இந்தியா-ஆஸ்திரேலியா : நாக்பூர் டெஸ்ட்

இந்தியாவை இந்திய மண்ணில் கடந்த 15 வருடங்களாக வெல்லமுடியாத ஆஸ்திரேலியா, 4 மேட்ச்சுகள் கொண்ட டெஸ்ட் தொடரை (Border-Gavaskar Trophy) நாளை (9-2-2023) நாக்பூரில் துவக்குகிறது.

வலிமையாக வந்திருக்கும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி, எங்கே இந்தியாவில் நம் பருப்பு வேகாதோ, தோற்றுவிடுவோமோ என்ற பயம் கவ்வ, இந்தியாவில் பிட்ச் இப்படி..அப்படி.. என்றெல்லாம் ஏற்கனவே பிதற்ற ஆரம்பித்துவிட்டது. ’எந்த ஒரு நாடும், தன் பலத்துக்கு ஏற்றவாறுதான் பிட்ச்சைத் தரும். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்கையில், அவர்களுக்குத் தோதான க்ரீன் பிட்ச்சுகளைத்தானே அவர்கள் நமக்குத் தருகிறார்கள்? Bouncy pitches கூடாது என்றா நாம் அங்கே சொல்கிறோம்? சர்வதேச கிரிக்கெட் என்று வந்துவிட்டால், எந்த பிட்ச்சிலும், எந்த ஒரு சூழலிலும் விளையாடத் தெரிந்திருக்கவேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர்.

நன்றாகத் திட்டமிட்டு 4 ஸ்பின்னர்களுடன் இந்திய மண்ணில் இறங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா. இத்தனை ஸ்பின்னர்களோடு இதுவரை எந்த ஒரு அயல்நாட்டு அணியாவது இந்தியா வந்திருக்கிறதா? இருந்தும் ஒரே பதற்றம்! கடந்த இங்கிலாந்து தொடரின்போது அஷ்வினும், அக்ஷரும் எதிரிகளைக் கிழி கிழியென கிழித்து எறிந்தது கெட்டகனவாய் வந்துகொண்டிருக்கிறதோ என்னவோ? அஷ்வினின் ஸ்பின்னை சமாளிப்பதுபற்றி அவர்கள் ஓவர்டைம் போட்டு யோசிப்பதாகத் தெரிகிறது! பின்னே, பரோடாவிலிருந்து அஷ்வினைப்போலவே பௌலிங் ஆக்‌ஷனுடன் ஸ்பின் போடும் ஒரு வீரரை அழைத்துவந்து நெட் ப்ராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறதே ஒரு வாரமாக! ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டூப்ளிகேட் அஷ்வின் என அழைக்கப்படும் பரோடாவின் கத்துக்குட்டி பௌலரான மகேஷ் பித்தியாவை (Mahesh Pithiya ) பந்து போடச்சொல்லி ஆடி, ஆடி பார்த்துக்கொண்டிருக்கிறாராம். மகேஷே இண்டியன் எக்ஸ்ப்ரெஸுக்கு விவரமாகச் சொல்லியிருக்கிறார். ட்விட்டர்வாசிகள் கவனிக்காமலிருப்பார்களா! கேலி, கிண்டல் என்று இறங்கிவிட்டார்கள். பொழுது போக்க விஷயம் கிடைத்துவிட்டது..

