முந்தைய பதிவு – ‘கபீர்தாஸ் – டெல்லி சுல்தானோடு மோதல்’-இன் தொடர்ச்சி:
கபீருக்கு இரண்டு மகன்கள் என்பதாகத் தெரிகிறது. அவற்றில் ஒருவன் தன் தந்தையின் அறிவுத் தாக்கம் இல்லாதவன். சராசரி மனிதனாகவே வாழ்ந்துவந்தான். ஆனால், அவரது இன்னொரு மகனான கமால், ராம பக்தனாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்காங்கே சென்று ராமாயணப் ப்ரசங்கம் செய்துவந்தான். கமாலின் இதிகாசக்கதை சொல்லும் விதம் பாமரர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கபீர் தன் ஆன்மீகப்பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், சராசரி குடும்பஸ்தனாக வாழ்ந்துவந்தார். தன் நெசவுத்தொழிலை விடாமல் செய்துவந்தார். ஒருமுறை காசியிலிருந்த ராமர் கோவிலிலிருந்து, ராம்லாலாவுக்கு (ராமர் விக்ரஹம்) வஸ்திரம் செய்யச்சொல்லி, கபீர் வீட்டுக்கு சொல்லி அனுப்பி இருந்தார்கள். செய்து தருவதாக ஏற்றிருந்தார்கள் கபீரின் குடும்பத்தினர். கபீர்தாஸ் தன் குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தில் ஆழ்ந்திருந்தார். கை மட்டும் விடாது வேலை செய்துகொண்டிருந்தது. மதியம்போல் வீடு திரும்பிய அவருடைய மகன் கமால், அவர் இன்னும் நெய்து கொண்டிருப்பதையும், நெய்யப்பட்ட துணி மிக நீண்டிருப்பதையும் பார்த்தான். தன் தந்தையிடம் ” போதுமப்பா. அந்த ராமர் விக்ரஹம் சிறியது தான்.. நீ நெய்திருப்பது மிகவும் நீளம். போதும். நிறுத்தப்பா” என்றான். அவரும் நெய்வதை நிறுத்தி, அதை அறுத்து, ’வஸ்திரத்தை எடுத்துப்போய் கோவிலில் கொடுத்து வா’ என்றார். துணி நீளமாக இருப்பதை திரும்பவும் சுட்டிக்காட்டினான் கமால். ‘நீ போய் கொடுத்துவிட்டு வா’ என்றார் கபீர் மீண்டும். கமால் வஸ்திரத்தை எடுத்துகொண்டு கோவிலில் கொண்டுபோய் கொடுத்தான். அந்த மென்மையான துணியை ராம்லாலாவின் மீது சுற்றினார் கோவில் பண்டிட்ஜி. வஸ்திரத்தை ராமர் விக்ரஹத்தின்மீது சுற்றச்சுற்ற அது வாங்கிக்கொண்டதாய்ப் பட்டது! நன்றாக சுற்றி அணிவித்ததும் ஒரு அங்குலம் கூட மிச்சமில்லாமல் கனகச்சிதமாக இருந்தது. ராமபிரான் மீது அழகாய் ஜொலித்தது. பண்டிட்ஜி வஸ்திரம் அணிவிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கமால் அசந்துபோனான். வீட்டிற்குத் திரும்பி அப்பாவிடம் நடந்ததை ஆச்சரியத்துடன் சொன்னான். துணி நெய்துகொண்டிருந்த கபீர் நிமிர்ந்து கமாலைப் பார்த்தார்; சொன்னார்: ”நாம் கொடுக்கும் எதுவும் அவனுக்கு அதிகமில்லை”.
