ஏகாந்தனின் புதிய மின்னூல்

அடியேனின் இன்னுமொரு மின்னூல் அமேஸானில் வெளிவந்துள்ளது:

  1. தாமதத்திற்கு அருந்துகிறேன்

சற்று தாமதமாக(!) வந்திருக்கும் ஏகாந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு.

இந்த மின்புத்தகத்தில் 51 கவிதைகள் உள்ளன. பெரும்பாலும் சிறுகவிதைகள், ஒன்றிரண்டு சற்றே நீண்ட வசன கவிதைகள். சில வலைப்பக்கத்தில் முகம் காட்டியவை. சில புதிதாக வந்திறங்கியவை என அமைந்துவிட்ட தொகுப்பு.

 

 

 

 

 

ASIN : B08GKMHRY9

லிங்க்

இந்த மின்னூலை இலவசப் பதிவிறக்கம் செய்து வாசிக்க உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது,   4 நாட்கள் அவகாசம்! 27-8-20 -லிருந்து 30-8-20 (ஞாயிறு) வரை.

  1. தூரத்திலிருந்து ஒரு குரல்’ – இலவச வாசிப்பு நீட்டிப்பு !

இந்த மின்னூல் (கட்டுரைத் தொகுப்பு) இலவசப் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது -மேலும் 3 நாட்களுக்கு:  25-8-20 -லிருந்து 27-8-20 வரை.

 

 

 

 

 

 

ASIN : B08F566L57

லிங்க்

வாசக, வாசகியர் மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வாசித்தபிறகு, அமேஸான் பக்கத்தில் சம்பந்தப்பட்ட புத்தகத்துக்குக் கீழே உங்களது ‘customer review’ -வை ’ஸ்டார் ரேட்டிங்’ மூலமாக, அல்லது எழுத்துமூலமாகத் தந்தீர்களானால் நல்லது.  நன்றி.

-ஏகாந்தன்.

Tat Sat ..

It is 

The inexorable

Arduous process of

Eligibility and qualification..

A journey through long

Seemingly endless stretches of

Chilling, eerie darkness

Before he arrives

At an unthinkable point in time

When he happens to

Squint his small, little eyes

To eventually see it

Feel it

Relish it 

The light

At the end

Of it all

**

சாகித்ய அகாடமி : சோ. தர்மன்

”வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும்?’ என்ற கேள்வி எழலாம். இன்றுதான் எல்லா தகவல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே என்ற எண்ணம் தோன்றலாம். தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சார்ந்த ஆழமான சுவடுகள் தெரிய, இலக்கியம்தான் வழிவகை செய்யும். இதை உணரும்போது, வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவர். வாசிப்பு, மனிதனை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும் ..”

இப்படி ஒரு நேர்காணலில் சொன்னவர் எழுத்தாளர்  சோ. தர்மன். சாஹித்ய அகாடமியின் 2019-க்கான விருது, அவருடைய படைப்பிற்குக் கிடைத்திருப்பது, தமிழின் இலக்கிய வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும். தான் பிறந்து வளர்ந்த மண்ணின் வாழ்க்கைச் சூழலைக் கனிவோடும், பரிவோடும், உள்ளார்ந்த கவலை, அக்கறையோடும்  எழுத்தில் கொண்டுவரும் படைப்பாளி. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியவெளியில் இருப்பவர் .  வணிகநோக்கம் கருதி விவஸ்தையில்லாமல், வேகவேகமாக எழுதித் தள்ளும் இனம் அல்ல . வாசகனின் மனதில் இறங்கும் விதமாக, ஆழமாக , கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு ஒரு நாவல் என்பதாய் வெளிவருபவை  அவரது  புதினங்கள். அவசர உலகில் அடிபட்டுவிடாது தன் சுயம் காக்கும் படைப்பாளி போலிருக்கிறது. நவீனத் தமிழின் ஆரோக்யத்துக்கு  இத்தகைய இலக்கிய செயல்பாடு நல்லது.

நான்குதான் நாவல்கள் இதுவரை. ’கூகை’, ’சூல்’ (2015), ’தூர்வை’ (2017) மற்றும் புதிதாக, ‘பதிமூனாவது மையவாடி’ (2020, அடையாளம் பதிப்பகம், CommonFolks-இல் ஆன்லைனில் வாங்கலாம்). மேலும், கவனம்பெற்ற சில சிறுகதைகளையடங்கிய தொகுப்புகள் – ’சோகவனம்’, ’வனக்குமாரன்’, ’ஈரம்’,  ’நீர்ப்பழி’ போன்றவை.

தமிழ்  இலக்கியச்  சூழலில், ஏன்,  பொதுவாக இந்திய இலக்கியப் பரப்பிலும், எந்தவித முத்திரையும் தன் மீது  குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் இந்தப் படைப்பாளி . டெல்லியில் நடந்த சாகித்ய  அகாடமி விழா ஒன்றில் -’The story of my stories’ என்கிற தலைப்பில் பிறமொழி எழுத்தாளர் முன் ஆங்கிலத்தில் பேசுகையில், இப்படிக் குறித்திருக்கிறார் தர்மன்:   

”(இலக்கியத்தில்) ’தலித் எழுத்து’ என்பதாக ஒன்று கிடையாது. பிறப்பால் நான் ஒரு தலித் என்பதற்காக,  என் எழுத்தை அப்படி வகைப்படுத்திவிடாதீர்கள்”.

கதைகேட்டல் மனித மனதில், எத்தகைய தாக்கத்தை நிகழ்த்துகிறது என்பதை, சொந்த அனுபவம் ஒன்றின் வழி விவரிக்கிறார் தர்மன்: ” சிறுவயதில் தினம் தூங்குவதற்குமுன், என் இரண்டு மகன்களுக்கும் நான் கதை சொல்வது வழக்கம். நானில்லாதபோது என் மனைவி சொல்வாள். ஒருநாள் எங்கள் இளைய மகன் விபத்துக்குள்ளானான். மருத்துவமனையில் ‘கோமா’விற்குப் போய்விட்டான். மூன்றாம் நாள், டாக்டர்கள் கைவிரித்த கையறுநிலை. அப்போது என் பாட்டி, பையனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். படுக்கையருகே நின்று பார்த்துவிட்டு, என்னை தைர்யப்படுத்தும்விதமாய் சொன்னார்: ’கவலைப்படாதே.. 50-60 வருடங்களுக்கு முன்பாக ஒருநாள், நானும் உன் தாத்தாவும் வயலில் உழுதுகொண்டிருந்தோம்.  திடீரென இடி, மின்னல், புயல் தாக்கியது. மின்னல், உருக்கிய தங்கப்பாகென கீழ் நோக்கிப் பாய, நாங்கள் இரண்டு மாடுகளையும் இழுத்துக்கொண்டு அலறிப்புடைத்துக்கொண்டு ஓடினோம். ஆனால் ஒரு பயங்கர மின்னல், இரண்டு காளைகளையும் வீழ்த்திவிட்டது. நாங்கள் இருவரும் மயக்கமுற்று சரிந்துவிட்டோம்…” அவர் பேசிக்கொண்டிருக்கையில் என் மகன் கண்விழித்தான். நான் ஆச்சரியப்பட்டு மேலும் கதையைத் தொடரச் சொன்னேன். இறுதியில், படுக்கையில் எழுந்து உட்கார்ந்துவிட்ட என் மகன், ’இன்னொரு கதை சொல்லு’ என்றான்!”

தர்மனின் கூகை நாவல், ’The Owl’ என்கிற தலைப்பில் ‘ஆக்ஸ்ஃபர்டு இந்தியா’-வினால் (Oxford University Press, India)  ஆங்கில மொழியாக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்திலும் வந்திருக்கிறது, ‘மூங்கா’ என்ற தலைப்பில்.

