லட்டு கோபால் !

ஜென்மாஷ்டமி. ஸ்ரீஜெயந்தி. கிருஷ்ண பகவானின் அவதார தினம். இப்படி பல அலங்காரமொழிகள் இந்த நாளுக்கு. சீடையும், முறுக்கும் இன்னபிறவும் வாயில் வரிசையாக நொறுங்கும் மாலைப்பொழுது ஒரு இனிய கனவுபோல் வருகிறது.. நிஜமாய். மனதில் சதா உலவும் பால்யத்தின் கொண்டாட்ட அனுபவங்கள்.

கிருஷ்ணனுக்கு என்னென்ன பிடிக்கும் என்றெல்லாம் அந்தக் காலத்திலே கற்பனை செய்தவர்கள்,  தங்களுக்குப் பிடித்த பட்சணங்களை அப்படியே நைஸாக சேர்த்திருப்பார்கள் லிஸ்ட்டில்! வருஷத்தில் ஒருநாளாவது வாய்க்கு ருசியாகக் கிருஷ்ணனின் புண்யத்தில் கரகர, மொறுமொறுவென்று கிடைக்கட்டுமே என்கிற உன்னத எண்ணமே காரணம். கிருஷ்ணனின் பெயரைச் சொன்னால் பெண்கள் வேகவேகமாக பட்சணத் தயாரிப்பில் இறங்கிவிடுவார்கள்! உப்புச்சீடை, வெல்லச் சீடை, முறுக்கு இத்யாதி தின்பண்டங்களில் குழந்தைகளுக்கு பேரிஷ்டம்தான். அவர்களைவிடவும் தாத்தா, பாட்டிகளுக்குத்தான் இந்த சங்கதிகளில் மோகம் அதிகமோ எனவும் தோன்றுகிறது. ஆனால் இப்போதெல்லாம், தாத்தா பாட்டிகளைப் பிடித்து எங்கெங்கோ அடைத்துவிட்டு, கேர், ஹோம் என்றெல்லாம் அதற்கு நாமகரணம் சூட்டி, சமாதானம் சொல்கிறார்களே சிலர். அந்தக் கோகுல கிருஷ்ணனுக்கு இதெல்லாம் தெரியாமலாயிருக்கும்.. இருந்தும், புல்லாங்குழலில் பிஸி !

சில நாட்களாகவே வீட்டில் தீவிரமெடுத்த டிஸ்கஷன், ஸ்ரீஜெயந்திக்கு என்னென்ன பட்சணம் செய்யலாம்.. போனவாரம் பெருமாள் கோவிலுக்குப் போயிருந்தபோது, பெங்களூர் ப்ரூக்ஃபீல்டில் உள்ள இஸ்கான் (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா) அமைப்பினர், வண்ணக்காகிதத்தை நீட்டினார்கள். ஜன்மாஷ்டமி அன்று இரவு ஆரத்தி உண்டு. பக்தகோடிகள் கிருஷ்ணனுக்கு உகந்த பிரசாதமாக எதை செய்துகொண்டுவந்து கொடுத்தாலும், கிருஷ்ணகானம் பாடி, நைவேத்யம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தருவோம். செய்து வாருங்கள் என்பது பக்தி அழைப்பு. அதற்கு சர்க்கரைப் பொங்கல், முறுக்கு செய்து தரலாம் எனக்  காலையில் முடிவு. 

இது அப்படியிருக்க, காலையில் நெட்டில் சேதிகளைப் பார்க்கலாம் என லேப்டாப்பை ஆன்செய்தால், கிரிக்கெட், அரசியல் என வழக்கம்போல் தேடுகிறது கண். முன்னால் வந்து ஆடுவதோ மயிலிறகும். புல்லாங்குழலும். ஓ.. கிருஷ்ண ஜெயந்தியா எனப் பார்க்க,  ஒரு கட்டுரை  குறிப்பாக நாலு ராசிக்காரர்களைப் பரவசப்படுத்தப் பார்க்கிறது! பகவான் கிருஷ்ணனின் அனுக்ரஹம், கருணை லோகத்தில் அனைவருக்குமானது என்பதில் என்ன சந்தேகம்? இருந்தாலும், அவனுடைய விசேஷக் கவனிப்பு இந்த நாலு ராசிக்காரர்களின் மீதுதானாமே.. அட! ஆங்கிலப் பத்திரிக்கை ஆர்ட்டிக்கிள் ஆனதால், ராசி சக்கரத்திலிருந்து (பிறப்பின் ஆங்கில மாதக் கணக்குப்படி) இது சொல்கிறது: குறிப்பிடப்பட்ட ராசிகள் (Zodiac signs) நான்கு: Taurus ரிஷபம் (ஏப்ரல் 20- மே 20), Cancer கடகம் (ஜூன் 21-ஜூலை 22), Leo சிம்மம் (ஜூலை 23-ஆகஸ்டு 22) Libra துலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22). இந்த ராசிக்காரர்களின் மேல் ஸ்ரீகிருஷ்ணனின்  கருணைக்கண் பட்டவாறே இருக்குமாதலால், அவர்களுக்கு வாழ்வில் பலவாறான வெற்றிகளும், சந்தோஷமும் உண்டாகும் என்கிறது பொதுவாக. குறிப்பாக Cancer (கடகம்) காரர்கள் விஷயத்தில் ஏதோ வித்தியாசமாகச் சொல்கிறதே. என்ன!  அவர்கள் எதைச் செய்தாலும் இறுதியில் வெற்றிபெறுவார்கள் என்பதோடு நிறுத்தாமல் மேலும்: ஜென்மத்தின் முடிவில் முக்திநிலையை அடையும் பாக்யத்தை அவர்களுக்கு அருள்கிறான் கிருஷ்ணன் என்கிறது. இப்படி ஒரு விசேஷத்தை வேறெங்கும் காணவில்லையே. சின்னக்கிருஷ்ணா.. செல்லக்கிருஷ்ணா! உண்மைதானே இது? விளையாட்டில்லையே!

ஆகையால் விசேஷமாக இந்த நாலு ராசிக்காரர்கள் கிருஷ்ண மனநிலையில் எப்போதுமிருக்கவேண்டும். (இதைத்தான் Krishna Consciousness என்கிறார் ஸ்வாமி பிரபுபாதா. ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என உலகெங்கும் ஆடிப்பாடிப் பரவும் ISKCON அமைப்பின் ஸ்தாபகர்). அவனை தினம் தியானித்து, வணங்கிவந்தால் கைமேல் பலன், மனதுக்கு நிம்மதி என பக்தி உரை. அதை வாசிக்கையில் கண்ணில்பட்ட மேலும் இரண்டு வார்த்தைகள் காலைநேரத்தில் புன்னகையை வரவழைத்தன: லட்டு கோபாலையும், ராதா ராணியையும் தினம்தினம் கும்பிட்டு மகிழ்வோம்!

லட்டுதான் நீ! அதற்காக எடுத்து வாயில் போட்டுக்கொள்ளமுடியுமா என்ன! உன் வாய்க்குள்தான் உலகமே இருப்பதைக் கண்டாளே உன் அன்னை..

ராதே..கிருஷ்ணா !

**

பௌத்தம் – குஷிநகரில் புத்தர்

சொர்கத்திலிருந்து புத்தர் பூமிக்குத் திரும்பிய நாள் என இந்தியாவிலும், பௌத்தமதத்தைப் பிரதான மதமாகக் கொண்ட தாய்லாந்து, மயன்மார், கம்போடியா, ஸ்ரீலங்கா, தென்கொரியா, பூட்டான் போன்ற  நாடுகளிலும் கொண்டாடப்படும் விசேஷமான தினம் இன்று (20/10/21). ’அபிதம்மா தினம் ’(Abhidhamma Day). தான் மறைந்த பிறகு, மூன்று மாதங்களுக்குப் பின் இந்த நாளில்தான், இந்தியாவின் குஷிநகரில் புத்தர் மீண்டும் காட்சியளித்தார் என்கின்றன பௌத்த இலக்கியங்கள்.

