மோதியும் காக்காவும்

நகைச்சுவை : ஏகாந்தன்

நாட்டு நெலவரம் ஒண்ணுஞ் சரியில்லண்ணே! குப்புசாமியுடன் காலைநடை நடந்துவந்துகொண்டிருந்த சிங்காரம் அங்கலாய்த்துக்கொண்டான்.

ஏண்டா நீ இப்புடி அலுத்துக்கறே காலங்கார்த்தாலே…என்றார் குப்புசாமி, துண்டை உதறித் தோளில்போட்டுக்கொண்டே.

விடிவுகாலம்னு ஒன்னு வரணும்ணே.. என்றான் சிங்காரம் தொடர்ந்து.

விடிஞ்சுதானடா எளுந்து பல்ல வெளக்கிட்டு வர்ற.. இன்னும் என்னத்த விடியறது?

நம்ம இந்தியாவப்பத்தி சொன்னேன்ணே.. தமிள்நாட்டு லச்சணமும் ஒன்னும் சொல்லிக்கிறாப்ல இல்ல.

வடக்கே ஏகப்பட்ட சதி நடக்குதப்பா..! அதான் தமிள்நாட்டுல அவனவன் கட்சியப்புடி, ஆட்சியப்புடின்னு அலயுரானுங்க. ஒரே குளறுபடி..

எடப்பாடிதான் ஆள்றாருல்ல ?

என்னத்தப் பெரீசா ஆள்றாரு எட்டப்பாடி..நீயும் கண்டுகளிச்சுப்பிட்டே. பொம்மலாட்டம் நடக்குது. மேல ஒக்காந்துகிட்டு ஆட்டிவெக்கிறானுங்க..

யாருண்ணே, மோடியையா சொல்றீங்க?

அந்த ஆளுதான். தாடியும் மீசையுமா ..மொகமே சரியில்லே. அன்னிக்கே நெனச்சேன், இந்த ஆளப்போயி நாட்டுக்குப் பிரதமராக்கிருக்கானுங்களே.. என்ன ஆகப்போகுதோன்னு. இப்ப என்னடான்னா, தமிள்நாட்டயே பிடிச்சிருச்சு சனி..

இங்கின ஒரு சந்தேகம்ணே. சனிபகவானோட வாகனம் காக்காவா, புறாவா?

என்னடா சிங்காரம்! இதுலயும் ஒனக்கு சந்தேகந்தானா? காக்காதான்டா சனியோட வாகனம். ஆனா, அந்தக் காக்காவோடக் கதையக் கேட்டீன்னா..

சொல்லுங்கண்ணே, சொல்லுங்க. காக்கா வடை கத தானே!

அடச்சீ.. சும்மா கெடறா! டீக்கே இன்னும் வழியக் காணோம். வடைக்கிப்போயிட்டான்..

பின்ன, காக்காவுக்குல்லாம் வேற என்ன கதைண்ணே இருக்கமுடியும்?

இருக்கு..இருக்கு. ஒனக்குத்தான் ஒரு எளவுந்தெரியாது.

சொல்லுங்கண்ணே. காலங்காத்தால ஒங்களப் பாக்காட்டி என்னமோ மாதிரி இருக்கு. பாத்தா டென்சன ஏத்திப்புடுறீக ..

சரி விடுறா. அது ஒரு சோகக் கதை..

சோகக்கதையா? அப்பிடி என்னதான் நடந்திருச்சு அதோட வாள்க்கையில?

சரி, அதயும் சொல்லிடுறேன்.. கேளு கவனமா. இந்தக் காக்கா இருக்குதே காக்கா.. அது மொதல்ல வெள்ளையாத்தான் இருந்துச்சாம்.

வெள்ளக் காக்காவா? ஆரம்பமே சூப்பரு!

ஆமா. அது என்ன பண்ணிருக்கு..ஒரு நாள் குஜராத் பக்கமா பறந்துருக்கு.

குஜராத்தா? அங்கிட்டுல்லாம் ஏண்ணே போய்ப் பறக்குது இந்தக் காக்கா?
தமிழ்நாட்டுக்குள்ளயே நம்பளமாதிரிக் கெடந்து தொலச்சா என்ன?

டேய்! கேளுடா ஒளுங்குமொறயா. குஜராத்துலயும் எத்தன வீடுங்க இருக்கு. எல்லாத்தயும் விட்டுட்டு இதுபோயி ஒக்காந்துச்சு ஒரு வீட்டு மேலே.

எந்த வீட்டு மேலேண்ணே?

மோடி இருக்காரே மோடி. அவரு வீட்டுக்கூரை மேலபோயி ஒக்காந்திருச்சு.

ஏண்ணே இப்பிடில்லாம் நடக்குது?

எல்லாம் விதிதான். வேறென்ன..காக்காவ மட்டும் விட்ருமா? ஒக்காந்த சனியன் சும்மா இருக்கக்கூடாதா?

