FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்

உலகக்கால்பந்து கோப்பையில் ஆரம்பமுதலே ரசிகர்களாலும் விளையாட்டு விமரிசகர்களாலும் துழாவப்படும் நட்சத்திரங்கள் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் க்றிஸ்டியானோ ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மார் (Neymar) ஆகியோர். கால்பந்து உலகின் புகழின் சிகரத்தில் இருந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பவர்கள். கடந்த சில வருடங்களாக ஐரோப்பியக் கால்பந்து சேம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா எனப்படும் அமெரிக்கக் கண்டத்தின் கால்பந்து சேம்பியன்ஷிப் மற்றும் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகளில் சுற்றிச் சுற்றி வெற்றி மிதப்புடன் வலம்வந்த நட்சத்திரங்கள். ரசிகர்களின் கனவு ஹீரோக்கள். இவர்களோடு, உருகுவேயின் லூயிஸ் ஸுவாரஸ் (Luis Suarez), எகிப்தின் மொகமது ஸாலே(Mohamed Saleh), பெல்ஜியத்தின் புகழ்பெற்ற கால்பந்துக்காரரான ஈடன் ஹஸார்ட் (Eden Hazard) போன்ற நட்சத்திரங்களும் அவ்வப்போது ஆங்காங்கே மின்னி வியப்பூட்டுவதுண்டு. மாஸ்கோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர்கள் தத்தம் நாடுகளுக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

மெஸ்ஸி, ரொனால்டோவைப்போலவே, பிரேஸிலின் நெய்மார், லத்தீன் அமெரிக்காவைத் தாண்டியும் மிகவும் கொண்டாடப்படும் ஒரு கால்பந்துவீரர். பெப்ருவரியில் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர், பரிபூரண குணமடைந்ததாகத் தெரியவில்லை. பிரேஸில்-ஸ்விஸ் டிரா-வான மேட்ச்சில் இவரால் ஸ்விஸ் தடுப்பாட்டக்காரர்களை (defenders) எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்றைய காஸ்ட்டா ரிகா (Costa Rica) போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது பிரேஸில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஒரு கோலாவது, அவரிடமிருந்து வருமா? இல்லை, மெஸ்ஸியின் அழுகைக் கதையின் இன்னொரு வடிவம்தானா நெய்மாரும்? உலகெங்கும் பரவியுள்ள கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் விரியும் இன்றைய மாலை.

இந்த மூன்று ஸூப்பர் ஸ்டார்களில் –மெஸ்ஸி, நெய்மார், ரொனால்டோ- போர்ச்சுகலின் ரொனால்டோ மட்டும்தான், மாஸ்கோ மைதானங்களில் ஒரு துள்ளலுடன் திரிகிறார். இதுவரை 4 கோல்களை (வலிமையான அணியான ஸ்பெயினுக்கெதிராக 3, மொராக்கோவிற்கெதிராக 1) அனாயாசமாக விளாசி, தன் அணியை முன்னேற்றியிருக்கிறார் க்றிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகலின் சிகப்புச்சட்டை ரசிகர்கள் குதூகலத்தின் உச்சியில். இவரது இந்த ஃபார்ம், மற்றவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில், போர்ச்சுகலை காலிறுதிவரை எளிதாக அழைத்துவந்துவிடும் எனத் தோன்றுகிறது.

ஐரோப்பிய நாடான க்ரோஷியாவோடு நேற்று இரவு மோதிய, கால்பந்து உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினா, சகிக்கமுடியாத ஒரு பாடாவதி ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது. க்ரோஷியா ஆக்ரோஷ ஆட்டம் காண்பித்ததோடு, 3-0 என்ற கணக்கில் எளிதாக அர்ஜெண்டினாவைத் தூக்கி வீசியது, அர்ஜெண்டினாவின் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அர்ஜெண்டினாவின் கேப்டனும் சூப்பர் ஸ்டாருமான மெஸ்ஸி, மைதானத்தில் எங்கோ தனியே நின்றுகொண்டிருப்பதுபோன்று தோன்றியது. அவரிடம் பந்து பாஸ் ஆனால்தானே அவர் பாய முடியும்? அர்ஜெண்டினா கோச்சின் தாக்குதல்/தடுப்பாட்ட வியூகம் க்ரோஷியாவிற்கெதிராகப் பலிக்காதுபோனது. இதில் தோற்றவிதம், தோற்ற மார்ஜின் எல்லாமே அர்ஜெண்டினா போன்ற ஒரு சேம்பியன் அணிக்கு அவமானமே அன்றி வேறில்லை.அர்ஜெண்டீனியப் பத்திரிக்கைகள் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் கோல்கீப்பர் வில்லி கபயேரோ (Willey Caballero) வின் அசட்டு ஆட்டத்தை ‘சர்வநாசம்’ ‘அவமானம்’ என அடைமொழிகளைப்போட்டுக் கிழித்திருக்கின்றன. போகிறபோக்கைப் பார்த்தால், விரைவில் அவர்கள் அர்ஜெண்டினாவின் தலைநகர் ப்யூனஸ்-ஐரெஸுக்கு ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான். அங்கு எத்தகைய வரவேற்பு அவர்களுக்குக் காத்திருக்கும் என யாரும் யூகிக்கவேண்டியதில்லை! ஸாரி, மெஸ்ஸி ரசிகர்களே – கிட்டத்தட்ட, முடிந்துவிட்டது ஆட்டம் உங்களுக்கு.

