தென்சீனக் கடலில் சீனாவின் ஆட்டம்

ஒட்டுமொத்த உலகிலும் தீயைப்போட்டுக் கொளுத்தி கொரோனா வேடிக்கை பார்த்துவரும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் (மார்ச் 2020-க்குப் பின்னான போதாதகாலம்), தெற்கு ஆசியாவின் சில இடங்களில் நோண்டிப் பார்த்தது போதாதென, மேலும் சில தடாலடி நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. தென் சீனக்கடலில்  நீர்வழிகள், இயற்கைவளமிக்க நிலத்திட்டுகளைச் சுற்றி இருக்கும் பரப்புகள் சிலவற்றிற்கு வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ், தைவான், மலேஷியா, ப்ருனெய் (Brunei) போன்ற நாடுகள் பல வருடங்களாக உரிமை கோரிவருகின்றன. திடீரெனக் கிளம்பி, பேயாட்டம்போட்டுவரும் கொரோனாவோடு பல நாடுகள்  ஒரு நிழல்யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், தென்சீனக் கடல்பகுதியின் சிறுநாடுகளின் உரிமைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு தன் போர்க்கப்பல்கள், ஆய்வுக்கப்பல்களை அனுப்பி அங்கே முகாமிட்டு நீர்வளங்களைக் குடையத் துவக்கிவிட்டது சீனா. குறிப்பாக இரண்டாவது உலகமகாயுத்தத்திற்குப் பின், யாருக்குச் சொந்தம் என்கிற சர்ச்சைகளுடன் ஜீவிக்கின்றன  பாரஸெல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகள் (Paracel, Spratly islands). (ஒருகாலத்தில் ஜப்பானால் ஆட்சி செய்யப்பட்டவை). இவற்றின் அருகில், செயற்கை நகரம் ஒன்றை சீனா உருவாக்கிவருவது தெரிந்தது. அதற்கு ஸன்ஷா நகர் (Sansha city) எனப் பெயர் சூட்டலும் நடந்திருக்கிறது. (ஸ்ப்ராட்லி தீவுப்பகுதி இதுவரை மனிதனால் துருவப்படாத, எண்ணெய் மற்றும் இயற்கைவாயு வளம் கொண்டது எனக் கணிக்கப்பட்டிருக்கிறது). போனவருடமே இந்த நீர்ப்பரப்பில் சீனக் கடற்படையுடன் பிரச்னைகளை சந்தித்திருந்த அண்டை நாடான வியட்நாம், தன் அதிகாரபூர்வ எதிர்ப்பையும் சீனாவுக்குத் தெரிவித்திருந்தது. அதைப்போலவே சர்ச்சைக்குரிய கடற்பிராந்தியம் தொடர்பாக முன்னொரு முறை ஃபிலிப்பைன்ஸோடும் சீனா மோதிப் பார்த்திருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில், ட்ரம்ப்பின் அமெரிக்கா அலர்ட் ஆனது. தனது கடற்படையின் 7-ஆவது அணியின் போர்க்கப்பல்கள் சிலவற்றை தியகோ கார்சியா (Diego Garcia) கடற்தளத்திலிருந்து தென்சீனக்கடலுக்கு அனுப்பி நிலைகொண்டது. ஏற்கனவே சீனாவின் அதிரடி ராஜீய, ராணுவ நடவடிக்கைகளினால் கடுப்பிலிருந்த ஆஸ்திரேலியா, தன் போர்க்கப்பல் ஒன்றை அங்கு செலுத்தி, அமெரிக்கக் கப்பற்படையுடன் சேர்ந்துகொண்டு (யுத்தப்) ’பயிற்சிகளை’ ஆரம்பித்தது. சீனாவின் ரத்த அழுத்தம் எகிறிவிட்டது!

சுயமான வெளியுறவுக் கொள்கையோடு செயல்படாமல், அமெரிக்காவழி (அதாவது ட்ரம்ப்  அரசின்வழி) சர்வதேச அரசியல் செய்வதாக ஆஸ்திரேலியாவை விமரிசித்தது சீனா. ஆஸ்திரேலியா அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, சில வாரங்களில்,  கல்வான் (Galwan) எல்லைச்சண்டை சமயத்தில், இந்திய மகாசமுத்திரம் மற்றும் சுற்று நீர்ப்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுடன் கப்பற்படைகள்- ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக இந்துமகா சமுத்திரப் பகுதிகளில்  நீர்வழிப் போக்குவரத்து, பாதுகாப்பு பற்றிய  புரிதல் இருக்கிறது. பெரிதாக முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல், சில வாரங்களுக்கு முன் அமைதியாகத் தன் போர்க்கப்பல் ஒன்றை தென்சீனக் கடலுக்கு அனுப்பிவைத்தது இந்தியா. கூடவே சர்வதேச விதிமுறைப்படி,  கடல்வழிப் போக்குவரத்துகள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது.  தென்சீனக் கடல்பிராந்தியத்திலும் அது தங்குதடையின்றி நடைபெறவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றது. சம்பந்தப்பட்ட நாடுகளின் இத்தகைய strategic moves, மூலோபாய நடவடிக்கைகள், அறிக்கைகள் சீன ராணுவ அமைச்சகத்தில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற பேரரசுகளுடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் சீனா, மற்ற பிராந்திய  நாடுகளோடு அவ்வப்போது மோத நேர்ந்தால் தனக்குப் பரவாயில்லை, பெரிய நஷ்டம் ஒன்றும் வந்துவிடாது என்பதான கணக்குகளுடன் ஆங்காங்கே காயை முன்னகர்த்திவருகிறது. எந்த ஒரு மகா யுத்தமும், முதலில் இப்படிச் சிறு சிறு மோதல்கள், சண்டைகளில்தான் ஆரம்பிக்கும் என மனித சரித்திரம் தெளிவாகக் கூறும். ராணுவ பலத்துடன் முஷ்டியை உயர்த்திவரும் ஷி ஜின்பெங் (Xi Jinpeng), சரித்திரம் படித்தவரல்ல. இனியும் அதையெல்லாம் படிக்க, அவருக்கு நேரமில்லை. கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்ட்டோ படித்துத்தான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பாதையில் முன்னேறி இப்போதிருக்கும் நிலைக்குவந்திருக்கிறார். அதனால் அவருடைய தலைமையில் இயங்கும் சீனா, மேலும் சச்சரவுகள்,  மோதல்கள் என்கிற வகையில் தொல்லைகளைத்தான்  தரும் என எதிர்பார்த்து, தன்னை ராணுவரீதியாக ஆயத்தப்படுத்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறது  தெற்காசியா.

**

 

கிரிக்கெட்: மனைவி எனும் மந்திரம் !

 

நேற்று (12-6-19) நடந்த உலக்கோப்பைப் போட்டியில் அதிகம் சிரமப்படாமல், சாதாரணமாக பாகிஸ்தானை வீழ்த்திக் காட்டியது ஆஸ்திரேலியா. 307 ரன் எடுத்து அசத்திய ஆஸ்திரேலிய பேட்டிங்கில், டேவிட் வார்னரின் சதம் வைரமென மின்னியது.

கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த டெஸ்ட்டின்போது நடந்த பந்தை சேதப்படுத்துதல் (ball tampering) சர்ச்சையில் வசமாக மாட்டி, ஒருவருட விளையாட்டுத்தடைபெற்ற மூவரில் ஒருவர் இந்த வார்னர். அவருடைய சர்வதேச கிரிக்கெட் கேரியர் கிட்டத்தட்ட அஸ்தமித்துவீட்டதுபோன்ற நிலை அப்போது. ‘அவந்தான் பண்ணச்சொன்னான்!’,  ‘நா ஒன்னும் பண்ணல.  அவன் தப்பு பண்றதப் பாத்தேன்.. ஆனா பண்ணாதேன்னு சொல்லாமப்போய்ட்டேன்!’ என்பதுபோல பான்க்ராஃப்ட்டும் (Cameron Bancroft), கேப்டன் ஸ்மித்தும், பத்திரிக்கைக்காரர்கள் முன் அழுது, மூஞ்சி சிவந்து காட்சிகள் போட்டுக்கொண்டிருக்கையில்,  வார்னர் ஒன்றும் சொல்லாது ஒதுங்கிக் கிடந்தார்.  எதையாவது உளறி கிளறிக்கொட்டி,  மேற்கொண்டு மாட்டிக்கொள்ளவேண்டாம் என நினைத்திருக்கலாம்.. அல்லது நொறுங்கிப்போய் மூலையில் விழுந்திருக்கலாம். இப்படி ஏதோ ஒன்று.

ஒருவருடம் என்பது ஒரு விளையாட்டுவீரருக்குப் பெரிய காலவெளி. நேஷனல் டீமிலிருந்து விலக்கப்பட்டுவைக்கப்பட்டிருப்பது என்பது தண்டனை என்பதோடு ஒரு பெரும் அவமானமும்.  ஒரு முனைப்பான சிறப்பு ஆட்டக்காரருக்குக் கடும்சோதனை. இத்தகைய மோசமான சூழலில், மனதைத் திடப்படுத்தி, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்து,  ஆடி, ஓடி, வாயை மூடி, திரும்பவும் அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், வார்னர் மற்றும் ஸ்மித் விஷயத்தில் இது நடந்திருக்கிறது.