மேலே: நகலும் அசலும்

கொஞ்சம் சீரியஸாக விஷயத்துக்கு வருவோம். இந்திய பிட்ச்சுகளில் ஆடி இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன், பிரமாத ஹோம்வர்க்கோடு உழைக்கிறது ஆஸ்திரேலியா. Highly professional approach. டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் சிறப்பாக ஸ்பின்னை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக நிறைய விளாசுவார்கள் என எதிர்பார்க்கலாம். காயம் காரணமாக ஜோஷ் ஹாசல்வுட், மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார்கள். ஆல்ரவுண்டர் காமரூன் க்ரீன் (Cameroon Green) ஆடுவதும் சந்தேகம். இது ஒரு பின்னடைவு என்றாலும், கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), ஸ்காட் போலண்ட் (Scott Boland) – இருவரும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள். துணையாக வருபவர்கள் ஸ்பின்னர்கள் நேத்தன் லயன், ஆஷ்டன் ஏகார் (Ashton Agar) (அல்லது டாட் மர்ஃபி (Todd Murphy). இவர்களிடம் நாக்பூரில் நமது பேட்டிங் புலிகள் ஆட்டம்காணாது இருக்கவேண்டும்.

Above: Fast bowler Scott Boland

காயத்திலிருந்து இன்னும் பூரண குணம் அடையாததால், ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) , ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியில் இல்லை. முகமது சிராஜ், முகமது ஷமி (அல்லது உமேஷ் யாதவ்) வேகப்பந்துவீச்சை இந்தியாவுக்காகக் கையாள்வார்கள். ஸ்பின் டெபார்ட்மெண்ட்டில், ரவி அஷ்வின், அக்ஷர் பட்டேல், (காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும்) ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழல் கொண்டு எதிரியைத் தாக்குவார்கள். பட்டேலுக்கு பதிலாக குல்தீப் யாதவைக் கொண்டுவரலாம் என சிலர் சொன்னாலும், பட்டேலின் பேட்டிங் திறன், ஸ்பின் பௌலிங்கையும் மிஞ்சி அணிக்குக் கைகொடுக்க வாய்ப்புண்டு.

Shubman Gill. Rohit’s opening partner?

பேட்டிங்கில் ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மன் கில் (Shubman Gill) துவக்குவதே நல்லது. ஷுப்மன் அபாரமான ஃபார்மில் இருப்பதால், அணியின் நலன் கருதி ராஹுலைக் கொஞ்சம் பெஞ்சில் உட்காரவைக்கலாம். தவறில்லை. புஜாரா, கோஹ்லிக்குப் பின் சூர்யகுமார் யாதவை இறக்கினால், ஆஸ்திரேலியாவுக்கு பீதி கிளம்பும். மடமடவென விக்கெட்கள் சரிந்து நெருக்கடியான நிலை வந்தால், மிடில் ஆர்டரில் விளாசி சூர்யாவால் ஸ்கோரை சரி செய்ய முடியும். கோஹ்லிக்கு நாக்பூர் மைதானம் அதிர்ஷ்டமானதாக இதுவரை அமைந்திருக்கிறது என்கிறது புள்ளிவிபரம்.

யார் இந்தியாவுக்கு விக்கெட்கீப்பர்? ரிஷப் பந்த் இல்லாதது இடிக்கிறது இங்கே. இதுவரை அணியில் ஸ்டாண்ட்-இன் விக்கெட்கீப்பராக அமர்ந்திருந்து ஆனால் இதுவரை ஆட வாய்ப்பில்லாதிருக்கும் கே.எஸ். பரத்திற்கு இப்போது வாய்ப்பு கொடுப்பது நல்லது. நல்ல கீப்பர் என்பதோடு, திறன் வாய்ந்த பேட்ஸ்மனும்கூட. கே எல் ராஹுலே பார்த்துக்கொள்வார் என்று அசடு வழியாமலிருப்பது அணிக்கு நல்லது. டெஸ்ட் ஸ்டாண்டர்ட் விக்கெட்கீப்பர் அல்ல ராஹுல். அவரால் ஸ்பின்னர்களுக்குத் திறமையாக கீப் செய்ய முடியாது.

கேப்டன் ரோஹித்தும், கோச் திராவிடும் சில சாதுர்யமான முடிவுகளை, எதிரணியின் பலம் கருதி எடுக்கவேண்டியிருக்கும் – அவை சர்ச்சைக்குள்ளானாலும் பரவாயில்லை என்று.

