இரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி, இந்தியாவை வெற்றிமேடையில் ஏற்றிவிட்டார். தொடர் 2-1 என்று இந்தியாவின் கணக்கில் வர, பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்கப்பட்டது.
தரம்ஷாலா மேட்ச்சை ஜெயித்தால்தான் தொடர் என்கிற நிலையில் இரு அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் பக்கமே முள் சாய்ந்திருப்பதாய்த் தோன்றியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி ஆடமாட்டார் என்பதே ஸ்மித்தை ஏகமாகக் குஷிப்படுத்தியது. தொலஞ்சான்யா! டாஸையும் வென்றது ஆஸ்திரேலியா. தரம்ஷாலா பிட்ச் இதுவரை அமைந்த பிட்ச்சுகளில் அருமையானதாகத் தோன்றியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வேகவேகமாக ரன் எடுத்தது. விக்கெட்டுகளும் விழுந்துகொண்டிருந்தன. இதுவரை தொடரில் ஃபார்ம் காண்பிக்காத டேவிட் வார்னர் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். சர்ச்சைகள் ஒருபுறமிருக்க பேட்டிங்கில் பின்னி எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இன்னுமொரு சதம் இந்தத்தொடரில். 144-க்கு 1 விக்கெட் என ஆஸ்திரேலியா கம்பீரமாக முன்னேறியது.
லஞ்சுக்குப் போகுமுன்தான் ரஹானேக்கு முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவின் முகம் நினைவில் வந்ததுபோலும். கொஞ்சம் போடச்சொன்னார். லஞ்ச்சில் என்ன சாப்பிட்டாரோ! குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன! முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது! சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் ! அடுத்தடுத்த கம்மின்ஸ் பந்துகளை பௌண்டரி, சிக்ஸர் எனச் சீறவிட்டு பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கோஹ்லியையும், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார். சாஹா 31, ஜடேஜா 63 என அசத்தினர், சிறப்பாக வீசிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயனுக்கு 5 விக்கெட்டுகள். இந்தியா எடுத்த 332 ஆஸ்திரேலியாவின் மனதில் கிலியை உண்டுபண்ணியிருக்கவேண்டும்.
தொடரைக் கோட்டைவிட்டுவிடக்கூடாதே என்கிற அழுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆரம்பித்தது. உமேஷ் யாதவ் வேகத்தினாலும், ரிவர்ஸ் ஸ்விங்கினாலும் ஆஸ்திரேலியர்களை அதிரவைத்தார். ரென்ஷா, வார்னர் இருவரையும் அதிரடியாக வெளியேற்றினார். நிதான ஆட்டத்திற்குப் பேர்போன ஆஸ்திரேலியக் கேப்டனை பீதி கவ்வியது. புவனேஷ்குமாரின் ஸ்விங் பௌலிங்கிற்கு உடனே பலியாகி ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஸ்மித். மேக்ஸ்வெல்லின் அதிரடி 45-ஐத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. 137 ரன்களில் பரிதாபமாக இந்தியாவிடம் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. இந்திய பௌலர்களின் உத்வேகப்பந்துவீச்சு மிகவும் பாராட்டுக்குரியது. உமேஷ், ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ரன் அதிகமாகக் கொடுத்துவிடக்கூடும் என்கிற பயத்தில் ரஹானே அவருக்கு ஐந்து ஓவருக்குமேல் தரவில்லை.
