ந்யூமிஸ்மேட்டிக்ஸ் !

பெங்களூர். ஒரு அமைதியான சனிக்கிழமை. அதாவது காவிரி தலைவிரித்து ஆடுவதற்கு கொஞ்சம் முன்பான காலம். காலை 8 ¾ மணிக்குள் வெங்கடரமண ஸ்வாமி கோவிலுக்குப்போனால்தான் சனிக்கிழமை விசேஷ தீபாராதனையை பார்க்கமுடியும் என்பதால் அவசர அவசரமாகக் கிளம்பினோம். உபர் டேக்சி பிடித்துக்கொண்டு ஹென்னூரிலிருந்து குந்தனஹள்ளிக்கு வேகமாகச் சென்றோம்.

பெங்களூரில் அலுவலக நாட்களில் சாலைப்போக்குவரத்து லட்சணம் இருக்கிறதே, மகா கேவலம். ஊர் பாடும் ஒப்பாரி. சனிக்கிழமை காலையிலுமா இப்படி இருக்கவேண்டும்? கே.ஆர்.புரம் அருகே ட்ராஃபிக் முடிச்சு. எப்படியோ நெரிசலுக்குள் புகுந்து, நெளிந்து, தாண்டி ஓடியது டேக்ஸி. கிட்டத்தட்ட தீபாராதனைக்குப் பத்து நிமிஷம் முன் கோவில் அருகில்போய் நின்றது. மனைவியும் மகளும் முதலில் இறங்கி `கடமையே கண்ணாயினார்` என்பதாக வேகமாகக் கோவிலுக்குள் சென்றுவிட்டார்கள். 202 ரூபாய் ஃபேர் என்று ஸ்மார்ட்ஃபோனில் காட்டினார் ஓட்டுனர். இளைஞர். என்னிடம் இருந்ததோ 500 ரூ. நோட்டுக்கள். `சேஞ்ச் கொடுங்க சார்!` என்றார் தமிழில். அவரிடம் உண்மையில் இல்லை போலும். பர்சைத் திறந்து 100 ரூ. நோட்டுகள் இல்லாததைக் காண்பித்தேன்.

கோவிலுக்கெதிரே உட்கார்ந்து பூ விற்றுக்கொண்டிருந்த பெண்களிடம்தான் சில்லரைக்கு சரணடையவேண்டும் போலிருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கையில், ஓட்டுனரின் கண்கள் என் பர்சில் துழாவினபோலும். ஒரு நோட்டைப் பார்த்துவிட்டு` அது என்ன நோட்டு சார் !` என்றார். நான் பர்ஸ் திறந்து மூடிய சில நொடிகளில் பார்த்துவிட்டாரா ? “அதுவா? அது வெளிநாட்டு நோட்டு ’’என்றேன், மேற்கொண்டு சொன்னால் இவருக்குப் புரியுமா என்கிற சிந்தனையுடன். `அதக் கொஞ்சம் காட்டுங்க பாக்கலாம் ` என்றார் உற்சாகமாகி. காட்டியவுடன் கையில் வாங்கி ஆச்சரியத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தார். `க்யூபாவின் கரன்சி நோட்டு இது` என்றேன். திகைப்போடு பார்த்தவரின் கண்களில் மேற்கொண்டு தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆசை இருப்பதுபோல் தோன்றியது. `உலகத்தின் பலபகுதியிலிருந்தும் விதம் விதமான காசுகள், நோட்டுகளை எப்படியாவது சேகரிக்கும் பழக்கம் சில பசங்களுக்கு உண்டு. ந்யூமிஸ்மேட்டிக்ஸ் (numismatics)-னு சொல்லுவாங்க இங்கிலீஷ்ல. பெரியவங்கள்லகூட சிலபேர் பொழுதுபோக்காக இப்பிடி ஆசப்பட்டு சேகரிக்கிறது உண்டு. உங்களுக்கு இந்த விஷயத்தில ஆர்வம் இருக்கா?` கேட்டேன்.