2015-ல் வந்த ‘சூல்’ நாவல்தான் இவருக்கு சாஹித்ய அகாடமியை இப்போது வென்று தந்து, நாட்டில் ‘மற்றவர்களையும்’ கொஞ்சம் கவனிக்கவைத்திருக்கிறது. ஏற்கனவே ‘சுஜாதா விருது’ வாங்கிய புதினம்.  சூல் நாவலின் பின்னணிபற்றி ஒரு நேர்காணலில் தர்மன் இவ்வாறு கூறுகிறார்:

”நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலத்தினை தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போட்டுவிட்டு, கோவில்பட்டியில் வந்து உட்கார்ந்துள்ளேன். இது தான் இந்த நாவலை எழுதத் தூண்டுதலாக இருந்தது. இந்த நாவலுக்கு ‘சூல்’என்று பெயர் வைத்தேன். இதற்கு அர்த்தம், நிறைசூலி.  ஒரு உயிரை உற்பத்தி பண்ணக்கூடியது. ஒரு கண்மாய்,  நீர்வாழ் பறவைகள், மீன்கள், தவளைகள் என ஏராளமான உயிர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். இவை அத்தனையும் சேர்த்தது தான் சூல். ஒரு தாய் பிரசவிக்கும் வலியாகத்தான், அந்த நாவலை உருவகப்படுத்தியுள்ளேன்.  இந்த நூலில் எட்டயபுரம் ’எட்டப்ப மகாராஜா’ குறித்து எழுதியுள்ளேன். அந்தக் காலத்தில் கண்மாய்களை உருவாக்கிக் கொடுத்தது அவர்தான். அவரைப்போல் கண்மாய்களை உருவாக்கியதும், விவசாயிகளைப் பாதுகாத்ததும் யாருமில்லை. ஆய்வு செய்தவர்களுக்குத்தான் இது தெரியும். சூல் நாவலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்தனர். அதே போல் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதினை எனது உருளைக்குடி கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.”

மேலும் சொல்கிறார்: “தமிழகம் அளவில் அறியப்பட்ட எழுத்தாளர்கள் கோவில்பட்டியில் உள்ளனர். சர்வதேச விருது, சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களும் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் எங்களது குரு கி.ரா தான். நாங்கள் எழுத்தாளர்களாக ஆனதும், எங்களை தட்டிக்கொடுத்து வளர்த்ததும், எழுத்தை சொல்லிக்கொடுத்ததும் எங்களது ஆசான் கி.ராஜநாராயணன் தான். அதனால் தான் கோவில்பட்டியை மையமாக வைத்து விருதுகள் கிடைக்கக் காரணம்.”

புதிதாக வந்திருக்கும் தர்மனினின் ‘பதிமூனாவது மையவாடி’ நாவல்பற்றிக் குறிப்பிடுகையில், எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: ’சோ.தர்மன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ’வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாகப் பிரச்னைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன், கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்’. தமிழ்நாடு இன்றிருக்கும் சூழலில், இந்த நாவலின் கதைக்களன் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையை உண்டுபண்ணாதிருக்கவேண்டுமே எனும் கவலையும், பக்கவாட்டிலிருந்து எழுகிறது.

சோ. தர்மனின்  சிறுகதை ஒன்றை அடுத்த பதிவில் பார்ப்போமா?

தகவல்களுக்கு நன்றி: இந்துதமிழ், விகடன்.காம், நியூஸ்18.காம்(தமிழ்).

**

கோபிகிருஷ்ணன் சிறுகதை

வாசிப்பின்பத்திற்காக கோபிகிருஷ்ணன், இங்கே ஒரு சிறுகதை வடிவில். அவரது ’தூயோன்’ சிறுகதைத் தொகுப்பில் (தமிழினி) வருகிறது, ‘புயல்’ என்கிற சிறுகதை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘கதாவிலாசம்’ நூலில் இதுபற்றிக் குறித்திருக்கிறார்.

**

சிறுகதை :  பு ய ல்

–  கோபிகிருஷ்ணன்

அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம். தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேசஅவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன, பித்தான்கள் என்றைக்கோ  தெறித்து, அவை இல்லாத நிலையில், ஸேஃப்டி பின்களைப் போட்டு ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு, தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள் ஆகியிருந்தும், அதை வாங்காதிருந்த அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில் ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில் ஒரு கடையில். புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தநௌ’ சிகரெட் ஒரு பாக்கெட்டையும், ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி, மழைத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். இரண்டு மெழுகுவர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும் மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான்.

ஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து, கைகளைக் குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும், ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.

வழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி, சர்க்கரை காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில் பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும், 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு, சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி” – மன்னிப்புக் கோரி, கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.
வீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன், கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள், லயித்து. ஏக்நாத் கவனமாகக் கோலக்கோடுகள், புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து, ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய், ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, கோலத்தின் மேல் கால் பாவாமல் சிரத்தையுடன் தாண்டி நடந்து கடந்தான்.

மணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டெ விட்டுக் கெளம்பினா, வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களுக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ” – ஸோனா பொரிந்து தள்ளினாள்.

 “ஆனா, இன்னெக்கி என்ன விசேஷம்? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்?” – இது ஏக்நாத்.

ஒண்ணுமில்லெ, சொல்றேன்.”

 “என்ன .. வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா?”

 “இல்லெ.”

மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா?”

 “இல்லெ.”

வேறென்ன சொல்லேன்.”

ஸோனாவின் முகத்தில் கலவரமும், பரபரப்பும்,  அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏக்நாத்தால் கண்டுகொள்ள முடிந்தது. கணவனைச்  சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க முடிந்தது. சராசரிகளுக்குச் சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம்.

நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது.”

ஸோனா சொன்னபடி சமையற்கட்டின் முன்பகுதியில் முகம், கைகால் அலம்பிக்கொண்டு, தலையைத் துவட்டிக்கொண்டு ஏக்நாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ஸோனா ஏக்நாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான புதிதில் ஏக்நாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனாதங்கம். இன்னொரு அர்த்தம் உறங்குதல். நம் மனநிலைகளின் அதீதங்களினாலோ, பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ, அவன்மீது ஏற்படும் கசப்புணர்வை அறவே மறந்து, அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான, ஆரோக்கியமான பெயர்!

குழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும், உடனே அவன் நினைவில் நிழலாடியது, நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு சூட்டிவிட்டான்.

ஸிந்தியா: “டாடீ, எனக்கு இன்னா கொண்டாந்தே?”

ஒனக்காடா கண்ணா, ஒரு மாத்திரெ, ஒனக்கு ஜொரமில்லெ? அப்பறம் ஒரு சாக்கலெட்

இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு..  இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா?”

அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள்.

 “இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா?” ஸோனா வெடித்தாள்.

 “என்ன நடந்திச்சு, சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன்.”

ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை?”

 வாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள்.

 “சரி, காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன் ஒண்ட்டே வழியிலே சந்திச்சுப் பேசி, ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ. அல்ப விஷயம் ஏதாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? சொல்லேன்.”

என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க?”

புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு? சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே?”

என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க.”

நானென்ன யேசுநாதரா, பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க? சொன்னாத்தானே தெரியும்?”

இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன், டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ, அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க.”

இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல்? கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே?”

, அந்தக் கண்றாவி வேறெ நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ?”

நீ இன்னெக்கி  நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு.”

அந்த டாக்டர் கெழம்பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப்அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்குஅதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”

என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏக்நாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.

ஒங்களுக்கென்ன, ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche-க்கு வந்து, ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ கொடெ இருந்தும் ஒண்ணுதான்.. இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட், ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி, “மேடம், ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா?”ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா, “மேடம், ஒங்களெத்தான். ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்ன்னது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்சினிமாவில் ஸ்ரீகாந்த், லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு, எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு, விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்.”

ஸோனா தொடர்ந்தாள். “வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே, அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான். ‘எப்படீம்மா இருக்கே? கொளந்தெ சௌக்கியமா?’ன்னு கேட்டுண்டே உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக்கிட்டான். ‘இங்கே இருக்கறப்போ அந்த மனுஷன்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ வச்சேன். ‘வேணாம். சும்மா தமாஷுக்குத்தான் கேட்டேன்அப்படின்னான். என்ட்டெ என்ன தமாஷ்ன்னு நெனெச்சிண்டிருக்கறப்போவாங்களேன், ’இளமை சுகம்’ சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப்போச்சு. ஸிந்தியாவெத் தூக்கிண்டு, அந்தப் பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ, அதான் .. நைன்த் படிக்கறதே, அதைக் கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது. கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே ஒக்காந்திண்டிருந்தான். ‘நான் அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா? நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு?’ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக் கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப் பொண்ணு சொல்றது, அந்த மனுஷன் நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ இப்படி நடந்துக்கிட்டதாம்.”