உலகக்கோப்பைத் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தபின்னரும், வார்னர் கிரிக்கெட் விமரிசகர்களால் தூற்றப்பட்டார். ஏன்? வழக்கத்துக்கு மாறான மந்தமான ஆட்டம். இப்படி கட்டையைப்போட்டு ஓவர்களை வேஸ்ட் செய்வதா ஒரு ஸ்பெஷலிஸ்ட்டோட வேலை? – என அவரைக் கடுமையாகச் சாடினர். வார்னர் பதில் சொல்லவில்லை. ’சிறப்பான பங்களிப்பு அளிக்கவேண்டும்’ என்கிற அழுத்ததில் ஆடுகிறார் அவர் என்றார் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்.

நேற்று பாகிஸ்தானுக்கெதிராக கவனமாக ஆட ஆரம்பித்து இறுதியில் சதம் போட்டபின்தான், வார்னர் பழைய வார்னராகக் காணப்பட்டார். ஆள் சமநிலைக்கு வந்திருக்கிறார். மீடியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்கையில், நேற்று இப்படிக் கூறினார்:

மனைவி, குழந்தைகளுடன் டேவிட் வார்னர்

அந்த மூன்று மாதங்கள் (விளையாடத்தடை விதிக்கப்பட்டதன் பின்னான) கொடுமையானவை. நான் என்னை, எல்லாவற்றிலிருந்தும் விலக்கிக்கொண்டேன். மூலையில் விழுந்துகிடந்தேன். என் மனைவிதான் தினமும் வந்து, வந்து  என்னைத் தட்டி எழுப்புவாள். உடற்பயிற்சி செய்யச்சொல்வாள். சின்னச் சின்ன டி-20 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடச்சொன்னாள். உடற்தகுதியும், தொடர்ந்த கிரிக்கெட் ஆட்டமும் எனக்கு இந்தக் காலகட்டத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தாள். விடாத முனைப்புக் காட்டி என்னை விரட்டிக்கொண்டிருந்தாள். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாள். இலக்கை நோக்கித் தீவிரமாகத் திருப்பிவிட்டாள். வலிமையான, நம்பமுடியாத பெண் அவள்!’ என்று தன் மனைவி கேண்டிஸ் (Candice Warner)-இன் புகழ்பாடுகிறார் வார்னர்.

மேலும், ‘என்னுடைய மனைவி, குழந்தைகள் என, குடும்பம்தான் எனக்குத் துணையாக இருந்தது இந்தக் காலகட்டத்தில். அவளுக்குத்தான் எல்லா க்ரெடிட்டும்!’ என்கிறார் வார்னர்.

நல்ல மனைவிமார்கள் நம்ப நாட்டில்தான்! –  என இறுமாப்புகொள்ளவேண்டாம் என்பதற்காகவும் இந்தக் கட்டுரை!

**

 

கிரிக்கெட் உலகக்கோப்பை: முஷ்டியை உயர்த்திய இந்தியா !

நேற்று (09-06-19) லண்டனின் ஓவல் மைதானத்தில் ஒரு  high-scoring மேட்ச்சில்,  36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தூக்கி வீசியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி, கடுமையாகவே அமைந்தது. சில சிறப்பு அம்சங்களை மட்டும் கவனிக்கலாம்.

இந்தியா முதலில் பேட் செய்கையில், அதிகவனமாக ஆரம்பித்தது. முதல் பவர் ப்ளேயில் (10 ஓவர்கள்) விக்கெட் இழக்காமல், ஒரு அஸ்திவாரம் அமைத்துக்கொண்டு, பிறகு தாக்கலாம் என்பது வியூகம். நேற்று இந்தியாவின் நாள் – வியூகம் க்ளிக் ஆனது! ரோஹித், விராத் கோலி அரைசதங்கள், தவன் சதம் என அமர்க்களமாக இருந்தாலும் கடைசி 10 ஓவர்களை நெருங்குகையில் பேட்டிங் இன்னும் வேகமெடுத்தாலொழிய சரியான இலக்கை எதிரிக்குக் கொடுக்கமுடியாது என்கிற எண்ணம் கோஹ்லியின் மனதில் அரித்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்.

Hardik Pandya

37-ஆவது ஓவரில் ஷிகர் தவன் விழுந்தவுடன், கே எல். ராஹுல் வந்திருக்கவேண்டும். பெரிதும் பேசப்பட்ட 4-ஆம் எண் ஆட்டக்காரரின் நிலையில் ஹர்தீக் பாண்ட்யாவை அழைத்தார் கோஹ்லி. பௌலரைப்பற்றி சிந்திக்காமல், இறங்கியவுடன் விளாசும் தன்மைவாய்ந்த உலகின் மிகச் சில வீரர்களுள் பாண்ட்யாவும் ஒருவர். A freakish streak in him all the time.. கோஹ்லி எதிர்த்திசையில் ஆடிக்கொண்டிருக்க, சில பந்துகளிலேயே வெடித்தார் பாண்ட்யா. ஆஸ்திரேலியாவின் நேற்றைய சிறந்த பௌலரான கம்மின்ஸை (Pat Cummins) ஏறிவந்து, அவருடைய தலைக்குமேலே சிக்ஸர் தூக்கியும், ஆஃப் சைடில் பௌண்டரி  விளாசிய விதமும் ஆஸ்திரேலியாவை நடுங்கவைத்தது. அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை என்பது வேறுவிஷயம். 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளென, வெறும் 27 பந்துகளில் 48 விளாசல். கோஹ்லிக்கும் இந்தியாவுக்கும் அந்த நேரத்தில் அதுதான் தேவையாக இருந்தது. பாண்ட்யாவுக்குப்பின் வந்த எம் எஸ் தோனி தன் பழையபாணியை மறக்கவில்லை. 14 பந்துகளில் 27 ரன்கள் அவரிடமிருந்தும் பறக்க, ஆஸ்திரேலியா பதறியது. இடையிடையே விக்கெட்டுகள், கோஹ்லி உட்பட விழுந்தும் இந்தியா உயர்ந்து எழும்பியது. 352 என இந்தியா ஸ்கோரை முடித்துக்கொண்டு, ’வந்து விளையாடிக் காமிங்கடா பாக்கலாம்! –  என்றது ஆஸ்திரேலியாவை!

அதிரடிக்குப் பேர்போன டேவிட் வார்னர், அரைசதம் கடந்தாலும், மிக மந்தமான பேட்டிங் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமரிசகர்களைக் கடுப்பேற்றினார். அதிரடியாவது, மண்ணாவது,  விட்டால்போதும் என்றாகிவிட்டது, ஃபின்ச் (Aaron Finch), கவாஜா, மேக்ஸ்வெல் போன்ற ஒவ்வொரு ஆஸ்திரேலிய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனுக்கும். நின்று ஆடி ரன் சேர்த்த ஸ்டீவ் ஸ்மித்,  69 எடுத்து அவுட் ஆகையில் ஆஸ்திரேலியாவுக்கு ஏறவேண்டிய மலையுச்சி உயரத்தில் மிக உயரத்தில் தெரிந்து பயமுறுத்தியது. புவனேஷ்வர், சாஹல், குல்தீப் என இந்திய பௌலர்களுக்கு வேகமாக விக்கெட் விழவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவைத் துள்ள  விடவில்லை. கடும் கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலிய அதிரடிகளை அழுத்திவைத்திருந்தார்கள். வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக ஒரேயடியாக ஆட்டம்போட்ட நேத்தன் கூல்ட்டர் நைலை (Nathan Coulter-Nile), 9 பந்துகளில் கழுத்தை  நெறித்து வெளியேற்றினார்  பும்ரா (Jasprit Bumrah). எதிர்பாராதவிதமாக, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே (Alex Carey) 35 பந்துகளில் 55 எனத் தூள்கிளப்பினார். அதைத்தவிர,  ஆஸ்திரேலியாவிடம் அவிழ்த்துவிட வேறொன்றுமில்லை. டெத் ஓவர்களை (death overs) பும்ராவும், புவனேஷ்வரும் அபாரமாக வீச (49-ஆவது ஓவரில் பும்ரா கொடுத்தது ஒரு ரன் – அதுவும் தோனியின் மிஸ்ஃபீல்டிங்கினால் விளைந்தது!), அழுத்தம் உச்சத்தைத் தொட, விக்கெட்டுகள் நொறுங்கின. ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத தோல்வி. நீலத்திற்கு முன், மஞ்சளினால் ஆட்டம் காண்பிக்க முடியவில்லை. ரிஸல்ட்!

சில சுவாரஸ்யங்கள்:

1. Ball tampering கேஸில் மாட்டி, ஒருவருட ban-ற்குப்பின் ஆட வந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பௌண்டரி எல்லையில் ஃபீல்ட் செய்துகொண்டிருக்கையில் இந்திய ரசிகர்களின் ஒரு குழு cheat ! .. cheat ! எனக் கூச்சலிட்டு கலவரப்படுத்தினர். இந்தியக் கேப்டன் கோஹ்லி தன் ஜெர்ஸியைக் காண்பித்து ’எங்களை ஆதரித்துக் கோஷமிடுங்கள். அவரைத் தொந்திரவு செய்யவேண்டாம்’ என ரசிகர்களை நோக்கி சைகை செய்தும், ரசிகர்கள் நிறுத்தவில்லை. ஆட்டம் முடிந்தபின் இந்திய ரசிகர்களின் இந்த செய்கைக்காகத் தான் மன்னிப்பு கேட்பதாக ஸ்மித்திடம் கூறினார் கோஹ்லி.

