நரேந்திர மோதி 2.0 : கவரும் முகங்கள்

 

லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதாவின்  அசத்தலான வெற்றிக்குப்பின், நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். கடந்த 71 -ஆண்டு இந்திய ஜனநாயக வரலாற்றில், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகிய காங்கிரஸ் பிரதமர்களைத் தாண்டி, காங்கிரஸல்லாத தேசியக்கட்சி ஒன்றின் பிரமுகர், அடுத்தடுத்து பிரதமராகப் பதவியேற்றிருப்பது இதுவே முதல் முறை.

தன்னுடைய சர்க்காரில் தன்னோடு சேர்ந்து பணியாற்றவிருக்கும் அணியை மோதி அறிவித்திருக்கிறார்.  பாரதீய ஜனதா கட்சி மற்றும் அவர்களது தேசீய ஜனநாயகக் கூட்டணியின் வெவ்வேறு மாநிலங்களிலான சிறப்பான தேர்தல் வெற்றிகளைக் கணக்கில்கொண்டுதான் மோதியின்  கேபினெட் டீம் செதுக்கப்பட்டிருக்கிறது. அபரிமித வெற்றிகளைத் தந்தவை: உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், கர்னாடகா மற்றும் யூனியன் பிரதேசமான டெல்லி. மேலும், மஹாராஷ்ட்ரா, பிஹார், மேற்கு வங்கம், ஒடிஷா, அஸ்ஸாம் மாநிலங்களிலும் பாஜக-வுக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றன. ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்து இவ்வாறு வெற்றி பெற்ற முக்கியப் பிரமுகர்களின் அரசியல் ஆளுமை, கல்வித் தகுதி, ஏற்கனவே மத்திய, மாநில அளவில் பதவியிலிருந்திருந்தால் அதன்படி வெளிப்பட்ட நிர்வாகத் திறன், அனுபவம் போன்றவைகளை எல்லாம் பார்த்தே, கவனமாக இந்தக் கேபினெட் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்திய மந்திரிசபைகளில் அவைகளின் அதீத முக்கியத்துவம் காரணமாக, பிரதானமான அமைச்சரவைகள் என உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இலாக்காக்கள் அரசியல் வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றன.  இந்த நான்கில் யார் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது அந்த அரசின் ஒட்டுமொத்த வலிமை குறித்து கோடிட்டுக் காட்டிவிடும்.  அத்தகைய அமைச்சகங்களின் பொறுப்புக்களை யார், யாருக்கு இந்த தடவை பிரதமர் மோதி அளித்திருக்கிறார் எனப் பார்ப்போம்.

அமித் ஷா: ஏற்கனவே டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலத்தபடி, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரும், பிரதமரின் வலது கையுமான  அமித் ஷா, மந்திரிசபைக்குள் நுழைந்துவிட்டார்! சட்டம், ஒழுங்கு, உள்நாட்டுப்பாதுகாப்பு, மத்திய துணைராணுவ அமைப்புகள், உளவுத்துறை ஆகியவற்றின் நிர்வாகம் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்ட உள்துறை இலாகா ஷாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குஜராத்தில் உள்துறை மந்திரியாகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஆனால், இந்தியாவின் உள்துறை என்பது பெருங்கடல். நிர்வாகத்திறமை, அதிரடி முடிவெடுக்கும் திறன் போன்றவை கைகொடுப்பதால், அவரிடம் பிரதமர் மோதிக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. நன்றாகப் பணியாற்றுவார் . நம்பலாம் ஷாவை!

மாணவப்பருவத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.-ல் பணி. எண்பதுகளில், அகமதாபாதில், தனது ஆர்.எஸ்.எஸ். காலத்தில்தான் நரேந்திர மோதியை முதன்முதலாக சந்தித்தார் அமித் ஷா. குஜராத்தில் நரேந்திர மோதி மூன்று முறை முதல்வரானபோது, அவரோடு தோளோடு தோள் நின்று கட்சி, அரசு இரண்டையும் வலுவாக்கியதோடு, மக்களிடையே பிரபலமாகச்செய்த பெருமை ஷாவுக்கு உண்டு. பிஜேபி-யின் அகில இந்தியத் தலைவரானபின், பல்வேறு மாநிலங்கள் மற்றும் 2014, 2019 தேர்தல்களில்,  பாரதீய ஜனதாவின் மகத்தான வெற்றிகளுக்கு அமித் ஷா என்கிற நிர்வாகிக்கு முக்கியமான பங்களிப்பு இருந்தது என்றால் மிகையாகாது.