ஸோனா இன்னும் முடிக்கவில்லை. “இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு, கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி இடுப்பிலெ வச்சிண்டு, அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங்க. ‘குட்டி ஷோக்காயிருக்கில்லெஅப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க.”

ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு அமைதியின்மை காரணமாகச் சாப்பிடத் தோன்றவில்லை. ஏக்நாத்துக்குத் துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம் இல்லாமல் போயிற்று. படுக்கையில் கிடந்தார்கள். ஸோனா ஏக்நாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள். 

 “சமூகம் இன்னெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப் போகும்என்றான்.

உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும், சகிக்கல...”  அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏக்நாத்.

ஏக்நாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும், அசிங்கமாகவோ, அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம், பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக் கேட்டிருக்கிறான். கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது விளையாது இருந்திருக்கலாம்..

கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்என்று சற்று உரக்கவே கத்தினான். ஏக்நாத்தால் இயன்றது அவ்வளவே.


***

நன்றி: அழியாச்சுடர்கள்/ராம்பிரசாத்/தமிழினி

அரங்கன், வரதன், வேதாந்த தேசிகன் ..

 

13-14 ஆம் நூற்றாண்டு காலகட்டம். காஞ்சீபுரம். ஏனைய திருமால் கோவில்களைப்போலவே அப்போது புகழ்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலிலும் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை, ஆராதனைகள் நிகழ்ந்த காலம். காஞ்சிப் பெருமாள் கோவிலின் சன்னிதியில் இராப்பத்து, பகற்பத்து உத்சவத்தின்போது, திருமாலின்மீது பக்திமிகுதியால் இயற்றப்பட்ட ஆழ்வார்களின் அமுதமான பாசுரங்களும் ஓதப்படவேண்டும் என்று வேதாந்த தேசிகன் முன்வைத்தபோது, காஞ்சீபுரத்தில் ஒரு சாரார், வடமொழியில் மட்டுமே ஓதுதல் இருக்கவேண்டும்; வேறுவகையில் மாற்ற சாஸ்திரத்தில் இடமில்லை  என அடம்பிடித்தனர்.  வடமொழியைப்போலவே நமது தமிழ்மொழியும் தெய்வமொழியே என அவர்களுடன் வாதித்த தேசிகன், பன்னிரு ஆழ்வார்கள் திருமாலை நினைந்துருகிப் பாடிய அழகுமிகு பாசுரங்கள் பக்திப் பிரவாகத்தோடு, வேதங்களின் கருத்தாழத்தையும் கொண்டிருப்பவை என்று எடுத்துரைத்தார். ஆதலால் பெருமாளின் சன்னிதியில் பாடப்பட மிகவும் உகந்தவை எனப் புரியவைத்து, எதிர்ப்பாளர்களை மசியவைத்து, ஏற்றுக்கொள்ளவைத்தார் தேசிகன். அவர் காலத்தில்தான் தமிழின் இறையமுதமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முதன்முறையாக காஞ்சி வரதனின் சன்னிதியில் சீராக ஒலிக்கத்தொடங்கின.

1327-ல் கொடுங்கோலனான மொகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காஃபூரின் (Malik Kafur) தலைமையில், துருக்கர் படை, எண்ணற்ற செல்வங்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தென்னாடு நோக்கி வந்தது. பல சிற்றரசுகளை வீழ்த்திய மாலிக் காஃபூர், ஸ்ரீரங்கத்தின் செல்வம்பற்றிக் கேள்விப்பட்டு அதனையும் தாக்கி அழித்துச் சூறையாடினான். ஊரை சிதறவிட்ட காஃபூரின் நாசகாரப் படைகள், அரங்கனின் கோவிலை நோக்கி முன்னேறினர்.  மதவெறியனான மாலிக் காஃபூரின் படைகளை, கோவிலைப் பாதுகாத்து நின்ற வைணவர்களும் அரங்கனின் ஏனைய அடியார்களும் கடுமையாக எதிர்கொண்டு போராட, பொதுமக்களும் சேர்ந்துகொண்டனர். இறுதியில், சுமார் 12000-க்கும் மேற்பட்ட  ஸ்ரீரங்கத்து அடியார்களும், மக்களில் ஒருபகுதியினரும் கோவில் வாசலிலேயே மாலிக் காஃபூர் படைகளினால் கொன்று குவிக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் தாக்கப்படும் தகவல் முன்னரே தெரியவந்து, கோவிலின் மூலவர் விக்ரகம்  அழிக்கப்பட்டுவிடாதபடி பாதுகாக்க, மூலவர் சன்னிதிக்கு முன்னால் ஒரு கற்சுவர் எழுப்பி அதன் முன்னே வேறொரு போலி விக்ரகமும் செய்துவைத்து, இப்போது நாம் தரிசித்து மகிழும் ஸ்ரீரங்கநாதனை, மூலவரைக் காத்தவர், சிற்பக் கலை, கட்டிடக்கலை ஆகியவற்றிலும் தேறியிருந்த வேதாந்த தேசிகன்.  கோவிலின் உத்சவப் பெருமாள், தாயார் விக்ரஹங்களை மாலிக் காஃபூரின் சைன்யங்கள் சிதைத்துவிடாதபடி, எடுத்துக்கொண்டு ஓடிவிடாதபடி,  ஆச்சாரியர்களின் சிறு  குழு ஒன்று மறைத்து  எடுத்துக்கொண்டு, இரவோடு இரவாக திருமலைக்குக் கால்நடையாகப் பயணித்துவிட்டனர்.  முதுபெரும் வைணவ ஆச்சார்யரான சுதர்ஷன பட்டர் எழுதிய  ஸ்ரீபாஷ்யத்துக்கான விளக்கவுரையின் ஏடுகளை எடுத்துக்கொண்டு, பட்டரின் புதல்வர்களையும் பாதுகாக்கும்பொருட்டு அவர்களுடன் மேலக்கோட்டை (கர்னாடகா) நோக்கிப் பயணமானார் தேசிகன்.

தென்னாட்டை அழித்தும், சூறையாடியும் கொண்டாடிய மொகலாயப் படைகள் வடக்கு நோக்கி ஒருவழியாக விரட்டப்பட்டபின்னும், சுமார் 48 வருடங்கள் ஆகின ஸ்ரீரங்கமும், சுற்றுப்பிரதேசங்களும் முழுதுமாக இயல்புநிலைக்குத் திரும்ப. அப்போது செஞ்சியை ஆண்ட மன்னனின் தளபதியான போப்பனாரியன் (Boppanaaryan)  உதவியால் அரங்கனின் திருக்கோவிலுக்கு உத்சவ மூர்த்திகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. கோவில் திறக்கப்பட்டு, போலிச்சுவர் அகற்றப்பட்டு, மூலவர் காட்சி தர,  மக்கள் பெரிதும் மகிழ, பூஜைகள் நிகழ ஆரம்பித்தன. அப்போது ஒரு நாள், தமிழுக்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களின் சிலாரூபங்களை அழகாகச் செய்த பக்தர்கள் சிலர், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்ய ஆசையாக எடுத்துவந்தனர். அதற்கும் ஒரு சாராரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பன்னிருவரில் ஓரிரு ஆழ்வார்களைத் தவிர, மற்றோர் அந்தணர் அல்லாதோர் என்பது அவர்களது குதர்க்க வாதம். அப்போது அங்கு வந்திருந்த வேதாந்த தேசிகன், எதிர்ப்பவர்களை சந்தித்து சாந்தப்படுத்தி விளக்கலானார். வெவ்வேறு ஊரிலிருந்து, வெவ்வேறு பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும், நாம் வணங்கும் அதே திருமாலைத்தான், அரங்கனைத்தான் ஆழ்வார்களும் சரணடைந்தார்கள். அவனையன்றி வேறு நினைவின்றி வாழ்ந்து மறைந்த மகான்கள் அவர்கள். அத்தகைய திருமால் அடியாரை,  தாழ்ந்தோர் எனக் கூறுவது மட்டுமல்ல, அப்படி நினைப்பதே கூட பாபத்தில் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும் என அறிவுறுத்தி, எதிர்த்த அசடுகளைப் பணியவைத்தார் தேசிகன். அதன்பின்னரே அரங்கனின் கோவிலில் ஆழ்வார்களின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முறைப்படி பூஜை செய்யப்பட்டன, என்கின்றன கர்ணபரம்பரைக் கதைகள். ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களின்மூலம்,  வேதங்களில் மறைபொருளாகப் பேசப்படும் இறைரகசியங்கள் பலவற்றைத் தான் அறிந்ததாகக் கூறியவர் தேசிகன்.