2. ஆஸ்திரேலியா பேட் செய்கையில் பும்ரா வீசிய முதல் பந்து டேவிட் வார்னரின் லெக்ஸ்டம்பிற்குக் கிஸ் கொடுத்துச் சென்றது பெய்ல்களுக்கு(bails) அது பிடிக்கவில்லை போலும். கீழே விழவில்லை! வார்னர் தப்பித்தார்.

3. ஆஸ்திரேலிய லெக்-ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa) ஒவ்வொரு முறை பந்துவீசுவதற்கு முன்னும் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிடுவார். பின் பந்தைத் தேய்ப்பார். வீசுவார். பாக்கெட்டுக்குள் என்ன? ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள். Ball tempering? (இப்போதுதான் இரண்டு ஆஸ்திரேலியர்கள் ஒருவருட தண்டனைக்குப்பின் ஆடத் திரும்பியிருக்கிறார்கள்). ஆஸ்திரேலிய கேப்டன் Finch விளக்கினார்: ஜாம்ப்பா தன் பாக்கெட்டுக்குள் hand-warmers வைத்திருந்தார். அதைத்தான் தொட்டுக்கொண்டார்! ஜாம்ப்பாவிற்கு விக்கெட் ஏதும் விழாததால், இது இத்தோடு விடப்பட்டது..

ஆயினும் ட்விட்டர்க்காரர்கள் சீறினார்கள். ஒருவர் : Australians were, are and will be cheaters..! இது ரொம்பவே ஓவர். ஆஸ்திரேலியா உலகக்கோப்பையின் வலிமையான அணிகளில் ஒன்று. நாம் ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம்..

**

கிரிக்கெட் தயார்நிலை: காயம் செய்யும் மாயம் !

ஆஸ்திரேலியாவுக்கெதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர் இன்று (24-2-19) விசாகப்பட்டினத்தில்  துவங்குகிறது. முதலில் இரண்டு டி-20 போட்டிகளும், பிறகு ஐந்து  ஒரு-நாள் போட்டிகளும். இவைகளின் மூலம், நாட்டின் வெவ்வேறு அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை சுழற்சிமுறையில் விளையாடவிட்டு  அவர்களது பேட்டிங் அல்லது பௌலிங் ஃபார்மை (form) அறிய முயற்சி செய்கிறது இந்திய கிரிக்கெட் போர்டு.
இடுப்பு, முதுகுப் பிடிப்பு என ட்ரீட்மெண்ட்டில் இருந்து சமீபத்தில் வெளிவந்த இந்தியாவின் பிரதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் முதுகில் வலி என்றதால், அணியிலிருந்து ட்ரீட்மெண்ட்/ஓய்வுக்கென விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஓய்வு, சரியான ட்ரீட்மெண்ட் பெற்று உலகக்கோப்பை அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்ப்போம். ஏற்கனவே தோள்பட்டை காயத்திற்கான ட்ரீட்மெண்ட் என்கிற பெயரில் போர்டின் டாக்டர்கள்  சொதப்பியதால், டெஸ்ட் விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹாவின் ஒரு கிரிக்கெட்-வருடம் காலியாகிவிட்டது என்பதும் இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து சோர்வு தருகிறது. அஷ்வின், ப்ரித்வி ஷா ஆகியோர் காயத்துக்குப் பின் தங்கள் உடல் தயார்நிலை எப்படி இருக்கிறது என்பதை மார்ச் இறுதியில் ஆரம்பிக்கவிருக்கும் ஐபிஎல்-இல்தான் காண்பிக்கமுடியும். ஐபிஎல் -ன் காட்டடி ஃபார்மேட்டை உலகக்கோப்பையின் ஐம்பது ஓவர் கிரிக்கெட்டோடு ஒப்பிட முடியாவிட்டாலும், அவர்களின் உடல்திறன் கிரிக்கெட்டுக்கு எப்படி ஒத்துழைக்கிறது என்பது மார்ச்-ஏப்ரலில் தெரிந்துவிடும்.
ஆஸ்திரேலிய தொடரின் ஒரு-நாள் போட்டிகளுக்கென, பாண்ட்யாவின் இடத்தில், இதுவரை தேர்வுக்குழுவின் நினைவில் வராத டெஸ்ட் வீரரான ரவீந்திர ஜடேஜா (ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர்) தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம். அவரே தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருப்பார்! இந்தியாவின் அருமையான ஃபீல்டர்களில் ஒருவர் மற்றும் அதிரடி காட்டக்கூடிய கீழ்வரிசை பேட்ஸ்மன். இவர் தனக்குக் கிடைத்திருக்கும் அபூர்வ வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்தத் தொடரில் சாதித்துக் காட்டலாம். தேர்வுக்குழுவை இம்ப்ரெஸ் செய்துவிடலாம். ரவி சாஸ்திரி-கோஹ்லி (திரைக்குப் பின்னால் தோனி)- க்ரூப்பைக் கவரவேண்டுமே!
உலகக்கோப்பையில் இடம்பெறும் வாய்ப்புள்ள  வீரர்கள், வரவிருக்கும் ஆஸ்திரேலிய, ஐபிஎல் தொடர்களில் வீரதீரம் காண்பிக்க முற்படுவது இயற்கை. அடுத்த இரண்டு மாதங்களில் காயம்பட்டுக்கொள்ளாமல்  ஃபிட்னெஸைக் கவனித்துக்கொள்வது அவர்களுக்கு நல்லது. குறிப்பாக ரிஷப் பந்த், க்ருனால் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சஹல், விஜய் ஷங்கர் போன்றோர். கூடவே, இதுவரை இந்திய தேர்வுக்குழுவின் உலகக்கோப்பை கணக்கில் வராத அஷ்வின், ப்ரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் போன்றோரும் உடல், மன ரீதியாகத் தயார் நிலையில் இருக்கவேண்டியவர்களே. இன்னும் மூன்று மாதமிருக்கிறது லண்டனில் மெகா ஷோ ஆரம்பிக்க. எந்த சமயத்தில், எந்த காரணத்தினால், யார் உள்ளே வரவேண்டியிருக்கும், யார் வெளியே போகவேண்டியிருக்கும் என்பதை யார்தான் அறிவார் ?
*

டெஸ்ட் க்ரிக்கெட்:  முதலாட்டம் – மயங்க் அகர்வால்

நான்கு டெஸ்ட் தொடரில் ஆளுக்கொன்று ஜெயித்துவிட்டு ஒன்றைப்பார்த்து ஒன்று முறைத்துக்கொண்டு, மெல்பர்னில் (Melbourne) தற்போது 3-ஆவது டெஸ்ட் (Boxing Day Test -Dec 26-30)  விளையாடுகின்றன இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்.

முரளி விஜய், கே.எல். ராஹுல் மீது காட்டிய பொறுமை போய்விட்டது இந்திய அணிக்கு. போட்டிபோட்டுக்கொண்டு தடுமாறிக்கொண்டிருந்த இருவரும்  வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.  கர்னாடகாவின்(also in IPL 2019- King’s XI Punjab) மயங்க் அகர்வால் இந்தியாவுக்காக முதன்முதலாக ஆட,  தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.  (இதற்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் சேர்க்கப்பட்டும், ஆட வாய்ப்பு கிட்டவில்லை).  இதுவரை  பேட்டிங் வரிசையில், ஆறாம் நம்பரில் ஆடிய  ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வாலுடன் துவக்க ஆட்டக்காரராக முதன்முதலாக இறங்கியிருக்கிறார் இந்த மேட்ச்சில். பொறுமையாக 66 பந்துகள் நின்று  ஆடிய விஹாரி, 8 ரன்னில் வெளியேறினார். அவரைக் குறைசொல்வதற்கில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு செம டைட், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே அதிதுல்லியம். குறிப்பாக விஹாரியைத் தூக்கிய பாட் கம்மின்ஸ் (Pat Cummins). ஃபீல்டிங் வழக்கம்போல ஷார்ப்.

ஆனால் மறுமுனையில், டெஸ்ட் வெளியில் தனது முதலாவது ஆட்டத்தை ஆடிய மயங்க் அகர்வால் மசிந்துகொடுக்கவில்லை. இயற்கையாகவரும் அதிரடி ஆட்டத்தைக் குறைத்து, வலிமையான தடுப்பாட்டம் காட்டினாலும், அவ்வப்போது பௌண்டரிகளைத் தெறிக்கவிட்டார். குறிப்பாக 44 ரன்னில் இருந்தபோது, நேதன் லயனின் (Nathan Lyon) ஆஃப் ஸ்பின்னை மிட்-ஆஃபில் தூக்கி அடித்தது, அடுத்த பந்தை straight drive-ஆக தரையில் கோடுபோட்டு பௌண்டரிக்கு அனுப்பியது அசத்தல் பேட்டிங்.  ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான பௌலரான நேதன் லயனை,  அவர் கேஷுவலாகக் கவனித்தது எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.  161 பந்துகளில் 8 பௌண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன் எடுத்து  மயங்க்  வெளியேறியபோது, மெல்பர்னின் எண்ணற்ற இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் போர்டிடமிருந்தும் அப்பாடா என்கிற பெருமூச்சையும் அது வரவழைத்திருக்கும். இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரர் ஒருவரிடமிருந்து வந்திருக்கும் முதல் அரைசதம் இது.