ராஜ்நாத் சிங்: முந்தைய மோதி அரசாங்கத்தில் உள்துறை இலாக்காவில் பணியாற்றிய ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார். நாட்டின் முழுபாதுகாப்பு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு (defence cooperations) ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் பொறுப்பு. கடந்த ஐந்தாண்டுகளில், முதலில் மனோகர் பர்ரிகர், பின்னர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களால் திறம்பட இயக்கப்பட்ட இலாகா.

ராஜ்நாத் சிங் முன்னாள் உத்திரப்பிரதேச முதல்வர். முன்னாள் பிஜேபி தலைவர். வாஜ்பாயியின் அரசு மற்றும் மோதியின் முதலாவது கேபினெட் ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றியிருக்கும் BJP veteran.

அடுத்ததாக வரும் மத்திய அரசின் இரண்டு முக்கிய இலாக்காக்கள் நிதி அமைச்சகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும். இந்த முறை இவைகள்,  இரண்டு பிரபலமான தமிழர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன:

டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர்

டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர்:  ‘வெளியுறவுத்துறை’, வல்லரசுகள் மட்டும் ஏனைய நாடுகளுடனான ராஜீய உறவுகள், மற்றும் சர்வதேச வணிக உறவுகள், ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளை, இந்திய நலனைக் கருத்தில்கொண்டு, கவனமாகக் கையாளும் இலாக்கா. (முன்பு சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பொறுப்பில் சிறப்பான பங்களித்திருந்தார். உடல் நலக் கோளாறினால் அவர் நீடிக்கமுடியவில்லை.) வெளியுறவுத்துறைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார், அதற்கு மிகப் பொருத்தமான ஒருவர். டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர். பலத்த சர்வதேச நெருக்கடிகள், மாற்றங்களுக்கிடையே இந்திய வெளியுறைத்துறை செயலராக 2015-18 என மூன்றாண்டுகள் பாராட்டத்தக்க சேவை. அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் தலைநகரங்களில் இந்திய தூதராக இருந்த அனுபவம். இந்தியாவின்  ’சைனா-ஸ்பெஷலிஸ்ட்’ என சர்வதேச அரசியல் விமரிசகர்களால் பார்க்கப்படுபவர். சீனாவுடனான ‘Dokhlam’ எல்லை நெருக்கடியின்போது, சீன-இந்திய ராஜீய பேச்சுவார்த்தைகளில், விட்டுக்கொடுக்காமல், கடுமையாக இந்தியாவுக்காக negotiate செய்தவர் என்கிறது BBC. இத்தகைய வெளியுறவுத்துறை நிகழ்வுகள் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளாகவே பிரதமர் மோதிக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டவர் ஜெய்ஷங்கர். Modi’s handpicked specialist for the job. இவர் வெளியுறவு அமைச்சராக, மோதியால் நியமிக்கப்பட்டதை சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அடுத்த ஐந்தாண்டுகளில் சர்வதேச உறவுகள் – குறிப்பாக, ட்ரம்பிற்குப் பின்னான அமெரிக்கா, பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய யூனியன், தெற்கு ஆசியக் கடற்பகுதிகளில் சீனாவின் லூட்டி, கொரியா, ஈரான், மத்திய கிழக்குப் பிரச்னைகள் போன்ற பலவித நெருக்கடிகளில் பிரதமர் மோதிக்கு ஆலோசனை சொல்பவராகவும், இந்தியாவை வழிநடத்துபவராகவும் அமைவார் என நம்பலாம்.