Star Sports 1. 09-02-23 @ 09:30 hrs (IST) Nagpur

டெஸ்ட் கிரிக்கெட் :  ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா

Pujara with the Cup in Sydney

கிரிக்கெட் dhamaaka  என்று சொல்லத்தக்க ஒரு தடாலடி டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு ஒரு வரலாற்று வெற்றி என்கிறவாறு சிட்னி, ஆஸ்திரேலியாவில் நிறைவுபெற்றது. கோஹ்லியின் ஆட்டபாட்டம், இந்திய அணி, மற்றும் இந்திய ரசிகர் பட்டாளத்தின் ஆரவாரம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் இந்திய ரசிகர்கள் மேகத்தில் மிதக்கிறார்கள். இருக்காதா பின்னே! எத்தகைய கிரிக்கெட் விருந்தை அவர்கள் கண்டு களித்திருக்கிறார்கள், இடையிடையே மழையும், சூறாவளிக்காற்றும் வந்து பயமுறுத்திச் சென்றபோதிலும்.

ஆஸ்திரேலியாவுக்கெதிராக பார்டர்-கவாஸ்கர் டிராஃபிக்கான (Border-Gavaskar Trophy) தொடரை இந்தியா வென்றது இது முதல் தடவையல்ல. ஆஸ்திரேலியாவிலேயே, அவர்களுக்கு சாதகமான பிட்ச்களில் ஆடி, 2-1 என்கிற வித்தியாசத்தில்  டெஸ்ட் தொடரை வென்றதுதான் இந்திய வீரர்களின் சாதனை மைல்கல். மழைவந்து கெடுக்காவிட்டால் சிட்னி டெஸ்ட்டையும் இந்தியா வென்றிருக்கும். வித்தியாசம் 3-1 என்றாகி கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் ஆஸ்திரேலியாவின் தன்னம்பிக்கையையும் நிலைகுலைய வைத்திருக்கும்.

தொடரின் ஆரம்பத்திலேயே இந்தியர்கள் சரியான தாக்குதல் மனப்பாங்குடன் இருந்தார்கள். தொடர்முழுதும் நேர்மறை மனப்போக்கை நிலைநிறுத்தியதோடு, சிறப்பான திறன் வெளிப்பாட்டை ஒட்டுமொத்த அணி என்கிற வகையிலும், தனிப்பட்ட முறையில் இந்திய வீரர்கள் சிலரும்  செய்துகாட்டியதில் இந்த வரலாற்று வெற்றி நிகழ்ந்திருக்கிறது.  முன்னாள் சர்வதேச டெஸ்ட் ஜாம்பவான்களான இயான் சேப்பல், ஷேன் வார்ன், மைக்கேல் வாஹ்ன், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரிக்கி பாண்ட்டிங் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான் என முக்கிய இடங்களிலிருந்து கோஹ்லியின் இந்திய அணிக்கு பாராட்டு மாலைகள்.

ஆஸ்திரேலியாவுக்கெதிரான இந்த தொடரில், இந்திய வெற்றிக்கு டெஸ்ட்  ஸ்பெஷலிஸ்ட்டும், அணியின்  3-ஆம் எண் ஆட்டக்காரருமான செத்தேஷ்வர் புஜாராவின் (Chetheshwar Pujara) பங்களிப்பு மெச்சத்தக்கதாக அமைந்ததை பல சர்வதேச கிரிக்கெட் விமரிசகர்கள் குறிப்பிடத் தவறவில்லை. (ஆஸ்திரேலியர்களுக்கும் வேறுவழியில்லாமல், பாராட்ட வேண்டி வந்தது). 4 மேட்ச் தொடரில் 3 சதங்கள் (highest 193) ஆஸ்திரேலிய மண்ணிலே விளாசுவது,  அதுவும் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேஸல்வுட், நேதன் லயன் போன்ற சூப்பர் பௌலர்களுக்கெதிராக, பௌலர்களுக்குப் பொருந்திவந்த பிட்ச்சுகளில் என்பது, வியந்து பாராட்டப்படவேண்டியதே. புஜாராவின் தனித்திறமை தெரியாமல் முன்பெல்லாம்  அவரது பங்கை அலட்சியப்படுத்தி, அசட்டுத்தனம் காட்டிய சாஸ்திரி-கோஹ்லி மேனேஜ்மெண்ட்டுக்கு, விஷயம் கொஞ்சம் லேட்டாகத்தான் புரிய ஆரம்பித்திருக்கிறது . Better late, than never.

