விட்டு விளாசிய விண்டீஸ் !

 

நேற்று (15/12/19) சென்னையில், வெஸ்ட் இண்டீஸ் தன் பழைய ஸ்வரூபத்தைக் காண்பித்து இந்தியாவை மிரட்டியது. கரன் போலார்ட் (Kieron Pollard) தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி உயிரூட்டம் பெற்றுவருகிறது – குறிப்பாக short format -களில், என்பதில் சந்தேகம் தேவையில்லை.

வெகுநாட்களுக்குப் பின் சென்னைக்கு வந்தது சர்வதேச கிரிக்கெட். சில நாட்களாகவே மழையின் தாக்கத்திலிருந்தது சென்னை. சேப்பாக் மைதானத்திலும் ஒரே கொட்டாகக் கொட்டி, ரசிகர்களின் மானத்தை வாங்குமோ என அஞ்சியிருந்த நிலையில்,  வருண்தேவ் அப்படியெல்லாம் ஒன்றும் விஷமம் செய்யாமல் விலகியே இருந்தான்!  அவன் கருணையே கருணை.. ஒரு கடுமையான ஒரு-நாள் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க முடிந்தது. முடிவு இந்தியாவுக்கு எதிராகத் திரும்பிவிட்டபோதிலும்.

வெஸ்ட் இண்டீஸினால் முதல் பேட்டிங்கிற்கு அனுப்பப்பட்ட இந்தியா, சேப்பாக்கின் ஸ்லோ பிட்ச்சில், தன் இஷ்டத்துக்கு ஷாட் அடிக்கமுடியாமல் தடுமாறியது. முதலில் ராகுலையும், அடுத்து கேப்டன் கோஹ்லியையும் தூக்கிக் கடாசினார் வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் காட்ரெல்  (Sheldon Cottrell). அவுட் ஆக்கியபின் ஒரு சல்யூட் அடித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். அவரது கொண்டாட்ட ஸ்டைல்! நின்று ஆடமுயன்ற ரோஹித் ஷர்மா, 36 ரன்களே எடுத்து ஜோஸஃபின்  (Alzarri Joseph) துல்லிய வேகத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்துத் திரும்பினார். ஃபார்மில் இல்லாததால், எல்லோருடைய வாயிலும் விழுந்து புறப்படும் இடதுகை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மன் ரிஷப் பந்த் இப்போது க்ரீஸில் ! கூடவே வலதுகை டாப்-ஆர்டர் பேட்ஸ்மன் ஷ்ரேயஸ் ஐயர். பெரிசுகள் வேகமாக விழுந்துவிட்ட இக்கட்டான சூழலில், இருவரும் ஒருவருக்கொருவர் கலந்துபேசி, எழும்பாத வேகப்பந்துகளுக்கெதிராக வியூகம் அமைத்து, நிதானமாக நின்று ரன் சேர்த்தது ரசிகர்களுக்குக் குஷியூட்டியது. நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தபின், முதலில் ஐயர் (70), பிறகு பந்த் (71) வெஸ்ட் இண்டீஸினால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர்.  தல தோனியின் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் பந்த்! பந்த்! எனக் கோஷமிட்டது ரிஷப் பந்திற்கு ஆச்சரிய அனுபவமாயிருந்திருக்கும்.

இந்த நிலையில்,  ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே (Shivam Dube)-ஐ கோஹ்லி இறக்கியிருக்கலாம். ஆனால் அனுபவசாலியான கேதார் ஜாதவை அனுப்பினார். சரியான முடிவு. ஜாதவ், ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து ஒன்று, இரண்டு என விரட்டி ரன் சேர்த்ததால் ஸ்கோர் கௌரவமான நிலைக்கு வந்து சேர்ந்தது. கேதார் விழ, கூடவே ஜடேஜா ஒரு சர்ச்சையான ரன் -அவுட்!  முதலில் நாட் அவுட் என்ற தென்னாப்பிரிக்க அம்பயர்  ஷான் ஜார்ஜ், போலார்டின் அழுத்தத்தில் மூன்றாவது அம்பயரிடம் போக, கோஹ்லி கொதித்தார்! ஆனால் அவுட் அவுட்தானே.. ஒரு சமயத்தில் 240-ஐத் தாண்டாது என்றிருந்த நிலை. 287 / 8 என்பது, இந்தியா இந்த பிட்ச்சில் வெஸ்ட் இண்டீஸைக் காலிசெய்யப் போதுமானது என்பதே அனைவரின் யூகமும். ஆனால்..  நேற்று நடந்தது வேற !