மேலும்: தமிழ்நாட்டவர்கள் -சராசரித் தமிழர்கள் எனப் படிக்கவும்- கிட்டத்தட்ட அறிந்திராத தமிழர்! பூர்வீகம் திருச்சி. தந்தை கே. சுப்ரமணியம் டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர்பதவியில் இருந்தவர். International Strategic Affairs Analyst. ஜெய்ஷங்கரின் சகோதரர் சஞ்சய் சுப்ரமணியம் ஒரு சரித்திர ஆய்வாளர் -renowned Historian. ஜெய்ஷங்கர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் டெல்லியில். அங்குள்ள JNU பல்கலைக்கழகத்தில் படித்து,  சர்வதேச அரசியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  (1977-2018 : IFS -held the highest post of Foreign Secretary). இப்போதைக்கு பார்லிமெண்ட்டின் எந்த சபையிலும் உறுப்பினர் இல்லை. இன்னும் 6 மாதத்துக்குள் ராஜ்யசபா எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்படவேண்டிய நிலை ஜெய்ஷங்கருக்கு.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்:  அடுத்ததாக முக்கியத்துவம் பெறுவது நிதி இலாகா. முந்தைய மோதி அரசில் நம்பர் 2-ஆகக் கருதப்பட்ட அருண் ஜேட்லி, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்றெல்லாம் அதிரடியாகப் பணியாற்றிய நாட்டின் நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் இன்றியமையாத துறை (உடல்நலக்குறைவு காரணமாக ஜேட்லி, இந்தமுறை கேபினெட்டுக்குள் வர மறுத்துவிட்டார்). இதுவரை இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மந்திரி என சிறப்புப் பெற்றிருந்த நிர்மலா சீதாராமன், மோதி 2.0-ல், நிதி அமைச்சராக அமர்த்தப்பட்டதில் பலர் புருவங்களை உயர்த்தியுள்ளனர்! முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூடுதல் பொறுப்பாக நிதியை சில வருடங்களுக்குத் தன் வசம் வைத்திருந்தார் எனினும், நிர்மலா சீதாராமன் முழுப்பொறுப்பு வகிக்கும் இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சராகியிருக்கிறார்.  நிர்மலாவுக்கு, மோதி இந்த முறை, இரண்டு முக்கிய பொறுப்புகள் கொடுத்திருக்கிறார்: Finance & Corporate Affairs. தனது பணி ஒழுங்கு மற்றும் நிர்வாகத்திறமையை ஏற்கனவே நிரூபித்திருக்கும் நிர்மலா, புதிய பொறுப்புகளில் சிறப்பாக ஒளிர்வார் என எதிர்பார்க்கலாம்.

NRI -ஆக லண்டனில் Habitat, PWC போன்ற நிறுவனங்களில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றியவர் நிர்மலா. ஒருமுறை ஒரு NRI நிகழ்வுக்காக டெல்லி வந்திருந்த நிர்மலா சீதாராமன், பிஜேபி-யின் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். நிர்மலாவின்  தகுதிகள், மேலைநாட்டு அனுபவம் எனப் புரிந்துகொண்ட சுஷ்மா சொன்னாராம்: ‘உங்களைப் போன்றவர்கள் இப்படி வெளிநாட்டில் போய் உட்கார்ந்துகொண்டால் எப்படி? உங்களது சேவை இந்தியாவுக்கல்லவா தேவைப்படுகிறது! இந்தியாவுக்கு திரும்பிவிடுங்கள்!’ என்றிருக்கிறார். ஆலோசனையை ஏற்ற நிர்மலா, இந்தியா திரும்பிவிட்டார். 2008-ல் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். 2010-ல், அப்போதைய பிஜேபி தலைவரான நிதின் கட்கரியால், கட்சியின் ஒரு Spokesperson-ஆக நியமிக்கப்பட்டார். முதலாவது மோதி சர்க்காரில், வணிகத்துறை ராஜாங்க அமைச்சராக இரண்டாண்டுகள் பணி அனுபவம்.

