’அன்றும் இன்றும் என்றும்’ என்கிற முந்தைய பதிவின் கமெண்ட்டிற்கு ஏதோ சொல்லப்போய், ‘உலகம்போறப் போக்கப் பாரு’ என்கிற வரி மனதில் தங்கி, குறுகுறுவென ஊர ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் ஆழத்தில் ஊடுருவி தங்கமே தில்லாலே.. டிங்கிரி டிங்காலே என்று முணுமுணுத்துக்கொண்டது. சின்ன வயதிலேயே கேட்டிருக்கிறோமே ஆல் இந்தியா ரேடியோவில், ரேடியோ சிலோனில். இது எந்தப் படத்தில்தான் வருகிறது, யார் எழுதியது என்கிற சங்கீத ஆராய்ச்சி ’அன்பு எங்கே?’ என்று கேட்டு ஸ்தம்பித்தது.
டி.ஆர்.ராமச்சந்திரன், பாலாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த 1958-ல் வெளியிடப்பட்ட தமிழ்ப்படம் இது. தஞ்சை ராமையா தாஸ் புகழ்பெற்ற பாடலாசிரியர் அப்போது. அந்தக்காலப்படம் என்றால் முதல் சீனிலேயே பாட்டு வந்துவிடும். பாட்டுக்காகத்தானே ஜனங்கள் உயிரைவிட்டார்கள். கொட்டகைக்கு –சினிமாக் கொட்டகைக்குப் போனதே அதுக்குத்தானே! படத்திற்கு இசை வேதா. மொத்தம் ஒன்பது பாடல்களில் ஐந்தை ராமையாதாஸ் எழுதியிருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், விந்தன், கண்ணதாசன், வி.சீத்தாராமன் ஆகிய கவிஞர்களுக்குப் போனால் போகிறதென்று ஆளுக்கு ஒரு பாட்டெழுத சான்ஸ் கொடுத்திருக்கிறார்கள். யாரிந்த வி. சீத்தாராமன் எனத் தேடித் தேடி மண்டை காய்ந்ததுதான் மிச்சம். மனுஷனைப்பற்றி தகவல் ஏதும் அகப்படவில்லை. சரி விடுங்கள். அந்தப் படத்தில் சீத்தாராமன் எழுதி டி.எம்.சௌந்திரராஜன் (அப்போது புகழ்பெற்றிருக்கவில்லை) பாடிய பாடல்: டிங்கிரி டிங்காலே.. மீனாட்சி டிங்கிரி டிங்காலே..! போர்ச்சுகீசிய இசையில் கொஞ்சம் தோய்த்து, தமிழ் சினிமாப் பாட்டுக்கு மெட்டமைத்திருக்கிறார் வேதா. 60 வருஷங்கள் ஆகிவிட்டன இந்தப்பாடல் திரையைத் தொட்டு. நம்மை விடமாட்டேன் என்கிறது இன்னும்..
அந்தக்கால உலகத்தைப்பற்றி, சமூகச்சூழல்பற்றி ரொம்பத்தான் கவலைப்படுகிறது இந்தப் பாடல். மனிதனின் அடாவடித் தயாரிப்பான அணுகுண்டு ஜப்பானிய மண்ணில் விழுந்து வெடித்து சர்வநாசம் விளைவித்து 13 வருடங்களே ஆகியிருந்த கால கட்டம். நமக்குத்தான் மூளையிருக்குன்னு விஞ்ஞானிகள் எதையாவது செஞ்சிகிட்டே போகப்படாது. அதன் விளைவு எப்படிப்போகும்கிற சமூகப்பொறுப்பு வேண்டாமா எனக் கேட்காமல் கேட்கிறார் கவிஞர். சீத்தாராமனின் ஃபௌண்டெய்ன் பேனா அந்தப்பாட்டில் ஒரு இடத்தில் இப்படி விளையாடுகிறது:
அதிகமாகப் படிச்சிப் படிச்சி மூளை கலங்கி போச்சு
அணுகுண்டைத்தான் போட்டுகிட்டு அழிஞ்சுபோகலாச்சு
அறிவில்லாம படைச்சிப்புட்டா மிருகமுன்னு சொன்னோம்
அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம் !
