ஆதிசங்கரர் – 2 : எதிரே நின்றவன்

கோவிந்த பகவத்பாதர் என்னும் ஆச்சார்யரை நர்மதா நதிக்கரையில் ஓம்காரேஷ்வர் என்னுமிடத்தில் ஆதிசங்கரர் சந்திக்க நேர்ந்தது. உபநிஷதங்களில் தேர்ந்தவரான கௌதபாதர் என்னும் குருவின் சீடர் அவர். வேதசாஸ்திரங்களில் தலைசிறந்தவர் எனப் போற்றப்பட்டவர். நர்மதா நதிக்கரைக்கு வந்த ஆதிசங்கரர் நதியில் சீறும் வெள்ளப்பெருக்கை தன் கமண்டலத்தில் அடக்கினார். அதனைக்கண்டு அதிசயித்த பகவத்பாதர் இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அதீத யோகசக்தியா என வியந்தார். சங்கரரிடம் நீ யார் எனக் கேட்ட அந்த குருவிற்கு பதிலாக, தான் இந்த உடம்போ, உருவமோ அல்ல; அமைதியும் ஆனந்தமுமாய் என்றுமிருக்கும் ஆன்மாவே என்பதை அழகாகச் சொல்லும் ஆத்மஷடகம் என்கிற 6 ஸ்லோகங்கள் அடங்கிய அற்புதத்தை அருளினார் ஆதிசங்கரர். மேலும், முதலையிடமிருந்து உயிர்பிழைக்கத் தன் தாயாரின் அனுமதிபெற்று ஆபத்த சந்நியாசத்தை மேற்கொண்டதையும் சொல்லி, தனக்கு பூரண சந்நியாச தீட்சை அருளி, வேதாந்தத்தைக் கற்றுக்கொடுக்குமாறு கோவிந்த பகவத்பாதரை வேண்டினார் சங்கரர். குருவும் சிறுவனான சங்கரரின் வேண்டுகோளை ஏற்று துறவறத்தில் சிறந்ததான பரமஹம்ச சந்நியாச தீட்சையை அளித்தார். அத்வைதக் கருத்துக்களைக் கற்பித்ததோடு குருகுலவாசம் முடிந்தபின், சங்கரரை நாடு முழுதும் சென்று உண்மையான வேதாந்தக்கருத்துக்களை மக்களிடையே பரப்பச் சொன்னார் கோவிந்த பகவத்பாதர். குருவின் ஆக்ஞைப்படி ஆன்மீகப்பயணம் மேற்கொண்ட ஆதிசங்கரர், முதலில் காசி நோக்கிப் பயணித்தார்.

தன் தேசப்பயணத்தின்போது, தன்னோடு ஆன்மீகத் தத்துவங்களில் முரண்பட்ட, பரம்பொருள்பற்றிய தவறான சிந்தனை உடைய பல மத அறிஞர்களையும், குருக்களையும் வாதப்போர்களில் வென்றார் ஆதிசங்கரர். அவர்களின் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் மனதில் இருந்த பரப்பிரும்மம் தொடர்பான குழப்பங்களை அகற்றித் தெளிவு ஏற்படுத்தினார். நெடும்பயணத்தின்போது, அவருக்கென்று சில சீடர்கள் உருவாகி அவரோடு தேசசஞ்சாரம் செய்தனர்.

காசிக்கருகில் ஒருநாள், கங்கை நதியில் குளித்துவிட்டு சங்கரர் தன் சிஷ்யர்களுடன் பாதையில் போய்க்கொண்டிருந்தார். எதிரே, அந்தக்கால வருணாசிரம முறைப்படி கீழ்ஜாதிக்காரனான ஒருவன் வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு அருவெருப்பு தரும் உருவம். கையில் பிடித்திருந்த கயிறுகளில் நான்கு நாய்களைக்கட்டி இழுத்துக்கொண்டு வந்தான். அவனிடமிருந்து துர்வாசம் வீசிற்று. மிக அருகில் அவன் வருவதாகத் தோன்றவே, ஆதிசங்கரர் அவனை `சற்று விலகிப் போ!` என்றார். அவனோ விலகவில்லை. நின்றான். ஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டான்: “எது விலக வேண்டும்? உடம்பா? ஆன்மாவா? ஆன்மாவென்றால் அது எங்கும் நிறைந்திருப்பது . எல்லாவுமானது. அதிலிருந்து அதுவே விலகமுடியுமா? உடம்புதான் என்றால், அது ரத்தம், சதை, எலும்புகளாலானது. நிச்சயம் ஒரு நாள் அழியப்போவது. அழியப்போகும் உடம்புகளில் ஒன்று, இன்னொரு உடம்பை விலகிப் போ எனச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?“

சங்கரர் லேசாக அதிர்ந்தார். அவன் தொடர்ந்தான்: “கங்கையின் பரப்பில் பிரதிபலித்து மின்னும் சூரியன், சேரியிலிருக்கும் குட்டையில் பிரதிபலிக்கும் சூரியனிடமிருந்து வேறுபட்டதா? “

