மீண்டும் வரும் ராமாயணம், மகாபாரதம்

தற்போதுள்ள சூழலில், வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, டிவி, சமூகவலைத்தளங்களைப் பார்த்துக்கொண்டு வியாதியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் யாருக்கும் பைத்தியம் பிடித்துவிடும். ஜாலியான ஆள்கூட தளர்ந்து ஒடுங்கிவிடுவான்! முழுக்குடும்பமே வீட்டில் ஒருசேர அமர்ந்திருக்கும் அதிசய காலகட்டத்தில், அவர்கள் பார்க்க, கேட்க, மனோரஞ்சகமாக ஏதாவது டிவி-யில் வரவேண்டாமா – செய்திகள், சினிமா தவிர்த்து? அதுவும் நமது நாட்டின் இதிகாசம், புராணம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் குடும்பத்து அங்கத்தினர்கள் ஒரு சேர உட்கார்ந்து ரசிக்கலாமே! மனசும் பீதி, நோய்ச் சிந்தனையிலிருந்து விலகி, கொஞ்சம் அமைதியாகும். புராண புருஷர்களை, யுவதிகளை, அவர்தம் வாழ்வு, போராட்டம், வாழ்வியல் நேர்மை, தர்மம் என்றெல்லாம் மனது சிந்திக்க ஆரம்பிக்கும். மக்களின் சிந்தனைத் தளம், பதற்ற நிலையிலிருந்து தற்காலிகமாவது, ஆரோக்யமான நிலைக்கு உயர்த்தப்பட வாய்ப்புண்டு. உள்ளேயே அடைந்துகிடந்து தின்பது, தூங்குவது,வீட்டுவேலைகள் தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை. இந்நிலையில், மனதிற்கு சந்தோஷம், அமைதி தரும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் அல்லவா?

மத்திய அரசின் தகவல், தொடர்புத்துறை இதைப்பற்றி சிந்தித்திருக்கிறது. ட்விட்டரில் சில நாட்களாக வந்துகொண்டிருந்த கோரிக்கைகளும் காரணம். 25-30 வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷன் மூலமாக ஒளிபரப்பட்ட பாப்புலர் சீரியல்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றை மீண்டும் திரைக்குக்கொண்டுவந்தால்.. மக்கள் வரவேற்கக்கூடும். நல்ல சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் மீண்டுவரும் வாய்ப்பையும் ஏற்படுத்தலாம். ’தனித்திருக்கும்’ குடும்பங்களுக்கு இந்த சமயத்தில் இத்தகைய சேவை தேவையாயிற்றே.
பரிசீலித்தது, முடிவு எடுத்தது அமைச்சகம். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன் அதிகாரபூர்வ ட்வீட் மெசேஜில் அறிவித்துவிட்டார். ஜனங்களின் கோரிக்கைப்படி, தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம் வருகிறது. நாடெங்கும் ரசிகர்கள், சாதாரண மக்கள் படுகுஷி. கோரிக்கை வைத்த நெட்டிசன்களுக்கும் சிக்ஸ் அடித்த த்ரில்!

இன்றிலிருந்து தினமும் காலை 9 மணியிலிருந்து 10 வரை மற்றும் மாலை 9 -லிருந்து 10 வரை, ’DD National’ தேசீய சேனலில் ’ராமாயணம்’ – மக்களைக் கவர்ந்த புகழ்பெற்ற டிவி தொடர் மறுஒளிபரப்பாகிறது. இன்றே மதியம் 12-லிருந்து 1 வரை, பிறகு இரவு 7 -லிருந்து 8 வரை தினந்தோறும் இன்னொரு இதிகாசமான ‘மகாபாரதம்’ மறு ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இது காட்டப்படவிருக்கும் சேனல் ’டிடி பாரதி’ (DD Bharti). இதுவரை இந்த சேனல்களை தங்கள் லிஸ்ட்டில் சேர்க்காதவர்கள் இப்போது இணைத்துக்கொள்ளுங்கள். குடும்பம் பார்த்து மகிழட்டும்.

சீதை, ராமன், லக்ஷ்மணன்
’ராமாயணம்’ தொடர் துளசிதாசரின் ‘ராம் சரித் மனஸ்’-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தயாரித்து, இயக்கியவர் ராமானந்த சாகர் (Ramananda Sagar). 1987-88 காலகட்டத்தில் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய ஜனரஞ்சகத் தொடர். மக்கள் மனதிலிருந்து நீங்காத பாத்திரங்களாக அருண் கோவில் (Arun Govil) ராமனாகவும், தீபிகா சிக்காலியா (Deepika Chikhalia) சீதையாகவும், சுனில் லாஹிரி லக்ஷ்மணனாகவும், பாலிவுட் நடிகை பத்மா கன்னா கைகேயியாகவும், அரவிந்த் திரிவேதி ராவணனாகவும், பயில்வான் தாரா சிங் (Dara Singh) ஹனுமான் வேஷத்திலும் தூள்கிளப்பினர்.

