இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் ஜூனியர் டீம்களின் தகுதிச்சுற்று முடிவடைந்துவிட்டது. சூப்பர் 10 எனப்படும் டாப்-10 பங்கேற்கும் போட்டிகள் நாளை (15-3-2016) துவங்குகிறது. முதல் போட்டி இந்தியா நியூஸிலாந்துக்கிடையே நாக்பூரில் நடக்கிறது.
கடந்த ஒரு வருடத்தில், இந்திய டி-20 அணியின் வெற்றிகளில் – ஆஸ்திரேலியாவை அவர்களின் மண்ணிலேயே கிழித்துப்போட்டது, ஆசியகோப்பையை பங்களாதேஷில் வென்றது – போன்றவை சிறப்பான வெற்றிகளாக மின்னுகின்றன. எனினும், இவைகளை 1 ½ மாதகாலத்துக்கு நாம் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில், இனி நாம் காணப்போவது டி-20 உலகக்கோப்பை. உலகக்கோப்பை என்றால் உலகக்கோப்பை. மறுபேச்சு இருக்கமுடியாது.
உலகின் டாப் டி-20 கிரிக்கெட் அணிகளாக ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, தற்போதைய சேம்பியனான வெஸ்ட் இண்டீஸ் ஆகியவற்றைக் கருதலாம். ஆனால், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளைக் குறைத்து மதிப்பிடுதல் நல்லதல்ல. மேலும் டி-20 –வகை கிரிக்கெட்டில், திடீரெனக் கதை எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும். பௌலிங் செய்யும் அணியின் ஒரு மோசமான ஓவர், வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்துவிடலாம். அதாவது இறுதி ஓவர் ஒன்றில், ஒரு பேட்ஸ்மன் தன் திறமையை எல்லாம் திடீரெனெ வெளிக்கொணர்ந்து சிக்ஸருக்குமேல் சிக்ஸராக வானவேடிக்கை நிகழ்த்தினால், அந்த அணிக்கு கிட்டாத வெற்றியும் கிட்டிவிடக்கூடும். எந்த அணி எப்போது எகிறும், எது சரியும் என மதிப்பிடல் நிபுணர்களுக்கும் சவாலான காரியம்.
மேலும், இந்திய கிரிக்கெட் பிட்ச்சுகளின் கதையே வேறு. நிறைய ரன்கள் வரும். என்றாலும் ஸ்பின்னர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் நிறைய பங்கிருக்கும். நாக்பூரில் நாளைய முதல் போட்டியில் ஆடும் இந்தியா, நியூஸிலாந்து – இரண்டு அணியிலும் தரமான ஸ்பின்னர்கள் உண்டு. இந்திய அணியில் அநேகமாக அஷ்வின், ஜடேஜா விளையாடலாம். நியூஸிலாந்து தரப்பில் சுழல்பந்துவீச்சில், மிட்செல் சாண்ட்னர், நேதன் மெக்கல்லம், இஷ் சோடி ஆகியோர் நிச்சயம் இந்தியர்களுக்கு சோதனை தருவர். நியூஸிலாந்து அதிரடி ஆட்டவீரர்களுக்கு முன், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான ஆஷிஷ் நேஹ்ரா (Ashish Nehra) (அல்லது முகமது ஷமி), ஜஸ்ப்ரித் பும்ரா(Jasprit Bumrah), ஹர்தீக் பாண்ட்யா(Hardik Pandya) ஆகியோர் கடுமையான சோதனைக்குள்ளாவர். அக்னிப்பரீட்சைதான். கேப்டன் தோனி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை(Mohamed Shami) நேஹ்ராவின் இடத்தில், முதல் போட்டியில் இறக்கிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேஹ்ரா நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஷமியோ காயத்துக்குப்பின் சர்வதேசப்போட்டிக்குத் திரும்புகிறார். அவர் எப்படி பந்துவீசுவார் எனக் கணிப்பது எளிதல்ல. பும்ராவும், பாண்ட்யாவும் உலகக்கோப்பைக்குப் புதியவர்கள். ப்ளேயர் செலக்ஷனில், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், அனுபவமிக்க நேஹ்ராவைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். என்ன செய்யப்போகிறார் தோனி?
பேட்டிங்கைப் பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சமநிலையில் இருக்கின்றன. நியூஸிலாந்தின் சூப்பர் ஸ்டார் ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அந்த பாதிப்பு தெரியாதபடி ஆட, மார்ட்டின் கப்ட்டில்(Martin Guptil), கேப்டன் வில்லியம்சன்(Kane Willamson), கோரி ஆண்டர்சன்(Corey Anderson), காலின் மன்ரோ(Colin Munroe) ஆகிய அதிரடி மன்னர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அனுபவமிக்க ராஸ் டெய்லர்(Ross Taylor) சிறப்பாக ஆடக்கூடியவர். இந்திய பௌலர்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்காமல் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ஷிகர் தவண், கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஆகியோர் பலமான பேட்டிங் தூண்கள். மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் யுவராஜ் சிங் எப்படி ஆடப்போகிறார்? அவருக்குள், 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய, வீரதீரமிக்க அந்த பழைய யுவராஜ் இன்னும் இருக்கிறாரா? பெரும் சஸ்பென்ஸில், நகத்தைக் கடிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். புதிய ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களின் ஆவலைத் தூண்டும்.
நியூஸிலாந்தின் வேகப்பந்துவீச்சு, ட்ரெண்ட் போல்ட்(Trent Boult), டிம் சௌதீ(Tim Southee), ஆடம் மில்ன(Adam Milne) ஆகியோரின் திறமையில் ஒளிவீசுகிறது. கூடவே நியூஸிலாந்தின் இந்திய வம்சாவளி வீரரான 23-வயதான இஷ் சோடி(Ish Sodhi) சிறப்பாக லெக்-ஸ்பின் போடக்கூடியவர். இடதுகை ஸ்பின்னரான மிட்செல் சாண்ட்னர்(Mitchell Santner)-க்கு இக்கட்டான நிலையில் விக்கெட் வீழ்த்தும் திறமை உண்டு. இவர்களை இந்தியர்கள் அலட்சியம் செய்யாமல் கவனித்து ஆடுவது அணிக்கு நல்லது.
மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமான மேட்ச்சாக நாளைய (15-3-2016) போட்டி இருக்கும் எனத் தோன்றுகிறது. எந்த அணி மனஅழுத்தத்தை நுட்பமாக சமாளித்து, களத்தில் சிறப்பாக ஆடுகிறதோ, அது வெல்லும்.
**