இந்திய சினிமாவில் புழங்கிவரும் ஏகப்பட்ட ‘கான்’களில் (Khans) ஒருவர் என்று பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்டவர் அல்லர். ஹிந்தி சினிமா, ஹாலிவுட் சினிமா என்கிற இருவேறு துருவங்களிலிருந்தும் ரசிகர்களால், விமரிசகர்களால் ஆழ்ந்து ரசிக்கப்பட்ட, அனுபவிக்கப்பட்ட ஒரு அற்புதக் கலைஞன். இர்ஃபான் கான். 53 வயதுக்குள் நடிக்கமுடிந்தது சுமார் 80 படங்கள்தான். கலைவடிவம் என்று வந்துவிட்டால், எண்ணிக்கையா முக்கியம்? தரமல்லவா பேசவேண்டும்? பேசின நிறைய, அவரது படங்கள், பாவம் பலகாட்டும் அவரது முகத்தைப்போலவே..
ராஜஸ்தான்காரரான இர்ஃபான் கானுக்கு இளம் வயதில் கிரிக்கெட்டராக ஆக ஆசையிருந்தது. ஆனால் மட்டையும் கையுமாகப் பையன் சுற்றிக்கொண்டிருந்தது அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை! ’கிரிக்கெட் வேண்டாம் உனக்கு. போ..போய்ப் படி!’ என்று திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் முதுகலைப் படிப்பு, மற்றொரு புறம் ’தேசிய நாடகப் பள்ளி’யில் (National School of Drama (NSD), Delhi) நடிப்புக்கலைப் பயிற்சி என இளம் வயது அவரை நிலைகொள்ளாது அலைக்கழித்தது. சினிமா வாய்ப்புகள் அவரிடம் நெருங்க மறுத்தன. முதன்முதலாக தூர்தர்ஷனின் ‘ஸ்ரீகாந்த்’ தொடரில் நடிப்பைக் காண்பிக்க வாய்ப்பு கிட்டியது. பெரிதாகக் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் பின் பாலிவுட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன சின்ன ரோல்கள்.
இவரை ஒரு கலைஞனாக முதலில் கண்டுகொண்டது டைரக்டர் மீரா நாயர். அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்த மீரா டெல்லியில் NSD-க்கு ஒரு முறை வந்திருந்தார். பாம்பேயின் தெருக்குழந்தைகளை வைத்துப் படம்பண்ணும் எண்ணத்திலிருந்தார் அவர். அப்போது ஓரளவு நடிக்கப் பயிற்சிவிக்கப்பட்ட ஒரு இளம் நடிகன் கிடைப்பானா எனத் தேடியே அங்கு வந்தது. அங்கே 20-வயதான இர்ஃபானை பார்த்தார். அவரது ஆழ்ந்த கண்கள், தீவிரம்காட்டும் முகம் கவனத்தை உடனே ஈர்த்தன. ஆனால் இர்ஃபானின் உயரம்? 6 அடி 1 அங்குலம் ! கூடவே நன்றாக வளர்ந்த பையன்! தெருப்பையனாக வரமாட்டான் இவன். எனவே வேறொரு சிறிய பாத்திரத்திற்காக இர்ஃபானை தேர்வு செய்தார் மீரா. அந்த ஒரு சிறு ரோலுக்காக நாடகப்பள்ளியின் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பாம்பே வந்து மீரா நாயருடனும், தெருச் சிறுவ, சிறுமியருடனும் மாசக்கணக்கில் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தார் இர்ஃபான். இப்படித்தான் கிடைத்தது இர்ஃபானுக்கு முதல் ’சீரியஸ்’ படம், Salaam Bombay! (1998).