’ஹேய்! மெஸ்ஸி என்கிற தனி ஒரு ஸ்டாரின் ரசிகன் மட்டுமல்ல, கால்பந்து எனப்படும் மாபெரும் விளையாட்டின் ரசிகன் நான் !’ என நீங்கள் உணர்ந்து குரல் உயர்த்துவீர்களேயானால், இந்த உலகக்கோப்பையில் பார்க்க நிறைய மீதி இருக்கிறது, உஙகளுக்கு. தவிர்க்கமுடியா அதிர்ச்சிகளுடன். ரஷ்யாவந்திருக்கும் ரசிகர்களே, நீங்கள் கூட அழைத்துவந்திருக்கும் காதலிகளுடன் சேர்ந்து, ரஷ்ய வோட்கா அளவாக அடியுங்கள், ஆனந்தியுங்கள்!

**

உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் !

வந்தால் எல்லா முகூர்த்தங்களும் சேர்ந்தார்ப்போல வரும்! வழக்கம் தான் இது. இன்று விளையாட்டு ரசிகர்களுக்கு அப்படி ஒரு நாள். FIFA உலகக் கால்பந்துக்கோப்பை ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. முதல் போட்டி (ரஷ்யா-சௌதி அரேபியா), ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் இந்திய நேரம் இரவு 8.30க்கு நிகழ்கிறது. அதற்கு 11 மணி நேரம் முன்பு அதாவது காலை 9.30 மணிக்கு பெங்களூரில் நிகழவிருக்கிறது இந்தியா –ஆஃப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க முதல் கிரிக்கெட் டெஸ்ட். கிரிக்கெட் உலகின் பெரிசுகள் லிஸ்ட்டில், அதாவது ’டெஸ்ட்’ போட்டிகள் விளையாடும் நாடுகளின் அணியில் முதன்முதலாக ஆஃப்கானிஸ்தானும், அயர்லாந்தும் இந்த வருடம் ஐசிசி-யினால் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கெதிராக இன்று விளையாடவிருக்கும் போட்டி மூலம், தன் ‘டெஸ்ட்’ சகாப்தத்தைத் தொடங்குகிறது ஆஃப்கானிஸ்தான். அதுதான் விசேஷம். என்ன மாதிரியான நாள் இது பார்த்தீர்களா, இந்திய ரசிகர்களே ..

பெங்களூர் டெஸ்ட்டில் ஆஃப்கானிஸ்தான் குறைந்த பட்சம் மூன்று ஸ்பின்னர்களை மைதானத்தில் இறக்கிவிடும். சுழல்பந்துவீச்சு அவர்களின் அசுர பலம். வரிசையாக வைத்திருக்கிறார்கள். கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் (Asghar Stanikzai), ஆஃப்கன் ஸ்பின்னர்கள் இந்திய ஸ்பின்னர்களைவிட சிறந்தவர்கள் என ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட்டை பத்திரிக்கையாளர்முன் நேற்று வீசியிருக்கிறார். உலகப் புகழ்பெற்றுவிட்ட (ஒரு-நாள், டி-20 போட்டிகளில்) ரஷித் கான், ஐபிஎல்-புகழ் முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஸ்பின் பௌலர்கள் அவர்களிடம் இருப்பதால் ஒரு குஷி! ஆஃப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சு இந்தியாவிற்கு பெரிய பிரச்னை ஏதும் செய்துவிடாது எனத் தோன்றுகிறது. டெஸ்ட் கத்துக்குட்டிகளின் பேட்டிங் எப்படி? முகமது நபி, முகமது ஷேஹ்ஸாத் (Mohamed Shahzad), கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் மற்றும் ரஹ்மதுல்லா. ஸமியுல்லா ஷென்வாரியும் மிடில்-ஆர்டரில் நின்று ஆடக்கூடும். முதல் இன்னிங்ஸில் ஒரு மரியாதைக்குரிய ஸ்கோரை ஆஃப்கானிஸ்தான் எட்டவேண்டுமெனில் இவர்களில் குறைந்த பட்சம் இரண்டு பேராவது இந்திய பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு திறனாக ஆடவேண்டும். பொறுமையை மிகச் சோதிக்கும் டெஸ்ட் விளையாட்டு இவர்களுக்கு புதிதாகையால், நிச்சயம் சிரமப்படுவார்கள். இருப்பினும் ஓரிருவர் நிதானம் காட்டி ஆடினால், அரை சதம் தட்டலாம்.