தன் குருவின் மீது அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டிருந்த கபீர், தன் வாழ்நாள் முழுதும் தன்வீடு தேடி வந்த சாது, சந்நியாசிகளுக்கு அன்னமிட்டு வந்தார். அவர்களை மிகுந்த வாஞ்சையுடன் நடத்தினார். அதனாலேயே ஒரு இடத்தில் இப்படிச்சொல்கிறார்: ‘ சாயி! (கடவுளே), நான் மற்றும் என் குடும்பத்தினர் பசியாறவும், வீடுதேடிவந்த சாது பசியோடு திரும்பிப் போகாமலிருக்கவும், எவ்வளவு தந்தால் போதுமோ, அவ்வளவே கொடு’ என வேண்டுகிறார். கபீர்காலத்திய மெய்ஞானிகளான ஞானதேவரும், நாமதேவரும் கபீரின் வீடுதேடி வந்ததாகத் தெரிகிறது. அவர்களுக்கு உணவு படைத்து மகிழ்ந்திருக்கிறது கபீரின் குடும்பம்.
கபீர் துணிவிற்கச் சந்தைக்குச்செல்லும்போதெல்லாம், அங்குவரும் சாதாரண மக்களை, வியாபாரிகளை எல்லாம் பார்த்துப் பேசுவதும், கேட்டவருக்கு நிலைமைக்கு ஏற்றபடி அறிவுரை கூறுவதும் உண்டு. அவருடைய போதனைகள் மற்றும் கவிதைகள் மக்கள் புழங்கும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டவை. அவருடைய கவிதைமொழி என்பது ஹிந்தி, போஜ்புரி, ப்ரஜ் பாஷா, அவதி, ராஜஸ்தானி ஆகிய பேச்சுமொழிகளின் (dialects) கலவை. சத் விஷயங்கள், தத்துவக் கருத்துக்கள் அவருள் வசன கவிதைகளாய் வடிவம் பெற்று வாய்மொழியாய் வந்தவை. எழுதப்பெறாதவை. அவரோடு தினசரி அளவளாவிய சாதாரண மனிதர்களாலும், அவரது பிற்காலத்திய சீடர்களாலும், மனதில் கொள்ளப்பட்டு, ரசிக்கப்பட்டு, சுவாரஸ்யமான கதைகள் போல, வாய் வழியாக, சொல்வழக்காக மற்றவர்க்கு இவை எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இப்படித் திரட்டப்பட்டதுதான் ‘தோஹா’ எனப்படும் அவருடைய ஈரடி வெண்பாக்கள், சாகி (Saakhi) (sanskrit : Saakshi – witness) எனப்படும் கவிதைகள்.
இறுதி உண்மையான பரப்பிரும்மத்தின் நேரடி அனுபவ நிரூபணமாக ‘சாகி’ கவிதைகள் கபீரின் வழிவந்தவர்களால் கொள்ளப்படுகின்றன. ‘சாகி’ யை மனனம் செய்வதும், பாடுவதும், அதன் வரிகள் காட்டும் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதுமே ஒருவனை ஆன்மீக உயர்தளத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்புகிறார்கள். இவையும் மற்றவையும் தொகுப்புகளாகத் திரட்டப்பட்டு பிற்காலத்தில் வெளியிடப்பட்டன. கபீருடைய சிஷ்யர்களுள் முக்கியமானவர்களான பாகோதாஸ் (Bhaagodas), தர்மதாஸ் என்கிறவர்களே கபீரின் வாய்வழிக்கவிதைகளத் தொகுப்பதில் பிரதான பங்கு வகித்தவர்கள். கபீரின் காலத்தில்தான் வட தேசத்தில் பக்தி இயக்கம் தனிச்சிறப்பும் வலிமையும் பெற்றது. சீக்கியர்களின் 5-வது குருவான, குரு அர்ஜுன் சிங் கபீரின் கவிதைகளை ஆழ்ந்து கற்று, அதன் உண்மைத்துவத்தில் மயங்கியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை (சுமார் 500 கவிதைகள்) சீக்கியர்களின் புனிதநூலான ‘குரு க்ரந்த்சாகிப்’ பில் குரு அர்ஜுன் சிங் சேர்த்தார்.