எதிர் நின்றவனைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருந்த சங்கரரின் மனதில் ஆன்மஒளி பிரகாசித்தது. “தாங்கள் இவ்வளவு விஷயஞானம் உடையவர் எனத் தெரியாது. ஏதோ தவறாகச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. தங்களை நமஸ்கரிக்கிறேன்“ என்று கைகூப்பி, தலைதாழ்த்தினார் ஆதிசங்கரர். இந்தக் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அவர் அப்போது 5 ஸ்லோகங்களை (பாடல்களை) இயற்றி, எதிர் நின்றவன் முன் பாடினார். அதற்குப் பெயர் `மனிஷா பஞ்சகம்`. `மனிஷா` என்றால் உறுதிப்படுத்திக்கொள்ளல்(conviction) அல்லது திட நம்பிக்கை எனப் பொருள். பஞ்சகம் என்பது ஐந்து ஸ்லோகங்கள் அல்லது பாடல்கள். ஒருவன் ஆன்மதரிசனம் அடைந்தபின், அதாவது தன்னை முழுமையாக உணர்ந்தபின், அவன் மேல்ஜாதி, கீழ் ஜாதி, உயர்குலம், தாழ்ந்த குலம் போன்ற சமூக வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவனாகிறான் என்கிற ஆன்மீகக் கருத்தை முன்வைக்கிறது மனிஷா பஞ்சகம்.

அத்வைத சித்தாந்தத்தைத் தன் குருவிடமிருந்து சங்கரர் ஏற்கனவே கற்றிருப்பினும், இந்த நிகழ்வில்தான் அதன் உண்மையான சாரம் அவரால் ஆழமாக உணரப்பட்டது என்பர். விஸ்வனாதராகக் காசியில் வீற்றிருக்கும் சிவபெருமானே ஆதிசங்கரரை சோதிக்க, இப்படிப் புலையனாக எதிர்வந்தார் என்றும், அவனுடைய கையில் பிடித்திருந்த நான்கு நாய்கள், உண்மையில் நான்கு வேதங்களைக் குறிக்கும் என்றும் கூறுவர் சமயச்சான்றோர்.

அத்வைத சித்தாந்தம் மூலம் இந்து மத மறுமலர்ச்சிக்குப் புத்துயிர்ச்சி தந்தார் ஆதிசங்கரர். தனது நெடிய பாரதப் பயணத்தின்போது பாஸ்கர பட்டர், தண்டி, மயூரா ஆகிய ஆச்சாரியர்களை தன் ஞானத்தினாலும், புலமையாலும்,வாதத்திறமையாலும் வென்றார். அதுபோலவே வடக்கே அவரை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ள மறுத்த தர்ம குப்தா, முராரி மிஷ்ரா, பிரபாகர பட்டர் மற்றும் உதயணாச்சாரியார் ஆகிய மதகுருக்களையும் சமய வாதப்போரில் வென்றார். இறுதியில், ஆதிசங்கரரின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அத்தகைய குருக்களும், அவர்களது சீடர்களும் அவருடைய சிஷ்யர்கள் ஆயினர்.

காசியில் இருந்தபோது இளம் சங்கரர் பிரும்மசூத்திரத்திற்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதினார். அவருடைய உரையின் துல்லியத்தை சோதித்தறிய, மூலத்தை இயற்றிய வியாச முனிவரே அந்தணர் வேடத்தில் ஆதிசங்கரர் முன் வந்தமர்ந்தார் ஒருநாள். அப்போது தன் சீடர்களுக்கு பிரும்மசூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார் ஆதிசங்கரர். வந்திருந்த வயசான பிராமணர், பிரும்மசூத்திரத்தில் ஒரு குறிப்பிட்ட சுலோகத்தை குறிப்பிட்டு, அதற்கு நீ என்ன விளக்கம் தருகிறாய் என ஆதிசங்கரரைக் கேட்டார். ஆதிசங்கரர் கொடுத்த விளக்கத்தில் முழுதும் திருப்தியுற்று சங்கரரை ஆசீர்வதித்ததுடன், அவரது புலமையையும், ஞானத்தையும் சிலாகித்துப் பேசினார் வந்திருந்த முதியவர். அப்போது அவரிடம் மனம்விட்டு பேசிய ஆதிசங்கரர், தனக்கு இந்த பூமியில் விதிக்கப்பட்டிருப்பது 16 வருடங்கள்தான் என்றும், அது நிறைவுறும் தருவாயில் உள்ளது என்றும் சொன்னார். கங்கைநதி தீரத்தில் உள்ள மணிகர்ணிகா எனும் துறையில் இறங்கி தான் ஜலசமாதி ஆகிவிட எத்தனித்திருப்பதாகப் பெரியவரிடம் கூறினார் சங்கரர். அந்தணராக வந்திருந்த வியாச முனிவர், “சங்கரா!, உனக்கு இன்னும் கடமைகள் மீதமுள்ளன. மேற்கொண்டு நீ வேதசாஸ்திரங்களுக்கு விளக்கங்கள் சொல்லியும், வேதாந்த உட்கருத்தை மனிதரிடையே பரப்பியும், பரப்பிரும்மம் பற்றிய சிந்தனைத்தெளிவுக்கு வகை செய்யவேண்டும். எனவே பாரதம் முழுதும் பயணிப்பாயாக. பகவத் கைங்கர்யத்திற்காக (இறை சேவைக்காக) உனக்கு மேலும் 16 வருடங்கள் ஆயுள் அருளப்படுகிறது“ என்றார். வந்திருந்து பிரும்மசூத்திர வியாக்கியானம் கேட்டவர் சாட்சாத் வியாச மகரிஷியே என உணர்ந்துகொண்ட ஆதிசங்கரர், அவருடைய பாதம் பணிந்து ஆசிபெற்றார். அருகிலிருந்த ஆதிசங்கரரின் பிரதம சீடரான பத்மபாதர் மெய்சிலிர்த்து இருவரையும் வணங்கி மகிழ்ந்தார்.