Ramabhar Stupa was built over a portion of the Buddha's ashes on the spot where he was cremated by the ancient Malla people.
ராமாபர் ஸ்தூபி, குஷி நகர், உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசத்திலுள்ள குஷிநகரில் உள்ள மகாபரிநிர்வாணா பௌத்த கோவிலில் ‘அபிதம்மா தினம்’ வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது. பௌத்தமதத்தினர் பலர்,  பிஷுக்கள் ஆகியோர் தாய்லாந்து, ஸ்ரீலங்கா, பூட்டான், நேப்பாள், மயன்மார் ஆகிய நாடுகளிலிருந்து குஷிநகருக்கு வந்து புனிதவிழாவில் கலந்துகொண்டனர்.  6 அடி நீள புத்தர் சயனக்கோலத்தில் அழகாகக் காட்சிதருகிறார் இங்கு. இந்த பரிநிர்வாணா புத்தர் சிலை 1876-ல் பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, பின் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.  உலகெங்குமுள்ள பௌத்தர்கள் தங்களின் புனிதஸ்தலங்களில் மிகவும் விசேஷமானது எனக் குஷிநகரைக் கொண்டாடுகின்றனர். இங்குள்ள  ஹிரண்யாவதி ஆற்றின் கரையிலே, புத்தர் தன் கடைசிக்காலத்தை, தன் அன்யோன்ய சிஷ்யர்களுடன் கழித்திருக்கிறார். தன் அந்திமசமயத்தில் புத்தர் குஷிநகரில், அங்கிருந்த மரங்கள் நிறைந்த ஒரு தோப்புக்கு வர, அங்கு பூத்துக்குலுங்கிய  ’சால மரங்களின்’ (Sala trees) பேரழகில் லயித்தவாறு அந்த இடத்திலேயே அவர் படுத்திருக்க அவரது உயிர் பிரிந்ததாகவும்,  அதே இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் ’மகாயான மகாபரிநிர்வான சூத்திரம்’ (Mahāyāna Mahāparinirvāṇa Sūtra) எனும் பௌத்தநூல் கூறுகிறது.  இங்குள்ள ’ராமாபார் ஸ்தூபி’ (Ramabar Stupa) கட்டப்பட்டுள்ள இடத்தில்தான், குஷிநகர் பிரதேசத்தில் அக்காலத்தில் வசித்துவந்த ‘மல்லர்’ (Mallas) இனத்தினரால், கௌதம புத்தரின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. ’மல்லர்’ இனத்தலைவனான குஷிநகரை அப்போது ஆண்ட மன்னனே புத்தர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னமாக இந்த ராமாபார் ஸ்தூபியை நிறுவியவன்.

குஷிநகரின் புராணப்பெயர் குஷாவதி. ராமபிரானின் இரு மகன்களில் ஒருவனான மன்னன் குஷனின் ஆட்சியில், அவன் பெயரால் இந்நகரம் புராணகாலத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. (’குஷ்’ எனும் ஒருவகை புல் மண்டிக்கிடந்த பிரதேசமானதால் இது ‘குஷாவதி’ என அந்தக்காலத்தில் வழங்கப்பட்டது எனச் சொல்வோருமுண்டு). கி.மு. 3-5-ஆம் நூற்றாண்டுவாக்கில் இந்த நகரில் பல பௌத்தவிஹாரங்களும் ஸ்தூபிகளும் இருந்தன. பேரரசன் அசோகன் பலவித பௌத்த நினைவுச்சின்னங்களை குஷிநகரைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் நிர்மாணித்திருக்கிறான். பிற்கால மொகலாயப் படையெடுப்புகளின்போது இவை தாக்குதலுக்குள்ளாகி, சிதைவுற்றன. கவனிப்பாரற்று சில நினைவுச்சின்னங்கள் மண்ணிலும் புதைந்துபோயின. Buddha relics  என அழைக்கப்படும் கௌதம புத்தரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட (அவர் பயன்படுத்திய சில பொருட்கள், அவருடைய எலும்புகள், சாம்பல் போன்றவை) குஷிநகர் பகுதியில்  பிரிட்டிஷ் காலத்தில் பூமிக்கடியிலிருந்து தற்செயலாக ஒரு மரப்பெட்டியில் கிடைத்திருக்கிறது.

குஷி நகர் சர்வதேச விமானநிலையம்

புகழ்பெற்ற மகாபரிநிர்வாணா புத்தர் கோவிலோடு, 19-20ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்து, சீன, ஜப்பானிய கட்டிடக்கலைகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ள புத்தர்கோவில்களும் குஷிநகரிலும்  சுற்றிவரவும் காணப்படுகின்றன. இவையன்றி இந்துமதக் கடவுள்களுக்கான குருகுல்லா ஆஸ்தான், குபேர் ஆஸ்தான், சமண மத தீர்த்தங்கரர்களுக்கான தேவ்ரஹா ஆஸ்தான் போன்ற கோவில்களும் குஷிநகரில் இருக்கின்றன. இந்தியாவில் மதங்கள்பற்றி, குறிப்பாக பௌத்தமதம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும், இளம் பௌத்த பிக்ஷுக்களும், மாணவர்களும் குஷிநகருக்கு அடிக்கடி வந்து போகின்றனர். சிறப்பான சர்வதேச பௌத்த சுற்றுலாத்தலமாக சமீபகாலங்களில் குஷிநகர் மாறியிருக்கிறது.

குஷிநகரில் சர்வதேச விமானநிலையம் கட்டப்பட்டு, பௌத்தர்களின் புனித நாளான ’அபிதம்மா தின’மான இன்று பிரதமர் நரேந்திர மோதியால் திறந்துவைக்கப்பட்டு, தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன், பிரதமர் மகாபரிநிர்வானா கோவிலுக்குச் சென்று புத்தரை வழிபட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். சுற்றுலாவாசிகளை வெகுவாகக் கவர்ந்துவரும் குஷிநகரின் வளர்ச்சியோடு, உத்திரப்பிரதேசம், பீஹாரின் பௌத்தம் தொடர்பான பகுதிகளின் தொழில், கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களும் சமீபகாலத்தில்  முன்னெடுக்கப்பட்டு, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. குஷிநகர் ஏனைய முக்கிய நகரங்களுடன் விமானவழி இணைக்கப்படவுள்ளது.