உண்மையில் ஆஸ்திரேலியாவில் துவக்க ஆட்டக்காரராக தூள்கிளப்பப்போகிறவர் ப்ரிதிவி ஷாதான் என எதிர்பார்ப்பு இருந்தது ஆரம்பத்தில். ஆனால், துரதிருஷ்ட வசமாக பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்கையில், அவர் கால்மடங்கி காயம்பட்டு குணமாக காலம்பிடிப்பதால், இந்தியாவுக்குத் திருப்பப்பட்டுள்ளார். ’நமக்கும் வாய்ப்பு வருமா அல்லது ரஞ்சி, இந்தியா ‘ஏ’ அணிகளோடு நம் சகாப்தம் முடிந்துவிடுமா’ என மயங்கிக்கிடந்த மயங்க் அகர்வாலைக் கவனித்த காலம், பிடித்துத் தூக்கி மெல்பர்னில் இறக்கிவிட்டது.  இந்திய ரஞ்சித் தொடர்களிலும் லிஸ்ட் ‘ஏ’ மேட்ச்சுகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக சாத்து சாத்து என்று சாத்திவரும் வலதுகை பேட்ஸ்மன். ஸ்ட்ராங் டெக்னிக் மற்றும் நேரத்துக்கேற்றபடி ஸ்விட்ச் செய்து அதிரடி காட்டும் திறமையுடையவர். ஆஸ்திரேலியாவில் முக்கியமானதொரு போட்டியில் அவரது பேட்டிங் அரங்கேற்றம் நிகழ்ந்திருப்பதும், சிறப்பாகத் தன் முதல் இன்னிங்ஸை விளையாடியிருப்பதும் மங்களகரம். மயங்க் மேலும் நன்றாக ஆடி, நாட்டிற்காக சாதிப்பார் என நம்புவோம்.

Picture courtesy: Internet

**

ப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் ?


ஷா ஒரு Cricket prodigy-யா? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இதுவரை இந்த இளைஞனைப்பற்றி கேள்விப்பட்டு வருவதெல்லாமே – 14 வயது பையனாக மும்பையில் ஸ்கூல் கிரிக்கெட்டில் உலக சாதனை, இந்திய தேசிய சேம்பியன்ஷிப்களான ரஞ்சி மற்றும் துலீப் டிராஃபி தொடர்களில் முதல் மேட்ச்சிலேயே சதங்கள், U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்தது, இந்தியா-ஏ அணிக்காக வெளிநாடுகளில் காட்டிய திறன்மிகு ஆட்டம் போன்றவை- அவர் இந்தியாவின் ஒரு வருங்கால நட்சத்திரம் என்றே வெளிச்சக்கீற்றுகளால் கோடிட்டு வந்திருக்கிறது. 04-10-18 அன்று, குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாளே அவர் ஆடிய ஆட்டமும், அந்தவழியில்தான் சென்றுள்ளது – இன்னும் சர்வதேச அரங்கில் பையன் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்ற போதிலும்.

முதலில் இந்தியா பேட் செய்ததால் அன்று காலையிலேயே நிகழ்ந்தது ப்ரித்வி ஷாவின் அரங்கேற்றம். வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel) வீசிய தொடரின் முதல்பந்தை எதிர்கொண்டு ஆடத் துவங்கிய, சிறுவனாகத் தோன்றும் 18 வயதுக்காரரின் மீது அனைவரின் கவனமும் குவிந்திருந்தது. ஒரு பள்ளிப்பையனின் துறுதுறுப்பும், பதின்ம வயதிற்கே உரிய உற்சாகமுமே அவரிடம் மிளிர்ந்தது, பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுல் முதல் ஓவரிலேயே கேப்ரியலிடம் விழுந்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஷாவிடம் ஏற்படுத்தவில்லை. ரன்கள் துள்ளிக்கொண்டு புறப்பட்டன அவருடைய பேட்டிலிருந்து. சிங்கிள், இரண்டு-ரன்கள் என வேக ஓட்டம் (அந்தப்பக்கம் ரன் –அவுட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா இருந்தது நமக்குத்தான் பயத்தைக் கொடுத்தது!). இடையிடையே ஸ்கொயர் கட், லேட்-கட், புல், ஹூக் ஷாட் என வெரெய்ட்டி காண்பித்தார் இந்த இளம் புயல். லன்ச் இடைவேளையின் போது 70+ -ல் இருந்தவர், திரும்பி வந்து 99 பந்துகளில் தன் முதல் சதத்தை விளாசி முத்திரை பதித்தார். முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஒரு அதிரடி சதம் என்பது ஒரு பதின்மவயதுக்காரரிடமிருந்து வருகையில், அதைப் பார்ப்பதின் சுகமே தனி.

கூடவே, வெஸ்ட் இண்டீஸின் பௌலிங் தாக்குதல் அவ்வளவு தரமாக இல்லை என்பதையும் கவனித்தே ஆகவேண்டும். அவர்களின் இரண்டு டாப் வேகப்பந்துவீச்சாளர்களான கெமார் ரோச் (Kemar Roach) மற்றும் கேப்டன்/ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) –ஆகியோர் இந்த முதல் போட்டியில் வெவ்வேறு காரணங்களினால் ஆட இயலவில்லை. ஆதலால் பௌலிங்கில் ஆக்ரோஷம், தாக்கம் குறைவுதான். கூடவே ராஜ்கோட் பிட்ச்சும் பேட்டிங்கிற்கு வெகுவாகத் துணைபோகிறது. ஆனால், இதெல்லாம் தன் முதல் டெஸ்ட்டை ஆடுபவரின் தப்பில்லையே! டெஸ்ட் தொடர் என்கிற பெயரில் இந்தியா புலம்பிவிட்டு வந்த இங்கிலாந்து தொடரிலேயே, கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டிருந்தார்தான். ஆனால் நம்முடைய சூப்பர்கோச் ரவிசாஸ்திரியும், கேப்டனும் வாய்ப்பளித்தால்தானே விளையாடமுடியும்? ’நான் அப்போதே தயாராகத்தான் இருந்தேன். இப்போதுதான் வந்தது வாய்ப்பு’ என்கிறார் அவர்.

இப்போதிருக்கும் வெஸ்ட் இன்டீஸ் அணி, இந்தியாவின் டெஸ்ட் தரத்திற்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. ஆயினும் உன்னிப்பாகக் கவனித்தோருக்கு, ப்ரித்வி ஷாவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ் அவர் எத்தகைய பேட்ஸ்மன் என்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருந்தது தெரியவரும். இயற்கையாகவே அவருக்கு அமைந்திருக்கும், அலட்டிக்கொள்ளாத தன்மையும், அதே சமயத்தில் சரியான பந்தைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் லாவகமும் பளிச்சிடுகின்றன. வெஸ்ட் இண்டீஸின் தரமான வேகப்பந்துவீச்சாளரான ஷனன் கேப்ரியல், ராஜ்கோட்டின் வெப்பத்திலும் அவ்வப்போது தன் வேகத்தினாலும் (140-143 கி.மீ), எகிறும் பௌன்ஸர்களாலும் அவரை சீண்டிப் பார்த்தார். ஆனால் ஷா அவரையும், ஸ்பின்னர் தேவேந்திர பிஷுவையும் ஒரு அதிகாரத்துடன் விளையாடியவிதம், ஏதோ இதற்குமுன்னர் ஏகப்பட்ட போட்டிகளின் அனுபவப் பின்னணியில் விளையாடியது போன்றிருந்தது.

ஷாவின் இந்த இன்னிங்ஸைக் கூர்ந்து கவனித்திருப்பார்போலும் வீரேந்திர சேஹ்வாக். தன் ட்விட்டர் பக்கத்தில், அவருக்கே உரிய பாணியில் இப்படி ஹிந்தியில் எழுதியிருக்கிறார்: லட்கே மே(ன்) தம் ஹை(ன்)! (பையனிடம் தெரியுது ஒரு வீரம் ! – என இதைத் தமிழ்ப்படுத்தலாம்). எகிறும் வேகப்பந்துகளை பாய்ண்ட் மற்றும் தேர்ட்-மேன் திசைகளில் அனாயாசமாகத் தூக்கி விளாசிய விதத்தில் சேஹ்வாக் தெரிந்ததாக சில வர்ணனையாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரிக்கிறார்: ’சேஹ்வாக் ஒரு ஜீனியஸ். அவரோடு இந்தப் பையனை ஒப்பிட வேண்டாம். ஆனால் பதற்றமின்றி எளிதாக விளையாடிய விதம், சிலவித ஷாட்களை சர்வசாதாரணமாக ஆடிய முறை, லாவகம் இவற்றைப் பார்க்கையில் இவருள்ளிருக்கும் தரம் தெரிகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களில் ஷா முதலில் ஆடவேண்டும். அப்போதுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதைக்கு, வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ஷா நன்றாக விளையாடுவார் என்றே தோன்றுகிறது’ என்றிருக்கிறார்.