அந்தக் காலகட்டத்தில், சமூகத்தின் ஒருசாரார் மட்டுமே வேதசாஸ்திரங்களைப் பயிலவேண்டும் என்கிற அபிப்ராயம், பாமரர்களைத் தாண்டி பண்டிதர்களிடமும் வெகுவாகக் காணப்பட்டது. ராமானுஜரைக் கொண்டாடிய வேதாந்த தேசிகன் அதனை மறுத்து வாதம் செய்தார்.அதனால் கடுமையாக விமரிசிக்கப்பட்டார்.  வேதங்கள், உபநிஷதங்கள் ஆகிய பண்டைய சாஸ்திரங்கள் மனிதன் இம்மண்ணுலக வாழ்வைக் கடந்த, ஞானத்தின் உயர்நிலையான பிரும்மத்தை நோக்கிப் பயணிப்பதற்கான வழிமுறைகளைக் காட்டுபவை. ’இறுதி உண்மை’ எனப்படும் பிரும்மத்தைப்பற்றிப் பேசுவதால் வேத சாஸ்திர தத்துவங்கள் அனைவருக்கும் பொதுவானவை என தர்க்கம் செய்தார் தேசிகன். இறைவழி செல்வோர் யாராகிலும், பெண்கள் உட்பட அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடியதுதான் அத்தகைய வேதங்கள், பிரமாணங்கள் போன்றவை எனத் தெளிவுபடுத்தினார் அவர். அதோடு நில்லாமல், சாதாரணருக்கும் புரியும்படியாக  வேதக்கருத்துக்களின் சாரத்தை சுருக்கமாக  ‘சில்லரை ரகஸ்யங்கள்’ எனும் நூலாக (மணிப்பிரவாள நடையில்) இயற்றினார்  தேசிகன்.

சமஸ்க்ருதம், ப்ராக்ருதம் ஆகிய மொழிகளிலும், மணிப்ரவாளத்திலும் (தமிழ், சமஸ்க்ருதம் கலந்த மொழிநடை)  பல புகழ்பெற்ற பக்தி நூல்களைப் புனைந்த தூப்புல் ஞானி வேதாந்த தேசிகன், தாய்மொழியான தமிழில் ஏதும் எழுதவில்லையா என ஆச்சரியப்பட்டுக் கேட்பவர் உண்டு. தமிழ் மொழியின்மீது மிகுந்த மதிப்பும், திராவிடவேதம் என அழைக்கப்படும் பிரபந்தங்களைப் படைத்த ஆழ்வார்களின்பால் ஆழ்ந்த பக்தியுமுடைய தேசிகன், தமிழில் எழுதாமல் எப்படி இருந்திருப்பார்? எழுதியிருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல.  24 தமிழ் நூல்கள். அவற்றில் ஐந்து நூல் தொகுப்புகள் காலப்போக்கில், நமக்குக் கிடைக்காதுபோயின. மீதியுள்ள பத்தொன்பதில் சில கீழே:

கீதார்த்த சங்கிரகம், சரம சுலோகச் சுருக்கு ஆகிய நூல்கள் – கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தன்னை சரணாகதி அடைந்து அமைதிபெறுவதுபற்றி சொன்ன உபதேசங்களின் சுருக்கம்.

திருமந்திரச் சுருக்கு, துவயச் சுருக்கு ஆகியவை – (மந்திரப்பொருளின் சுருக்கமான விளக்கம் தரும் நூல்கள்)

அடைக்கலப் பத்து – ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் விளக்குகிற சரணாகதித் தத்துவம்பற்றிய  நூல்.

அத்திகிரி மகாத்மியம், அத்திகிரி பஞ்சகம் – காஞ்சீபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாள்பற்றிய வரலாற்றுச் சுருக்கம், துதிப்பாடல்கள்

மும்மணிக்கோவை – பரப்பிரும்மமாகிய நாராயணனைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பு

நவரத்தினமாலை – திருவஹீந்திரபுரம் பெருமாள்பற்றிய பாடற்தொகுப்பு

பிரபந்த சாரம் – திருமாலைப் பாடிய ஆழ்வார்களின் வாழ்க்கை சரிதம், அவர்கள் இயற்றிய நாலாயிரப் பிரபந்தத்தின் சிறப்புபற்றி வர்ணிப்பது.

வைணவ தினசரி – திருமாலின் தொண்டனானவன் தினசரி கடைபிடிக்கவேண்டிய பக்திசார்ந்த நெறிமுறைகள் பற்றி விளக்கும் நூல்

ஆகார நியமம் – வைணவனானவன் தன் தினசரி சாப்பாடு விஷயத்தில் எப்படிக் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும், கொள்ளவேண்டிய உணவு, தள்ளவேண்டிய விஷயங்கள் ஆகியனபற்றி அறிவுறுத்தும் நூல்

நாற்பது வருஷ நீருக்கடி வாசத்திற்குப்பின், இப்போது மேல்வந்து அடியார்களுக்குக் காட்சிதரும் அத்திகிரி வரதன்பற்றி வேதாந்த தேசிகன் இயற்றிய தமிழ்ப் பாடல்களில் இரண்டு கீழே:

பத்தி முதலா மவற்றிற் பதியெனக்குக் கூடாமல்

எத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம் போல்

முத்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

 

வாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி

வாழி எத்திராசன் வாசகத்தோர் – வாழி

சரணாகதி என்னும் சார்வுடன் மற்றொன்றை

அரணாகக் கொள்ளாதார் அன்பு

 

-வேதாந்த தேசிகன்

**

படிப்பு, படிப்பு, படிப்பு.. இப்படியும் ஒரு பெண் !

 

17-ஆம் நூற்றாண்டு. வெனிஸ் {இத்தாலியன்: வெனிஸியா  (Venesia)}. ஏட்ரியாட்டிக் கடலின் (Aedriatic Sea) 100 குட்டித்தீவுகளாலான, இத்தாலியின் வடக்குப் பிரதேசமான வெனிட்டோவின் தலைநகர். பொதுவாகவே வெனிஸ் நகரம் அதன் துணிச்சலான பெண்களுக்குப் பேர்போனது. இங்கே வாழ்ந்த ஒரு பிரபுவிற்கு (Lord), ஜூன் 5, 1646-ல் பிறந்த அந்தப் பெண்குழந்தை ஒரு prodigy-யாகப் பின்னாளில் அறியப்பட்டாள். எதிலும் கூர்மையான கவனம். ஆழ்ந்த வாசிப்புத் திறன். புத்தகத்தைக் கையிலெடுத்துவிட்டால் கீழே வைப்பதில்லை. எப்போதும் படிப்புதான். வேறெதிலும் மனம் செல்லவில்லை. தனது மாளிகையின் ஒரு மூலையில்,  அமைதியான சூழலில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஏதோ தியானத்தில் இருப்பதுபோல் மணிக்கணக்காக ஆழ்ந்திருப்பது அவளுக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வசதியான அப்பாவும் வீட்டில் நிறைய வாங்கிப்போட்டார்.  சிறப்பாசிரியர்களை வீட்டிற்கே வரவழைத்து, மொழிகளில் தனிப்பயிற்சி. தன் ஏழாவது வயதிலேயே பல்மொழி வித்தகர் என அழைக்கும் அளவுக்கு ஆகிவிட்டாள். க்ரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் சொந்த ஊர் மாஸ்டர்களே அவளை நிபுணியாக்கிவிட்டார்கள். மேலும், ஃப்ரெஞ்ச், ஸ்பேனிஷ் ஆகியவற்றையும் கற்ற அந்தச் சிறுமி பிற்காலத்தில், ஹீப்ரூ, அரபி மொழிகளையும்  விட்டுவைக்கவில்லை.  கவனியுங்கள். நமது சமகாலப் பெண்ணொருத்தியின் கதையல்ல இங்கே படித்துக்கொண்டிருப்பது. ஐரோப்பாவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விசித்திரமான பெண்பற்றியது. இத்தாலியின் பிரதான மதமான கிறித்துவமும், கட்டுப்பெட்டித்தனமான அந்தக்கால சமூகச்சூழலும், பெண்களை ஆண்களுக்கு சரிநிகராக நடத்துவதை விடுங்கள் – ஒப்பிட்டுப் பேசுவதைக்கூட, கடுமையாகக் கண்டித்த, நிராகரித்த ஒரு காலகட்டம். பிஷப் சொன்னால் போதும். அதுவே மந்திரம். அப்படியே தொடர்வதே வழக்கம். சாதாரண மக்களின் கடுமையான orthodoxy. இத்தகைய சூழலிலும் அதிசயமாக விளைந்துவிட்டது அந்த முத்து.