**

வாழ்க்கை எனும் யோகம்

சில வருடங்களுக்கு முன் ஒரு யோகா நிகழ்ச்சிக்காக வேலாயுதம்பாளையம் எனும் ஒரு கிராமத்தில் தங்கவேண்டியிருந்தது. நான் தங்கவென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு, ஒரு பெரும் குன்றினை எதிர்நோக்கியிருந்தது. ஒரு காலத்தில், சுமார் 1900 வருடங்கள் முன்பு, ஜைனத் துறவிகள் இத்தகைய  மலைப்பகுதிகளில் உலவினார்கள், தங்கி தியானங்களில் ஈடுபட்டிருந்தார்கள், இங்கேயே வாழ்வைக் கழித்தார்கள் என அறிந்திருக்கிறேன். அந்தத் தொன்மைபற்றிய சிந்தனை ஏதோ ஒரு ஆர்வத்தை எனக்குள் உசுப்பிவிட்டிருந்தது. அப்படியென்றால், ஜைன மத ஸ்தாபகரும், குருவுவான மகாவீரரின் காலத்திலிருந்து சில நூற்றாண்டுகள் தாண்டி அவர்கள் இப்போதைய தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கவேண்டும்…

ஒரு மதியப்பொழுதில், என்னோடு வந்திருந்த சிலருடன் குன்றுகளின் மீது ஏறினேன். சற்று உயரம் ஏறிக் கடந்தபின், பறவையின் கூடுபோல அழகாக அமைந்திருந்த  சிறு குகை ஒன்று கண்ணில் பட்டது. இத்தகைய ஒதுக்குப்புறமான இடங்களில் நாம் இப்போதெல்லாம் எதனை எதிர்பார்க்கமுடியும்? அதே காட்சியே அங்கும் காணக்கிடைத்தது. உடைந்த பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்கள், தீப்பெட்டிகள், சுருட்டி எறியப்பட்ட பாலிதீன், காகிதம் என குப்பைகூளங்கள் குகைக்குள் வியாபித்திருந்தன. இந்தியாவின் பல இடங்களில், இதுபோன்ற  ஒவ்வொரு பழங்காலக் குன்றிலும், குகையிலும், அவ்வப்போது அங்கு வரும் சுற்றுலாக்காரர்கள், காதலர்கள் தங்கள் பெயர்களை அழுத்தமாகப் பொறித்துவிட்டுப் போயிருப்பதையும் பார்க்கலாம்.

இந்தக் குகையும் அவைகளிலிருந்து, இந்த விஷயத்தில் வித்தியாசப்பட்டிருக்கவில்லை. எங்கும் ’KPT loves SRM’ என்பதுபோன்ற இளசுகளின் வாசகங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. அந்த இடத்தைக் கொஞ்சம் முனைந்து நாங்கள் சுத்தப்படுத்தினோம். இப்போது அந்தக் குகை ஒருவழியாகத் தன்னைக் காண்பிக்க ஆரம்பித்தது. பாறைத் தளத்தில் படுக்கைகள்போல் சில செதுக்கப்பட்டிருந்தது கண்ணில் பட்டது. இவற்றில்தானே அந்தக்கால ஜைன சாதுக்கள் படுத்து உறங்கியிருப்பார்கள்…

Lord Mahavir and Jain Religion

அத்தகைய ஒரு ‘படுக்கை’யின் மீது நான் உட்கார்ந்து பார்த்தேன். திடீரென என் உடம்பெங்கும் அதிர்வுகள். ஆச்சரியம். என்ன இது? என்ன இருக்கிறது இங்கே? எதுவானாலும், அந்த இரவை அங்கேயே கழிப்பது என மனதில் முடிவுசெய்துகொண்டேன்.  இரவில் குகைக்குத் திரும்பினேன். அந்தப் படுக்கைகளில் ஒன்றில் மெல்லப் படுத்தேன். எப்பேர்ப்பட்ட இரவானது அது! அந்த இரவினில்.. பல நூற்றாண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த அந்த ஜைனத் துறவியின் சூட்சும உடம்பு இன்னும் அங்கேயே, உயிர்ப்போடு நிலவுவதை உணர்ந்தேன். அவரைப்பற்றி எனக்குத் ‘தெரிய’ ஆரம்பித்தது. அந்தத் துறவிக்கு இடது கால் இல்லை. அதாவது முழங்காலுக்குக் கீழே.. கால் இல்லை. ஏதுகாரணத்தினாலோ அதை அவர் இழந்திருக்கவேண்டும். இப்படியெல்லாம் புரிந்தது.

அத்தகைய துறவிகள் மனித நடமாட்டத்திலிருந்து வெகுதொலைவில், சராசரி வாழ்வுக்கூறுகளிலிருந்து முற்றிலுமாக விலகி, தனிமையில், அமைதியாக ஆழ்ந்து காலங்கழித்திருக்கவேண்டும். அவர்களது உன்னதமான உணர்வுபூர்வமான வாழ்வியலின் காரணமாக, யாருமே இந்த உலகில் விட்டிராத அளவுக்கு, தங்களின் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்போலும். அந்தத் துறவியின் வாழ்வுநெறிகள், ஆன்மீகப் பயிற்சிகள் எனப் பலவற்றையும் என்னால் அப்போது உணர முடிந்தது..

கடந்துபோய்விட்ட அந்தக் காலவெளியின் மன்னர்கள், ஆட்சியாளர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். அப்போது வாழ்ந்த செல்வந்தர்கள், மெத்தப்படித்த ஆண்கள், பெண்கள் நமது நினைவுகளில் இல்லை. ஆனால், எளிமையே உருவான இத்தகைய சாதுக்கள் 1900 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப்போலவே, இன்றும் உயிர்ப்புடன் உலவுகிறார்கள். உணரப்படுகிறார்கள் …

’உங்களது விதியைச் செதுக்குவதற்கான ஒரு யோகியின் கையேடு’ எனும் புத்தகத்திலிருந்துதான், மேற்சொன்னது. புத்தக ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாஸுதேவ். பெங்குயின் இந்தியா பதிப்பகத்தால் ஏப்ரல் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.

Source: A Yogi’s Guide to Crafting Your Destiny (Penguin/ also available in Amazon)

**

பிறிதொரு உலகம்.. பிறிதொரு உண்மை..

… ஒன்றும்  மாறவில்லை என்பதுபோல் இருக்கிறது. சில சமயங்களில் திடீரென உணர்கிறேன்.. இங்கேதான் எங்கோ இருக்கிறார், உடம்புரீதியாகத் தென்படாவிட்டாலும்…

மரணம்பற்றிய பயம் அவரில் போய்விட்டிருந்தது. வாழ விரும்பினார். குழந்தைகளோடு நேரம் செலவிட ஆரம்பித்திருந்தார். ஒரு சிறு வனத்தை உருவாக்க ஆசையிருந்தது. சமூகசேவையில் ஈடுபடவும் விருப்பம்..

மதம்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்ட இஸ்லாமியர் அல்லர் அவர்.  Never a typically religious person. அதனால் கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்று அர்த்தமல்ல. மதம் என்பது அவருக்கு ஆன்மீகம். தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை இருந்தது. தன்னைப்பற்றிய, இந்த உலக வாழ்வைப்பற்றிய ஆழ்ந்த பயணத்தில் இருந்தார். இந்த உலகம் தாண்டிய  வேறொரு உலகை, பிறிதொரு உண்மையை -a parallel world, a parallel reality- தேடிக்கொண்டிருந்தார்.  வாழ்வின் இத்தகைய கட்டத்தில் நிறையப் படித்துக்கொண்டும் இருந்தார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், உபநிஷதங்கள் என அவரது வாசிப்பு அலைந்தது …

கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு மறைந்த இந்தியத் திரைஉலகின் உன்னதக் கலைஞனான இர்ஃபான் கான் பற்றி அவரது மனைவி ஸுதாபா சிக்தர் சமீபத்தில், அன்னாரது ஓராண்டு நினைவார்த்தமாக சொன்னதில் கொஞ்சம்தான் மேலிருப்பது.

**

ராமன் பேசுவதை நிறுத்திவிடுவான்..