இந்திய அணிக்கு அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குகிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில், உமேஷ் யாதவோடு, புதிய பௌலராக நவ்தீப் செய்னி (Navdeep Saini) இறக்கப்படுவாரா அல்லது இஷாந்த் ஷர்மா ஆடுவாரா? காலையில்தான் தெரியும். இந்திய ஸ்பின்னர்கள் ஜடேஜாவும் அஷ்வினும் நிறைய பெங்களூர் பிட்ச்சில் களியாட்டம் போடுவார்களோ? இந்தியா இன்னிங்ஸை ஆரம்பிக்கையில், எதிர்த்துவிளையாடுவது புதுமுகங்கள்தானே என்ற மிதப்பில் ஆட ஆரம்பித்தால், ஆஃப்கானிஸ்தானின் தரமான ஸ்பின்னர்கள் பெண்டெடுத்துவிடுவார்கள். புஜாரா, ரஹானே, விஜய் நின்று, நிதானம் காட்டி ஆடவேண்டியிருக்கும். வ்ருத்திமான் சாஹா காயத்தினால் விலகியதால், 2010-க்குப்பின் இந்தியாவிற்காக டெஸ்ட் ஆட வந்திருக்கிறார் தமிழ்நாட்டின் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக். அபூர்வமாக வந்திருக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டால், அவருக்கும் அணிக்கும் நல்லது. மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான போட்டி காத்திருக்கிறது.

சரி, இப்போது. ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து. போட்டிகளை இவ்வருடம் நடத்தும் ரஷ்யா மிகவும் எளிதான க்ரூப்பான ‘ஏ’ குரூப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சௌதி அரேபியா அதன் எதிரி. ஐரோப்பாவின் ஏனைய வலிமையான அணிகளோடு ஒப்பிடுகையில், ரஷ்ய கால்பந்து அணி அவ்வளவு சிறப்பான நிலையில் இல்லை. ரஷ்யா கவனமாக ஆடாவிட்டால், சௌதி அரேபியா தூக்கி எறிந்துவிடும்.

ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய கால்பந்து வீரர்கள்: ரஷ்யாவின் இகோர் அகின்ஃபீவ் (Igor Akinfeev) அபாரமான கோல்கீப்பர். அவரைத்தாண்டி பந்தை கோலுக்குள் அனுப்புவது எதிர் அணிக்குப் பெரும் சவாலாகும். அணியின் செண்டர்-பேக் (Centre-back) ப்ளேயரான ஸெர்கெய் இக்னாஷெவிச் (Sergei Ignashevich) 38 வயதிலும் அபாரமாக ஆடிவருபவர். அணியின் 22-வயது இளம்புயல் அலெக்ஸாண்டர் கோலொவின் (Aleksandr Golovin). அருமையாகத் தாக்கிவிளையாடி ரஷ்யாவுக்கு கோல் வாய்ப்புகளைத் தரும் வீரர்.

சௌதி அரேபிய அணியில் முக்கியமான வீரர்களாக கோல்கீப்பர் அப்துல்லா அல் மயோஃப் (Abdullah al Mayouf), மற்றும் அணியின் கருப்பின வீரர்களான ஒஸாமா ஹவ்ஸாவி (osama hawsawi), ஒமர் ஹவ்ஸாவி(Omar Hawsawi), யாஸர் அல்-ஷாரானி (Yasser Al Shahrani) போன்றோரைக் குறிப்பிடலாம். திறன்மிகு இளம் வீரர்கள் சிலருமுண்டு.

ரஷ்யாவா, சௌதி அரேபியாவா – உலகக்கோப்பையின் ஆரம்ப மேட்ச் யாருக்கு? இரவில் தெரியும். ரஷ்ய மற்றும் உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரே கோலாகலம்தான் இனி!

**