மேலும்: நிர்மலா சீத்தாரமன் ஒரு தமிழர். அப்பாவழி பூர்வீகம் முசிறி. அம்மாவழியில் திருவெண்காடு கிராமம், நாகப்பட்டினம் மாவட்டம். திருச்சி ஹோலி க்ராஸ் பள்ளியில் படித்தவர். சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் இளங்கலை. (வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரைப் போலவே இவரும்) JNU (Jawaharlal Nehru University, Delhi)-ல் முதுநிலைப் பட்டதாரி (பொருளாதாரம்).

மேலும் சில முக்கியமான கேபினெட் மந்திரிகள் :

ஸ்ம்ருதி இரானி

ஸ்ம்ருதி இரானி:    ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், டெக்ஸ்டைல்ஸ்’ ஆகிய பொறுப்புகள் இவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. கடந்த மந்திரிசபையில், செய்தி, தகவல் தொடர்பு, மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள்.

ஸ்ம்ருதி இரானி, மோதி கேபினெட்டின் இளவயதுக்காரர்; 46-தான் அமைச்சரின் வயது!  இயற்பெயர் ஸ்ம்ருதி மல்ஹோத்ரா. அம்மா ஒரு பெங்காலி; அப்பா பாம்பேக்கார பஞ்சாபி! Zubin Irani எனும் தொழிலதிபரை மணந்ததால் ஸ்ம்ருதி இரானி ஆனார். ஸ்ம்ருதி ஒரு முன்னாள் டிவி நடிகை/தயாரிப்பாளர். All is well, Malik Ek, Amrita போன்ற off-beat படங்களில் நடித்துள்ளார்.

பியுஷ் கோயல் (Piyush Goyal):   ரயில்வே, வணிகம் மற்றும் பெருந்தொழில்கள் ஆகிய பொறுப்புகளும் தரப்பட்டுள்ளன இவருக்கு. கடந்த மோதி அரசின் கடைசி பட்ஜெட்டை (ஜேட்லி உடல் நலக்குறைவாக இருந்தபோது) தாக்கல் செய்தவர்.  கடந்த ஐந்து ஆண்டுகளின் திறமை மிகு கேபினெட் அமைச்சர்களில் ஒருவராக அரசியல் வல்லுனர்களால் கருதப்பட்டவர் .

கோயல்,  மஹாராஷ்ட்ராவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர். அம்மா மஹாராஷ்ட்ராவில் மூன்று முறை பிஜேபி எம்.எல்.ஏ.ஆக இருந்தவர். இவரது அப்பா வேத பிரகாஷ் கோயல், வாஜ்பாயி அரசில் கப்பல் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர்:  செய்தி, ஒலிபரப்பு, மற்றும் வனம், சுற்றுச்சூழல் துறைகள் இவர் வசம். பூனேயின் கலகலப்பான பிஜேபி முகம். கல்லூரிநாட்களிலேயே பாரதீய ஜனதாவின் மாணவர் அணியில் செயல்பட்டவர். முந்தைய சர்க்காரில் இணையமைச்சர். இப்போது கேபினெட் அமைச்சர்.

ரவி ஷங்கர் பிரசாத் : முந்தைய மோதி அரசில், வெவ்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம். இப்போது, ‘சட்டம், நீதி, தகவல் தொடர்பு’ அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். (பிஜேபி-யிலிருந்து கடைசி நேரத்தில் காங்கிரஸுக்குத் தாவி, தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஹிந்தி நடிகர் ஷத்ருகன் சின்ஹாவை, பிஹாரின் பாட்னா தொகுதியில் நசுக்கியவர்.)

நரேந்திர சிங் தோமர்:  நரேந்திர மோதிக்கப்புறம், மத்திய மந்திரிசபையின் இன்னுமொரு நரேந்திரர் ! மத்தியப் பிரதேசத்துக்காரர். கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகள் நலன் ஆகிய பொறுப்புகள் பெற்றிருக்கிறார். தன்னுடைய இரண்டாவது அரசின் பதவிக்காலத்தில் விவசாயிகளின் பிரச்னைகள், குடிதண்ணீர் பிரச்னை போன்றவற்றில் முக்கிய கவனம் கொள்ளப்படும் என பிரதமர் தெரிவித்திருப்பதால், இந்தப் பதவியில் தோமர் முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். முந்தைய மந்திரிசபையிலும் பங்குபெற்றிருந்தார்.