அந்த சிறுமி வளர்ந்து பெரியவளான பின்னும், அவளது படிப்பு பலதுறைகளுக்கும் நீண்டது.  தர்க்கவியல், இயற்பியல். வானவியலென ஈடுபாடு வளர்ந்தது. கணிதத்திற்குள் நுழைந்து ஆழ்ந்த நாட்களுமுண்டு. அவ்வப்போது, ஹார்ப், வயலின் போன்ற இசை வாத்தியங்களிலும் அவளுடைய விரல்கள் விளையாடிவந்தன. தொட்டதில் எல்லாம் ஒரு மேன்மை. சரஸ்வதி தேவியே இத்தாலியில் வந்து இறங்கிவிட்டாளா?

இந்த நிலையில் ஒரு கட்டத்தில், இறையியல் (Theology) அந்த இளம்பெண்ணின் மனதை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அதில் பட்டப்படிப்பிற்காக, வெனிஸுக்கு அருகிலிருந்த, உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua, founded in 1222) சேர்ந்து பயின்றுவந்தாள். பட்டம் கிடைக்க இருக்கையில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து முணுமுணுப்பு, எதிர்ப்பு. ஒருவழியாக பல்கலைக்கழகத்தினர் அவர்களை சமாளித்து, அந்தப் பெண்ணிற்குப் பட்டம் கொடுத்துவிட்டனர்.

Elena Cornaro Piscopia

சரி,  படிக்கும் ஆசை இப்பவாவது கொஞ்சம் குறைந்ததா? இல்லை. அது தீயாய் வளர்ந்துகொண்டிருந்தது. இறையியலில் நீங்காத கவனம். மேற்படிப்பை மேலும் தொடர்ந்தவள், இறையியலில் முனைவர் பட்டத்திற்கு (Doctor of Theology,)  பல்கலைக்கழகத்தில், தன் பெயரைப் பதிவுசெய்து, படிக்க ஆரம்பித்தாள். 1669-ல் தன் 26-ஆவது வயதில், The Colloquy of Christ (அல்லது Dialogue of Christ – யேசுவின் உரையாடல்)-ஐ ஸ்பேனிஷிலிருந்து இத்தாலிய மொழிக்கு, திறம்பட மொழியாக்கம் செய்துவிட்டாள். கேள்விப்பட்ட, பதுவா மற்றும் வெனிஸ் நகர அறிஞர்கள், பேராசிரியர்கள்  அரண்டுபோயினர்.

வருடம் 1672-ல் முனைவருக்கான மேற்படிப்பு முடிவுபெற்று, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட இருக்கும் நாளும் நெருங்கியது. வெனிஸின் கிறிஸ்துவ சபை, பெண்களை இறையியல், தத்துவம் போன்ற விஷயங்களில் தலையிடுவதைத் தடைசெய்திருந்த காலகட்டம். ஒரு பெண்ணிற்கு டாக்டர் பட்டம் கிடைக்கவிருக்கிறது என்கிற செய்தி நகரில் கசிய ஆரம்பித்தது. அவ்வளவுதான். பொங்கிவிட்டது கத்தோலிக்க கிறிஸ்தவ சபை. குறிப்பாக, பதுவா நகர பிஷப் (Bishop of Padua), க்ரெகோரியோ கார்டினல் பார்பரிகோ (Gregorio Cardinal Barbarigo). ‘அவள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தால்தான் என்ன? போயும் போயும் ஒரு பெண்ணுக்கா டாக்டர் பட்டம் தருவது? சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கறதா பல்கலைக்கழகத்தில நீங்கல்லாம் கூடி முடிவு பண்ணிட்டீங்களா?  – என்கிற ரீதியில் பெருஞ்சத்தம்போட்டு, பலவிதத் தடைகளை எழுப்பி, அந்தப் பெண்ணிற்கு டாக்டர் பட்டம் தரப்படுவதற்குக் குறுக்கே வரிசைகட்டி நின்றனர். ஆறு வருட ஓயாத போராட்டத்துக்குப் பின் கத்தோலிக்க திருச்சபை மசிந்தது. எதிர்ப்புகள் ஒருவழியாக சமாளிக்கப்பட்டன.  அவளுக்கு டாக்டர் பட்டம் அளிக்க பதுவா பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் இறுதிக்கட்டமாக, அறிஞர், நிபுணர் குழுவொன்றினால் அவள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவாளென அறிவிக்கப்பட்டது. பல்கலையின் மாணவர்கள், பழைய மாணவர்களோடு, இத்தாலியின் ஏனைய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வெனிஸ் செனட்டர்கள்,  பல்துறை அறிஞர்கள் உட்பட பலர், இதுவரை நிகழ்ந்திராத,  அந்த நம்பமுடியாத காட்சியைப்  பார்க்க விரும்பியதால், பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வை நடத்தமுடியாது எனப் புரிந்துகொண்டார்கள். 1678-ல் அந்த நேர்முகத்தேர்வு பெரும்பாலானோரின் விருப்பப்படி, பதுவா நகரின் கத்தீட்ரல் முன் உள்ள பெரும் மைதானத்தில் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்வின்போது, தேர்வுக்குழுவின் துறைசார்ந்த நிபுணர்களால், சில நேரான, சில கடுமையான, மேலும் சில குண்டக்க மண்டக்கக் கேள்விகளுக்கு ஒரு பெண் – ஆ.. ஒரு பெண் – நேர்கொண்ட பார்வையில், நிதானமாக, தெளிவான குரலில், சரியான பதிலளித்தது, அனைவரையும் வாய்பிளக்கவைத்தது. அட, இப்படியெல்லாமா இந்த நாட்டில் நடக்கும் ! நேர்முகத்தேர்வுக்குப் பின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிஞர்கள், செனட்டர்கள் என குழுமியிருந்த பிரமுகர்கள்முன் பேச அழைக்கப்பட்டாள் அவள். தனது வளமான குரலில், க்ளாசிக்கல் லத்தீன் மொழியின் அழகுபொங்க,  சுமார் ஒருமணிநேரம் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் படைப்பு ஒன்றைப்பற்றி தத்ரூபமாக விளக்கி அவள் பேசியபோது, அனைவரும் அசையாதிருந்து, உன்னிப்பாக அவளது பேச்சைக் கேட்டார்கள். இறுதியாக, அந்த அதிசயப்பெண், உயர் மதிப்பெண்களுடன் டாக்டர் பட்டத்திற்கு தேர்வாகிவிட்டதாக பல்கலைக்கழகக் குழுவினரால்  அறிவிக்கப்பட்டபோது, பதுவா நகர் மட்டுமல்ல, கேள்விப்பட்ட முழு இத்தாலியே ஆச்சரியத்தில் உறைந்தது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் செய்தி வேகமாகப் பயணித்து பெரும் அதிர்ச்சியைத் தந்தது.   என்ன! நிஜந்தானா? ஒரு லேடி  பி.ஹெச்.டி..?

1678-ஆம் ஆண்டிலேயே, பதுவா பல்கலைக்கழகம் அவளை கணிதப் பேராசிரியராக நியமனம் செய்தது. பேராசிரியராகப் பணியாற்றியபோதும் மேலும் படிப்பு படிப்பெனவே அவள் மனம் சென்றது.  அவளது படிப்பும், பண்பும், உழைப்பும், மாட்சிமையும் ஐரோப்பாவின் கல்விவெளியில்  நன்கு பரவ ஆரம்பித்திருந்தது.