Shimron Hetmyer

 வெஸ்ட் இண்டீஸ் மாலை-இரவுப் பகுதியில் ஆட ஆரம்பிக்கையில்,  நிலைமை மாற்றம் கண்டது. ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் வெஸ்ட் இண்டீஸின் அனுபவம் குறைந்த பேட்ஸ்மன்களை அடித்துத் தூக்கிவிடுவார்கள் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ற ஃபீல்டிங் வியூகங்களும் அமைக்கப்பட்டு ஆடினர்.  ஆரம்பத்தில் சுனில் ஆம்ப்ரிஸ் (Sunil Ambris) தீபக் சாஹரின் (Deepak Chahar) மந்தகதிப் பந்தில் காலியானாரே தவிர, அடுத்து நின்ற ஜோடி உஷாரானது.  வெஸ்ட் இண்டீஸ் நம்பர் 3-ஆன ஷிம்ரன் ஹெட்மயரும் (Shimron Hetmyer) , க்ரீஸில் இருந்த ஷாய் ஹோப் (Shai Hope) -உம் சேர்ந்து, இலக்கை நோக்கிய பாதையை சீர்செய்துகொண்டு ஆடினர். இருவரும் பேட்டிங்கில் நேர்-எதிர் அணுகுமுறை கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். ஹோப், வழக்கம்போல் sheet anchor ரோலில் , அவசரம் காட்டாது, பௌண்டரி தவிர்த்து,  ஓடி, ஓடி ரன் சேர்த்தார். ஆனால், ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹெட்மயர், விரைவிலேயே மூன்றாவது, நாலாவது கியருக்கு மாற்றினார் வண்டியை. ஒரு பக்கம் குல்தீப் யாதவ், மறுபக்கம் ஜடேஜா என ஸ்பின் போட்டு ரன் கொடுக்காமல் நெருக்கப் பார்த்தார் கோஹ்லி. ஹெட்மயரிடம் அவருடைய பருப்பு வேகவில்லை. ரன் கொடுக்க மறுத்து இறுக்க முயன்ற ஜடேஜாவின் ஒரு பந்தை, முன்னே பாய்ந்து நேராகத் தூக்கி சிக்ஸர் விளாசினார் ஹெட்மயர். அடுத்த பந்திலும் அசராமல் ஒரு மிட்-விக்கெட் ஸிக்ஸ்! கூட்டம் மிரண்டது. என்னடா ஆச்சு இன்னிக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு! கோஹ்லியின் நெற்றியில் கவலைக் கோடுகள். முகமது ஷமியையும், தீபக் சாஹரையும் மாற்றி மாற்றி நுழைத்து, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடிக்கொண்டிருந்த ஹோப்-ஹெட்மயர் ஜோடியைப் பிரிக்கக் கடும் முயற்சி செய்தார் இந்தியக் கேப்டன். வேகம் காட்டிய ஷமியையும் அனாயாசமாக பௌண்டரி விளாசி, தான் ஃபார்முக்குத் திரும்பிவிட்டதை உறுதி செய்தார் ஹெட்மயர். இந்திய அணிக்கு வயிறு கலங்கியது.  பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் போலார்ட் மற்றும் இதர வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குதூகலமாகினர். ரசிகர்கள், இந்திய பௌலர்கள் அடிவாங்கியதால் முதலில் அயர்ந்தாலும், பின் பகுதியில் இளம் ஹெட்மயரின் ஆக்ரோஷ பேட்டிங்கை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்த பக்கம், பொறுமையே உருவாக ஷாய் ஹோப், பௌண்டரி, சிக்ஸர்களை மறந்தும்கூட அடித்து அவுட்டாகிவிடக்கூடாது என, ஒன்று, இரண்டு என்று சென்னையின் இறுக்கமான இரவில் ஓடி, ஓடி வியர்த்துக்கொண்டிருந்தார். ஆவேசமாக பேட்டை சுற்றிக்கொண்டிருந்த ஹெட்மயரின் ஜெர்ஸியும் தொப்பலாக வியர்வையில் நனைந்து பளபளத்தது. இடையே புது பேட் மாற்றிக்கொண்டு இந்திய பௌலிங் மீதான தன் தாக்குதலைத் தொடர்ந்தார் அவர்.