ராமன் காட்டிற்குச் சென்ற சில தினங்களிலேயே, புத்ரசோகம் தாங்காது தசரதச் சக்ரவர்த்தி புலம்பிப் புலம்பிக் காலமாகிவிட்டார். அப்போது கேகய நாட்டில் தன் தாத்தாவின் அரண்மனையிலிருந்த பரதனும், தம்பி ஷத்ருக்னனும், குலகுரு வஸிஷ்டர் அனுப்பிய அவசர தூதினால் (உண்மை நிலவரம் தெரிவிக்கப்படாது, ஒரு அதிஅவசர காரியத்திற்காக உடனே நாடு திரும்பவேண்டும் என மட்டும் சொல்லப்பட்டு), கடும் வேகம் காட்டி அயோத்தி திரும்பிவிட்டனர். அயோத்தி தந்த காட்சியோ ஆன்மாவைக் கலங்கடித்தது. அண்ணன் ராமனின் வனம் ஏகுதல், தந்தையின் மரணம், காரணப்பின்புலங்கள் என்றெல்லாம் அறிந்தபின், பரதன் என்ன செய்வதென அறியாது துவள்கிறான். அண்ணன் காட்டில். அப்பன்  மேல்வீட்டில். நான் ஏன் இன்னும் இந்த நாட்டில்? – கதறுகிறான் ராமனின் தம்பி. குலகுரு வஸிஷ்டர் பரதனை ஆசுவாசப்படுத்தி, தேற்ற முயல்கிறார்:

ராமபிரான் வழிபட்ட ராமேஸ்வரத்தில் வன்னி சூர வதம் விழா! - Lord Rama  worshipped sacred place of vanni soora festive | Samayam Tamil

”பரதா! கலங்காதே. நடந்ததை எல்லாம் நினைத்து நினைத்து இனி வருந்தி என்ன பயன்? இப்பூமியில் மனிதன் தன் வாழ்நாளில் தவிர்க்கமுடியாத, ஜோடி உண்மைகள் மூன்று: பசியும்-தாகமும், மோஹமும்-சோகமும், வயோதிகமும்-இறப்பும். இவற்றை யார்தான் தவிர்த்துவிடமுடியும்?” இப்படி பரதனை சமாதானப் படுத்த முயன்றுகொண்டிருக்கையில், ஷத்ருக்னன் வருத்தம் மேலிட பரதனைக் கேட்டான்: “அண்ணா! மக்களுக்கெல்லாம் வழிகாட்டியாக, பாதுகாவலனாக, நற்கதியாகவும் விளங்கினானே அண்ணா ராமன்? அவனையும், அவனது அருமை மனைவியையும் சேர்த்துக் காட்டிற்குப் போகுமாறு விதித்துவிட்டார்களே? தர்மவழி நடக்காத, தன் மனைவியின் பேராசைக்குட்பட்டு தவறாக நடந்துகொண்ட தந்தையை, வீரம், கம்பீரம், தர்மசிந்தனைக்குப் பேர்போனவனான லக்ஷ்மணன் ஏன் தடுக்கவில்லை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. ஐயோ!” என மேலும் சோக மேகத்தைப் பரவ வைத்தான். (உண்மையில், ராமனை வனவாசம் செய்யவைக்கும் தசரதச் சக்ரவர்த்தியின் திடீர் முடிவைக் கேள்வியுற்ற லக்ஷ்மணன் அதிர்ச்சியுற்றான். அவர் மேல் பெருங்கோபம் கொண்டான். சக்ரவர்த்தியை, பெண்பேச்சு கேட்டு ஆடும் ’அதர்மி’ என இகழ்ந்தான். ராமனிடம் சென்று ‘வழிதவறிய மன்னனின் வார்த்தையை மதிக்கவேண்டியதில்லை. காட்டுக்குப்போகவேண்டிய அவசியம் உனக்கில்லை. நீயே முடிசூட்டிக்கொள். மக்களும் அதையே விரும்புவர். உனை எதிர்ப்போர் எவராயினும், தேவரேயாயினும் அவர்களைத் தாக்கி அழிப்பேன்!’ என ஆக்ரோஷமாக சூளுரைத்தான். அண்ணனோடு வாதிட்டான்.. என்பதெல்லாம் அயோத்தியில் அப்போது இல்லாத பரதனுக்கும், ஷத்ருக்னனுக்கும் தெரிந்திருக்கவில்லை.)

ஷத்ருக்னன் இப்படி துக்கமும், குழப்பமுமாய் சிதைந்திருந்த நிலையில், எல்லாத் துன்பத்திற்கும் மூலகாரணமான கூனி, அங்கு வந்து கொண்டிருந்தாள். ’பரதன் நாடு திரும்பிவிட்டான். ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்துகொள்ளப்போகிறான். ராஜ்யத்தில் நமக்குத்தான் இனி மாலை, மரியாதை எல்லாம்.. ஆஹா!’ என மனதில் குதூகலித்தவாறு. அப்போது எப்படி இருந்தாளாம் அவள்? தன் மேனியிலே நறுமன சந்தனத்தைத் தடவிக்கொண்டு, கைகேயி அளித்த உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வரிசையாக அணிந்திருந்தாள். இடுப்பிலே தங்க ஒட்டியாணமும் மின்னுகிறது. அலங்கரிக்கப்பட்ட கிழக் குரங்காய், அசைந்து ஆடியவாறு  கூனி வந்துசேர்ந்தாள் என்பது ரிஷி வால்மீகியின் வர்ணனை!

பரதனும், ஷத்ருக்னனும் இருக்கும் பிரும்மாண்ட அரண்மனைப் பகுதியின் வாசலை அவள் நெருங்கியபோது, காவலாளிகள் கப்பென்று பிடித்து, ஷத்ருக்னனிடம் கொண்டுவந்து நிறுத்திச் சொன்னார்கள்: ”பட்டத்து இளவரசன் ராமன் காட்டில் வதைபட, உங்களது தந்தை ஆவி பிரிய, ராஜா இல்லாது நாடே கலங்கித் தவிக்க காரணம் இவளே. கொடியவளான இவளை, இரக்கம் காட்டாது இஷ்டப்படி தண்டியுங்கள்!”

”சக்ரவர்த்திக்கும், என் அன்பு சகோதரர்க்கும் தாங்கமுடியாத் துன்பம்  தந்த படுபாவியின் கொடுஞ்செயலுக்கேற்ற தண்டனை தரப்படும்!” என்று சீறியவாறு பாய்ந்து அவளைப் பிடித்து அழுத்தினான் ஷத்ருக்னன். ’ஐயோ.. நாம் நினைத்தபடி அல்லாமல், வேறேதோ நடக்கிறதே’ என உணர்ந்தவளாய், பீதியில் அந்த அரண்மனையே குலுங்கும்படி ஓலமிட்டாள் கூனி. அவளோடு வந்த அவள் தோழிகள், ஷத்ருக்னன் தங்களையும் கொன்றுபோட்டுவிடுவான் என மிரண்டு, சிதறி ஓடினார்கள்.  கருணையும், தர்மசிந்தனையும் மிகுந்த கோஸலையின் நினைவு வர, அவளது பாதங்களில் போய் விழுந்து காப்பாற்றும்படி அரற்றினார்கள்.

குற்றவாளியை விடாது தண்டிக்கும் குணமுடையவனான ஷத்ருக்னன், சிவந்த கண்களில் கோபம் தெறிக்க, தரையில்  விழுந்து புரண்ட கூனியைப் பிடித்து இழுத்து உலுக்கினான். அவளது ஆபரணங்கள் அறுந்து சிதறின. அவள் மேலும் ஊளையிட, அதைக்கேட்டு கைகேயி பதறிப்போய் அங்கு ஓடி வந்தாள். அவளையும் மிரட்டும்  வகையில் ஷத்ருக்னன் பேச, அவள் பயந்துபோய் பரதனிடம் தஞ்சம் புகுந்தாள்.