அட, அப்படியா சங்கதி! சரி, அந்தக்கால சமூகச்சூழல்.. அதாவது குடும்பப்பொறுப்பில்லாம கையில் காசு இருக்குன்னு இஷ்டத்துக்கு அலையும் ஆம்பிளைகள், அல்டாப்பு அடாவடிகள், மைனர்கள் எப்படிப் பொழுது போக்கினார்களாம்? சொல்கிறார் இப்படி:
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சிபோன ரொட்டித் துண்டு தோக்கும் இவர் டின்னர்ர்..
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆசை
குதிரை வாலில் கொண்டுபோயி கட்டிடுவார் காசை !
ஓ! கிண்டி ரேஸுக்குப்போய் குதிரை குதிச்சுக் குதிச்சு ஓடுவதைப் பாத்து போதை தலைக்கேறி, பணத்தை ஊதித்தள்ளுவதே வேலயாப்போச்சாமா? ம்.. அப்பறம்?
ஐயா வரவைப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா
அந்த ஐயா இங்கே கும்மாளம்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
அய்யா வாயில் புகையுது பார்.. ஐயாம் வெரி ஸாரி !
ஓஹோ, கவிஞரே ஸாரி சொல்லவேண்டிய நிலைமையா! சரி, அப்போதெல்லாம் இளசுகளாவது இடம், ஏவல் பாத்து இங்கிதமா, ஒழுங்கு மரியாதையா நடந்துகிச்சுங்களாமா, இல்லையா? சீத்தாராமன்கிட்டேயே கேட்டுருவோம். இந்தா சொல்லிட்டாரு :
கண்ணும் கண்ணும் பேசிக்குது.. மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடிபோட்டு கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டை எல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பை எல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது !
உலகம்போறப் போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே !
அடக்கஷ்டமே! நேரு காலத்திலேயே இப்பிடியெல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராயிருச்சா நாடு? என்னமோ நரேந்திர மோதி வந்தபின்னாலேதான் நாசமாப்போச்சு எல்லாம்னு இவனுங்க சொல்றதக் கேட்டுகிட்டு நானும் நம்பிக்கிட்டு இருந்தேனே ..
**
என்றைக்கும் பொருந்தும் பாட்டு…!
LikeLiked by 1 person
@திண்டுக்கல் தனபாலன் : உண்மைதான்.
LikeLike
வி சீதாராமன் ஜாவர் சீதாராமனாக இருப்பாரோ…
உலகம் இன்றைக்குத்தான் ஒழுங்காய் போயிருக்கு!
இந்தப் பாடல் கேட்ட நினைவு இருக்கு. ஓரளவு இந்தப் பாடலின் வரிகள் சரணத்தில் “சுராங்கனி சுராங்கனி” பாடலுக்கு ஒத்துவருகிறது!
LikeLiked by 1 person
@ஸ்ரீராம் : இல்லை, அவரைப்போலத் தெரியவில்லை.
சுராங்கனி பாடல் Baila music >afro-lankan music>Portugese music என மையப்புள்ளிகொண்டுள்ளது. ஒரு சுற்று சுற்றித் தமிழையும் தொட்டுவிட்டது!
LikeLike
அந்தக் காலத்தில் படத்தில் நிறைய பாடல்கள் இருக்கும் வசனமே பாடாலாயிருக்கும் 15 பாடல்கள் கொண்டபடம் 20 பாடல்கள் கொண்ட படம் என்று பாடல்கள் எண்ணிக்ககையே விளம்பரமாகும்
LikeLiked by 1 person
@Balasubramaniam G.M : ஆமாம், பாட்டிலே ஆரம்பித்துப் பாட்டிலே முடியும் படங்கள். வசனங்களும் பாடல்களுக்கும் வித்தியாசம் தெரியாதவை!
LikeLike
எல்லா காலங்களிலும் நல்லவர், கெட்டவர்கள் உண்டு.
இந்த பாடல் எல்லா காலங்களிலும் பொருந்தும் பாடலாக இருக்கிறது.
வெங்கட் நாகராஜ் இந்த பாடலை பகிர்ந்து இருந்தார் காணொளியுடன்.
LikeLiked by 1 person
@கோமதி அரசு : பெரியவர்கள் எப்போதும் காலங்கெட்டுப்போச்சு என்கிற பல்லவியையே திரும்பவும் பாடும்படியான நிலை..என்ன செய்ய!
