை ஆரம்பித்தது.  படிக்கல் தன் முதல் ஐபிஎல் போட்டியில் அனுபவ வீரரைப்போல,  சுதந்திரமாக பேட்டை சுழற்றினார். ரன்கள் வேகமாக வந்தன. இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்கால மிடில்-ஆர்டர் பேட்ஸமனாக உருவாகக்கூடுமோ எனத் தோன்றுகிறது.  படிக்கல் 56, டி வில்லியர்ஸ் 51 – டாப் ஸ்கோர்கள். 163 என்பது ஹைதராபாதுக்கு, பெங்களூர் கொடுத்த இலக்கு.  ஹைதராபாதின் மிடில்-ஆர்டரில் தம் இல்லை. ஓப்பனர் ஜானி பேர்ஸ்டோவின் (Jonny Bairstow)  61 தான் உருப்படியான ஆட்டம். யஜுவேந்திர சாஹலின் ஸ்பின்னில் பேர்ஸ்டோ விழுந்தவுடனே, ஹைதராபாத் ஆட்டம் கண்டது. விக்கெட்டுகள் நில்லாது ஓடின. முக்கியக் கட்டத்தில் சாஹல் 3 விக்கெட் எடுத்து, முறித்துப்போட்டார் ஹைதராபாதை. இறுதியில் 10 ரன் வித்தியாச வெற்றி கோஹ்லியின் பெங்களூருக்கு.

இன்று இன்னுமொரு க்ளாசிக் ? தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ். மேட்ச் ஷார்ஜாவில். சென்னை அணியில் 20-வயது அதிரடி பேட்ஸ்மன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) இருப்பாரா?  கோவிட்-19 நெகடிவ்-ஆகி, தப்பிவந்திருக்கும் வீரர். அவர் உள்ளே வந்தால் முரளி விஜய் வெளியே! சிறிய மைதானம் ஷார்ஜா. சிக்ஸர்கள் பறக்கும்!

**