இந்தத் தொடரில் 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (Rishab Pant) காட்டிய உத்வேகமும், பேட்டிங் திறமையும் (கூடவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களை வம்புக்கிழுத்தது!)  இந்திய ரசிகர்களைப் பெரிதும் குதூகலிக்கவைத்தது.  அவருடைய கேச்சிங்-திறன் இன்னும் முன்னேற்றமடையவேண்டியுள்ளது என்கிறபோதிலும், தொடரில் 20 கேட்ச்சுகளைப் பிடித்து அசத்திவிட்டாரே பையன்! பேட்டிங்கில் ஆரம்பத்தில் 25, 30 எனத் தட்டிவிட்டு, சிக்ஸர் அடிக்கிறேன் என்று கேட்ச்சில் அவுட்டாகிக்கொண்டு விமரிசனத்துக்குள்ளான பந்த், சிட்னியில் தன் ஸ்க்ரிப்ட்டை மாற்றியமைத்தார்.  தூக்கியடித்து ஆடும் தன் அதிரடி சிக்ஸர்களை வெகுவாகக் கட்டுப்படுத்தி,  சிட்னியில்  பௌண்டரிகளாக அவர் அடித்து நொறுக்கிய 159 நாட்-அவுட்டை (Kohli’s declaration) ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதாக மறந்துவிடாது.  ஆயினும், அடுத்தவாரம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் இல்லை என்பது நமது செலக்டர்கள் காட்டும் சாணக்யத்தனம் !

வழக்கமான துவக்க ஆட்டக்காரர்களான விஜய் மற்றும் ராஹுலின் அதிர்ச்சிதரும் தொடர் வீழ்ச்சியும், ப்ரித்வி ஷாவின் ஆரம்பக்காயமும், வெளியேற்றமும், ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியது. வெகுநாட்களாகக் காத்திருப்பில் இருந்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பமைய, அவரும் அதனை இறுகப்பற்றிக்கொண்டார். கடைசி இரு போட்டிகளில் மட்டும் இறக்கப்பட்ட அகர்வால், 76, 42, 77 என எழுப்பிய ஸ்கோர்கள் வெறும் எண்ணிக்கையல்ல. சில வருடங்களாகவே இந்திய ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு இளம் வீரரின் ஆர்வம் மற்றும் கடும் உழைப்பின் பலனாய், சர்வதேச வெளியில், இந்திய அணிக்கு தக்க நேரத்தில்   இவை பலன் தந்தன. இளம் ப்ரித்திவ் ஷாவோடு, இந்தியாவுக்கு இன்னுமொரு நம்பகமான ஓப்பனர் கிடைத்தது இந்தத் தொடரின் வெள்ளிக்கீற்று.