தன்னிடம் ஓடிவந்த தன் தாயை அமைதிப்படுத்திய பரதன், கொலைவெறியில் இருக்கும் தம்பி ஷத்ருக்னனைத் தடுப்பதுபோல் கையுயர்த்திப் பேசலானான்: “தம்பி ஷத்ருக்னா! சாந்தம்.. சாந்தம்! மனுஷ இனம் மட்டுமல்ல. எந்த வகை உயிராயினும் பெண்ணினம் கொல்லத் தகாதது. சாஸ்த்ரம் அப்படித்தான் சொல்கிறது. எனவே அந்தக் கிழவியைத் தண்டிக்காதே.. மன்னித்துவிடு!” அருகிலிருக்கும் தன் தாயைப் பார்த்துக்கொண்டே அதிர்ந்தான் பரதன்: “கொடும்பாபம் செய்த இவளை நான் உடனே கொன்றுபோட்டிருப்பேன்.  செய்யவில்லை. ஏன் தெரியுமா? தர்மவழியில் மட்டுமே செல்பவனான நம் அன்புக்குரிய மூத்த சகோதரன் ராமன், தாயைக் கொன்ற என் செயலை நினைத்துப் பெரிதும் துவண்டுபோவான். என்னைப் பார்க்காது, பேசாது தவிர்ப்பான். என்னால் அதைத் தாங்கி உயிர் வாழ முடியாது.  இந்தக் கூனியை நீ கொன்றால், விளைவு அவ்வாறே மோசமாகும். அதனை ராமன் அறிய நேர்கையில், நம்மை சந்திக்கையில், முகம்கொடுத்துப்  பேசமாட்டான். வந்திருக்கும் துன்பங்கள் போதாதா? ராமனது அன்பையும் இழக்கும் துர்பாக்யம் நமக்குத் தேவைதானா?” என்று கண்கலங்கக் கேட்டான் பரதன். உடனே ஷத்ருக்னன் கையை உதறிக் கூனியை விடுவித்தான். அங்கிருந்து  போய்விடுமாறு உறுமினான்.

தர்மம், நீதிபற்றி பலபேசும் ஸ்ம்ருதி  சொல்கிறது: ஆச்சார்யன் (குரு), தந்தை, தாய், மூத்த சகோதரன் ஆகியோரை, தர்மவழி செல்லும் மனிதன் ஒருவன் அவமதிக்கலாகாது. அவர்களின் காரியங்களால் அவனுக்கு எத்தகைய துன்பம் நேரிட்டாலும், அவர்கள் அவமதிக்கப்படக்கூடாது.

**

ஸஞ்சயனுக்கு மட்டும் ஏன்?

மாயக்கிருஷ்ணன் தன் அழகிய அறையில், மின்னும் தங்கக்கட்டிலில் சயனம் கொண்டிருக்கிறான், தனது தேவி ஸத்யபாமாவின் மடியில் தலையையும், கால்மாட்டில் அமர்ந்திருக்கும் அர்ஜுனனின் மடியில் தன் திருப்பாதங்களையும் வைத்துக்கொண்டு. திரௌபதியும் அப்போது அங்கிருக்கிறாள். பொற்கட்டிலின் கால்பக்கத்தில், கீழே, தரையில். அர்ஜுனனின் பாதங்களை மெல்ல எடுத்துத் தன்  மடியில் வைத்துக்கொண்டு, கண்ணனைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். நால்வரும் ஏகாந்தமான சூழலில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அந்தப்பக்கமாக வந்த மாவீரன் அபிமன்யூ, கண்ணனைப் பார்க்க விரும்புவதாய், உள்ளே செய்தி அனுப்பினான். கிருஷ்ணன் காதுகொடுத்துக் கேட்டான். அனுமதி மறுத்தான். சிறிது நேரம் கழிந்தது. நகுலனும், ஸகதேவனும் அவ்வழியே வந்தனர். கண்ணன் அங்கிருப்பதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டவுடன், கண்டு பேசிவிட்டுப்போக விரும்பினர். செய்தி அனுப்பினர். உள்ளே வந்து பார்க்க அவர்களுக்கும் ஏனோ, கிருஷ்ணனின் அனுமதி கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் போய்விட்டனர்.

கொஞ்ச நேரம் மேலும் கழிந்தது. காவலாளி வாசலில் வந்து தயங்கி நின்றான். ஸஞ்சயன் வெளிவாசலில் வந்திருப்பதையும், கிருஷ்ணனை தரிசிக்க விண்ணப்பித்ததையும்  பகவானிடம் சமர்ப்பித்தான்.  ‘உடனே அவனை உள்ளே அனுப்பு!’ என்றான் கண்ணன். உள்ளே வந்து பணிந்து வணங்கினான் ஸஞ்சயன். ஏகாந்த தரிசனம் கண்டு பூரித்தான். கொஞ்சம் பேசியிருந்துவிட்டு அகமகிழ்ந்து அகன்றான்.

எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த ஸத்யபாமாவுக்கு மனசு குறுகுறுத்தது. ஒரு சஞ்சலம். கேட்டேவிட்டாள் கண்ணனிடம். ”நகுலனுக்கு இல்லை. சஹதேவனுக்கும் இல்லை. நம் குழந்தை அவன்.. அந்த அபிமன்யூவையும் உள்ளே வர விடவில்லை. ஸஞ்சயன்மேல் மட்டும் ஏனிந்தப் பரிவு? அவனுக்கு மட்டும் ஏன் அனுமதி அளித்தீர்?” என்றாள் சற்றே படபடப்பாக.

கண்ணனின் அழகு வதனம், மொட்டவிழ்ந்த மென்னகையால் மேலும் மிளிர்ந்தது. ஸத்யபாமாவை வாஞ்சையோடு பார்த்தான் பரந்தாமன். திருவாய் மலர்ந்தது: “ஏனென்றால்.. அவன் ஒரு ஞானி!”

**

லோகத்தில் ராமன் !

நாட்டைவிட்டே ராமனை – அந்த பகவான் ஸ்ரீராமனைத்தான் சொல்கிறேன் – ஒருவழியாக விரட்டிவிடுவது எப்படி என சில ‘தீய சக்திகள்’  திட்டமிட்டு, திட்டமிட்டு மண்டைகாயும் வேளையில்,  ஒரு ஓவியக் கண்காட்சி நடக்கிறதாம். எதைப்பற்றி? தசரத ராமன், சீதாராமன், simply ஸ்ரீராமன்பற்றி.  உலகின் சிலபல பகுதிகளில் ஆர்வமாகப் பேசப்படும்,  கொண்டாடப்படும் இதிகாசமான ராமாயணம் விவரித்த, இந்த தேசத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளவரசனின் வாழ்க்கைச் சித்திரங்களெனக் காட்சிகளை கண்முன்னே விரிக்கும் ஓவியங்கள் (சில சிற்ப வேலைப்பாடுகளும் கூடவே) மட்டும் அடங்கிய ஒரு கண்காட்சி. துவங்கி, நடந்து வருகிறது 13-ஆம் தேதி வரையில் (காலை 11 – மாலை 6 மணிவரை). எங்கே? இதென்ன கேள்வி? ராமபிரானை ஏசியும், அவன் உருவப்படத்தின் மீது சிலவற்றை வீசியும் வெறுப்பு ஊர்வலம் எடுத்த வரலாறும், சிறப்பும் மிக்க தமிழ்நாட்டிலா இதெல்லாம் நடக்கும்?

தனித்துவமான காவியக்கருத்து, கலாச்சார உட்பொருளைத் தாங்கி, அழகு ஓவியங்களாகக் காட்சிப்படுத்தும் இந்தக் கலைக்கண்காட்சி தேசத்தலைநகரான புதுதில்லியில் நடந்து வருகிறது என்கிறது The Statesman நாளிதழ். ’ஜெய் ஸ்ரீராம்’ எல்லாம் கூடாது… இங்கே அது எடுபடாது’ எனக் கொக்கரித்த மட ’மமதா’வின் வங்காளத்திலும் இப்போது தேர்தல் நடக்கிறதே.. அங்கே கதை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை  அங்கேயிருந்தே வெளிவரும் இந்தியாவின் பழம்பெரும் நாளிதழ் ஒன்றிலிருந்தே படிப்போம், கொஞ்சம் லோக்கல் ஃப்ளேவரைத் தெரிந்துகொள்வோம் எனச் சென்றபோது… கண்ணில்பட்டான் – இப்போதெல்லாம் எல்லோர் வாயிலிருந்தும் விழுந்து புறப்படும் அப்பாவி ராமன்! புருஷர்களில் உத்தமன் எனச் சொல்லிக்கொண்டால் இந்தக்காலத்தில் யாருக்குப் புரியும்? புரிந்தால்தான் போற்றப்படுவானா, உத்தம வில்லன்கள் உலவித் திரியும் இந்த இந்தியப் பெருநாட்டில்?