என்ன தோன்றியதோ அவளுக்கு, தன் 11-ஆம் வயதில்,  வாழ்நாள் முழுதும் கன்னியாகவே இருப்பேன் என சங்கல்பித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.  அப்படியே இருக்கவும் செய்தாள். பின்னாளில், அவளுடைய தகுதிக்கு ஏற்ற சில அழகான ஆண்கள் அவள் கரம்பற்ற விரும்பியபோதும், இணங்கவில்லை அவள். டாக்டர் பட்டம் பெற்றபின், அடுத்த ஏழாண்டுகள் மேலும் படிப்பிலேயே ஆழ்ந்திருந்தாலும், தான, தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினாள். அவளுடைய 38-ஆவது வயதில் கொடும் காசநோய் அவளைத் தாக்கியது. அதே வருடம்(1684), இவ்வுலக வாழ்வினிலிருந்து விலகிச் சென்றாள் அவள். வெனிஸ், பதுவா, ஸியெனா, ரோம் நகரங்களில் அவளுக்காக சிறப்பு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அவள் படித்த பதுவா பல்கலைக்கழகம், தன் வளாகத்தில் அவளை சிலை ரூபமாக வரித்து வைத்துக்கொண்டது.

ஆண்களுக்கு நிகரான பெண்களின் சமத்துவம், முன்னேற்றம் நிகழ்ந்திராத ஒரு பின்புலத்தில், அந்தக் காலத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக் கலக்கிய,  உலகின் முதல் பெண்மணி எனப் போற்றப்படுகிறார்  இத்தாலிய தர்க்கவியலாளரும் (logician), அறிஞருமான எலினா பிஸ்கோப்பியா (Elena Piscopia). (முழுப்பெயர் Elena Cornaro Piscopia).  பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் (degree) வாங்கிய உலகின் முதல் பெண்ணும் இவரே.

Lady Elena, Lady Cornaro என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட எலினா பிஸ்கோப்பியாவின் வாழ்வுபற்றி ‘The Lady Cornaro : Pride and Prodigy of Venice’ எனும் ஒரு புத்தகம் 1999-ல்  Jane Smith Guernsey எனும் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது.

**

Picture courtesy: Google

சுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்

சுஜாதா ஒரு கவிதை  ப்ரியர். தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலக் கவிஞர்களையும் ஆசையாகப் படித்திருக்கிறார். அவர் யாரைத்தான், எதைத்தான் படிக்காமல் இருந்திருக்கிறார்? அல்லது  படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார்? சங்கக் கவிதையாக இருக்கட்டும்; சற்றுமுன் பிறந்து எழுத ஆரம்பித்துவிட்ட  கவிஞனாக இருக்கட்டும். தன்னிடம் வந்துசேர்ந்தால், அவர் அதை அக்கறையோடு படித்திருக்கிறார். தன் வாசகர்களுக்காக அதை எழுதி வைத்திருக்கிறார்.

அமெரிக்க சமகாலக் கவிஞரான ஆக்டன் நாஷ்-ஐ (Ogden Nash), ஐயா ரசித்திருக்கிறார் என அவரது கட்டுரை ஒன்றிலிருந்து தெரிகிறது. யாரிந்த நாஷ் எனத் தேடியபோது அவரைப்பற்றி இப்படி ஒரு கமெண்ட் கிடைத்தது: An Ogden Nash poem a day, keeps the sadness away ! அட, அமெரிக்க ஆப்பிளே! மரபிலிருந்து மாறுபட்டு, சுயமாக  வார்த்தைகளை சிருஷ்டித்தும்கூட எழுத்தில் சாகஸம் காட்டியவர் நாஷ். மென் கவிதைகள். எளிதாகத் தோன்றும் வரிகளில், ஹாஸ்யத்தோடு, தன்னை சுற்றி இருக்கும் சூழலின் ஆழ்ந்த அவதானிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் .

அவரது சிறு கவிதைகள் சிலவற்றை எடுத்து, இங்கே மொழியாக்கம் செய்திருக்கிறேன்:

 

நடுவில்

காலையை எப்படியெல்லாம் தொடர்ந்தது மாலை

கடந்துபோன அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்

எனக்குப் பிடித்தமான எவ்வளவோ விஷயங்கள்

இன்னும் இருக்கின்றன மறைந்துவிடவில்லை

இன்னமும் எனக்குப் பிடிக்கும் பல சங்கதிகள்

இன்னும்.. பிறக்கவே இல்லை

**

இந்தக் குயில்கள்

குயில்கள் மரபெதிர் வாழ்க்கையையே வாழ்கின்றன

கணவனாக மனைவியாக அவை தோற்றுப்போகின்றன

அதனால் மற்றவைகளின் மணவாழ்க்கையை

மறவாது தூற்றிப் போகின்றன..

**

அணில்

நான் கூச்ச சுபாவமுடையவன்

என் நண்பர்களனைவருக்கும் தெரியும்

என்னைவிட இரட்டிப்புக் கூச்சம்

அந்த அணிலுக்கு உண்டு

சின்னத்திரையின் ஒளிர்வரிகளைப்போல்

தீர்மானிக்கமுடியா மனதோடு

திகைப்போடு தாவும் இங்குமங்கும்

மேகத்தின் நிழலைப்போன்றது அல்லது

எமிலி டிக்கின்சனின்* சத்தமாக

வாசிக்கப்பட்ட கவிதை.

* Emily Dickinson: ‘The poet of paradox’ என அழைக்கப்பட்ட, 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண் கவிஞர்.

மோசமான தாத்தா

 

அப்பறமா வாங்கித்தரேண்டா கண்ணு!

என்று தாத்தா சொன்னாரானால்

எப்போதுமே அது கிடைக்கப்போவதில்லை

எனப் புரிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு

பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை

*

விளம்பரப் பலகைகள்

 

மதர்ப்பாய் உயர்ந்து எங்கும் நிற்கின்றன

இந்த விளம்பரப் பலகைகள்

இதுகள் ஒழிந்தாலன்றி

மரங்களைப் பார்க்கும்

வாய்ப்பு வரப்போவதில்லை

**

அவன்

 

இந்தக் கல்லுக்குக் கீழேதான்

அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான்

விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டே வந்தவன்

வீதியைப் பார்க்க மறந்துவிட்டான் !

**

வள்ளுவர் பாணியில், கபீரின் சாயலில், க்ரிஸ்ப்பான   ஈரடிக் கவிதைகள் சில எழுதியிருக்கிறார் நாஷ். அதில் ஒன்றை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன்.  மொழியாக்கம் செய்தால், முக அழகு  போய்விடும்!

God, in his wisdom,  made the fly

And then,  forgot to tell us why

**

கவிஞன் என்பவன் ஒரு கடவுள். அவனது எழுத்து அவனது சிருஷ்டி. அது எப்படியோ அது அப்படித்தான். இலக்கண சட்டகங்களை மற்றும் அற்பமான அளவுகோல்களைத் தாண்டியது அவனது கலை, என இங்கே புரிதல் வேண்டும். கீழ்வரும் கவிதையில், இலக்கணக்குற்றம் ’கண்டு’ முகம் சுழிக்கும் ’பண்டிதர்கள்’, இந்த இடத்தில் விலகிக் கொள்ளுங்கள். ஆசுவாசமடையுங்கள். ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக!

நாஷின் ஒரிஜினல், அப்படியே கீழே: ( மொழியை மாற்றுகிறேன் எனக் கையை வைத்தால் கழண்டுகொண்டுவிடும் எல்லாம் !)

Octopus

Tell me, O Octopus, I begs
Is those things arms, or is they legs ?
 
I marvel at thee, Octopus
 
If I were thou, I’d call me Us
 

(ரசித்த சுஜாதா, தன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட நாஷ் கவிதைகளில் இதுவும் ஒன்று!)

**

என் கனவு

 

இது என் கனவு

என் சொந்தக் கனவு

நான்தான் அதைக் கண்டேன்

என் தலைமயிர் ஒழுங்காக

வாரப்பட்டிருப்பதாக கனவு கண்டேன்

அப்புறம் இன்னொரு கனவும் கண்டேன்

என் உயிர்க்காதலி வந்து

அதைக் கலைத்துவிட்டதாக!