இந்திய பௌலர்களில், முதல் மேட்ச்சில் அஷ்வினும் பிறகு வந்த மேட்ச்களில் முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவும் தீரம் காட்டினர். பும்ரா 21 விக்கெட்கள் வீழ்த்தி தொடரின் அதிகபட்ச விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்கிற பெருமையை தன் முதல் ஆஸ்திரேலிய டூரிலேயே பெற்று அசத்தினார். ஷமியும், பும்ராவும் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எனத் தலா ஒருமுறை சாதித்துக் காட்டினர். சிட்னி டெஸ்ட்டில் காயம் காரணமாக அஷ்வின் ஆடமுடியாமற்போக, வாய்ப்பு கிடைத்த ரிஸ்ட்-ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியர்களைத் திணறவைத்ததோடு, தனக்குக் கிடைத்த ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி விட்டார். ரவீந்திர ஜடேஜாவின் கடைசி இரு போட்டிகளில் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சிட்னியில் அவர் ரிஷப் பந்துடன் சேர்ந்து அலட்சியமாக ஆஸ்திரேலிய பௌலர்களைப் போட்டுத்தாக்கிய 81 ரன்களை, ஒரு ஆல்ரவுண்டரின், லோயர்-ஆர்டர் பேட்ஸ்மனின் முக்கியமான பங்களிப்பு என்கிற வகையில் பார்க்கவேண்டும். ஜடேஜாவின் பேட்டிங் திறனை இந்திய அணி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை என்கிற விமரிசனம் கொஞ்சநாட்களாகவே உண்டு.

பொதுவாக கேப்டனாக இந்தத் தொடரில் விராட் கோஹ்லி காட்டிய தலைமைப்பண்புகள் பாராட்டுதல்களை அள்ளின. ஒரு சதத்திற்குமேல் அவர் பேட்டிங்கில் பெரிதாக செய்யவில்லை என்றபோதிலும், மற்றவர்களை உற்சாகப்படுத்தி அணியை நடத்திய விதம், குறிப்பாக  முக்கிய கட்டங்களில் ஸ்பின்னர்களைக் கையாண்ட விதம், வெற்றியை நோக்கி இந்தியாவை வேகமாகச் செலுத்தியது.

2018-ஆம் ஆண்டு, உலகளவில் புகழ்பெற்ற ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டை, பரிதாபமான நிலைக்குக் கொண்டுவந்திருந்தது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில், பந்தில் தில்லுமுல்லு செய்து கேமராவில் மாட்டிக்கொண்டு அவமானப்பட்ட ஆஸ்திரேலியாவினால்,  தன் முன்னணி வீரர்கள் மூவர், ஒரு வருடத்திற்கு  விளையாடத் தடைசெய்யப்பட்ட  அதிர்ச்சியிலிருந்து விடுபடமுடியவில்லை. டிம் பேய்னின் (Tim Paine) தலைமையில் மாற்றி அமைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் சிறந்த இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டும்,  தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற கடும் எதிரிகளுக்கு முன்னால் சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியாவினால் சோபிக்கமுடியவில்லை. இந்திய பேட்ஸ்மன்களின் 5 சதங்களுக்கெதிராக, இந்த 4-போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவின் தரப்பிலிருந்து ஒரு சதமும் இல்லை என்பது ஆஸ்திரேலிய அணியின் விமரிசகர்களுக்கே அதிர்ச்சி தந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களால் இதனை ஜீரணிக்க முடியவில்லை என்பது ட்விட்டர் ட்ரெண்டுகளில் விமரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களின் உச்சபட்ச தனிப்பட்ட ஸ்கோரே, துவக்க ஆட்டக்காரரான மார்கஸ் ஹாரிஸ் கடைசி போட்டியில் அடித்த 79 தான். பௌலிங்கில் ஸ்பின்னர் நேதன் லயன் (21 விக்கெட்கள்) மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) தவிர, வேறு யாரும்  டெஸ்ட் உயர்தரத்தில் ஒன்றும் பிரமாதமாக  செய்யமுடியவில்லை. அதற்கு, புஜாராவின் அசாத்திய நிதான ஆட்டமும், கோஹ்லி, ரிஷப் பந்த், ரஹானே போன்றோர் பிட்ச் கண்டிஷனுக்கேற்ப ஆடிக்காட்டிய திறனும் முக்கிய காரணம் என ’ தி ஆஸ்திரேலியன்’,  ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’,  ’ஹெரால்ட் சன்’ ஆகிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் விஸ்தாரமாக எழுதியிருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 பௌலரான மிட்ச்செல் ஸ்டார்க் தொடர் முழுதும் ஒரு சோர்வுடன் காணப்பட்டதை ஆஸ்திரேலிய செலக்டர்களும், விமர்சகர்களும் கவனிக்கத் தவறவில்லை.  இப்போதெல்லாம் இருதரப்பு தொடர்கள் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட்டுகளோடு முடிவடைவது வழக்கமாக ஆகிவிட்டிருக்கையில், 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், அதுவும் அவர்களுக்கு அதிசாதகமான உள்நாட்டு பிட்ச்சுகளில் ஆடப்பட்டது, அவர்களுக்கு இப்படி ஒரு தள்ளாட்டத்தைக் கொடுத்ததெனில் என்னதான் சொல்வது?  மாற்றுவீரர்களுடன் அணி அமைக்கப்பட்டவிதம், அல்லது  எதிர்பார்த்ததைவிட பயங்கரமாக மிரட்டிய இந்தியப்பந்துவீச்சை சரியாக ஆடத் தவறிய முன்னிலை பேட்ஸ்மன்களின் அனுபவமின்மை, திறமையின்மையே  தோல்விக்குக் காரணம் எனக் கடுமையான உள்நாட்டு விமரிசனங்களும் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் இந்தத் தள்ளாடல், மற்றும் இந்திய ஸ்பின்னர்களைக் கையாள்வதில் அவர்கள் வெளிப்படுத்திய குழப்ப மனநிலை ஆகியவற்றை, விராட் கோஹ்லி சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். இந்தியாவுக்குக் கிடைத்தது கைமேல் பலன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பலவருட போராட்டங்களுக்குப்பின், ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணிலேயே சாய்த்த பெருமை, ஆஸ்திரேலிய அணிக்கு அவர்களது சிட்னியில்  ஃபாலோ-ஆன் (follow-on) கொடுத்து கலங்கவைத்தது   எனப் புகழ்மாலைகள்.. (இதற்கிடையே கோச் ரவி சாஸ்திரியின் உளறல்கள் ஆஸ்திரேலியர்களுக்கான காமெடி சீன்!).