`என்ன சார் இப்பிடிக் கேக்குறீங்க! எனக்கு இதுல சின்ன வயசுலேர்ந்து இண்ட்ரஸ்ட்டு உண்டு சார். நானும் கொஞ்சம் சேர்த்திருக்கேன். ஆனா, இந்த மாதிரிப் பார்த்ததில்லே! ` என்றார் கண்கள் மிளிர. `இந்தாங்க.. பிடிங்க!` என்று அந்த நோட்டை அவரிடம் நீட்டினேன். அசந்து போய் `என்ன சார் ! ஒடனே தூக்கிக் கொடுத்திட்டீங்க. இதுக்குல்லாம் எவ்வளவு மதிப்பு இருக்கும்! ` என்று பின்வாங்கினார் அந்த இளைஞர். `அதப்பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். ஒங்க கலெக்‌ஷன்ல இருக்கட்டும்` என்றேன். சும்மா வாங்கிக்கொள்ள அவருக்கு மனசு பொறுக்கவில்லை போலும். தன் பர்ஸைத் திறந்துகொண்டே `எவ்வளவு சார் நான் கொடுக்கணும்!` என்றார். பதற்றம் இப்போது என்னைத் தொற்றிக்கொண்டது. இவருக்கு கொஞ்சமாவது விளக்கியாக வேண்டுமே : ஒன்று -அவர் எனக்கு எதையும் தரவேண்டியதில்லை என்பதற்காக. மற்றொன்று – எப்படிப்பட்ட அபூர்வமான நோட்டு இது என்று புரியவைப்பதற்காக!

`கொஞ்சம் இருங்க. க்யூபான்னு ஒரு நாடு இருக்குன்னு ஒங்களுக்குத் தெரியுமா?`

`தெரியாது சார் !`என்றார் அப்பாவியாக.

அடடா.. கொஞ்சம் பின்னாடிலேர்ந்து ஆரம்பிக்கணும்போலேருக்கே! `பரவாயில்ல. சுருக்கமா வர்றேன். தென்னமெரிக்கா, வட அமெரிக்கக்க் கண்டங்களுக்கு நடுவில, அட்லாண்ட்டிக் சமுத்திரம்னு கேள்விப்பட்டிருப்பீங்கல்ல.. ஸ்கூல் புஸ்தகத்துல எங்கேயாவது படிச்சிருக்கலாம். அதன் ஓரத்துல கரீபியன் கடல் அப்படின்னு ஒரு கடல் இருக்கு. அதுல தீவுகளாலான சின்ன நாடு க்யூபா. ஒரு கம்யூனிஸ்ட் நாடு. மக்கள் தொகை ரொம்பக் கம்மி !` என்று ஜாக்ரதையாக ஆரம்பித்தேன்.அதிகமாகச் சொல்ல அவகாசமில்லை. ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்.

`அந்த நாட்டுல கொஞ்ச நாள் வேல பார்த்திருக்கேன். அந்த நாட்டு கரன்சிக்கு பேரு க்யூபன் பெசோ. நம்ப ஒரு ரூபா நோட்டு மாதிரி, ஒரு பெசோ நோட்டு இது. மதிப்பப் பத்தி நெனச்சு பயப்படவேண்டாம். நம்ப ரூபா மதிப்புல நாலு ரூபான்னு வச்சிக்குங்க. அவ்வளவுதான். ஆனா இது ஈசியாக் கிடைச்சிராது. இப்ப இத ஒங்க பர்ஸுல தைரியமா வைங்க! ` என்றேன்.

கொஞ்சம் தெளிவடைந்து எடுத்துக்கொண்டார். `தேங்க்ஸ் சார்!` என்றார்.

இவருக்கு விதம்விதமா காசுகள் சேர்க்கறதுல ஆசை இருக்கே. இப்படி ஒருத்தரைப் பார்ப்பேன் என்று தெரிந்திருந்தால் வீட்டில் கிடக்கும் சில அபூர்வக் காசுகளை இவருக்குக் கொடுத்திருக்கலாம். எந்த சமயத்தில் எந்த மாதிரி ஆசாமி எதிரே வருவார் என்று யாருக்குத் தெரியும்? இந்த விஷயம்பற்றி மேலும் சொல்லலாம்தான். ஆர்வமுடன் கேட்கக்கூடிய இளைஞராகத் தோன்றினார். ஆனால் இவரோ ஓட்டவேண்டும் வண்டி. நானோ ஓடவேண்டும் கோவிலுக்குள். பூ விற்கும் பெண்மணியிடம் ஒருவழியாகப் பேசி, சில்லரை மாற்றி உபர் ஓட்டுனருக்குக் கொடுத்தனுப்பிவிட்டு, கோவிலுக்குள் பாய்ந்தேன்.