என்னண்ணே பண்ணிச்சு?

கா..கா ..-ன்னு கத்திப்பிடிச்சு.

அடடா, அப்பறம்?

வீட்டுக்குள்ளேருந்து மோடி வெளியில வந்துட்டாரு.

ஐயய்யோ!

எங்கேந்து சத்தம் வருதுன்னு திரும்பினவரு, காக்காவப் பாத்துப்புட்டாரு.. அவ்வளவுதான். ஒரே பார்வை. வெள்ளையா இருந்த காக்கா கருப்பாயிருச்சு!

அடி ஆத்தீ! ஆனா, மத்த காக்கால்லாம் தப்பிச்சிருச்சு..இல்லண்ணே?

அடக் கூமுட்டை! எல்லாந்தான் கருப்பாப்போச்சு.. பாத்தது யாரு? எதையாவது சரியாப் புரிஞ்சிக்கிறியாடா நீ?

அண்ணே!

அம்மா போயிட்ட சமயத்தில மோடி இறுதிச்சடங்குக்கு சென்னை வந்தாருல்ல. ஞாபகமிருக்கா மறந்துபோட்டியா?

என்னண்ணே இப்பிடிக் கேட்டுப்புட்டீக.. நல்லா ஞாபகம் இருக்குண்ணே.

அப்ப மத்தவங்களமாதிரி மலர்வளையத்த வச்சுட்டு சும்மாப் போனாரா அவரு? சசிகலாவக் கூப்பிட்டு துக்கம் விசாரிச்சாரு.

நீங்க என்னண்ணே இதுக்குல்லாம் போயி கொற சொல்லிக்கிட்டு. அவர் செஞ்சது சரிதானே..

டேய்! முளுசாக் கேளுடா மூதி! அதோட நிறுத்தியிருந்தாருன்னா சரிதான். ஆனா அவரு மேற்கொண்டு என்ன செஞ்சாரு? பேசிக்கிட்டே சசிகலாவோட தலைல கைய வச்சாரு! பொறவு என்னாச்சு? சசிகலாவுக்கு என்ன நடந்துச்சு பாத்தியா ?

பெங்களூரு ஜெயில்ல ஒக்கார வச்சிருக்காங்கண்ணே!

அதோட முடிஞ்சுதா கதை? அம்மா ஆசையா வளர்த்த அதிமுக என்னாச்சு? மூணு துண்டாப்போயி மொடங்கிக்கெடக்குதா இல்லயா மூலையிலே?

ஆமாண்ணே.. நாசமாப்போச்சு கச்சி!

இதுல்லாம் போறாதுன்னு, தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்ன மேல பிரச்ன.. இம்புட்டாவது நிம்மதி இருக்காடா?

துளிக்கூட இல்லண்ணே! தமிழ்நாடே தொவண்டுபோய்க் கெடக்குது.

இப்ப புரியுதா எல்லாத்துக்கும் யாரு காரணம்னு?

மோடிதான்ணே !

சரி, சரி; ரத்தினம் கடை வந்திருச்சு. ரெண்டு சிங்கிள் டீக்கு சொல்லு!

தோளிலிருந்த துண்டை எடுத்து பெஞ்சின்மேல் விசிறிவிட்டு அக்கடா என்று உட்கார்ந்தார் குப்புசாமி.

**

10 thoughts on “மோதியும் காக்காவும்

    1. நாஞ்சொல்லல்லே! அந்தக் குப்புசாமிதான் அப்பிடிச் சொல்றாரு!

      Like

  1. குப்புசாமி தாத்தாவுக்கு குசும்புதேன்…. அவருக்கு காக்கா உக்கார பனம்பழம் வுழுந்த கதையும் தெரிஞ்சிருக்குமே…

    Liked by 1 person

  2. @ஸ்ரீராம்: இந்தக் காக்கா குப்புசாமியையும் விடமாட்டேங்குதே.. அவருந்தான் என்னபண்ணுவாரு !

    Like

  3. எங்கள் ப்ளாக் எங்க தளம் எல்லாத்துலயும் சுத்தின காகா இப்ப உங்க தளத்துலயும் குப்புசாமி நாக்குல உக்காந்துருச்சு போல!!! ஹாஹாஹாஹா…ரொம்பவே லொள்ளு பண்ணுறாரு!!

    கீதா

    Liked by 1 person

    1. காக்கா, குப்புசாமி மேல அப்பயிலேர்ந்த ஒரு கண்ண வச்சிருக்கு போலருக்கு. சாச்சு சாச்சுப் பாத்திருக்கு..!

      Like

  4. இந்தத் தமிழ்நாட்டுக்காரங்க வாயில வந்து விழுந்தாரு மோதி! தப்பிக்கிறது கஷ்டம். அவர் செஞ்ச பாவம் என்னவோ?

    Like

Leave a comment