அடுத்து வருவது, சிட்னியில் 12-ஆம் தேதி ஆரம்பிக்கவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடர். இரு தரப்பிலும் அணி வீரர்களில் மாற்றம். சற்றுமுன் வந்த செய்திப்படி டெஸ்ட் தொடரில் இந்தியாவின் டாப் பௌலரான ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர், ஹைதராபாதின்  முகமது சிராஜ் இணைகிறார். ரோஹித் ஷர்மா, தோனி, ஹர்தீக் பாண்ட்யா, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜுவேந்திர சஹல் என ஒன் –டே ஸ்பெஷலிஸ்ட்டுகள் இந்திய அணியில். ஆஸ்திரேலிய அணியில், க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), ஆரோன் ஃபின்ச், ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa), மார்கஸ் ஸ்டோய்னிஸ் என ஆக்ரோஷம் காட்டும் வீரர்கள்.

ஒரு-நாள் கிரிக்கெட் என்பது வேறொரு மேடை; காட்சிகள் வெவ்வேறுவிதமாக  மாறக்கூடும்!

Picture courtesy: Google

*

க்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்

இரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி, இந்தியாவை வெற்றிமேடையில் ஏற்றிவிட்டார். தொடர் 2-1 என்று இந்தியாவின் கணக்கில் வர, பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்கப்பட்டது.