2008-லேயே இவரது ஜூனியர் லெவல் ஆட்டத்தைப் பார்த்த டெண்டுல்கர், ’இவன் ஒரு நாள் இந்தியாவுக்காக ஆடுவான்!’ என்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கிரிக்கெட்காலத்தோடு ப்ரித்வி ஷா-வின் கிரிக்கெட் ஆரம்பங்களும் ஏனோ கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன என்பது கொஞ்சம் வியப்பைத் தருகிறது! இருப்பினும், இப்போதே ஒரேயடியாக ஆஹா..ஓஹோ என நமது மீடியாவோடு சேர்ந்து புகழ்ந்து தள்ளாமல், அமைதியாக இவரைக் கவனிப்பதே உகந்தது. வாய்ப்புகள் இவர்முன் வரும்போது, வெவ்வேறு நாடுகளில், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் பிட்ச்சுகளில் ஆவேசமான வேகப்பந்துவீச்சுக்கெதிராக எப்படித் தன்னை நிறுவப்போகிறார் என்பதைக் காலம் நமக்குக் காட்டும். எனினும், இப்போதைக்குச் சொல்லிவைப்போம்: ‘Very well done, தம்பி!’
Picture courtesy: Internet
*

க்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்

இரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி, இந்தியாவை வெற்றிமேடையில் ஏற்றிவிட்டார். தொடர் 2-1 என்று இந்தியாவின் கணக்கில் வர, பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்கப்பட்டது.

தரம்ஷாலா மேட்ச்சை ஜெயித்தால்தான் தொடர் என்கிற நிலையில் இரு அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் பக்கமே முள் சாய்ந்திருப்பதாய்த் தோன்றியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி ஆடமாட்டார் என்பதே ஸ்மித்தை ஏகமாகக் குஷிப்படுத்தியது. தொலஞ்சான்யா! டாஸையும் வென்றது ஆஸ்திரேலியா. தரம்ஷாலா பிட்ச் இதுவரை அமைந்த பிட்ச்சுகளில் அருமையானதாகத் தோன்றியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வேகவேகமாக ரன் எடுத்தது. விக்கெட்டுகளும் விழுந்துகொண்டிருந்தன. இதுவரை தொடரில் ஃபார்ம் காண்பிக்காத டேவிட் வார்னர் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். சர்ச்சைகள் ஒருபுறமிருக்க பேட்டிங்கில் பின்னி எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இன்னுமொரு சதம் இந்தத்தொடரில். 144-க்கு 1 விக்கெட் என ஆஸ்திரேலியா கம்பீரமாக முன்னேறியது.

லஞ்சுக்குப் போகுமுன்தான் ரஹானேக்கு முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவின் முகம் நினைவில் வந்ததுபோலும். கொஞ்சம் போடச்சொன்னார். லஞ்ச்சில் என்ன சாப்பிட்டாரோ! குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன! முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது! சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் ! அடுத்தடுத்த கம்மின்ஸ் பந்துகளை பௌண்டரி, சிக்ஸர் எனச் சீறவிட்டு பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கோஹ்லியையும், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார். சாஹா 31, ஜடேஜா 63 என அசத்தினர், சிறப்பாக வீசிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயனுக்கு 5 விக்கெட்டுகள். இந்தியா எடுத்த 332 ஆஸ்திரேலியாவின் மனதில் கிலியை உண்டுபண்ணியிருக்கவேண்டும்.

தொடரைக் கோட்டைவிட்டுவிடக்கூடாதே என்கிற அழுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆரம்பித்தது. உமேஷ் யாதவ் வேகத்தினாலும், ரிவர்ஸ் ஸ்விங்கினாலும் ஆஸ்திரேலியர்களை அதிரவைத்தார். ரென்ஷா, வார்னர் இருவரையும் அதிரடியாக வெளியேற்றினார். நிதான ஆட்டத்திற்குப் பேர்போன ஆஸ்திரேலியக் கேப்டனை பீதி கவ்வியது. புவனேஷ்குமாரின் ஸ்விங் பௌலிங்கிற்கு உடனே பலியாகி ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஸ்மித். மேக்ஸ்வெல்லின் அதிரடி 45-ஐத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. 137 ரன்களில் பரிதாபமாக இந்தியாவிடம் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. இந்திய பௌலர்களின் உத்வேகப்பந்துவீச்சு மிகவும் பாராட்டுக்குரியது. உமேஷ், ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ரன் அதிகமாகக் கொடுத்துவிடக்கூடும் என்கிற பயத்தில் ரஹானே அவருக்கு ஐந்து ஓவருக்குமேல் தரவில்லை.

இந்தியாவுக்கு இலக்கு 106. இத்தகைய சிறிய இலக்குகள் 4-ஆவது நாளில் பெரும் ப்ரச்சினையை பேட்டிங் அணிக்குத் தரவல்லது. இதுவோ இறுதிப் போட்டி. தொடரின் தலையெழுத்தை நிறுவப்போவது. எனவே இந்தியா இலக்கை நோக்கி வழிமேல் விழிவைத்து நகர்ந்தது. இருந்தும் முரளி விஜய் தடுமாறி கம்மின்ஸிடம் வீழ, அதே ஓவரில் இந்தியாவின் Mr.Dependable-ஆன புஜாரா ரன்–அவுட் ஆகிவிட, 46-க்கு இரண்டு விக்கெட்டுகள்; இந்தியாவுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டதோ எனத் தோன்றியது, ஆனால் ராஹுல் தன் நிதானத்தை இழக்காது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடிசேர்ந்த ரஹானேயை முகத்துக்கெதிரே எகிறும் வேகப்பந்துகளினால் மிரட்டப் பார்த்தார் கம்மின்ஸ். ஆனால் தடுத்தாடி, தடுமாறிவிழும் மனநிலையில் ரஹானே இல்லை. கம்மின்ஸின் எகிறும் பந்துகளை விறுவிறு பௌண்டரிகளாக மாற்றினார். போதாக்குறைக்கு, கம்மின்ஸின் 146 கி.மீ. வேகப்பந்தொன்றை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களுக்கு போதையூட்டினார் ஒல்லி உடம்பு ரஹானே! ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. இந்தத் தொடர் நமக்கில்லை என்று அதற்குப் புரிந்துவிட்டது. ராஹுல் தன் ஆறாவது அரைசதத்தைப் பூர்த்திசெய்து வெற்றி ரன்களையும் எடுத்தவுடன், மைதானத்தில் ஆட்டம் ஆடி, கோஹ்லி அங்கில்லாத குறையை ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்தார். வெற்றிக்கு அடையாளமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் பிடுங்கி எடுத்துக்கொண்டு அமைதியாக நடந்தார் அஜின்க்யா ரஹானே. இளம் ரசிகர்களின் கூச்சல், ஆரவாரத்தில் தரம்ஷாலா அதிர்ந்து எழுந்தது. கோஹ்லி மைதானத்துக்குள் ப்ரவேசித்து வீரர்களோடு கைகுலுக்கி மகிழ்ந்தார். தொடரின் விதியை நிர்ணயித்த தரம்ஷாலா மேட்ச்சில் ரஹானே காட்டிய அமைதியான ஆனால் அழுத்தமான தலைமை மறக்க இயலாதது.

இத்தொடர் பற்றிய முதல் கட்டுரையில் நான் கூறியபடி இது ஒரு அபாரத் தொடராக நடந்துமுடிந்தது. இருதரப்பிலிருந்தும் அபரிமித ஆட்டத் திறமைகளின் வெளிப்பாடுகள், மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அதிரடிச் சச்சரவுகள் என ரசிகர்களையும், விமர்சகர்களையும் இறுதிவரை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித்தின் DRS தப்பாட்டம்பற்றி பெங்களூரில் விராட் கோஹ்லி வீசிய குண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும், ஏன் ஐசிசி-யையும்கூட அதிரவைத்தது. பதிலாக, தன் மூளை ஒருகணம் மழுங்கிவிட்டதாகவும் அது தவறுதான் என்றும் ஸ்மித் வழிந்த கோலாகலக் காட்சி அரங்கேறியது! ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடியோ ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடைசிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை !’’ என்று மனதில் உள்ளதைப் போட்டுடைத்தார் கோஹ்லி. மொத்தத்தில் பெரும் ஆர்வத்தை உலகெங்குமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே கிளர்ந்தெழவைத்த டெஸ்ட் தொடர் இது. Most riveting Test series ever played in recent times.

2016-17 க்ரிக்கெட் சீஸன் இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராஹுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 அரைசதங்களை எடுத்து அசத்தினார்கள். கோஹ்லி 3 இரட்டை சதங்களையும், புஜாரா ஒரு இரட்டை சதத்தையும் விளாசி முத்திரை பதித்தனர். இங்கிலாந்துக்கெதிராக சென்னையில் கருண் நாயர் அடித்த முச்சதமும் இந்த சீஸனின் மகத்தான அம்சங்களில் ஒன்று. பௌலிங்கில் உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா முதன்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளார். அஷ்வினுக்கு இரண்டு ஐசிசி விருதுகள். இந்திய அணி அபாரமாக டெஸ்ட்டுகளை ஆடி 4 தொடர்களைக் கைப்பற்றிய காலமாக இது பேசப்படும். இனி வெளிநாட்டு மைதானங்களிலும் தன் திறமை காட்ட இது அணியினை உற்சாகப்படுத்தும். எனினும், அதற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் கொஞ்சம் ஐபிஎல் ஆடலாம் !