**

இன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை

 

இன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை

இறைவன் புரிந்துகொள்வார் நம்புகிறேன்

நீலமும் வெள்ளையுமாய் பொங்கும் கடல்

மணலில் சுற்றிச்சுற்றி மழலைகள் குழந்தைகள்

கோடைநாட்கள்* எவ்வளவு குறுகியவை

எனது காலமும்தான் எவ்வளவு குறைவானது

அவருக்குத் தெரியும் எல்லாம்

களித்து முடித்து அங்கு நான் வரும்போது

கடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்

**

* இது அமெரிக்கக் கோடை எனப் புரிந்துகொள்க !

 

 

 

 

ஞானத்தின் ஒரு பொட்டு விதை

19-20 -ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் மெய்யியல் ஞானி, கவிஞர், ஓவியர், சிற்பி என்றெல்லாம் எண்ணற்ற அபிமானிகள்,வாசகர்கள், ரசிகர்களின் வர்ணனைகள். மத்திய கிழக்கில், லெபனானில்  ஒரு மலைக் கிராமத்தில் (அந்தக்காலத்திய சிரியப் பகுதி) பிறந்து வளர்ந்து, அந்தப் பிரதேசத்தின் ஒரு மோசமான அன்னிய ஆதிக்கப் பின்புலத்தில், குடும்பத்துடனும் மற்றவர்களுடனும் லெபனானிலிருந்து புறப்பட்ட கப்பலொன்றில் ஏறி, அதுகொண்டுபோய்விட்ட தேசமான அமெரிக்காவில், புலம்பெயர்ந்து வாழ நேர்ந்தது அவருக்கு. நியூயார்க்கில் இளமைக் காலத்தைக் கழித்தவர். இளமைக்காலமா? உண்மையில், முதுமையின் பக்கமே அவர் வரவில்லை. 47-ஆவது வயதிலேயே ’போதும், வா!’ என்றுசொல்லிவிட்டதுபோலும், அந்த உலகம். அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியவர். ‘தி ப்ராஃபிட் (The Prophet) அவருடைய உலகப்புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு. வசன கவிதையாகப் பொழிந்திருக்கிறார் மனுஷன். ’முறிந்த சிறகுகள்’ (The Broken Wings) – அரேபிய மொழியில் அவரது முதல் நாவல் – பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பெரும்பாலான அவரது படைப்புகள் நண்பர்களுக்கு என எழுதப்பட்ட அரேபிய மற்றும் ஆங்கில மொழி கடிதங்களை ஆதாரமாகக்கொண்டவை.  சிறந்த ஓவியங்கள் பல வரைந்திருக்கிறார் எனினும் அவை லெபனானுக்கு அனுப்பப்பட்டதால், மேலைநாட்டு ரசிகர்கள், விமரிசகர்களின் பார்வையில் வரவில்லை. ஆகவே அதிகம் பேசப்படுவதில்லை.

ஒரு தேவதை போல,  காலமெனும் வெளியைக் கடந்த ஞானியாக, அவரை  மதித்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அதில் சிலர், அவரது வார்த்தைகள் யேசுவையும், பழைய ஏற்பாட்டின் கருத்துக்களையும் எதிரொலிப்பதாகக் கூறுகின்றனர். உலகின் மற்றுமொரு பகுதியில், அவரை ஆபத்தானவராக, இளைஞர்களுக்கு விஷம் ஊட்டும் பாவியாகப் பார்த்து வெறுத்தவர்களும்  இருந்திருக்கிறார்கள். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அவரது அரேபியப் படைப்பான ‘Spirits Rebellious’ (புரட்சி ஆன்மாக்கள்) கட்டுக்கட்டாக  வீதியில் போட்டுக் கொளுத்தப்பட்டது. அவருக்கெதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran).

’ஆன்மாவின் கண்ணாடிகள்’ எனும் அவரது புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கொஞ்சம் சிந்திக்கவைத்தது; கொஞ்சம் ஆழத்தில் அழுத்தி வேடிக்கை பார்த்தது.  லேசாக, பகிர்கிறேன்.

**

இந்த பூமி மூச்சுவிடுகிறது. நாம் வாழ்கிறோம். அது கொஞ்சம் நிறுத்திப்பார்க்கையில், நாம் இறந்துவிடுகிறோம்.

**

அழவைக்காத ஞானம், சிரிக்கவைக்காத தத்துவம், குழந்தைகளின் முன் பணியவைக்காத உயர்வு, புகழ் இவற்றிலிருந்து என்னைத் தள்ளி வை, இறைவா..

**

நம்மிடையே கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தக் கொலையையும் செய்ததில்லை. திருடர்கள் இருக்கிறார்கள். எதையும் அவர்கள் திருடியதில்லை. பொய்யர்கள் இருக்கிறார்கள். உண்மையைத் தவிர வேறெதையும் அவர்கள் பேசியதில்லை.

**

அடுத்தவீட்டுக்காரனிடம் உன்னைப் பாதிக்கும் பிரச்னைபற்றி நீ பிரஸ்தாபிக்கையில், உன் இதயத்தின் ஒரு பகுதியை  அவனுக்குக் காண்பிக்கிறாய். அவன் அருமையான ஆத்மாவானால், உனக்கு நன்றி சொல்கிறான். சிறுமனதுக்காரன் எனில், உன்னைக் குறைசொல்லி ஏளனம் செய்கிறான்.

**

எதையும் மறுப்பதென்பதும், எதிலும் வேறுபடுவது என்பதும், மனித அறிவின் (intelligence) கீழ்நிலையே.

**

எவ்வளவு உச்ச ஆனந்தம் அல்லது துக்கத்தில் நீ இருக்கிறாயோ, அதற்கு எதிர்விகிதமாக, உன் கண்களுக்கு இந்த உலகம்  சிறியதாகத் தோன்றும்.

**

வீரம் என்பது ஒரு எரிமலை. குழப்பத்தின் விதை அதற்குள்ளே முளைக்காது.

**

பிரபஞ்சத்தில் ஒளிந்துகொண்டிருக்கும், பிரபஞ்சத்திலேயே, பிரபஞ்சத்திற்காகவே  இருக்கும் ஓ! உயர் ஞான வடிவே! நான் சொல்வதைக் கேட்க உன்னால் முடியும் – ஏனெனில், எனக்குள்ளேயேதானே இருக்கிறாய் நீ. என்னை உன்னால் பார்க்கமுடியும் ; நீதான் அனைத்தையும் பார்ப்பவனாயிற்றே. உனது ஞானத்தின் ஒரு பொட்டு விதையை என் ஆன்மாவுக்குள் விதைத்துவிடு. உன் காட்டில் அது முளைத்து வளர்ந்து, உன் பழமொன்றைத்  தரட்டும்.

**

குறிப்பு: கொஞ்சம் இடைவெளிவிட்டு, ஜிப்ரான் பற்றி மேலும் எழுதுவேன் எனத் தோன்றுகிறது ..

எனக்காகப் பரிந்துகொண்டுவந்த அம்மா ..

 

ஒன்பது வயதுதானிருக்கும் எனக்கு அப்போது. அன்று அந்த பெரிய லைப்ரரியில் முன்பு எடுத்த புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தபின், வரிசை வரிசையாக நின்றிருந்திருந்த விதவிதமான புத்தகங்களை, ஆசை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா திரும்பி வந்து என்னை பிக்-அப் செய்யுமுன், ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டும்.

அப்போதுதான் என் கண்ணில் பட்டது அந்தப் புத்தகம் . பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. குறிப்பாக  அட்டையில் வரையப்பட்டிருந்த அந்தப் படங்கள்..ஆஹா! என்ன அழகு.. உள்ளே கடலுக்கடியில் ஏதோ இருப்பதாக…ஒரு புது உலகத்தை அல்லவா அது காண்பித்தது. கடலுக்கடியில் வாழ்வது என்கிற ஐடியாவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு பெரிய புத்தகம் என்பதோ, அதன் எழுத்துக்கள் சிறியதாக, நெருக்கமாக அச்சடிக்கப்பட்டிருந்ததோ எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. நான் அதையெல்லாம் பார்க்கவேயில்லை. அதைத் தூக்கிக் கொண்டு லைப்ரரியன்  முன் வந்து நின்றேன்.