டாக்டர் ஹர்ஷ்வர்தன் : டெல்லியிலிருந்து பிஜேபி-யின் பிரபல முகம். Well-qualified doctor of medicine. ஏற்கனவே மோதி அரசில் அமைச்சராக இருந்தவர். இம்முறை சுகாதாரத்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என இலாக்காக்கள்  வழங்கப்பட்டுள்ளன இவருக்கு.

அர்ஜுன் முண்டா:  ஜார்க்கண்ட்டின் முன்னாள் முதல்வர். மிகவும் மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதி.  ஆதிவாசி வகுப்பில் வரும் பிஜேபி தலைவர். ஜார்க்கண்டில் இவரது புகழ்கண்டு, பாரதீய ஜனதா இவரை தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமித்திருந்தது. இப்போது ’ஆதிவாசிகள் நலம், வளர்ச்சி’ க்கான அமைச்சகம், மிகச் சரியாக இவருக்குத் தரப்பட்டிருக்கிறது.

அர்ஜுன் முண்டா ஆதிவாசி மொழிகளோடு, ஹிந்தி, பெங்காலி, ஒடிய மொழிகளில் வல்லவர். சர்வதேச அளவில் இந்திய வில்வித்தைக்காரர்கள் புகழ்பெறவேண்டும் எனும் ஆசையுள்ளவர். புல்லாங்குழலிலும் கொஞ்சம் விளையாடுவார், அவ்வப்போது!

முக்தார் அப்பாஸ் நக்வி:  மோதி சர்க்காரின் ஒரே இஸ்லாமிய அமைச்சர். ’சிறுபான்மையினர் நலம்’ அமைச்சகத்தை இவருக்குத் தந்திருக்கிறார் மோதி. நக்வி ஒரு உத்திரப்பிரதேச அரசியல்வாதி. இந்திராகாந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால், ஜெயில் சென்ற அனுபவம். பிஜேபி-யை ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து தனித்துப் பார்க்கவேண்டும் என்பதும், ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசீய உணர்வு கொண்ட நிறுவனம் என்பதும் நக்வியின் கருத்துக்கள். வாஜ்பாயியின் சர்க்காரிலும், மோதியின் முதலாவது கேபினெட்டிலும்,  இணை அமைச்சராகப் பணியாற்றியிருக்கும் சீனியர். இப்போது கேபினெட் லெவலுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் மோதி.

தர்மேந்திர பிரதான் : பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் எஃகுத் துறைகளின் அமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார் பிரதான். ஒடிஷாவில் பிஜேபி யின் அபாரமான வளர்ச்சி/ வெற்றிக்குக் காரணமானவர் பிரதான். முன்னாள் பிஜேபி தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்.

அர்விந்த் சாவந்த் : பொது நிறுவனங்கள், மற்றும் பெருந்தொழில்கள் விவகாரத்தைக் கவனிக்கும் அமைச்சகம், சிவசேனா எம்பி-யான இவருக்குத் தரப்பட்டுள்ளது. சிவசேனா இந்த அமைச்சகத்தை பிஜேபி-யிடம் கேட்டு வாங்கியிருக்கக்கூடும்.  சாவந்த், பாம்பே (தெற்கு) தொகுதியில் காங்கிரஸின்  பெரும்புள்ளியான முரளி தேவ்ராவைத் தோற்கடித்த சிவசேனா எம்.பி.

**

2 thoughts on “நரேந்திர மோதி 2.0 : கவரும் முகங்கள்

  1. ஒவ்வொருவரைப் பற்றிய அறிமுகங்களும் நன்று. நிர்மலா சீதாராமன் கன்னடத்தில் பதவி ஏற்றுக்கொண்டதாக ஒரு காணொளி பார்த்தேன்.

    Like

Leave a comment