”காக்கா, ‘கா..கா..’ன்னு கத்திச்சா.. வடை கீழே விழுந்திருச்சு.. நரி தூக்கிட்டு ஓடிருச்சு..!” – ஆசியகோப்பை 2022-ன் கதைச் சுருக்கம்.
ஃபைனலுக்கு ஒரு நாள் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் (முன்னாள் வீரர்) ரமீஸ் ராஜா, துபாய்க்கு வந்து தங்கள் அணியின் வியூகம், வீர தீர மகாத்மியத்தைப்பத்தி, கூடவே இந்தியா வெளியேற்றப்பட்ட விதம் (சந்தோஷம்) பற்றி அபாரமா கமெண்ட் அடிச்சிவிட்டிருந்தார் (ஸ்ரீலங்கா ஃபைனலில் இருப்பதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை!): ’’இந்தியாவிடம் திறமையான வீரர்கள் அதிகம்தான். அதுக்காக இப்படி அடிக்கடி டீமை மாத்தியிருக்கக்கூடாது. அதான் டீம் செட் ஆகல.. க்ரூப் 4-லேயே வெளியேறும்படி ஆகியிருச்சு. ஆனா.. பாகிஸ்தான் அப்படிச் செய்யல. எங்களோட பெஸ்ட் 11-ஐ மெய்ண்ட்டெய்ன் பண்ணி, முனைப்பா ஆடினோம். வந்துட்டோம் ஃபைனலுக்கு!’’ (இனி என்ன, கோப்பை எங்களுக்குத்தான்!-னு சொல்லவேண்டியதுதான் பாக்கி). வாயைத் திறந்து காக்கா கத்த, வடை கீழே விழ, லங்கா தூக்கிட்டு ஓடிருச்சு..

வியூகக் கணக்குகளையும், திறமைகளையும் தாண்டி, கிரிக்கெட் ஒரு விசித்திர விளையாட்டு. ஒரு சில ஓவர்களில், ஒரு சில விளாசல்களில் கதை மாறிவிடும். எத்தனைப் பார்த்திருக்கிறோம். டாஸ் வென்றபின், முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட ஸ்ரீலங்கா 36 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து முழித்தது. 58 ரன் எடுக்கையில் 5 விக்கெட்டுகள் காலி! பாகிஸ்தான் கோப்பையை கையால் தொட்டுவிட்ட நிலை. பச்சை-வெள்ளைகளின் உற்சாக ஆரவாரம். இயற்கைதானே. அப்படித்தான் இருந்தது மைதானத்து நிலமை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் பனுகா ராஜபக்சவும் (Bhanuka Rajapaksa) , ஆல்ரவுண்டர் வனிந்து ஹஸரங்காவும் ஒரு தீர்மானத்துடன் களத்தில் இறங்கியிருந்தார்கள். பாகிஸ்தானின் பெஸ்ட் பௌலர்களான, நஸீம் ஷா, ஹஸ்னெய்ன், ஷதாப் கான் ஆகியோரை ஆக்ரோஷமாகத் தாக்கி, ரன்களை வேகமாக அடுக்கினார்கள். பாகிஸ்தான் திணறியது. டென்ஷனில் கேட்ச்சுகளை நழுவவிட்டது. 120-130 -ஐத் தாண்டாது ஸ்ரீலங்கா ஸ்கோர் என நினைத்திருக்கையில், 170-ல் போய் நின்றது. ராஜபக்ச 71. சிக்ஸர் 3, பௌண்டரி 6 என சூப்பர் ஆட்டம்.
பாகிஸ்தான் கோப்பைக்கான இலக்கை நோக்கி இறங்குகையில், துவக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் ஆடினார் நன்றாக. விராட் கோஹ்லியோடு அடிக்கடி ஒப்பிடப்படும் பாக். சூப்பர்ஸ்டார் கேப்டன் பாபர் 5 ரன்னிலே ஓட்டம். அடுத்துவந்த ஃபகர் ஸமனும் (Fakhar Zaman) ரன் எடுக்காமலே காலி. லங்காவின் பிரமோத் மதுஷன் லியனகமகே ( பல் சுளுக்கிக்கிது) படுதுல்லியப் பந்துவீச்சு. 4 விக்கெட்டுகள். போதாக்குறைக்கு மகேஷ் தீக்ஷனா (Maheesh Theekshana), ஹஸ்ரங்காவின் ஸ்பின் வேற. பாகிஸ்தான் தடதடத்தது. நொறுங்கி, 147-ல் வாயைப் பிளந்தது.