இப்படியான சூழலிலும், ’சன்ஸ்கார் பாரதி கலா சங்குல்’ (Sanskar Bharati Kala Sankul) எனப்படும் டெல்லியின் புதிய கலைமேம்பாட்டு நிறுவனம் ஒன்று, ’லோக் மே(ன்) ராம்’ (லோகத்தில் ராமன்) எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கலைக்கண்காட்சியை, ’இந்திய லலித் கலா அகாடமி’யின் உதவியுடன் முன்னெடுத்து நடத்திவருகிறது. பிரதானமாக 25 ஓவியங்கள் ராமபிரானின் இதிகாசகால பாரதத்தை மீட்டெடுத்துக் கண்முன் வைக்கப் பிரயத்னப்படுகின்றன. அவற்றில் சில:

Lok Mein Ram' art exhibition brings to life varied facets of Lord Ram - The  Statesman
கண்ணாடிச் சிற்பமாக ‘ராம் சேது’’ – ராமர் பாலம்

முதலில் கவர்வது மரம்/கண்ணாடியினாலான ’ராம் சேது’ ராமர் கட்டிய பாலம். ராம்.. ராம்.. என்கிற வார்த்தைகள் கூட்டமாக ஊர்ந்து அவன் பாதவழி காட்டுகின்றன. அருகில் ராம பாதுகைகள். டெல்லியின் National Gallery of Modern Art -ன் இயக்குநர் அத்வைதா கதநாயக் உருவாக்கிய சிற்பம். (மேலே). ‘சபரியின் தபஸ்’ மற்றும் ‘அகலிகை சாபவிமோசனம்’ ஆகிய காட்சிகளைத் தரும் குத்லயா ஹீரேமத்தின் (Kudlaya Heeremath) அழகு மிளிரும் ஓவியங்கள். புகழ்பெற்ற ஓவியர் பாலாஜி உபாலே (Balaji Ubale)-யின் ஓவியங்கள் இரண்டு : ‘சபரியுடன் ஸ்ரீராம்’ – சபரி ருசி பார்த்துக்கொடுத்த பழத்தை ராமன் சாப்பிடப்போகிறான்.. அடுத்தது,  ’ஆதிவாசி ராம்நாமியும் ஸ்ரீராமனும்’. இதில் : தன்னை வனத்தில் சந்தித்துப் பரவசப்பட்ட ’ராம்நாமி’ எனும் ஆதிவாசியை அன்போடு அணைத்துக்கொள்ளும் ராமன்! தத்ரூப ஓவியங்கள். இன்னொன்று இப்படி ஒரு காட்சியைத் தருகிறது: அழகு ஆபரணங்களை அணிந்துகொண்டு குறுகுறுவெனத் தெரியும் குழந்தை ராமன், அரண்மனைத் தோட்டத்தில் யானை, குதிரை என மரப்பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறான். அவனது கொள்ளை அழகை அருகிருந்து பிரமிப்போடு பார்க்கும் தோட்டத்துக் கிளிகள் ! – கிஷன் ஸோனி எனும் கலைஞரின் கைங்கரியம்.  ’காணாமற்போன சீதை’ என்கிற தலைப்பில் பார்கவ் குமார் குல்கர்னி வரைந்த ஒரு ஓவியம்: மனைவியை இழந்த, தேடித் தேடிக் கலைத்த கணவனாக ராமன்.. சோகம் ததும்பும் முகத்தோடு ஆகாசத்தைப் பார்க்கிறான் – கடவுளின் துணைக்காக ஏங்குகிறானா? அருகில் ஒரு மரக்கிளையில் கையை வைத்துக்கொண்டு விரக்தியோடு அண்ணாவைப் பார்க்கும் லக்ஷ்மணன். இன்னொன்று அபிஷேக் ஆச்சார்யாவின் ‘ஷிவ் தனுஷ்’ எனும் ஓவியம்  மஹாவீரன் ராமன் சிவ தனுஷை அலட்சியமாகத் தூக்குகிறான்.. அரண்மனை சபையின் ஆச்சரியப் பார்வை. சீதா ஸ்வயம்வரக் காட்சி கண்முன்னே. விஜய் சந்த்ரகாந்த் எனும் ஓவியர் ’ராவண்-ஜடாயு யுத்’  காட்சியை பிரமாதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறாராம்: சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒருகாலகட்டத்தின் வான் யுத்தத்தில், சூர்யக்கதிர்கள் பொன்னொளி பரப்ப, சீதையைக் கவர்ந்து செல்லும் அரக்கர் தலைவன் ராவணன் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்கும் ஜடாயு! சிலிர்க்கவைக்கும் போர்க்காட்சி. பிறிதொரு ஓவியம்: ராவணனின் தலைநகரம் கோபக்கார அனுமனால் தீக்கிரையாக்கப்படுகிறது..தலைப்பு: ‘லங்கா தஹன் (Lanka Dahan) – லால் சந்த்ர சூர்யவன்ஷி-யின் கைவண்ணம்.  இப்படி,  கடந்துபோன காலத்தைக் கலையழகோடு மீட்க முனையும் ஆக்கங்கள், அயோத்தியில் கடந்த இரண்டு வருடங்களாக வரையப்பட்ட சித்திரங்களாக. லலித் கலா அகாடமியின் அருமையான முயற்சி/பங்களிப்பு.

டெல்லியில் இருந்தால் இப்போது அங்குபோய் இத்தகைய அபூர்வ ஓவியக் கண்காட்சியைக் கண்டுகளித்திருக்கலாம். பெங்களூரில் இருந்துகொண்டு என்ன செய்ய? சரி, இரவில் ஐபிஎல் பார்ப்போம்… சூர்யகுலத் தோன்றல் – மும்பை இண்டியன்ஸின் சூர்யகுமார் யாதவ் எப்படி ஆடுவாரோ !

**

மோனம் போற்று

தேர்தல் காலம். நாடே மொத்தமாய் சத்தக்காடாகிவிட்டிருக்கும் நேரத்தில் இதைப்பற்றிப் பேசவந்திருக்கிறானே இவன் எனத் தோன்றலாம்தான். இரைச்சலின்போதுதானே சப்தமில்லாத் தருணங்களின் தன்மையும், மென்மையும் ஓரளாவாவது மனதைத் தீண்டும்?