களத்துக்கேற்ற வியூகமும், அசாத்திய திறமையும் காண்பித்த பேட்டிங்கை, வெஸ்ட் இண்டீஸிடமிருந்து கேப்டன் கோஹ்லி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் அடிக்கடி விழித்துக்கொண்டிருந்ததில், முகவாயைத் தடவிக்கொண்டிருந்ததில் தெரிந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபேயை அவர் பௌலிங்கில் செலுத்தியபோதெல்லாம் வெஸ்ட் இண்டீஸிடமிருந்து பௌண்டரிகள், சிக்ஸர்கள் அலட்சியமாக எகிறின. போதாக்குறைக்கு ஜடேஜாவின் இன்னொரு ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள்.. யாரு? ஹெட்மயர்தான்! இந்த வேகத்தில் தொண்ணூறுகளுக்குள் வந்த ஹெட்மயர், தன் இயல்பான ஆவேசத்தைக் கொஞ்சம் அடக்கி சிங்கிள், சிங்கிளாகத் தட்டி நூறைக் கடந்து பேட்டை உயர்த்திக் காட்டினார் பெவிலியன் பக்கம். 106 பந்துகளில் 139 ரன். அவர் அவுட் ஆகையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கிவிட்டிருந்தது. அடுத்து வந்த பூரன் (Nicholas Pooran) சிங்கிள்களில் ஆரம்பித்து நிதானம் காட்டியது, வெஸ்ட் இண்டீஸின் அதிஜாக்ரதை அணுகுமுறையைக் காண்பித்தது. பரபரப்பு ஏதுமின்றி ஆடிய ஹோப், ஷிவம் துபேயின் ஒரு ஓவரில் வெடித்தார். சிக்ஸர், தொடர்ந்து பௌண்டரி. சதமும் கடந்து அசத்தினார். இறுதியில் பௌண்டரிகளில் இலக்கைக் கடந்தார் பூரன். வெஸ்ட் இண்டீஸ் 291 எடுத்தது, இரண்டே இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து.  போலார்ட் & கோ. ஆர்ப்பரித்து உள்ளே வர,  சோர்வோடு பெவிலியனுக்குத் திரும்பினர் இந்திய வீரர்கள். அவர்கள் எதிர்பாராத தோல்வி…

வெகுகாலத்திற்குப் பின் வெஸ்ட் இண்டீஸ், பழைய வெஸ்ட் இண்டீஸ் அணிபோல், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் கலந்து சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்தது. அடுத்த மேட்ச்சில் (விசாகப்பட்டினம், டிசம்பர் 18), கோஹ்லி பதிலடிகொடுக்கும் வேகத்தில் இறங்கி ஆடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்துவீச்சில் மாறுதல் இருக்கும். சுழலில், யஜுவேந்திர சாஹல் உள்ளே வருவார் எனத் தோன்றுகிறது.

**

5 thoughts on “விட்டு விளாசிய விண்டீஸ் !

  1. நமது பந்து வீச்சாளர்கள் காயத்திலிருந்து மீள்வதே பெரும்பாடாக இருக்கிறது!  என்ன செய்ய?  டாஸ் வின் செய்பவர்கள் பாதி வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்லலாம்!  

    Like

  2. மேலும் ஐ பி எல் ஆர் சிபி யிலிருந்து ஹெட்மயரை கழற்றி விட்டதற்கு அவரை பழிவாங்கி விட்டார் என்று சொன்னான் என் மகன்!

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம்:
      பும்ரா போன்றோருக்கு ஓவர் வொர்க்-லோட் ப்ரச்னை தருகிறது. பாண்ட்யா பேச்சைக் குறைத்து , உடம்பை கவனித்துக்கொள்ளலாம்!
      ஹெட்மயர் குறித்த உங்கள் பையனின் கருத்து சுவாரஸ்யம்! கோஹ்லிக்கு பக்..பக்..என்றிருந்திருக்கும், ஹெட்மயர் விளாச, விளாச..

      Like

  3. பயமில்லாமல்விளாசுகிறார் ஹெட்மெயர் நன்கு ரசித்த மேட்ச்

    Liked by 1 person

  4. @ Balasubramaniam GM :

    வெஸ்ட் இண்டீஸ் இப்படி ஆடினால், பழைய ரசிகர்கள் திரும்புவார்கள்!

    Like

Leave a comment