லைப்ரரியன் அந்தப் புத்தகத்தைப் பார்த்தார். ‘Twenty Thousand Leagues Under the Sea’  by Jules Verne. பிறகு குனிந்து என்னை ஆழமாகப் பார்த்தார். என்ன பார்க்கிறார்? நானும் குனிந்து என்னை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். சட்டையை நான் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கவில்லை.. என் ஒரு காலின் ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டிருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ’இந்தப் புத்தகம் உனக்குக் கடினமானது!’ அதைத் தூக்கித் தன் பின்னாலிருந்த ஒரு ஷெல்ஃபின் வரிசையில் போட்டார். அதற்கு ஒரு லாக்கரிலேயே அதை வைத்துப் பூட்டியிருக்கலாம் எனத் தோன்றியது எனக்கு. ஏமாற்றத்துடன், தலை குனிந்தவாறு திரும்பினேன். மேற்கொண்டு குழந்தைகளுக்கான புத்தகப் பகுதிக்கு வந்தேன். குரங்குப் படம் போட்ட ஒரு படக்கதைப் புத்தகம். எடுத்துக்கொண்டு லைப்ரரியனிடம் வந்தேன். அவர் அதை உடனே ஸ்டாம்ப் அடித்துக் கொடுத்துவிட்டார்.

சிறிது நேரத்தில் என் அம்மா. லைப்ரரி முன் எங்கள் கார் மெல்ல வந்து நின்றது. நான் லைப்ரரி வாசல் கதவைத் திறந்துகொண்டு இறங்கினேன். காரில் ஏறி அம்மாவுடன், முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டேன். மடியில் அந்த குரங்குப் புத்தகம்.  அம்மா இக்னிஷனை ஸ்டார்ட் செய்தாள். கார் நகர்ந்தது. மெல்ல என் புத்தகத்தை நோட்டம் விட்டாள்.

‘நீ இந்தப் புத்தகத்தை முன்பே படித்திருக்கவில்லை?’  கேட்டாள் அம்மா.

’ம்..!’ என்றேன் எங்கோ பார்த்துக்கொண்டு.

’பின் ஏன் வேறொரு புத்தகம் எடுக்கவில்லை?’ மீண்டும் விடாது அம்மா.

”அது எனக்குக் கடினமானதாம். அவர் சொன்னார்..’ என்றேன்.

’யார் அந்த அவர்? என்ன கடினமானது உனக்கு?’

’அந்த லைப்ரரியன் லேடிதான் அப்படிச் சொன்னது!’.

அம்மா வண்டியை உடனே திருப்பினாள். மீண்டும் லைப்ரரி முன்வந்து நின்றாள். என்னை அழைத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். கதவைத் திறந்துகொண்டு லைப்ரரிக்குள் சென்றோம். லைப்ரரியன் முன் நாங்கள் இருவரும் இப்போது.  என்ன? – என்பதுபோல் எங்கள் இருவரையும் பார்த்தார் அந்த லைப்ரரியன்.

’ஏதோ கடினமானது இவனுக்கு என்று சொன்னீர்களாமே!’ – அம்மா ஆரம்பித்தாள். குரலில் சற்றுக் கோபம்.

லைப்ரரியனின் முகம் இறுகியதைப் பார்த்தேன். பின் பக்கம் திரும்பி ஷெல்ஃபிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தார். மேஜையின் மேல் வைத்தார்:

‘ஜூல்ஸ் வர்ன்’-இன்,  ’ட்வெண்ட்டி தௌஸண்ட் லீக்ஸ் அண்டர் த ஸீ ! ’ என்றார் புத்தகத்தைக் காண்பித்து. இப்போ புரியுதா இது இவனுக்கு சரியா வராதுன்னு என்பதுபோலிருந்தது லைப்ரரியனின் பார்வை.

என் அம்மா புத்தகத்தை சரியாகப் பார்க்கக்கூட இல்லை. ’இதை இஷ்யூ பண்ணுங்கள் முதலில்!’ என்றார் குரலை உயர்த்தி, அழுத்தமாக. வயது முதிர்ந்தவர்களிடம் இப்படியெல்லாம் பேசுபவளில்லை,  என் அம்மா . நான் பயந்துபோனேன்.

லைப்ரரியன் வேறு வழியின்றி அதனை ஸ்டாம்ப் செய்ததுதான் தாமதம்.

’இனிமேல் இவனுக்கு எதுவும் கடினமானது என்று சொல்லாதீர்கள்!’ அம்மா அதனை உடனே எடுத்து என் கையில் திணித்தாள்.

‘வா!’ என்று என்னிடம் சொல்லிவிட்டு வேகமாகக் கதவை நோக்கி நடந்தாள். அம்மாவின் பின்னே புத்தகத்துடன் ஓடினேன். கதவைத் திறந்து காரில் ஏறினாள். நான் அம்மாவுக்கருகில் உடனே தவ்வி உட்கார்ந்துகொள்ள, காரை ஸ்டார்ட் செய்து வேகமெடுத்தாள். நாங்கள் இருவரும் ஏதோ ஒரு வங்கியைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடுவதுபோன்ற குற்ற உணர்ச்சி பரவியிருந்தது என் மனதில். கூடவே, போலீஸ் நம்மைத் துரத்திக்கொண்டுவருவார்கள்.. நாம் மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதுபோன்ற கடும் அச்சம். பதற்றத்துடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். சலனமில்லை. நிதானமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்..

*

நாம் மிகவும்  நேசிக்கும் ஒரு நபருடன் கழிக்க, மீண்டும் ஒரு நாள் கிடைத்தால், அந்தப் பொழுதை எப்படி செலவழிப்போம்  என்கிற ஏக்கமான சிந்தனை எழுப்பும் நெருக்கமான உணர்வினைப்பற்றிச் சொல்கிறது, அமெரிக்க எழுத்தாளரான மிட்ச் ஆல்பம் எழுதிய ’இன்னுமொரு நாளுக்காக’ (‘For one more day’ by Mitch Albom) என்கிற தத்துவார்த்தமான நாவல்.

மேலே நான் எழுதியிருப்பது, ‘For One More Day’-ல், தன் அம்மா சம்பந்தப்பட்ட சிறுவயது நிகழ்வொன்றை, பிற்காலத்தில் ஹீரோ அசைபோடும் அத்தியாயம் ஒன்றிலிருந்து.

மேலும் –

Mitch Albom, American Writer

எழுத்தாளர்களின் பாடு பெரும்பாடுதான்போலிருக்கிறது எங்கும். இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டு படைப்பு/பதிப்புச் சூழல் மிகவும் அபத்தமானது. வெளிநாடுகளில் இவ்வளவு மோசமில்லை. பிரசுரித்து வெளியிட்டுவிடலாம், ஓரளவு முயற்சியும், வசதியும், சரியான தொடர்பும் இருந்தால். ஆனாலும்  எழுத்தாளன் என்றாலே, ஒரு எகத்தாளம்தான், கிண்டல்தான், கேலிதான் அங்கும்.  ஒரு பிரபல அமெரிக்க பிரசுரிப்பாளர், எழுத்தாளர் மிட்ச் ஆல்பமிடம் சொன்னது: ‘உங்களால், கடந்தகால நினைவுகளின் தொகுதி (Memoirs) ஒன்றை எழுதவேமுடியாது !’ பப்ளிஷிங் ஹவுஸ் நடத்துபவர்கள், பணம்படைத்தவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் உலகெங்கும். இதையெல்லாம் தாண்டித்தான், எழுத்தாளர்கள் முளைவிட்டு வளரவேண்டியிருக்கிறது..

**

அம்பை சிறப்பிதழாக ‘சொல்வனம்’

 

இணையத்தில் பத்தாண்டுகளாக சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கலை, இலக்கிய இதழான ’சொல்வனம்’, தனது 200-ஆவது இதழை எழுத்தாளர் அம்பை சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.

     தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பொதுப் பிம்பத்திலிருந்து வெகுவாக விலகி, வேறுபட்டு, கூர்மையான சமூக, பெண்ணிய வெளிப்பாட்டுடன் நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் அம்பை, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட.  அவருடைய சில கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றுடன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணநிலவன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் அம்பையின் எழுத்துபற்றி தீட்டியிருக்கும் கட்டுரைகளும் சிறப்பிதழை செழுமைப்படுத்துகின்றன. 

இதழ் முகவரி : solvanam.com.  அன்பர்கள் வாசித்து மகிழலாம்.

இதழின் கடைசிப் பகுதியில், ’ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது’ என்கிற என் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.

**