இந்தியாவுக்கு இலக்கு 106. இத்தகைய சிறிய இலக்குகள் 4-ஆவது நாளில் பெரும் ப்ரச்சினையை பேட்டிங் அணிக்குத் தரவல்லது. இதுவோ இறுதிப் போட்டி. தொடரின் தலையெழுத்தை நிறுவப்போவது. எனவே இந்தியா இலக்கை நோக்கி வழிமேல் விழிவைத்து நகர்ந்தது. இருந்தும் முரளி விஜய் தடுமாறி கம்மின்ஸிடம் வீழ, அதே ஓவரில் இந்தியாவின் Mr.Dependable-ஆன புஜாரா ரன்–அவுட் ஆகிவிட, 46-க்கு இரண்டு விக்கெட்டுகள்; இந்தியாவுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டதோ எனத் தோன்றியது, ஆனால் ராஹுல் தன் நிதானத்தை இழக்காது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடிசேர்ந்த ரஹானேயை முகத்துக்கெதிரே எகிறும் வேகப்பந்துகளினால் மிரட்டப் பார்த்தார் கம்மின்ஸ். ஆனால் தடுத்தாடி, தடுமாறிவிழும் மனநிலையில் ரஹானே இல்லை. கம்மின்ஸின் எகிறும் பந்துகளை விறுவிறு பௌண்டரிகளாக மாற்றினார். போதாக்குறைக்கு, கம்மின்ஸின் 146 கி.மீ. வேகப்பந்தொன்றை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களுக்கு போதையூட்டினார் ஒல்லி உடம்பு ரஹானே! ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. இந்தத் தொடர் நமக்கில்லை என்று அதற்குப் புரிந்துவிட்டது. ராஹுல் தன் ஆறாவது அரைசதத்தைப் பூர்த்திசெய்து வெற்றி ரன்களையும் எடுத்தவுடன், மைதானத்தில் ஆட்டம் ஆடி, கோஹ்லி அங்கில்லாத குறையை ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்தார். வெற்றிக்கு அடையாளமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் பிடுங்கி எடுத்துக்கொண்டு அமைதியாக நடந்தார் அஜின்க்யா ரஹானே. இளம் ரசிகர்களின் கூச்சல், ஆரவாரத்தில் தரம்ஷாலா அதிர்ந்து எழுந்தது. கோஹ்லி மைதானத்துக்குள் ப்ரவேசித்து வீரர்களோடு கைகுலுக்கி மகிழ்ந்தார். தொடரின் விதியை நிர்ணயித்த தரம்ஷாலா மேட்ச்சில் ரஹானே காட்டிய அமைதியான ஆனால் அழுத்தமான தலைமை மறக்க இயலாதது.
இத்தொடர் பற்றிய முதல் கட்டுரையில் நான் கூறியபடி இது ஒரு அபாரத் தொடராக நடந்துமுடிந்தது. இருதரப்பிலிருந்தும் அபரிமித ஆட்டத் திறமைகளின் வெளிப்பாடுகள், மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அதிரடிச் சச்சரவுகள் என ரசிகர்களையும், விமர்சகர்களையும் இறுதிவரை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித்தின் DRS தப்பாட்டம்பற்றி பெங்களூரில் விராட் கோஹ்லி வீசிய குண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும், ஏன் ஐசிசி-யையும்கூட அதிரவைத்தது. பதிலாக, தன் மூளை ஒருகணம் மழுங்கிவிட்டதாகவும் அது தவறுதான் என்றும் ஸ்மித் வழிந்த கோலாகலக் காட்சி அரங்கேறியது! ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடியோ ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடைசிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை !’’ என்று மனதில் உள்ளதைப் போட்டுடைத்தார் கோஹ்லி. மொத்தத்தில் பெரும் ஆர்வத்தை உலகெங்குமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே கிளர்ந்தெழவைத்த டெஸ்ட் தொடர் இது. Most riveting Test series ever played in recent times.
2016-17 க்ரிக்கெட் சீஸன் இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராஹுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 அரைசதங்களை எடுத்து அசத்தினார்கள். கோஹ்லி 3 இரட்டை சதங்களையும், புஜாரா ஒரு இரட்டை சதத்தையும் விளாசி முத்திரை பதித்தனர். இங்கிலாந்துக்கெதிராக சென்னையில் கருண் நாயர் அடித்த முச்சதமும் இந்த சீஸனின் மகத்தான அம்சங்களில் ஒன்று. பௌலிங்கில் உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா முதன்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளார். அஷ்வினுக்கு இரண்டு ஐசிசி விருதுகள். இந்திய அணி அபாரமாக டெஸ்ட்டுகளை ஆடி 4 தொடர்களைக் கைப்பற்றிய காலமாக இது பேசப்படும். இனி வெளிநாட்டு மைதானங்களிலும் தன் திறமை காட்ட இது அணியினை உற்சாகப்படுத்தும். எனினும், அதற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் கொஞ்சம் ஐபிஎல் ஆடலாம் !
**
வெற்றிக்கனம் தலைக்கேறக்கூடாது106 ரன் இலக்கைக் கண்டபோது மேற்கிந்தியத் தீவில் இந்தியா நான்காவது இன்னிங்சில் சொற்ப ரன்களே எடுக்க வேண்டி இருந்தும் தோல்வி தழுவியது பாழும் மனத்திரையில் ஓடியது
LikeLiked by 1 person
மனத்திரையில் இப்படி ஓடி பயமுறுத்தக்கூடிய பல நல்ல காரியங்களை அந்தக்காலத்தில் இந்திய அணி செய்திருக்கிறது!
LikeLike