கோவில் உள்பிரகாரம் கணீரென்ற நாதஸ்வர ஓசையில் சிலிர்த்திருந்தது. மிருதங்க வித்வானும் சும்மா சளைத்தவரல்ல. சன்னிதிக்கு இருமருங்கிலும் பக்தர் கூட்டம். எப்படியோ என்னையும் திணித்துக்கொண்டு எம்பிப் பார்த்தேன். பொதுவாக இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் கர்ப்பக்கிருஹத்தை பார்க்க முயற்சிக்கையில், எதிரே ஏழடி உயரமுள்ள ஒரு ஜீவன் நமக்காகவே நின்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அன்று அப்படியில்லை. தீபாராதனை நடந்துகொண்டிருந்தது. மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, தீபத்தின் தங்க ஒளியில் தெய்வத்தின் முகம் ஒரு வினோத அழகுடன் மின்னியது. ஸ்ரீனிவாசா கோவிந்தா..ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா..! என்று உச்சஸ்தாயியில் இசைத்தது நாதஸ்வரம். பக்தர்களின் `கோவிந்தா! கோவிந்தா!` -வும் கூடவே சேர்ந்துகொண்டது. மின்விளக்குப் போடப்பட்டு மீண்டும் விதவிதமான தீபாராதனைகள் நடந்து முடிந்தன. மகாவிஷ்ணுவின் புகழ்பாடும் சமஸ்கிருத ஸ்லோகங்களை முடித்து, ஆண்டாள் பாசுரங்களுக்கு வந்து சேர்ந்தார் அர்ச்சகர். கூடி முன் நின்ற சில பெரியவர்களும் சேர்ந்துகொண்டனர்:

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து -உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து – நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் – உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணிப் புதுவைப்-
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

ஆண்டாள் உருகிய பாசுரங்களில் மனம் லயித்து பெருமாள் தீர்த்தமும், சடாரியும் வாங்கிகொண்டு வெளியே வந்தேன். நவக்கிரக சன்னிதியை சுற்றிவந்து வணங்கி, வெளிப்பிரகாரத்தையும் சுற்றிவந்தபின், முன்பக்கம் பிரசாதத்திற்கு ஒரு குட்டிவரிசையைக் கவனித்தேன். வரிசையில் நின்று பெற்றுக்கொண்டு தேடினேன், தர்மபத்தினியையும், பெண்ணரசியையும். எங்கே போனார்கள்?

நிழலில் ஒதுக்குப்புறமாக நின்றிருந்ததைப் பார்த்தேன். அவர்களிடம் சேர்ந்துகொண்டு பிரசாதத்தை ருசிக்க ஆரம்பித்தேன். மனைவியிடமிருந்து சீறியது ஒரு பௌன்சர் – இதுவரை எனக்காகக் கஷ்டப்பட்டுக் காத்திருந்த கேள்வி: `தீபாராதனைக்கு டயத்துக்கு வந்துடணும்னுதானே டேக்சி பிடிச்சு அவசரம் அவசரமா வந்தோம்? எங்களோட கோவிலுக்குள் நுழையாம, டேக்சி டிரைவர்கிட்ட அப்படி என்ன பேச்சு ? தீபாராதனையையும் சரியாப் பார்க்கமுடியலைன்னா நீங்கள்ல்லாம் எதுக்கு கோவிலுக்கு வரணும்?`

அம்மணி கேட்டதில் அர்த்தம் இருந்தது. பிரசாதத்தின் மிளகுக்கும் நாக்கோடு தன் ஜென்மப்பகையைத் தீர்த்துக்கொள்ள நேரம் அப்போது கிடைத்துவிட்டிருந்தது. ஒரு கணம் அந்த டேக்சி டிரைவரும், வெங்கடரமணப் பெருமாளும் வேகமாக மனக்கண்முன் வந்து சென்றனர். புரிந்தது: அருமையான மனுஷன்னு பேர் வாங்கறதோ, ஆண்டவனுக்கு பக்தனா இருக்கறதோ அவ்வளவு எளிதான காரியமில்லை இந்த உலகில்.

**

3 thoughts on “ந்யூமிஸ்மேட்டிக்ஸ் !

  1. நியுஸ்மாடிக்சில் ஆரவமுள்ளவராயிருந்தால் பணம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று அவரிடமே கேட்டிருக்கலாமோ. இருந்தாலும் உங்கள் தாராள மனசு ரசிக்க வைத்தது

    Like

  2. ந்யுமிஸ்மேடிக்ஸ் -இல் ஆர்வம் இருப்பவராய் இருந்தால் பணத்தைக் கொடுத்து எந்த நாட்டுடையது என்று கேட்டிருக்கலாம் இருந்தாலும் உங்களுக்கு தாராள மனசுதான்

    Liked by 1 person

Leave a comment