காலைக் காப்பியே கசக்குமாறு
கதையை ஆரம்பித்துவைத்தான் பையன்
அப்பா! போயிடுத்து.. ஃபோன் பண்ணு!
ஃபோன் போட்டால்மட்டும்
புறப்பட்டு வந்துவிடுமா ?
இட்லி சட்னி மிளகாய்ப்பொடி
இதமேதும் தரவில்லை வாய்க்கு
பேப்பர்க்காரனும் இன்னும் வரவில்லை
ஞாயிறில்கூட என்னய்யா அவசரம்
பேப்பர் போடறவனுக்கும்தானே ஞாயிறு
படிக்கிறவனுக்குத்தான் எல்லா சுகமுமா
உழைப்பாளி வர்க்கத்தின் தூரத்துக் குரல்
உடம்பில் சூட்டைப் பரப்புகிறது
ஒன்றும் சொல்வதற்கில்லை
உண்பதற்குத் தவிர வேறெதற்கும்
வாய் திறவாதிருப்பது சாலச்சிறந்தது
காலையிலேயே இப்படி ஆகிப்போச்சே
கலங்கித் தவிக்கிறது போக்கற்ற மனம்
வெளியிலே ஒரு ரவுண்டு
வாக் போய்வரலாமென்றால்
வந்துபார் வெளியில் என்றே
வேஷ்டியை வரிந்துகட்டி
முஷ்டியை உயர்த்தும் வெயில்
இதுக்குல்லாம் பயந்தால் முடியுமா
எதுக்கும் துணிந்தவனைப்போல்
இறங்கிவிடலாம் என்றால் நகரின்
குண்டுகுழிச் சாலைகளோ
நண்டு புகுந்தோடத்தான் லாயக்கு
மதிய உணவு கழிந்தபின்னும் மிக
மந்தமாக நகருதே பொழுது
கிரிக்கெட் இருக்கிறது ஆனால்
இருபது ஓவர் மேட்ச் என்றால்
இரவில்தானே காட்டுவார்கள்
செய்வதறியாக் கையறுநிலையில் – மேலும்
பெய்யும் மழை சென்னையில் என்றார்
ஐராவதம்–அடுத்த ப்ளாக் அழகியின் அப்பா
பகலைக் கடக்கமுடியாப் பதற்றத்தில்
வார இதழ்களையாவது
வாசித்துவைப்போமென்றால்
வாயெல்லாம் பல்லாய்
வதைக்கும் மூஞ்சிகள்
அலுத்துப்போன அரசியல்வாதிகள்
உலுத்துப்போன சித்தாந்தங்கள்
போகமாட்டேன் என்கிறதே பொழுது
போன சனியன் எப்போதுதான் வரும்
இண்டர்நெட் இல்லாத நாளும் ஒரு நாளா
**