தரம்ஷாலா மேட்ச்சை ஜெயித்தால்தான் தொடர் என்கிற நிலையில் இரு அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் பக்கமே முள் சாய்ந்திருப்பதாய்த் தோன்றியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி ஆடமாட்டார் என்பதே ஸ்மித்தை ஏகமாகக் குஷிப்படுத்தியது. தொலஞ்சான்யா! டாஸையும் வென்றது ஆஸ்திரேலியா. தரம்ஷாலா பிட்ச் இதுவரை அமைந்த பிட்ச்சுகளில் அருமையானதாகத் தோன்றியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வேகவேகமாக ரன் எடுத்தது. விக்கெட்டுகளும் விழுந்துகொண்டிருந்தன. இதுவரை தொடரில் ஃபார்ம் காண்பிக்காத டேவிட் வார்னர் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். சர்ச்சைகள் ஒருபுறமிருக்க பேட்டிங்கில் பின்னி எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இன்னுமொரு சதம் இந்தத்தொடரில். 144-க்கு 1 விக்கெட் என ஆஸ்திரேலியா கம்பீரமாக முன்னேறியது.

லஞ்சுக்குப் போகுமுன்தான் ரஹானேக்கு முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவின் முகம் நினைவில் வந்ததுபோலும். கொஞ்சம் போடச்சொன்னார். லஞ்ச்சில் என்ன சாப்பிட்டாரோ! குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன! முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது! சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் ! அடுத்தடுத்த கம்மின்ஸ் பந்துகளை பௌண்டரி, சிக்ஸர் எனச் சீறவிட்டு பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கோஹ்லியையும், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார். சாஹா 31, ஜடேஜா 63 என அசத்தினர், சிறப்பாக வீசிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயனுக்கு 5 விக்கெட்டுகள். இந்தியா எடுத்த 332 ஆஸ்திரேலியாவின் மனதில் கிலியை உண்டுபண்ணியிருக்கவேண்டும்.

தொடரைக் கோட்டைவிட்டுவிடக்கூடாதே என்கிற அழுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆரம்பித்தது. உமேஷ் யாதவ் வேகத்தினாலும், ரிவர்ஸ் ஸ்விங்கினாலும் ஆஸ்திரேலியர்களை அதிரவைத்தார். ரென்ஷா, வார்னர் இருவரையும் அதிரடியாக வெளியேற்றினார். நிதான ஆட்டத்திற்குப் பேர்போன ஆஸ்திரேலியக் கேப்டனை பீதி கவ்வியது. புவனேஷ்குமாரின் ஸ்விங் பௌலிங்கிற்கு உடனே பலியாகி ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஸ்மித். மேக்ஸ்வெல்லின் அதிரடி 45-ஐத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. 137 ரன்களில் பரிதாபமாக இந்தியாவிடம் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. இந்திய பௌலர்களின் உத்வேகப்பந்துவீச்சு மிகவும் பாராட்டுக்குரியது. உமேஷ், ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ரன் அதிகமாகக் கொடுத்துவிடக்கூடும் என்கிற பயத்தில் ரஹானே அவருக்கு ஐந்து ஓவருக்குமேல் தரவில்லை.