பொந்திஷெரி (ஃப்ரென்ச்காரர்கள் ஆசையாய் அழைத்த பாண்டிச்சேரி!) வாழ்வில் சுப்ரமணிய பாரதி அடிக்கடி காணாமற்போயிருந்தார். அதாவது அவரது வாய்மொழி போய்விட்டிருந்தது. வீட்டிலிருப்போருடன், நண்பர்களுடன் அளவளாவுவது  மறைந்துவிட்டிருந்தது. மௌனம். மௌனம். அதுவொன்றே பேசுமொழியாக  வெளிப்படுமாறு தன்னை யோகநிலையில் ஆழ்த்திக்கொண்டிருந்தாராம். ’தினந்தோறும் எதையாவது பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவருக்கு என்ன வந்தது? ஊமையைப்போல் சைகை, கையாட்டல், காலாட்டல்.. எந்த மண்ணாய்ப்போகிறவன் இவருக்குக் கற்றுக்கொடுத்தானோ இதை!’ என்று அங்கலாய்த்திருக்கிறார் பாரதியின் மனைவி செல்லம்மா. அத்தகைய மோன நிலைகளின்போதும் ஏதாவது கவிதை எழுதியிருந்தால் அதை, வீட்டிலுள்ளோருக்குப் படித்துக்காட்டுவாராம்! அதாவது வெட்டிப்பேச்சு, வளவளப்புக்குத்தான் வாய்ப்பூட்டு. கவிதை அந்தக் கட்டுக்குள் வராது. குறிப்பாக பாண்டிச்சேரி வாழ்க்கையின்போது தமிழுக்கு உணர்வுபூர்வமாக நிறைய படைத்து அர்ப்பணித்த மாகவிஞன்.  ’மோனம் போற்று’ என்று தன் ‘புதிய ஆத்திச்சூடி’யில் சொல்கிறார் பாரதி. போற்று என்றால் ஒப்புக்கு ’போற்றி.. போற்றி!’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, கூட்டத்தோடு ஓதிவிட்டு ஓடிவிடுவது என அர்த்தமல்ல. மௌனத்தை உணர்; போற்று;  பயில்; அதனால் மெய் தாண்டி உய்.. என நீள்கிறது அதன் அர்த்தம்.

மஹாபெரியவா என்று பக்தியோடு, பரவசத்தோடு அழைக்கப்படும் காஞ்சி மடத்தின் முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், தன் வாழ்நாளில் அநேக நாட்களில் மௌன விரதம் இருந்துவந்தவர். அன்று யாராவது பார்க்க வந்திருந்து, எதிர்வந்து வணங்கி நின்றாலும், கையுயர்த்தி ஆசீர்வாதம் அல்லது பழங்களைப் பிரசாதமாகக் கொடுத்தல் என்பதோடு சரி. வார்த்தைகள் சம்பந்தப்படா ஆசி. வந்தவர்களுக்கும் இந்த தரிசனமே, ப்ரசாதமே போதுமானதாய் அமைந்திருந்தது.

ரமண மகரிஷி திருவண்ணாமலையைச் சுற்றிச்சுற்றி, உலவி காலம் கழித்தவர். ஆஸ்ரமத்தில் அமைதியாக உட்கார்ந்து, தியானத்தில் ஆழ்ந்திருந்த காலமதிகம். மிகக் கொஞ்சமாகப் பேசிய ஞானி. உலகின் தொலைதூர நாடுகளிலிருந்து அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு ஆர்வத்தோடு பார்க்க வந்தவர்கள், பிரிட்டிஷ்-இந்தியா காலத்திலேயே சிலருண்டு. நாளின் சில மணிநேரங்கள் அல்லது காலத்தோடு சம்பந்தப்பட்டிராத பொழுதுகள் அவரோடு மௌனத்திலேயே நடந்தன என்பது அவரருகில் வந்தோர்க்குத் தெரியும்.  அத்தகைய நேரங்களில் எங்கிருந்து யார் வந்திருந்தாலும், எத்தனை மணிநேரமாகக் காத்திருந்தாலும், ரமண மகரிஷி வாய்திறந்து பேசியதில்லை. சப்தமற்ற, சமிக்ஞைகூட காணப்படாத மோன நிலையில் இருந்திருக்கிறார். வந்திருந்தவர்களும் நிலைமையை, மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, கொஞ்ச நேரம் அவர் முன் இருப்பதே போதுமானது என உணர்ந்தவர்களாய், கைகூப்பி அமர்ந்திருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஒருவகை நிம்மதியோ, உள்மாற்றமோ அடைந்திருக்கிறார்கள். ஆங்கில ஆன்மீக எழுத்தாளரான பால் ப்ரண்டனுக்கும் (Paul Brunton) அப்படி நிகழ்ந்திருக்கிறது என்பது அவரின் 20 உலகமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள A Search in Secret India எனும் நூலில் காணப்படுகிறது.

The Doors of Perception, The Art of Seeing, The Genius and the Goddess, Brave New World, Heaven and Hell போன்ற நூல்களை எழுதிய  பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) சொன்னார் ஒருமுறை இப்படி: ”வார்த்தைகளில் கொண்டுவரமுடியாத ஒன்றை (expressing the inexpressible) சொல்ல,  மௌனமே சரியான மொழி. அதைத் தவிரவும் ஒன்று உண்டென்றால் அது இசை”. இங்கிலாந்தில் ஒரு மாலையில்,  ஜே.கிருஷ்ணமூர்த்தியோடு ஒரு ‘நடை’ போய்வரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நகரங்களின் இரைச்சல்களைத் தாண்டி மலைகள், ஆறுகள் என இயற்கைச் சூழல் அமைந்த சிற்றூர்களில் ஜேகே தங்கி இருப்பார் – தன் பயணங்களின்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் இருக்க நேர்கையில். தன் காட்டேஜிலிருந்து மாலை நடை செல்கையில் சில நண்பர்கள்,  நெருங்கியவர்கள் அவரைத் தொடர்வதுண்டு. ஜே.கே-யோடு அன்று ’வாக்’ போகப்போகிறோம் என்கிற உணர்வு தந்த மகிழ்ச்சியில் சில கேள்விகளைத் தயாராக்கி மனதில் உட்காரவைத்திருந்தார் ஹக்ஸ்லி. அவரிடம் இவற்றிற்கு விடை காணவேண்டும். ஆனால் நடந்தது வேறு. நடையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, ஹக்ஸ்லி ஜே.கே. யிருந்து சிறிது தள்ளி கூட நடந்து சென்றாரே தவிர, கேட்கவில்லை எதையும். Simply, it didn’t happen. மெல்ல, மௌனமாக நடந்துகொண்டிருந்த ஜே.கிருஷ்ணமூர்த்தியைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்கிற ஜாக்ரதை உணர்வு ஆரம்பத்தில். அப்புறம் அது அப்படியே தொடர, ஹக்ஸ்லியிடம் ஆரம்பத்திலிருந்த பரபரப்பு காணாமற்போயிருந்தது. அந்த அலாதி சூழலின் அமைதியில் அவரும் ஒன்றாகக் கலந்திருந்ததை  உணர்ந்தார். ”மௌனம் என்பதின் அழகை, ஆழத்தை, சக்தியை அந்த மாலையில் நான் தரிசித்தேன்” என்கிறார் பிறிதொரு சமயத்தில் ஹக்ஸ்லி.

சாதாரண மனிதன்கூட தனது சராசரி தினசரி வாழ்வினூடே, ஒரு விழிப்புணர்வோடு சில மணிநேரங்கள் பேசாது இருந்து பார்த்தால், வித்தியாசம் தெரியும்.  சலசலக்கும் மனது தன் ஆட்டபாட்டத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்வதை நாளடைவில் உணரநேரும். பலர் இதுபற்றிப் படிக்கிறார்கள். கேள்விப்படுகிறார்கள். ஆனால் ஏனோ முயற்சிப்பதில்லை. தினப்படி வாழ்க்கை நிகழ்வுகளில் சலசலப்பதில், அல்லது பதில் சொல்லி நேரத்தைக் கடத்துவதில் மும்முரம் காட்டுவதே வழக்கமாகிவிட்டிருக்கிறது நம்மில் பலருக்கு. இதையெல்லாம் தாண்டி, அலுவலக, அவசர காரியங்கள் ஏதும் இல்லையெனில், வீட்டிலேயே ஒரு மூலையில் அமர்ந்து சில மணிநேர மௌனத்தை முயற்சிக்கலாம். வீட்டில் யாருமில்லாத தனிமை கிடைப்பதும் ஒரு பாக்யம்! ஆனால் அப்பேர்ப்பட்டோர் அதன் அருமையை உணராதவர்களாகவே இருப்பார்கள், பெரும்பாலும். யாரையாவது வெளியே பார்த்து நலம் விஜாரித்தால் இப்படி சில சமயங்களில் பதில் வருவதுண்டு: ”வீட்டுல யாருமில்ல சார். ஊருக்குப் போயிருக்காங்க. தனியா ஒக்காந்துகிட்டு என்ன செய்ய? டிவி-யையே எவ்வளவுதான் பாக்க? அதான் இப்படி ஒரு ரவுண்டு போய்ட்டுவரலாம்னு..!” தனிமையைக் கண்டு பயப்படுபவர்கள், மௌனத்தை எப்போது சந்திப்பார்கள்?