16 வருடங்களுக்குப்பிறகு மீரா, இர்ஃபான் கானிடம் திரும்பி வந்தார். இந்தமுறை புகழ்பெற்ற இந்திய-ஆங்கில நாவலாசிரியையான ஜும்ப்பா லாஹிரி (Jumpa Lahiri)-யின் ‘The Namesake’ என்ற நாவலை அதே பெயரில் படமாக்க எண்ணம். மீராவின் மனதில் பிரதான ரோலில் நடிக்கத் தகுதியானவர் இர்ஃபான் தான் என்பது வந்துவிட்டது. இர்ஃபானை அழைத்துக்கொண்டுபோய், அமெரிக்காவில் தங்கவைத்தார். அங்கு வாழும் இந்திய-பெங்காலி குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. தனக்கு பழக்கமில்லாத புது உலகமான அமெரிக்காவையும், அங்கு வாழும் பெங்காலி குடும்பத்தின் கலாச்சார சங்கமத்தையும் எளிதில் கிரஹித்துக்கொண்டார் இர்ஃபான் என்கிறார் மீரா நாயர். ஒரு பெங்காலி இளைஞனாக அவரது பார்வை, தோற்றம் எல்லாமும் அச்சு அசலாக ஒத்துப்போனது ஆச்சரியம் என்றார்.
லண்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான ‘தி கார்டியன்,’ இர்ஃபான் கானின் மறைவு செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டது. இப்படி ஒரு பிரும்மாண்ட திறமை கொண்டிருந்த இந்திய நட்சத்திரத்தை ஹாலிவுட்டின் தராதர அளவுக்குள் அடக்குவது இயலாதது என்றது. இர்ஃபானின் ’லஞ்ச் பாக்ஸ்’, ‘தி வாரியர்’ போன்ற அருமையான படங்களை மீண்டும் பார்ப்பதே, அவரைப்போன்ற ஒரு கலைஞனுக்கு நாம் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாகும் என்றது. ஹாலிவுட் டைரக்டரான ஆசிஃப் கபாடியா (Asif Kapadia) இர்ஃபான் கான் பிரதான பாத்திரத்தில் சிறப்பான பங்களித்திருந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ்-இந்தியத் தயாரிப்பான The Warrior’ (2001) படத்தை இயக்கியவர். அந்தப் படம் பிரிட்டிஷ் Bafta விருதை வென்று, விமரிசகர்களால் வெகுவாக ஸ்லாகிக்கப்பட்டது. கபாடியா கட்டுரை ஒன்றில், முதன்முதலில் தன் படத்துக்கான ஹீரோவை பம்பாயில் ‘கண்டுபிடித்த’திலிருந்து, இர்ஃபானுடன் தனக்கு இறுதிவரை நிலவிய ஆழ்ந்த நட்புபற்றி எழுதியிருந்தார். ’தி வாரியர்’ படக்குழு, படத்தின் ரிலீஸிற்குப் பின்னும் பலமுறை சந்தித்து அளவளாவி மகிழ்ந்தது, திரையுலகில் பொதுவாக நிகழாதது என்கிறார். ‘நாங்கள் ஒரு குடும்பம்போல் ஆகிவிட்டோம். உயரமாய், கம்பீரம் கலந்த அமைதியுடன் வலம்வந்த இர்ஃபான், எங்களுக்கு ஒரு குருவைப் போல் இருந்தார்’ என்கிறார் மேலும். ஒரு படத்தில் எத்தகைய சிறிய ரோலை அவருக்குக் கொடுத்தாலும், அந்தப் படத்தின் மிகவும் நம்பகத்தகுந்த ஒரு விஷயமாக அதை மாற்றிவிடும் ஆற்றல் உண்டு. வசனவரிகள் மிகக் கொஞ்சமாக இருந்தாலும் சரியே. சாதாரண வார்த்தைகளை அவர் உதிர்த்தாலும் அவற்றிற்கு பெரும் சக்தி கிடைத்துவிடும். அவரது பார்வையும், பாவங்களும் நிறையச் சொல்லிச் சென்றுவிடும். திரையில் அவர் எதை வெளிப்படுத்தினாலும் அதில் ஒரு நேர்மை இருந்தது. அவரது ஆன்மா தெரிந்தது. இவையெல்லாமே அவர் ஒரு இயற்கையான கலைஞர் எனத் தெளிவாகக் காண்பித்தது. மேலும், வெற்றியும், புகழும் இர்ஃபானை பாதித்ததில்லை என எழுதுகிறார். 2000- வாக்கில் சரியான பட வாய்ப்பு வராமல், தன்னை வெளிப்படுத்தமுடியாமல் தவித்திருந்த இர்ஃபான் கான், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டுவிடவேண்டியதுதான் என முடிவுக்கு வந்திருந்தாராம். அப்போது அவர் முன் வந்து நின்ற படம் ’தி வாரியர்’ !