**

டெஸ்ட் க்ரிக்கெட் : புனேயில் மண்ணைக் கவ்விய இந்தியா

ஓ’ கீஃப் (Steve O’Keefe) என்கிற உலகம் அதிகம் அறிந்திராத ஒரு ஃபிங்கர் ஸ்பின்னரைக் கையில் வைத்துக்கொண்டு, முதல் டெஸ்ட்டில் இந்தியாவை மிரட்டியே கொன்றுவிட்டது ஆஸ்திரேலியா. பேரதிர்ச்சி !

புனேயில் நேற்று (25-2-17)-ல் முடிந்த போட்டியைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டபாடில்லை. நடந்தது க்ரிக்கெட்டா? இல்லை ஹிப்னாட்டிசமா? ஏன் இப்படி சுருண்டு சுருண்டு விழுந்தார்கள் இந்திய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள்- அதுவும் ஒரே பௌலரிடம்? ஸ்பின் பௌலிங்கை சந்தித்திராதவர்களா இவர்கள்?

புனேயில் நடந்த முதல் டெஸ்ட் மேட்ச் இது. இந்தியாவுக்கு சாதகமான சூழல் என்று கணிக்கப்பட்ட பிட்ச். டாஸை வென்றது சாதகமானது ஆஸ்திரேலியாவுக்கு. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கே இந்திய ஸ்பின்னுக்கு எதிராகப் பெரும் சவாலாக இருக்கும் எனக் கணிக்கப்பட, ஆஸ்திரேலியா திணறியது. இருந்தும் சுதாரித்து தன் ஸ்கோரை 260-க்கு கொண்டு சென்றது. முக்கியமான பேட்ஸ்மன்கள், அஷ்வின்-ஜடேஜா, மற்றும் உமேஷ் யாதவிடம் பலியாக, 8-ஆம் நம்பரில் வந்த பௌலரான மிட்ச்செல் ஸ்டார்க், இந்திய ஸ்பின்னர்களைக் குறிவைத்து விளாசினார். 63 பந்துகளில் 61 எடுத்துவிட்டார். துவக்க ஆட்டக்காரர் மேட் ரென்ஷாவின் அருமையான 68-க்குப் பின் அதிகபட்ச ஆஸி பங்களிப்பு. ஸ்டார்க்கின் அதிரடி நிகழ்ந்திருக்காவிடில் ஆஸ்திரேலியா 250-ஐ நெருங்கியிருக்கவும் வாய்ப்பில்லை. இந்தியாவின் பௌலர்கள் சிறப்பாகவே வீசினர். இந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. புனே ஒரு ஹாரர் ஸ்டோரியை இந்தியாவுக்காகத் தயாராக வைத்திருந்தது என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்க நியாயமில்லை.

இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் சரியாகத்தான் ஆட ஆரம்பித்தார்கள். அல்லது அப்படித் தோன்றியது. குறிப்பாக கே.எல். ராஹுல். ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 ஸ்பின்னரான நேத்தன் லயனிடம் அஞ்சவேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. லஞ்சுக்கு முன்பு அவரும் ஓ’கீஃபும் வீசியவிதத்தில், வரவிற்கும் புயல்பற்றிய எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. {லஞ்ச் இடைவேளையின்போது ஆஸ்திரேலியாவின் ஸ்பின் கோச்சான ஸ்ரீதரன் ஸ்ரீராமுடன் (முன்னாள் தமிழ்நாடு/இந்தியா ஆல்ரவுண்டர்) தான் பேசியதாகவும், சில நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு, லஞ்ச் இடைவேளையில் பயிற்சி செய்ததாகவும் பிற்பாடு கூறினார் ஓ’கீஃப். Look at his professionalism)}. இடைவேளைக்குப் பின் திரும்பிய ஓ’கீஃப் மந்திரவாதியாக மாறிவிட்டிருந்தார். ஏதோ விசையை அழுத்தி விழுக்காட்டுவதுபோல் இந்திய பேட்ஸ்மன்களை ஒவ்வொருவராக விழவைத்தார். முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட். ராஹுல், ரஹானே, சாஹா, ஜடேஜா, ஜயந்த், உமேஷ் என, சூலையிலிருந்து செங்கல் சரிவதைப்போல் சரிந்தார்கள், 40 ஓவர் விளையாடுவதற்குள் நாக்குத் தள்ளிவிட்டது இந்தியாவுக்கு. ஒரு பொறுப்பின்றி, எதிர்ப்பின்றி. இந்தியா 105-ல் சுருண்டது. ஓ’கீஃபின் இந்த அசுரவிளையாட்டை ஆஸ்திரேலியர்களே நம்ப முடியாமல் மூக்கில் விரல்வைத்துப் பார்த்திருந்தார்கள். அவரை அணிக்காகத் தேர்வு செய்யாது சிலவருடங்களாகக் காலந்தாழ்த்தி, ஒரு இரண்டாந்திர பௌலரைப்போல நடத்தியவர்கள்தான் இந்த ஆஸ்திரேலியர்களும். ஆனால் புனேயில், ஆஸ்திரேலியா எதிர்பாராதவிதமாக 155 ரன் முன்னிலை வகிக்க வழிசெய்தது இந்த ஓ’கீஃப்-தான்.

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ் ஆடுகையில், கதையை அஷ்வினை வைத்தே ஆரம்பித்தார் கோஹ்லி. முதல் ஓவரிலேயே வார்னர் காலி. அடுத்த சில ஓவர்களிலேயே அஷ்வின் இரண்டாவது விக்கெட்டை எடுக்க, ஜடேஜா துல்லியமாக அந்தப் பக்கத்திலிருந்து வீசிக்கொண்டிருந்தார். ஆனால் 155 முன்னிலை ரன்களை கைவசம் வைத்திருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் அசரவில்லை. நிதானம். அவ்வப்போது ஸ்பின்னர்களுக்கெதிரான தாக்குதல் ஆட்டம். விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தாலும், இந்திய ஸ்பின்னர்களிடம் ஆஸ்திரேலியா சரணடைய வில்லை. குறிப்பாக அஷ்வினைக் குறிவைத்துத் தாக்கினார்கள். இருந்தும் அஷ்வின் விக்கெட் எடுத்துக்கொண்டிருந்தார். அஷ்வின் விஸ்வரூபம் எடுக்க முடியாதபடி இந்திய ஃபீல்டர்கள் பார்த்துக்கொண்டார்கள் ! ஆஸ்திரேலியாவுக்கு கடுமையாக ஒத்துழைத்தார்கள் நமது ஃபீல்டர்கள்! ஸ்மித்தின் 5 கேட்ச்சுகளை, ஆமாம்-5 கேட்ச்சுகளை நழுவவிட்டுக் கையைப் பிசைந்துகொண்டு, சூயிங் கம்மை மென்றுகொண்டு நின்றிருந்தார்கள் இந்தியர்கள். உலகின் நம்பர் 1 டீம்!

இப்படி ஒரு கேவல ஆட்டம் ஆடினால் ஆஸ்திரேலியா என்ன, ஜிம்பாப்வேக்கு எதிராகவும்கூட கிரிக்கெட்டில் ஜெயிக்கமுடியாது. ஸ்மித் சதம் எடுத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார். ஆஸ்திரேலியா மூன்றாவது நாள் லஞ்ச் பொழுதில் 285 எடுத்து ஆல் அவுட்டானார்கள். முதல் இன்னிங்ஸில் 41 ஓவர் கூடத் தாக்குப் பிடிக்கமுடியாத இந்திய சூரர்களுக்கு 400+ இலக்கு! சான்ஸே இல்லை. அதுவும் இந்தியர்கள் இருந்த மனநிலையில்.

ஏதோ ஒரு இன்னிங்ஸில் அபத்தமாக ஆடிவிட்டார்கள். நமது ஜாம்பவான்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக் கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள் என யாரும் நினைத்திருந்தால் அவர்கள் எதிர்ப்பார்ப்பில் உடனே விழுந்தது மண். இந்தியர்கள் ஆடுகையில் அதே ஸ்டீவ் ஓ’கீஃப்-ஐ முன்னே கொண்டுவந்து பயமுறுத்தினார் ஸ்டீவ் ஸ்மித். Instant effect ! புயற்காற்றில் முருங்கை மரம் சாய்வதுபோல் சாய்ந்தது இந்திய பேட்டிங். விஜய், ராஹுல், புஜாரா, கோஹ்லி, ரஹானே, அஷ்வின். . கடந்த இரு வருடங்களாக இந்தியாவின் தூண்களாக நின்றவர்கள். இத்தகைய வீரர்களா இப்படி ’சொத்’ ’சொத்’-தென வீழ்ந்தார்கள் ஆம்! ஓ’கீஃபைக் கண்டதுமே ஏனோ கால்கள் நடுங்க ஆரம்பித்தன. முதல் இன்னிங்ஸைப்போலவே, 6 விக்கெட்டுகளை அவருக்கே தாரை வார்த்தார்கள். 107-ல் இந்தியா ஆல் அவுட். தொடர்ச்சியாக 19 மேட்ச்சுகளில் தோல்வியைக் காணாத விராட்டின் இந்திய அணி, புனேயில் மூன்று நாட்களுக்குள் நொறுங்கியது. பரிதாப சரித்திரம் திரும்பிவிட்டதா? டெஸ்ட் க்ரிக்கெட்டில் தோற்பது என்பது ஆச்சரியப்படவேண்டிய விஷயமில்லை. ஆனால் எதிர்த்துப் போராடாமல், இரண்டு இன்னிங்ஸிலும் இப்படி ஒரு சரணாகதி – அதுவும் இந்திய மண்ணில்? ஜீரணிக்க முடியாதது.