ஆழமான ஆன்மீகத்தை, கடினமான தத்துவத்தை எளிதான வார்த்தைகளில், ரத்னச்சுருக்கமாகத் தருவதில் வல்லவர் கபீர். அன்றைய சமய, சமூகவாதிகளுடன் முரண்பட்டிருப்பினும், ’சத்’ விஷயங்களை நேரடியாக, நறுக்குத் தெறித்தாற்போல் சொன்ன ஆன்மீகவாதி கபீர்தாஸ். மதச்சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் இருந்த பகட்டையும், பாசாங்கையும், போலித்தனங்களையும் சாடினார் கபீர். ’கடவுள் ‘காபா’ விலோ (மெக்கா), கைலாசத்திலோ இல்லை; உனக்குள்தான் இருக்கிறான். முடிந்தால் தேடி அறிந்துகொள்!’ என்று அதிரடியாகச் சொன்னதால் மரபுவழி முஸ்லிகளும், இந்துக்களும் இவர்மீது கடும்கோபத்தில் இருந்தனர்.
சந்த் கபீர்தாஸின் இறுதிக்காலம் இப்படிக் கழிந்ததாகக் கூறப்படுகிறது:
காஜிகளும் மௌல்விகளும், ஹிந்துப்பண்டிதரில் பலரும் அவரை விமரிசித்துவந்தாலும் – அவருடைய இறுதிக்காலத்தில், பெரும்பாலான ஹிந்துக்களாலும், தெய்வநம்பிக்கையுடைய எளிய முஸ்லிம்களாலும், இஸ்லாமின் உயர் பிரிவினரான சுஃபிக்களாலும், ’மெய்ஞானி’ என அடையாளம் காணப்பட்டு போற்றப்பட்டார் கபீர். காசியைவிட்டு வெளியேறிய கபீர், மகரில் (Maghar village, near Gorakhpur) 1518-ல் காலமானபோது, அவருடைய சடலத்தை அடக்கம் செய்வதா, எரிப்பதா என்பதில் ஹிந்து, முஸ்லிம் இனத்தவரிடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இந்த சூடான வாக்குவாதத்தினிடையே கபீரின் புன்னகை முகம் தோன்றியதாகவும், அவர்களை சண்டைப்போட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது, சடலத்தைப் போர்த்தியிருக்கும் துணியை விலக்கிப் பார்க்குமாறு சொல்லி மறைந்தாராம் கபீர். குழப்பத்துடன் இருதரப்பினரும் துணிவிலக்கிப் பார்த்தபோது, உடம்பு இருந்த இடத்தில் மலர்க்குவியல் இருந்திருக்கிறது. பரவசமான இருதரப்பினர்களும் அவரவர் முறைப்படி கபீரை வணங்கி, ஒருபாதியை அவர்களும், மறுபாதியை இவர்களும் எடுத்துக்கொண்டு எதிர் எதிர் திசைகளில் ஒடினார்கள் எனவும் கூறப்படுகிறது !
சர்ச்சைகளும், சுவாரஸ்யங்களும் மிகுந்த கபீரின் வாழ்க்கை இப்படி இருக்க, இனி நாம் அவருடைய கவிதைகளுக்குள் கொஞ்சம் சென்று அவர் என்ன சொன்னார், அதை எப்படிச்சொன்னார் என அறிய முயற்சிப்போம் (தொடரும்)
**
ஆச்சர்யமான, சுவாரஸ்யமான தகவல்கள்… தொடர்கிறேன்.
LikeLiked by 1 person
திரு. ஸ்ரீராம்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
LikeLike
படிக்கப் படிக்க உண்மையாகவே ஆனந்தம் அடைந்தேன். அழகாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்கிறேன்.
LikeLiked by 1 person
முதல் வருகைக்கு, பின்னூட்டத்திற்கு நன்றி.
LikeLike