LikeLike
அந்த காலத்து பெரியவர்கள் காலம் கெட்டு போச்சு என்பார்கள்,
இந்த காலத்து பெரியவர்களும் காலம் கெட்டு போச்சு என்பார்கள்.
LikeLiked by 1 person
ஏகாந்தன் அண்ணா இந்தப் பாட்டு நிறைய கேட்டிருக்கேன் ஆனா வரிகள் முதல்ல தெரியலை. வெங்கட்ஜி தளத்தில் அவரும் வரிகள் பகிர்ந்திருந்தார் அப்போதான் தெரிஞ்சுச்சு. ஆஹா அட இப்ப காலம் கெட்டுப் போச்சுனு சொல்லறோமே அது அன்னைக்கும் அப்படித்தான் இருந்துச்சா….இனி ஏதாவது பெர்சு “அந்தக் காலத்துலனோ, 1935 னோ வரலாறு ஆரம்பிச்சா அம்புடுத்தான்” நற நற நற நற…தான்….ஹா ஹா ஹா ஹா
அப்படியே பொருந்துது இல்ல?
எல்லா காலத்துலயும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு…
கீதா
LikeLike
@துளசிதரன், கீதா : நல்லதும் கெட்டதும் கலந்ததுதானே காலம்.. இருந்தாலும் எப்போதும் பாடறமாதிரி ஒரு பாட்டைப் போட்டுட்டுப் போயிட்டாரு இந்த சீதாராமன் -mysterious poet of Tamil cinema !
LikeLike
உங்க தளத்துல என்னென்னமோ குக்கீஸ் எல்லாம் பேக் பண்றீங்க போல!!!! அது சரி நீங்க குக்கீஸ் பேக் பண்றதுக்கு நாங்க அலவ் பண்ணனுமாமே..ஹா ஹா ஹா ஒன்னுமே புரில போங்க
கீதா
LikeLike
@துளசிதரன், கீதா :
என்னது! என் தளத்து மூலமா குக்கீஸ் விக்கிறான்களா வர்ட்ப்ரெஸ் -அதுவும் எனக்கே தெரியாம! இவிங்கள என்னதான் செய்யறதுன்னு தெரியலையே..காலம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சு !
LikeLike
இல்ல நாங்க குக்கீஸ் எடுத்துக்கிட்டாத்தான் கமென்ட் போடுமோ..க்ளோஸ் அண்ட் அக்சப்ட்னும் வருது…..என்னமோ ஒன்னும் புரியலையே இந்த ப்ளாகர் வேர்ட்ப்ரெஸ் எல்லாம் சேர்ந்து ஏதோ கலந்து கட்டி ஜதி பண்ணுதுங்கோ…
கீதா
LikeLike
@ கீதா : என்னத்த க்ளோஸ், அக்செப்ட்டு..! வம்பாப்போச்சே ! ஒங்களப் படாதபாடு படுத்துதே இந்த வர்ட்ப்ரெஸ்.. ஒருவேளை ப்ளாக்கர் கதையும் இப்படித்தானோ ?
LikeLike
டிங்கிரி டிங்காலே பாட்டு ரொம்பப் பிடிக்கும் அதன் மேலதிகத் தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. புதிய செய்திகள். டி.எம்.எஸ் அப்போ பிரபலம் இல்லை என்பதும் புதுச் செய்தி!
LikeLike
இங்கே என் கிட்டேயும் இந்தத் தளம் குக்கீஸைத் தான் பயன்படுத்துவதாகச் சொல்வதோடு நீ அதுக்கு ஒத்துண்டே ஆகணும்னு சொல்லுது. அதிகம் தெரிஞ்சுக்கவோ குக்கீஸைக் கன்ட்ரோல் செய்யவே குக்கி பாலிசிக்குப்பொகவும் சொல்லுது. இதை ஒத்துக்கொண்டு மூடுன்னு சொன்னது! எதுக்கு வம்புனு மூடவே இல்லை. :))))
LikeLiked by 1 person
@Geetha Sambasivam : இதென்ன குக்கீஸ் விளையாட்டு, குட்டீஸ் விளையாட்டைப்போல.. ஆளப்பாத்து ஆடுதா ? ஒன்னுமே புரியலே, ஒலகத்துலே…!
LikeLike