க்ரிக்கெட் இத்தகைய கொடூர விளையாட்டு என்பது தெரிந்ததுதான். அதாவது படுமோசமாகத் தோற்ற அணிக்கு. 11 ரன்களில் 7 விக்கெட்டை இழக்கும் அணி (இந்திய முதல் இன்னிங்ஸ்), ஒரே பேட்ஸ்மனுக்கு 5 கேட்ச்சுகளைத் தவறவிடும் அணி எப்படி ஜெயிக்கமுடியும் – கேட்கிறார் இந்தியக் கேப்டன். சரிதான் ஐயா! ஆனால், ஏன் இப்படி திடீரென அனைவருமே மழுங்கி மண்ணாய்ப் போய்விட்டீர்கள் என்பது ரசிகர்களின் கேள்வி ! காலங்காலமாக இந்திய மைதானங்களில் ஸ்பின்னுக்கு எதிராக விளையாடியே வளர்ந்த இந்திய பேட்ஸ்மன்கள், திடீரென்று ஒரு ஓ’கீஃப் வந்துவிட்டார் என்று எல்லாவற்றையும் அவுத்துப்போட்டுவிட்டு ஓடுவானேன்? இது இந்தக் கேள்வியின் சாரம். இது புனேயில் மட்டும்தானா? இனி வரவிருக்கும் போட்டிகளிலும் இந்த அபத்தக்காவியம் தொடருமா? இந்திய ரசிகர்களை சின்னாபின்னமாக்கும் பெருங்கேள்வி இது !

படுமோசமான தோல்விக்குப்பின் அணியில் மாறுதல் தேவை என்கிற சலசலப்பு இயல்பானது. ஏற்கனவே இருக்கும் ஒரு சலசலப்பு இப்போது உச்சம் பெற்றுவிட்டது. 300 அடித்த கருண் நாயர் ஏன் இல்லை அணியில்? அவர் உள்ளே வரவேண்டுமெனில், 5-ஆம் நம்பரில் ஆடும் அஜின்க்யா ரஹானே வெளியேறவேண்டியிருக்கும். ராஹுல் முதல் இன்னிங்ஸில் 64 எடுத்ததினால் அவரைக் கொஞ்சம் விட்டுவிடுவோம். மற்றபடி, கேப்டன் உட்பட, இந்திய பேட்ஸ்மன்கள் அனைவருமே மூஞ்சியில் புனே கரியைப் பூசி நிற்கும் வேளையில், ரஹானேயை மட்டும் ’வெளியே போ’ என்பதிலும் நியாயமில்லைதான். ஆயினும் நியாய, அநியாயங்களைத் தாண்டி, அணியின் வெற்றிக்காக அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டிய தருணம் இது.

இந்தியாவுக்காக டி-20-ல் சிறப்பாக ஸ்பின் வீசிய, legbreak googly bowler-ஆன யஜுவேந்திர சாஹல்(Yuzvendra Chahal)-ஐ பெங்களூர் டெஸ்ட்டில் (மார்ச் 4-8) கொண்டுவந்தால் என்ன என்கிற எண்ணம் தலைகாட்டுகிறது. ஜெயந்த் யாதவிற்கு பதிலாக இவர் வரலாமோ? அஷ்வினோ, ஜடேஜாவோ அடிவாங்க நேரிடுகையில், சாஹல் ஒருமுனையில் ஆஸ்திரேலியர்களின் கழுத்தை நெரிக்க உதவக்கூடும். வேகப்பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மாவின் இடத்தில், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டான, குஜராத்தின் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு வாய்ப்பு தருவதும் உசிதமே. இப்படி நாம் நினைக்கிறோம். கும்ப்ளேயும், கோஹ்லியும் எப்படித் தலையைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே.

இதெல்லாம் சரி, கைகளில் வெண்ணெயைத் தடவிக்கொண்டு மைதானத்துக்கு வரும் இந்திய ஃபீல்டர்களை எந்தக் கழுவில் ஏற்றலாம் ?

**

க்ரிக்கெட்: ஆஸ்திரேலியா – இந்தியா சூப்பர் டெஸ்ட் சீரீஸ்

‘சூப்பர்’ என்று ஏன் சொல்கிறேன் என்றால் அப்படித்தான் போகப்போகிறது உலகின் இரண்டு அபாரமான டெஸ்ட் அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட தொடர். ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலிமையானது என்றே தோன்றுகிறது. நிச்சயம் இது இங்கிலாந்து அணியோ, நியூஸிலாந்து அணியோ அல்ல – எல்லாப் போட்டிகளிலும் இந்தியா ஜெயிப்பதற்கு. விராட் கோலியும் அனில் கும்ப்ளேயும் இதனை நன்றாக அறிவர்.

ஆஸ்திரேலியர்களின் மனதை அரித்துக்கொண்டிருப்பது இந்திய ஸ்பின்னர்களை எப்படி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சமாளிப்பது என்பது. அஷ்வின், ஜடேஜா இருக்கும் ஃபார்மில் இது ஈசியான விஷயம் அல்ல. இந்த ஜோடிதான் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக்கின் கேப்டன் பதவியை சமீபத்தில் காவு வாங்கியது. அந்தத் தொடரின் வீடியோக்களை ஆஸ்திரேலியர்கள் போட்டுப்போட்டுப் பார்த்திருப்பர். ஒரு முடிவுக்கு வந்திருப்பர் இத்தனை நேரம். ஆஸ்திரேலிய முன்னணி ஸ்பின்னரான நேத்தன் லயான் (Nathan Lyon) மற்றும் ஸ்டீவ் ஓக்கீஃப்(Steve O’keefe) –இருவருக்கும் இந்தத் தொடரில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும். இந்திய ஸ்பின்னர்களுக்குக் கிடைக்காத ஒரு பாக்யம் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு உண்டு: அது ஆஸ்திரேலியாவின் அபார ஃபீல்டிங். இத்தகைய ஃபீல்டிங் துணையோடு ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் இந்திய பேட்ஸ்மன்களைத் தாக்குவர். இந்தியாவில் ரஹானே, ஜடேஜா, பாண்ட்யாவை விட்டால் சர்வதேசத் தரம் வாய்ந்த ஃபீல்டர்கள் இல்லை எனலாம். இப்படி நிலை இருந்தும், இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணி. இந்தியாவின் சூப்பர் பர்ஃபார்மன்ஸிற்கு அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பங்களிப்பு எத்தகையது என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவின் new allround sensation ஜயந்த் யாதவும் இவர்களுடன் சேர்ந்துகொண்டால், நிலைமையே வேறு.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்தத் தொடரில் பெரும் பங்கு இருக்கும் என்றே தோன்றுகிறது. மிட்ச்செல் ஸ்டார்க் (Mitchel Starc) மற்றும் ஜோஷ் ஹாஸல்வுட் ப்ரதான வேகப்பந்துவீச்சாளர்கள். (Josh Hazzlewood). மூன்றாவதாக மத்தியகதி பந்துவீச்சாளர் மிட்ச்செல் மார்ஷ்(Mitchel Marsh) வீசக்கூடும்.
ஆஸ்திரேலியாவின் திறன்மிகு பேட்டிங் டேவிட் வார்னர், மேட் ரென்ஷா(Matt Renshaw) ஆகிய துவக்க ஆட்டக்காரர்களோடு, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ் மற்றும் பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப் (Peter Handscomb) என விரியும்.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் விஜய்யும், ராஹுலும் ஸ்டார்க் & கோ.வை எப்படி சமாளித்து ஆடுவார்கள் என்பது மிகவும் முக்கியம். இங்கிலாந்துக்கெதிராக முச்சதம் (Triple Ton) அடித்த கருண் நாயர் ஆடுவாரா? சந்தேகமே. ஐந்தாம் எண்ணில் அஜின்க்யா ரஹானேவுக்கு வாய்ப்பு அதிகம். ஆறில் விக்கெட் கீப்பர் சாஹா வந்தே ஆகவேண்டும். கோஹ்லிக்கும் புஜாராவுக்கும் இந்தத் தொடரில் அதிக வேலையிருக்கிறது என்று தோன்றுகிறது.

தொடர் ஆரம்பிக்கிறது புனேயில். பிட்ச் ஸ்பின் எடுக்கலாம் இரண்டாவது நாளிலிருந்து. யார் டாஸ் ஜெயித்தாலும் முதலில் பேட்டிங் எனப் பாய்வார்கள். இருந்தும் க்ரிக்கெட்டில் எல்லாவற்றையும் கணித்து கரையேறிவிடமுடியாது. கடைசியாக விளையாடியிருக்கும் 19 டெஸ்ட்டுகளில் கோஹ்லி தலைமையிலான இந்தியா இதுவரை ஒன்றிலும் தோற்கவில்லை என்பது ஒரு அசத்தல் பர்ஃபார்மன்ஸ்தான். சந்தேகமில்லை. Good Luck, Virat Kohli !