2017- ல் வெளியான சாகேத் சௌத்ரி இயக்கிய காமெடி/டிராமா படமான ‘ஹிந்தி மீடியம்’ படம் அவருக்கு IIFA விருதைப் பெற்றுத் தந்தது. தன் பெண்குழந்தையை ஒரு புகழ்பெற்ற பள்ளியில் போட, அப்பனாக அவர் படும்பாட்டை அவ்வப்போது சிரிக்கவைத்துச் சொல்லும் கதை. அந்தப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக, அதன் தொடர்ச்சிபோல் தயாரிக்கப்பட்டு வந்தது இன்னொன்று ‘Angrezi Medium'(2020), இர்ஃபானின் நண்பரும் டைரக்டருமான Homi Adajania-வின் இயக்கத்தில். அபூர்வ வகை கேன்சர் (neuroendocrine tumour) நோயினால் பீடிக்கப்பட்டு நியூயார்க்கில் சிகிச்சைபெற்று தற்செயலாக இந்தியாவுக்கு மீண்டிருந்த இர்ஃபான் கான், கடைசியாக நடித்துக்கொடுத்த படம். கொரோனா சூழலில் திரையரங்குகளில் வெளியிடப்படமுடியாது போனது. தனிப்பட்ட வெளியீட்டு விழாவில் உடல்நலமுற்றிருந்த இர்ஃபானால் கலந்துகொள்ளமுடியாத பரிதாப நிலை.
29 ஏப்ரல் அதிகாலையில் இயற்கை எய்திய இர்ஃபானின் இறுதிச்சடங்கு, லாக்டவுன் தடைகளால், குடும்பத்தினர், மிகநெருங்கிய நண்பர்கள் என 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள மும்பையில் நடந்தது. நேரடியாகப் பங்குகொள்ளமுடியாத ரசிகர்களுக்கு மாபெரும் சோகம்.
இர்ஃபான் கானுக்காக, அன்போடும், கவனத்தோடும் திரைத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட அஞ்சலிகள் பல. அதில் ஒன்று ‘Angrezi Medium’ இயக்குனர் ஹோமி அடஜானியா (Homi Adajania) சொன்னது: ”என்னை உன் நண்பன் என அழைத்துக்கொள்ள முடிந்ததற்காகவும், உன்னோடு சில அடிகள் சேர்ந்து நடக்கமுடிந்ததற்காகவும், குறைந்த காலத்தில் நிறைந்த சந்தோஷம் தந்த நினைவுகளுக்காகவும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ’என் கலையின்மீது நம்பமுடியாத அளவு காதல் கொண்டிருப்பதாகவும், நட்சத்திர அந்தஸ்து எனக்கு இனிமேல் தேவையில்லை’ என்றும் ஒருமுறை சொன்னாய். உண்மைதான். நீ நட்சத்திரமாக மின்னவேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் மற்ற எதைவிடவும் நீதான் அதிகமாக ஜொலித்தாய்..”
எப்படியோ, திரையுலகம் ஓரு அருமையான கலைஞனை அகாலமாக, அநியாயமாக இழந்துவிட்டது.
**
எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத நடிகர். The life of pi மற்றும் Jurassic மட்டும் பார்த்திருக்கிறேன்.
LikeLiked by 1 person
எனக்கு மிகப் பிடித்த கலைஞர் ஒளி வீசும் கண்கள். அநாயாசமான நடிப்பு. தெள்ளத் தெளிவாக வரும் டயலாக். ஏதோ நண்பர் இழந்த உணர்வு. நன்றி ஏகாந்தன் ஜி.
LikeLiked by 1 person
@ Sriram : Angrezi Medium பார்க்கக் கிடைத்தால் விடாதீர்கள்!
@ Revathi Narasimhan : நஸீருத்தீன் ஷா, ஓம் பூரி, நானா படேகர் காலத்துக்குப்பிறகு இந்தியாவுக்குக் கிடைத்த நல்லதொரு கலைஞன்.
மிகவும் அந்நியோன்யமான ஒரு மனிதரை இழந்துவிட்ட உணர்வு இவர் விஷயத்தில் நிகழ்கிறது!
LikeLike