**

மெய்ஞானக் கவி இபன் அல்-ஃபாரித் (Ibn al-Farid)

அந்த உன்னதமான புனிதத்தின் ரசத்தைக் குடித்துவிட்டது அவருடைய ஆன்மா. அதன் காரணத்தால் மெய்ஞானிகள், கவிஞர்கள், அரும்காதலர்கள் நிலவும் அபூர்வ உலகில் அது உலவியது. பின்னர் ஒரு நிலைக்குவந்து, பூமிக்குத் திரும்பியது – தான் கண்ட, அனுபவித்த அபூர்வத்தை அழகான வார்த்தைகளில் சொல்வதற்காக.

அவருடைய படைப்புகளை நாம் ஆராய்கையில், சுதந்திரமாக, கட்டுக்கடங்காமல அலையும் மனம் எனும் பெருவெளியின் புனித மனிதனாகத் தெரிகிறார். கற்பனை உலகின் இளவரசனாக, மெய்ஞான உலகின் மாபெரும் தளபதியாக அவரது வாழ்வுத்தோற்றம். மனிதவாழ்வின் மட்டித்தனங்களையும் ஆசாபாசங்களையும் வென்று, உன்னதத்தையும், புனிதத்தையும் நோக்கிய பயணத்திலேயே, கடவுளின் ராஜாங்கத்தை அடைவதிலேயே அவர் முன்னேறியதாக நமக்குத் தெரியவருகிறது.

அல்-ஃபாரித் ஒரு மேதை. மேதமை என்பது எப்போதாவதே நிகழும் ஒரு அதிசயம். தன்னைச் சூழ்ந்திருந்த சமூகத்தை, தான் வாழ்ந்த காலத்தின் வாழ்வியல்களை விட்டு விலகிப் பயணித்த மாபெரும் கவி. வெளிஉலகிலிருந்து தன்னை முற்றிலுமாக தனிமைப்படுத்திக்கொண்டு அவர் வரைந்த கவிதைகள், காணமுடியாத ஒன்றின் உன்னதத்தோடு, மேன்மையோடு, கண்டறிந்த பூலோக வாழ்வனுபவத்தை ஒருவாறு இணைக்க முயன்றன.

அல்-முத்தனபியைப்போலே (Al-Mutanabi, a great 10th century poet from Iraq), வாழ்வின் தினசரி செயல்பாடுகளிலிலிருந்து தன் கருத்தை எடுத்துக்கொண்டவர் அல்ல அல் ஃபாரித். அல்-மாரியைப்போல(Al-Maary, classical Arab poet, 11th century)  வாழ்வின் புதிர்களில் அவர் லயித்துவிடவும் இல்லை. இந்த உலகத்திலிருந்து தன்னை வெளியே கொணர, அல்-ஃபாரித் தன் புறக்கண்களை மூடிக்கொண்டார். சாதாரண உலகின் இறைச்சல்களிலிருந்து விடுபட, காதுகளைப் பொத்திக்கொண்டார்.  ஏன்? இந்த உலகைத் தாண்டிய உன்னதங்களைப் பார்ப்பதற்காக, என்றும் கேட்டுக்கொண்டிருக்கும் நீங்காத தேவகானத்தைக் கேட்பதற்காக.

Ibn al-Farid, Sufi Poet

இதுதான், இவர்தான் அல்-ஃபாரித். சூரியனின் கதிர்களைப்போலே ஒரு தூய ஆன்மா. மலைகளுக்கிடையே அமைதியாகக் காணப்படும் ஏரியைப்போன்ற மனதிருந்தது அவருக்கு. அவர் வார்த்த கவிதைகள், அவருக்கு முன்னாலிருந்த, பின்னால் வாழ்ந்த கவிஞர்களின் கனவுகளையும் தாண்டிச் சென்றவை. மேற்கண்டவாறெல்லாம் அவதானித்து, அல்-ஃபாரிதின் மேதமையை வர்ணிக்கிறார் கலீல் ஜிப்ரான்.

அரபி மொழியின் மாபெரும் மெய்ஞானக்கவியெனக் கொண்டாடப்படுபவர், இபன் அல்-ஃபாரித் (Ibn al-Farid). தன் வாழ்நாளில் ஒரு சுஃபி துறவி என அறியப்பட்டுப் போற்றப்பட்டவர். 12-ஆம் நூற்றாண்டு எகிப்தில் வாழ்ந்தவர். எகிப்தை வாழ்விடமாகக் கொண்டுவிட்ட சிரிய நாட்டவர்களான பெற்றோர்கள். அப்பாவைப்போல் சட்டநிபுணராக வரப் படித்தார் ஆரம்பத்தில். பின் என்ன தோன்றியதோ தனிமையை நாட ஆரம்பித்தார். எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள முகட்டம் குன்றுகளுக்கடியில் (Muqattam Hills) சென்று உட்கார்ந்தார். அங்கேயே வாழ்ந்தார். சில வருடங்கள் மெக்கா சென்றிருக்கிறார் அல்-ஃபாரித். அங்கே, புகழ்பெற்ற இராக்கிய சுஃபி ஞானியான அல்-சுஹ்ராவார்தியை (Al-Suhrawardi)  சந்தித்திருக்கிறார்.

**

ஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள்

அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன :

  1.  ஆதிசங்கரர்  ராமானுஜர்  வேதாந்த தேசிகர்

 

 

 

 

 

 

(அமேஸான் Link: B08DMWV29J )

மேற்கண்ட ஹிந்துமத ஞானிகள் வாழ்ந்த காலகட்டம்,  நிகழ்வுகள், சமயப்பணி, படைப்புகள்பற்றி சுருக்கமாக, சுவாரஸ்யமாகச் சொல்லும் கட்டுரைத் தொகுப்பு.

  1.  தூரத்திலிருந்து  ஒரு  குரல்

 

 

 

 

 

(அமேஸான் Link: B08F566L57 )

இந்தியா என்கிற மாபெரும் தேசத்தில் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், நிகழ்வுகள் இவற்றோடு, கலாம், காந்தி, கமல் ஹாசன், ரஜினிகாந்த் என வேகமாகக் காட்டிச் செல்லும் கட்டுரைகள். பெண்கள், குழந்தைகள், சுற்றுச்சூழல் எனவும் ஆங்காங்கே காட்சிகள் இருக்கும். கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் அங்கதம் !

இரண்டு நூல்களையும், ’அமேஸான் அக்கவுண்ட்’ உள்ள அன்பர்கள் ’இலவச Kindle App’-ஐத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ படிக்கலாம். Kindle Unlimited membership -உள்ளவர்கள்  இலவசமாகப் படிக்கலாம்.  மற்ற அன்பர்கள் விலை கொடுத்து வாசிக்கவேண்டியிருக்கும்!

வாசக, வாசகியரை வரவேற்கிறேன் அன்புடன்.

ஏகாந்தன்