**

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் இந்தியா

பஞ்சாபின் மொஹாலி நகரில் நேற்று இரவு (27-3-16) நடந்த கத்திமுனை கிரிக்கெட் போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவைத் தகர்த்தது. டி-20 உலகக்கோப்பை செமி-ஃபைனலில் நுழைந்தது. மீண்டும், விராட் கோஹ்லியின் இணையற்ற ஆட்டத்திறன், இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு வித்திட்டது.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் செய்யவந்து அதிரடியாக 51 ரன்களை 4 ஓவர்களிலேயே எடுத்துவிட்டது. ரவி அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சாதுர்யமான பௌலர்களை ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் குறிவைத்துத் தாக்கினர். அஷ்வினின் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் ஆரோன் ஃபின்ச்(Aaron Finch). 5-ஆவது ஓவரில். நேஹ்ராவிடம் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) அவுட்டானார். ஃபின்ச் தொடர்ந்து விளாச, திருப்பிக்கொண்டுவரப்பட்ட அஷ்வின், டேவிட் வார்னரை வெளியே இழுத்து தோனியிடம் ஸ்டம்ப்ட் ஆகவைத்தார். திடீரென யுவராஜ் சிங்கை பௌலிங்கில் நுழைத்தார் தோனி. பலன் கிடைத்தது. முதல் பந்திலேயே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை தோனியிடம் கேட்ச் கொடுக்கவைத்துக் காலி செய்தார் யுவராஜ். ஆனால், பொதுவாக ஸ்பின்னர்களைத் தாக்கி ரன்னெடுக்க வேண்டும் என்கிற ஆஸ்திரேலிய விளையாட்டு வியூகத்தை (gameplan) உணர்ந்தார் தோனி. அஷ்வினுக்கு 2 ஓவர்களுக்கு மேல் தரவில்லை. ஜடேஜா, யுவராஜுக்கும் தலா 3 ஓவர்களே தந்தார். ரெய்னாவிடம் பந்தைக் கொடுக்கவேயில்லை!

சாமர்த்தியமாக தன் வேகப்பந்துவீச்சாளர்களைச் சுழற்றினார் இந்தியக் கேப்டன். திரும்பி வந்த பும்ராவும், ஹர்தீக் பாண்ட்யாவும், தங்கள் சாகஸங்களினால் பௌண்டரிகள் பறக்காமல் பார்த்துக்கொண்டனர். பேட்ஸ்மன்கள் ஓடி, ஓடியே ரன் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஃபின்ச் 43 ரன்னில் விழுந்தவுடன் வந்த க்ளென் மேக்ஸ்வெல் (Glen Maxwell), நன்றாக ஆடினார். அவரைத் தன் மந்தவேகப் பந்தொன்றில் ஏமாற்றி, பெயில்களை முத்தமிட்டார் பும்ரா. மேக்ஸ்வெல்லின் வீழ்ச்சிக்குப்பின் பாண்ட்யா, நேஹ்ராவிடம் ரன் எடுக்க ஆஸ்திரேலியர்கள் சிரமப்பட்டனர். ஒரு சமயத்தில் ஆஸ்திரேலியா 180-க்குக் குறையாமல் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவின் கெடுபிடி பௌலிங்கிற்கு முன்னால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வியூகம் வீழ்ந்தது. 160 ரன்களில் ஆஸ்திரேலியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மொஹாலியில், பந்து அதிகம் எழாமல் கீழேயே தங்கி சிரமம் தரும் மந்தமான பிட்ச்சில், 161 என்பது சிக்கலான இலக்கு. ஆனால், குவார்ட்டர் ஃபைனல் எனக் கருதப்பட்ட இந்த முக்கியமான போட்டியில், இந்தியாவின் துவக்க ஆட்டம் அபத்தமாக இருந்தது. 49 ரன்களில் 3 விக்கெட்டுகள். வழக்கம்போல், ரோஹித், தவன், ரெய்னா மைதானத்தில் நின்று ஆடவில்லை. அருமையாக பந்து வீசிய ஷேன் வாட்சன் (Shane Watson) ரோஹித், ரெய்னாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இவர்களின் மோசமான ஆட்டத்தினால், விராட் கோஹ்லியின்மீது மனஅழுத்தம் மேலும் ஏறி உட்கார்ந்துகொண்டது. ஆஸ்திரேலிய பௌலிங் வெகுதுல்லியம். ஃபீல்டிங் அதிகூர்மையாக. யுவராஜ் கொஞ்ச நேரம் நின்றார். சிங்கிள்களில் ரன் எடுக்கமுயன்றார். கணுக்கால் பிரச்னையோ என்னவோ, கோஹ்லியோடு ஈடுகொடுத்து ஓடி ரன்னெடுக்க அவரால் இயலவில்லை. ஒரு சிக்ஸருக்குப்பின் அடுத்த பந்தை சோம்பேறித்தனமாக லெக்-சைடில் தூக்கப் பார்த்தார். வேகமாக நகர்ந்த வாட்சன், இறங்கிய பந்தை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். யுவராஜ் அவுட்டாகையில் இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 65 ரன்கள் தேவைப்பட்டது. மோசமான ஆட்டநிலை. பலருக்கு யுவராஜ் அவுட் ஆனது `அப்பாடா!` எனத் தோன்றியது.

பாண்ட்யாவை அனுப்புவதற்குப் பதிலாக மஹேந்திர சிங் தோனி தானே இறங்கினார். தோனியின் வருகை, ஏகப்பட்ட அழுத்தத்திலிருந்த கோஹ்லியின் உடம்புக்குள் மின்சாரம் பாய்ச்சியது. ஜோஷ் ஹேசல்வுட்டின் (Josh Hazlewood) ஓவரில், மின்னலாக இரண்டு, இரண்டு ரன்களாக நாலுமுறை பறந்தார்கள் தோனியும், கோஹ்லியும். பௌண்டரி ஒன்று சீறியது கோஹ்லியிடமிருந்து கடைசி பந்தில். இந்தியாவின் ஆட்டத்தில் உயிரோட்டம் தென்பட்டது.

ஜேம்ஸ் ஃபால்க்னர் (James Faulkner) ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த இறுதி-ஓவர் பௌலர்(death-over bowler). அவரை எந்தக் கொம்பனும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்கிறது அவரது ரெப்யுடேஷன். ஆனால் அந்த இரவில், கோஹ்லிக்குள் ஏதோ ஒரு பூதம் இறங்கியிருந்தது ஃபாக்னருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. முதல் 2 பந்துகளில் இடது, வலதாக பளார், பளார் எனப் பறந்தன பௌண்டரிகள். மொஹாலி அதிர ஆரம்பித்தது. ரசிகர்களின் மூவர்ண டர்பன்கள் மேலெழுந்தன. இளம் பஞ்சாபி யுவதிகளின் கீச்சுக்கீச்சுக் கூச்சல்கள் போதை ஏற்றியது. Surreal atmosphere! விளைவு? பதற்றம் கண்ட ஃபாக்னரின் அடுத்த பந்தின்மீது பாய்ந்தார் கோஹ்லி. லாங்-ஆன் திசையில் உயர்ந்து வானில் கோபம்காட்டிய பந்து, ரசிகர்களுக்கு மத்தியில் இறங்கியது. 19 ரன்கள் வந்தன ஃபால்க்னரின் ஓவரில்(18th over). வெற்றிப்பாதையில் தான் இருப்பதான கனவில் அதுவரை மிதந்திருந்த ஆஸ்திரேலியாவிற்குத் தரை தட்டுப்பட்டது; தடுமாறியது. 19-ஆவது ஓவரை வீசிய நேத்தன் கோல்ட்டர்-நைல் (Nathan Coulter-Nile)-ஐ கோஹ்லியும் தோனியும் தாவிக் கிழிக்க, 16 ரன்கள் இந்தியாவிடம் சேர்ந்தது. ஆஸ்திரேலிய வாபஸி பயணம் உறுதிசெய்யப்பட்டது!

மொஹாலி கொண்டாட ஆரம்பித்துவிட்டது. ஃபாக்னர் 20-ஆவது ஓவரின் முதல்பந்தை தோனியை நோக்கி வீசினார் என்று சொல்லிமுடிப்பதற்குள், பந்து லாங்-ஆன் பௌண்டரியைத் தாண்டிப் பாய்ந்தது. இந்தியா உலகக்கோப்பையின் செமிஃபைனலில் பிரவேசித்தது. விராட் கோலி தன் உணர்ச்சிகளுக்கு வடிகால் அமைக்க முற்பட்டார். கீழே மண்டியிட்டுக் குனிந்துகொண்டார். தோனி வந்து கொஞ்சநேரம் அப்படியே இருக்கவைத்துப் பின் தூக்கிக் கட்டிக்கொண்டார். 82 நாட்-அவுட். 9 பௌண்டரி, 2 சிக்ஸர். 39 பந்துகளில் அரைசதம், அடுத்த 12 பந்துகளில் 32 மின்னல் ரன்கள். விராட் கோஹ்லியிடமிருந்து வீறுகொண்ட இந்தியாவுக்காக.

தலைகொள்ளாப் பிரச்னைகளுக்கு நடுவிலும் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்துவதில்லை பிரதமர் நரேந்திர மோதி! மேட்ச் முடிந்த நொடிகளுக்குள் தான் அனுப்பிய ட்வீட்டில் கோஹ்லியின் அபார இன்னிங்ஸையும், தோனியின் பிரமாதமான தலைமையையும் புகழ்ந்திருக்கிறார். இந்தியாவின் அடுத்த மேட்ச்: 31 மார்ச். மும்பை. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் செமிஃபைனல். மேலும் பொங்கலாம் உணர்ச்சிகளின் பிரவாகம்.

**