மகரிஷி வியாசரின் அறிவுரையை சிரமேற்கொண்டு, தேசமுழுதும் ஆன்மீகப்பயணம் மேற்கொண்டார் ஆதிசங்கரர். அப்போது பிரயாகை என்னும் இடத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கு குமரிலபட்டர் எனும் வேதசாஸ்திரவிற்பன்னர் வாழ்ந்துவந்தார். அவர். தான் ஒரு பௌத்த துறவியிடம் கற்றபோது உண்மைக்கு மாறாக, குருதுரோகம் செய்துவிட்டதாகக் கருதி மனம் நொந்தார். தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள, நெல் உமிக்கருக்கிற்குத் தீமூட்டி அதில் நுழைந்து துடிதுடித்து உயிரிழக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அதுபற்றிக்கேள்விப்பட்டு அங்கு வந்த ஆதிசங்கரர் அவரைத் தடுத்து அவரது வேதப்புலமையை புகழ்ந்ததோடு, அவருக்கு பிரும்ம தத்துவத்தை விளக்கி சாந்தப்படுத்தினார். ஆதிசங்கரரை வணங்கி அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் குமரிலபட்டர் ஹோமம், யாகம் ஆகிய மதச்சடங்குகளில் தேர்ந்தவரான மண்டன மிஷ்ரா எனும் குரு மகிஷ்மதி எனும் ஊரில் வாழ்வதாய்க் கூறினார். பிரும்மத்தைப்பற்றி தவறான புரிதல் கொண்டுள்ள அவரை வாதத்துக்கு அழைத்து வெல்லவேண்டும், அவருக்குத் தெளிவை அருளவேண்டும் என்றும் ஆதிசங்கரரை குமரிலபட்டர் வேண்டிக்கொண்டார். ஆதிசங்கரரும் அதற்கிணங்கி தன் சீடர்களுடன் மகிஷ்மதி சென்றடைந்தார் (தொடரும்)

**

6 thoughts on “ஆதிசங்கரர் – 2 : எதிரே நின்றவன்

  1. ஒரு புலையனிடம் இருந்து கற்றது என்பது பொறுக்காமல்/ சிவபெருமானே ஆதிசங்கரரை சோதிக்க, இப்படிப் புலையனாக எதிர்வந்தார் என்றும், அவனுடைய கையில் பிடித்திருந்த நான்கு நாய்கள், உண்மையில் நான்கு வேதங்களைக் குறிக்கும் என்றும் கூறுவர் சமயச்சான்றோர்/.

    Like

  2. 1. Bhagavad Padar met his guru in the bank of Narmada – at Omkaraeswar – not at Badriniath

    2. சங்கரர் யார் எனக் கேட்ட அந்த குருவிற்கு தன் பூர்வீகம் பற்றி சொன்னார் சங்கரர்
    When is guru asked who he is, the answer given was the classic Atma Shadakam – in 6 stanza.

    Like

  3. @ G.M.பாலசுப்ரமணியம்

    அப்படியா நினைக்கத் தோன்றுகிறது உங்களுக்கு?
    வருகைக்கு நன்றி

    Like

  4. @ சாய் சாய்ராம்

    1.கோவிந்த பகவத் பாதருடன் ஆதிசங்கரரின் சந்திப்பு நடந்த இடம்பற்றிய பகுதியை இப்போது சரி செய்துள்ளேன். நன்றி.
    2. ஆத்மஷடகம் பற்றி: I have read two varying versions. One -as you have mentioned. The other one is : Once during his pilgrimage tour, a lady brought her 3 year old son in front of Adi Shankara. The boy who was initially normal, one day suddenly and mysteriously stopped talking and remained heavily silent all the time. The lady begged Adi Shankara to cure him of his illness if any and make him to speak again. When Adi Shankara looked at the child, he, due to his innate spiritual powers felt that there was a different but enlightened soul residing in the body of the boy. So he curiously asked the child ‘Who are you?’ To this question, the boy i.e. the soul of the saint which resided in the boy replied as in Atma Shatakam.

    Because of these two varying versions I dropped mentioning this in the text, though it is a very important and one of the most beautiful verses composed by Adi Shankara. Now, however, I had included this appropriately in the text (part 2). Thanks for your inputs.

    Like

Leave a comment