பிரபல தமிழ் நாளேடுகளின் ஆன் -லைன் பக்கங்களில் நேற்று தலைப்புச் செய்திகளாக இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தன: ‘சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார் நடிகர் விஜய்!’ ”பூத்திற்கு சைக்கிளில் வந்தது ஏன்? விஜய் தரப்பு அதிகாரி விளக்கம் !”
தேர்தல் தினத்தில் தமிழ்நாட்டுக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு , பிரிய தமிழ்நாட்டில் என்னென்ன நடக்கிறது, வாக்களிப்பு எப்படிப் போகிறது, அப்பாவி மக்களுக்குச் சிரமம் ஏதும் தரப்படவில்லையே.. என்கிற சிந்தனை கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் மீடியாவில். என் கண்ணில் பட்ட -புண்யம் பல செய்திருக்கவேண்டும் யான்- பரவசக் காட்சிகளில் சில இவை. சரி, சரி.. தாண்டிப் போவோம் என்றால், விட்டுவிடுவார்களா அவ்வளவு எளிதாக? ”நடிகர் அஜீத் கோபம்! செல் ஃபோனை ரசிகரிடமிருந்து பிடுங்கினார். திருப்பிக் கொடுத்தார்.. மன்னிப்புக் கேட்ட அஜீத்!” “ரஜினி, கமலை மிஞ்சிய விஜய், அஜீத் ! “நடந்தே வாக்குச்சாவடிக்கு வந்த பிரபல நடிகர் விக்ரம்..” அடடா.. அடடா… தமிழ்நாட்டின் ரசனை, பொதுஅறிவை வேகவேகமாக வளர்ச்சிப்பக்கம் அழைத்துச்செல்ல என்னவெல்லாம் செய்கிறது இந்த மீடியா. கடும் தேசப்பணி..
தேர்தலுக்கு அடுத்த நாள். இப்போதாவது செய்திகள், அவற்றின் உள்ளீடுகள் மாறித்தொலைந்ததா என்றால், இன்னும் இல்லை! மக்களின் சிந்தனையை மேலும் மேலும் அதே நேர்க்கோட்டில் அழைத்துச்சென்று புரட்டிப்போடும் செய்திச் சரடுகள்: “அஜீத் போட்டிருந்த மாஸ்க்! விஜய் ஓட்டிவந்த சைக்கிள்! பின்னணியில் இப்படி ஒரு குறியீட்டு அரசியலா?” தேர்தல் இரவில், எப்படியெல்லாமோ புரண்டு படுத்து ஒருவாறு தூங்கி, எழுந்து காலையில் டீ/காப்பி குடிக்க வந்திருக்கும், காத்திருக்கும் டமிளன் ,கையில் பேப்பரைத் தூக்கிப் பிடித்து படிக்க ஆரம்பித்தால், அவனை சீண்டும், சிதறடிக்கும் கேள்விகள் . அஜீத்தின் முகக்கவசம் கருப்பு, நாடா சிவப்பு! ஆ.. அந்தக் கட்சிக்குத்தான் போட்டாரா? விஜயின் சைக்கிளின் நிறம் – கருப்பு ..அப்புறம் அதில் கொஞ்சம் சிவப்பு.. புரிஞ்சிருச்சு…புரிஞ்சிருச்சு ! விக்ரம் ஏன் நடந்தே… வந்தாரு? லாக்டவுனின்போது வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு நடந்தே, நடந்தே சென்றதை நினைவுபடுத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாரோ.. என்னே ஒரு புத்திசாலித்தனம்.. சீயான் !
அவன் கண்ணில் படுகிறது இன்னொரு நியூஸு. பார்த்திபன் ஓட்டுப் போடவே வரலியாமே! பாவம், அவரும் ஏதாவது காரணம் வச்சிருப்பாரு..! – என வாழ்க்கையின் ‘இருத்தல்’பற்றிய பெருங்கேள்விகள் விடாது துரத்த, டமிளன் வேகவேகமாக டீ யை உறிஞ்சி கிளாஸைக் கீழே வைக்கிறான். தூண்டிவிடப்பட்ட சிந்தனை வளர்ந்து பெருக, ’இன்னொன்னு போடப்பா !’ எனத் தீவிரமாக ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டே, மேலும் மேய்கிறான், பேப்பரில்..
மே 2-ஆம் தேதின்னு ஒரு நாள் வரப்போகுதே சீக்கிரம்? அது என்னென்ன சொல்லப்போகுதோ? அதன்பின் என்னென்ன செய்வானோ, யோசிப்பானோ? சினிமா, அரசியல்னு மாறி மாறித் தாக்கும் சித்தாந்தப் புயல்களினூடே இந்த அப்பாவியின் வாழ்க்கைதான் எப்படி, எப்படியெல்லாம் திரும்புமோ, தூக்கியடிக்கப்படுமோ ..
**