வெகுவருஷங்களுக்குப் பின் ஸ்ரீலங்காவுக்கு ஆசிய கோப்பை. நினைத்துப் பார்க்கையில், இந்தியா, பாகிஸ்தானோடு ஒப்பிடுகையில் அதிகம் பேசாத லங்கர்கள். முனைப்போடு இலக்கை நோக்கி நகர்ந்தவர்கள். கோச் க்றிஸ் சில்வர்வுட்டும் (Chris Silverwood), கேப்டன் தஸுன் ஷனகாவும் (Dasun Shanaka) காட்டிய தீவிரம். உழைப்பு. கோப்பைக்குத் தகுதியானவர்கள்தான் ஸ்ரீலங்கா அணி.
Asia Cup Final -Score: Sri Lanka 170 for 6. Pakistan 147 all out.
**
விமர்சனம், அதுவும் ” காக்கா நரி வடை ” விமர்சனம் சூப்பர்!
நானும் என் கணவர், மகன் மூவரும் நேற்று ஃபைனல் பார்த்தோம். இந்தியாவும் ஸ்ரீலங்காவும் விளையாடும்போது புவனேஸ்வரை அவுட்டாக்கிய கருணாரத்னே காட்டிய கொலை வெறியையும் முறைப்பையையும் பார்த்த பின், ஃபைனலில் ஸ்ரீலங்கா தான் தோற்க வேண்டும் என்று நினைத்தேன். ஆச்சரியம், பாகிஸ்தான் அந்த அளவு தன் திறைமையை வெளிக்காட்டவில்லை! நிச்சயம் ஜெயிப்போம் என்ற மெத்தனத்தில் இருந்து விட்டார்கள். கடைசியில் முயல் ஆமை கதையாகி விட்டது!
LikeLiked by 1 person
@ Mano Swaminathan: பாகிஸ்தான் திறமையை வெளிக்காட்டாமலில்லை! அவர்களால் அன்று முடிந்தது அவ்வளவுதான். ரமீஸ் ராஜா கோப்பையை கையில் பிடித்து ப்ரெஸ்ஸுக்கு முன்னால் போஸ் கொடுக்க காத்திருந்தாரே! நடந்தால்தானே..
LikeLike
இந்த ஏசியன் கோப்பையில், 1. ஸ்ரீலங்கா படு கேவலமாக முதல் சுற்றில் தோற்றது. ஆஃப்கானிஸ்தான் பெரிய மார்ஜினில் வென்றது. 2. ஆஃப்கானிஸ்தான் தன் கடைசி மாட்சில் பெரிய மார்ஜினில் தோற்று, இறுதிக்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லையோ என்று எண்ணவைத்தது. 3. எல்லா டீமும் மற்ற டீமுடன் தோற்றிருக்கிறது. இந்தியா மெத்தனமாக விளையாட்டை அணுகி தோல்வியைச் சுவைத்தது.
T20 என்பதே ஒரு டீம்தான் சிறந்தது என்று சொல்லும்படி இல்லாமல், அந்த மேட்ச் கண்டிஷனைப் பொறுத்தது என்பதை நிரூபித்தது. டாஸ், இறுதி வெற்றி அணியை நிர்ணயிக்காததுதான் ஒரு ஆறுதல்
LikeLiked by 1 person
@ நெல்லைத்தமிழன்:
Reigning champion India’s casual approach cost us the Cup. உண்மை. நாம்தான் உலகக்கோப்பை பற்றி சிந்திப்பவர்கள் ஆயிற்றே!
LikeLike
இந்தியா ஆடாததால் டென்ஷன் இல்லாமல் பார்க்க முடிந்தது. ஆனாலும் நான் முழுமையாக பார்பபதெல்லாம் இல்லை. பாகிஸ்தான் தோற்ற செய்தி கேட்ட உடன் தேசபக்தியுடன் சந்தோஷப்பட்டேன். டாஸ் போடும்போது ரவி சாஸ்திரியின் ட்ரெஸ் நன்றாய் இருந்தது!!
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
ராஜபக்ஸ எதிர்பார்த்தபடி ஆடி, ஸ்ரீலங்காவைக் காப்பாற்றினார், மற்ற பெரிசுகள் ஃப்லாப் ஷோ காட்டியபோது. ஹஸ்ரங்கா ஒரு சரியான டி-20 ஆல்ரவுண்டர் அவர்களுக்கு.
என்ன, ரவி சாஸ்திரி ரசிகரா நீங்கள்!
LikeLike