கிருஷ்ணனாக
நிதிஷ் பாரத்வாஜ்
பாலிவுட் பிரமுகர் பி.ஆர். சோப்ரா (BR Chopra) தயாரித்து தூர்தர்ஷனில் 1988-90 -ல் ஒளிபரப்பப்பட்ட ‘மஹாபாரதம்’ தொடர் நாட்டின் மூலை,முடுக்குகளிலெல்லாம் சாதாரண மக்களாலும் பார்த்து ரசிக்கப்பட்டது. வியாசர் எழுதிய மகாபாரதம் மற்றும் விஷ்ணுபுராணத்தின் அடிப்படையில் கதை தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. நிதிஷ் பாரத்வாஜ் (Nitish Bharatwaj) கிருஷ்ணன் வேடத்திலும், ரூபா கங்குலி (Roopa Ganguly) திரௌபதியாகவும், அர்ஜுன் அர்ஜுனனாகவும், பாலிவுட் வில்லன் புனீத் இஸ்ஸார் (Puneet Issar) துரியோதனன் ஆகவும், பீஷ்மராக முகேஷ் கன்னாவும் நடிப்புத்திறன் காட்டிய சின்னத்திரைக் காவியம்.
**

12 thoughts on “மீண்டும் வரும் ராமாயணம், மகாபாரதம்

  1. படத்தில் கிருஷ்ணனாக அருண் கோவில் என்று எழுதி இருக்கிறீர்கள்.  அவர் ராமனாக அல்லவோ நடித்தார்?  நிதிஷ் பரத்வாஜ் என்று இருக்க வேண்டுமோ?

    அந்தக் காலத்தில் ராமாயணம், மஹாபாரதம் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் அந்நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டமே இருக்காது.  எல்லோரும் தொலைக்காட்சியின் முன் கிடந்தார்கள்.

    பின்னர் கிரேசி மோகன் உட்பட பலர் “ஆயுஷ்மான்பவ”  போன்ற வசனங்களை தக்க இடங்களில் பயன் படுத்தி சிரிக்க வைத்தார்கள்.

    Like

    1. @ ஸ்ரீராம்: நிதிஷ் பாரத்வாஜ் என மாற்றிவிட்டேன்!

      டெல்லியில் மகாபாரத்…! – என டைட்டில் சத்தம் கேட்டதுமே வீட்டுக்குள் ஓடிவிடுவார்கள். அந்த சமயத்தில் விருந்தாளி கதவைத் தட்டி, யாரும் கதவைத் திறந்தால் திட்டு விழும்!

      Like

    1. @ srimalaiyappan b :

      அரும்புவது அரும்பும்
      திரும்புவது திரும்பும் !

      Like

  2. அப்போதெல்லாம் வேறு சானல்கள் இருக்கவில்லை புரிந்ததோ இல்லையோ இருந்த ஒரே எண்டெர்டெயின்மெண்ட் டி டி சானல்கள் ஹிந்தியை ஓரளவு புரிய வைத்த தொடர்கள்

    Like

    1. ஹிந்திலாம் புரியலை ஜி.எம்.பி. சார்… ஆங்கிலப் படங்கள் பார்க்கும்போது நாமே புதுக் கதையை மனசுல யோசிச்சுக்கிட்டு இருப்போம் (நம் புரிதல்படி). என்ன ஒண்ணு மகாபாரதம், இராமாயணம் நமக்கு ஓரளவு தெரியும் என்பதால், ஒரு குன்ஸா புரிஞ்சுக்குவோம்.

      Like

    2. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம் :
      தூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளில்லை அப்போது. நல்ல தொடர்களும் வந்த காலம்.
      இப்போது பொதிகை பக்கம் யாரும் போவதில்லை தமிழ்நாட்டில். அதிலும் தரமான விஷயங்கள் வருகின்றன. நியூஸ் கண்டெண்ட் ஆரவாரமில்லாமல் விபரமாக இருக்கும்.

      Like

  3. இந்தக் கிருஷ்ணராக நடித்தவர் காங்கிரஸுக்கு உ.பியில் பிரச்சாரம் செய்த நினைவு. ராமர், சீதா இருவரும் காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்த நினைவு இல்லை.

    Like

    1. @ நெல்லைத்தமிழன்:

      எனக்கும் காங்கிரஸ் பிரச்சார நினைவு வருகிறது.

      அருண்கோவில், தீபிகா போன்றவர்கள் வடக்கே, சாமானியர்களால் மிகவும் மதிக்கப்பட்டார்கள். தங்களுக்குப் பிற்காலத்தில் தரப்பட்ட அசட்டுத்தனமாக ரோல்களை ஏற்காமல், தங்களைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டார்கள்.

      Like

  4. இன்று காலை ராமாயணம் தொடர் பார்த்தேன் அவ்வளவு ஈர்க்க வில்லை நாளை விஜய் சானலில் மஹாபாரதம் பார்க்க வேண்டும்

    Liked by 1 person

    1. @ ஜிஎம். பாலசுப்ரமணியம் :
      தயாரிப்பு, இயக்கம் எனத் தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால், மஹாபாரதம் , ராமாயணத்தை விட நன்றாக எடுக்கப்பட்டிருப்பது தெரியும்.

      Like

  5. காலை 9-10 காலை 11.30-12.30 மாலை 7-8 இரவு 9-10 விட்டுக்கு வந்திருந்த பிடித்த விருந்தாளிகள் கிளம்பிப்போனா எப்படி இருக்குமோ அப்படி அடுத்தடுத்த நாட்களில் வெறுமை தோன்றியது.

    Like

Leave a comment