உலகக்கால்பந்து கோப்பையில் ஆரம்பமுதலே ரசிகர்களாலும் விளையாட்டு விமரிசகர்களாலும் துழாவப்படும் நட்சத்திரங்கள் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் க்றிஸ்டியானோ ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மார் (Neymar) ஆகியோர். கால்பந்து உலகின் புகழின் சிகரத்தில் இருந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பவர்கள். கடந்த சில வருடங்களாக ஐரோப்பியக் கால்பந்து சேம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா எனப்படும் அமெரிக்கக் கண்டத்தின் கால்பந்து சேம்பியன்ஷிப் மற்றும் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகளில் சுற்றிச் சுற்றி வெற்றி மிதப்புடன் வலம்வந்த நட்சத்திரங்கள். ரசிகர்களின் கனவு ஹீரோக்கள். இவர்களோடு, உருகுவேயின் லூயிஸ் ஸுவாரஸ் (Luis Suarez), எகிப்தின் மொகமது ஸாலே(Mohamed Saleh), பெல்ஜியத்தின் புகழ்பெற்ற கால்பந்துக்காரரான ஈடன் ஹஸார்ட் (Eden Hazard) போன்ற நட்சத்திரங்களும் அவ்வப்போது ஆங்காங்கே மின்னி வியப்பூட்டுவதுண்டு. மாஸ்கோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர்கள் தத்தம் நாடுகளுக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
மெஸ்ஸி, ரொனால்டோவைப்போலவே, பிரேஸிலின் நெய்மார், லத்தீன் அமெரிக்காவைத் தாண்டியும் மிகவும் கொண்டாடப்படும் ஒரு கால்பந்துவீரர். பெப்ருவரியில் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர், பரிபூரண குணமடைந்ததாகத் தெரியவில்லை. பிரேஸில்-ஸ்விஸ் டிரா-வான மேட்ச்சில் இவரால் ஸ்விஸ் தடுப்பாட்டக்காரர்களை (defenders) எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்றைய காஸ்ட்டா ரிகா (Costa Rica) போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது பிரேஸில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஒரு கோலாவது, அவரிடமிருந்து வருமா? இல்லை, மெஸ்ஸியின் அழுகைக் கதையின் இன்னொரு வடிவம்தானா நெய்மாரும்? உலகெங்கும் பரவியுள்ள கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் விரியும் இன்றைய மாலை.
இந்த மூன்று ஸூப்பர் ஸ்டார்களில் –மெஸ்ஸி, நெய்மார், ரொனால்டோ- போர்ச்சுகலின் ரொனால்டோ மட்டும்தான், மாஸ்கோ மைதானங்களில் ஒரு துள்ளலுடன் திரிகிறார். இதுவரை 4 கோல்களை (வலிமையான அணியான ஸ்பெயினுக்கெதிராக 3, மொராக்கோவிற்கெதிராக 1) அனாயாசமாக விளாசி, தன் அணியை முன்னேற்றியிருக்கிறார் க்றிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகலின் சிகப்புச்சட்டை ரசிகர்கள் குதூகலத்தின் உச்சியில். இவரது இந்த ஃபார்ம், மற்றவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில், போர்ச்சுகலை காலிறுதிவரை எளிதாக அழைத்துவந்துவிடும் எனத் தோன்றுகிறது.
ஐரோப்பிய நாடான க்ரோஷியாவோடு நேற்று இரவு மோதிய, கால்பந்து உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினா, சகிக்கமுடியாத ஒரு பாடாவதி ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது. க்ரோஷியா ஆக்ரோஷ ஆட்டம் காண்பித்ததோடு, 3-0 என்ற கணக்கில் எளிதாக அர்ஜெண்டினாவைத் தூக்கி வீசியது, அர்ஜெண்டினாவின் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அர்ஜெண்டினாவின் கேப்டனும் சூப்பர் ஸ்டாருமான மெஸ்ஸி, மைதானத்தில் எங்கோ தனியே நின்றுகொண்டிருப்பதுபோன்று தோன்றியது. அவரிடம் பந்து பாஸ் ஆனால்தானே அவர் பாய முடியும்? அர்ஜெண்டினா கோச்சின் தாக்குதல்/தடுப்பாட்ட வியூகம் க்ரோஷியாவிற்கெதிராகப் பலிக்காதுபோனது. இதில் தோற்றவிதம், தோற்ற மார்ஜின் எல்லாமே அர்ஜெண்டினா போன்ற ஒரு சேம்பியன் அணிக்கு அவமானமே அன்றி வேறில்லை.அர்ஜெண்டீனியப் பத்திரிக்கைகள் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் கோல்கீப்பர் வில்லி கபயேரோ (Willey Caballero) வின் அசட்டு ஆட்டத்தை ‘சர்வநாசம்’ ‘அவமானம்’ என அடைமொழிகளைப்போட்டுக் கிழித்திருக்கின்றன. போகிறபோக்கைப் பார்த்தால், விரைவில் அவர்கள் அர்ஜெண்டினாவின் தலைநகர் ப்யூனஸ்-ஐரெஸுக்கு ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான். அங்கு எத்தகைய வரவேற்பு அவர்களுக்குக் காத்திருக்கும் என யாரும் யூகிக்கவேண்டியதில்லை! ஸாரி, மெஸ்ஸி ரசிகர்களே – கிட்டத்தட்ட, முடிந்துவிட்டது ஆட்டம் உங்களுக்கு.
’ஹேய்! மெஸ்ஸி என்கிற தனி ஒரு ஸ்டாரின் ரசிகன் மட்டுமல்ல, கால்பந்து எனப்படும் மாபெரும் விளையாட்டின் ரசிகன் நான் !’ என நீங்கள் உணர்ந்து குரல் உயர்த்துவீர்களேயானால், இந்த உலகக்கோப்பையில் பார்க்க நிறைய மீதி இருக்கிறது, உஙகளுக்கு. தவிர்க்கமுடியா அதிர்ச்சிகளுடன். ரஷ்யாவந்திருக்கும் ரசிகர்களே, நீங்கள் கூட அழைத்துவந்திருக்கும் காதலிகளுடன் சேர்ந்து, ரஷ்ய வோட்கா அளவாக அடியுங்கள், ஆனந்தியுங்கள்!
**