இந்தியாவுக்கு இலக்கு 106. இத்தகைய சிறிய இலக்குகள் 4-ஆவது நாளில் பெரும் ப்ரச்சினையை பேட்டிங் அணிக்குத் தரவல்லது. இதுவோ இறுதிப் போட்டி. தொடரின் தலையெழுத்தை நிறுவப்போவது. எனவே இந்தியா இலக்கை நோக்கி வழிமேல் விழிவைத்து நகர்ந்தது. இருந்தும் முரளி விஜய் தடுமாறி கம்மின்ஸிடம் வீழ, அதே ஓவரில் இந்தியாவின் Mr.Dependable-ஆன புஜாரா ரன்–அவுட் ஆகிவிட, 46-க்கு இரண்டு விக்கெட்டுகள்; இந்தியாவுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டதோ எனத் தோன்றியது, ஆனால் ராஹுல் தன் நிதானத்தை இழக்காது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடிசேர்ந்த ரஹானேயை முகத்துக்கெதிரே எகிறும் வேகப்பந்துகளினால் மிரட்டப் பார்த்தார் கம்மின்ஸ். ஆனால் தடுத்தாடி, தடுமாறிவிழும் மனநிலையில் ரஹானே இல்லை. கம்மின்ஸின் எகிறும் பந்துகளை விறுவிறு பௌண்டரிகளாக மாற்றினார். போதாக்குறைக்கு, கம்மின்ஸின் 146 கி.மீ. வேகப்பந்தொன்றை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களுக்கு போதையூட்டினார் ஒல்லி உடம்பு ரஹானே! ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. இந்தத் தொடர் நமக்கில்லை என்று அதற்குப் புரிந்துவிட்டது. ராஹுல் தன் ஆறாவது அரைசதத்தைப் பூர்த்திசெய்து வெற்றி ரன்களையும் எடுத்தவுடன், மைதானத்தில் ஆட்டம் ஆடி, கோஹ்லி அங்கில்லாத குறையை ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்தார். வெற்றிக்கு அடையாளமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் பிடுங்கி எடுத்துக்கொண்டு அமைதியாக நடந்தார் அஜின்க்யா ரஹானே. இளம் ரசிகர்களின் கூச்சல், ஆரவாரத்தில் தரம்ஷாலா அதிர்ந்து எழுந்தது. கோஹ்லி மைதானத்துக்குள் ப்ரவேசித்து வீரர்களோடு கைகுலுக்கி மகிழ்ந்தார். தொடரின் விதியை நிர்ணயித்த தரம்ஷாலா மேட்ச்சில் ரஹானே காட்டிய அமைதியான ஆனால் அழுத்தமான தலைமை மறக்க இயலாதது.

இத்தொடர் பற்றிய முதல் கட்டுரையில் நான் கூறியபடி இது ஒரு அபாரத் தொடராக நடந்துமுடிந்தது. இருதரப்பிலிருந்தும் அபரிமித ஆட்டத் திறமைகளின் வெளிப்பாடுகள், மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அதிரடிச் சச்சரவுகள் என ரசிகர்களையும், விமர்சகர்களையும் இறுதிவரை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித்தின் DRS தப்பாட்டம்பற்றி பெங்களூரில் விராட் கோஹ்லி வீசிய குண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும், ஏன் ஐசிசி-யையும்கூட அதிரவைத்தது. பதிலாக, தன் மூளை ஒருகணம் மழுங்கிவிட்டதாகவும் அது தவறுதான் என்றும் ஸ்மித் வழிந்த கோலாகலக் காட்சி அரங்கேறியது! ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடியோ ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடைசிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை !’’ என்று மனதில் உள்ளதைப் போட்டுடைத்தார் கோஹ்லி. மொத்தத்தில் பெரும் ஆர்வத்தை உலகெங்குமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே கிளர்ந்தெழவைத்த டெஸ்ட் தொடர் இது. Most riveting Test series ever played in recent times.

2016-17 க்ரிக்கெட் சீஸன் இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராஹுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 அரைசதங்களை எடுத்து அசத்தினார்கள். கோஹ்லி 3 இரட்டை சதங்களையும், புஜாரா ஒரு இரட்டை சதத்தையும் விளாசி முத்திரை பதித்தனர். இங்கிலாந்துக்கெதிராக சென்னையில் கருண் நாயர் அடித்த முச்சதமும் இந்த சீஸனின் மகத்தான அம்சங்களில் ஒன்று. பௌலிங்கில் உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா முதன்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளார். அஷ்வினுக்கு இரண்டு ஐசிசி விருதுகள். இந்திய அணி அபாரமாக டெஸ்ட்டுகளை ஆடி 4 தொடர்களைக் கைப்பற்றிய காலமாக இது பேசப்படும். இனி வெளிநாட்டு மைதானங்களிலும் தன் திறமை காட்ட இது அணியினை உற்சாகப்படுத்தும். எனினும், அதற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் கொஞ்சம் ஐபிஎல் ஆடலாம் !

**