கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தடுமாறும் இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெறும், இந்தியா ஆஸ்திரேலியா ஒரு-நாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இந்தியாவுக்கான ரிசல்ட்: 0.

சமீபத்தில்தான் தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் வென்ற டீம் இது. திடீரென என்னவாயிற்று இந்திய அணிக்கு? ஏனிந்தத் தடுமாற்றம்? பேட்டிங் சரியில்லையா? அப்படியும் சொல்வதற்கில்லை. துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண் வழக்கம்போல் சோபிக்கவில்லை.அவர் ஜாதகம் அப்படி. ஆனால் ரோஹித் ஷர்மா பிரமாதமாக ஆடினார். இரண்டு ஆட்டத்திலும் அபார சதம் அடித்துள்ளார். விராட் கோஹ்லியும், அஜின்க்யா ரஹானேயும் நன்றாக விளையாடிவருகின்றனர். இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா 300-ஐத் தாண்டியது. பின்னே என்னதான் பிரச்சினை? வழக்கமான பிரச்சினைதான். நமது பௌலிங் வெளி நாட்டில் எடுபடவில்லை. அடித்து நொறுக்கிவிட்டார்கள் ஆஸ்திரேலியர்கள்.

முதல் மேட்ச்சில், இந்தியாவின் புதிய இடது கை வேகப்பந்துவீச்சாளரான பஞ்சாபின் பரிந்தர் ஸ்ரன் (Barinder Sran) தனது முதல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசினார். 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். அடுத்த பக்கத்தில் அவருக்கு அஷ்வின் துணையிருந்தார். ஆனால் மற்ற பௌலர்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் 310 என்கிற இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் அடைந்து வென்றது. இரண்டாவது போட்டியிலும், இந்திய பௌலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களிடம் உதை வாங்கினர். ஸ்பின்னர்கள் கொஞ்சம் நன்றாகப் பந்துபோட்டிருக்கலாம் என்று அழுகிறார் கேப்டன் தோனி. உண்மைதான். ஆனால் யார்தான் சரியாகப் பந்து போட்டார்கள்? அனுபவம் நிறைந்த இஷாந்த் ஷர்மா 5 ஒய்டுகளை வாரி வழங்குகிறார். ஒரு விக்கெட் சாய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவருக்கு. இந்த மாதிரியான `அனுபவ வீரர்களை` வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா போன்ற, (ச்)சாம்ப்பியன் அணியை வெல்லமுடியுமா?

இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு பதிலாக, ரன்களை தானம் செய்யும் துல்லியமற்ற பௌலர்கள் இருக்கையில், வெற்றி என்பது கேப்டனின் பகல் கனவாகத்தான் போய்முடியும். இந்திய கேப்டன் இந்நிலையில் என்னதான் செய்வது? முதலில் பேட்டிங் செய்கிற அணி 300 ரன்கள் அடித்தால் போதும்; ஜெயித்துவிடலாம் என நினைத்த காலம் மலையேறிவிட்டது. இதனை இந்திய அணியினர் இனியாவது உணரவேண்டும். இந்திய அணிக்கு பேட்டிங்தான் ஓரளவுக்கு பலம். இனிவரும் போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்ய நேர்ந்தால், குறைந்தபட்சம் 340 ரன்களாவது எடுக்கவேண்டும். அப்போதுதான் வெற்றியைப்பற்றிக் கற்பனையாவது செய்யமுடியும்.

ஃபார்மில் வர சிரமப்படும் ஷிகர் தவனை உடனடியாகத் தியாகம் செய்வது, இந்திய அணிக்கு நல்லது. அவருக்கு பதிலாக நாளைய போட்டியில் (17-1-16), பஞ்சாபின் குர்கீரத் சிங் மான்(Gurkeerat Singh Mann) (பேட்டிங் ஆல்ரவுண்டர்) சேர்க்கப்படுவது உசிதமாக இருக்கும். இதனால் தோனிக்கு, ஒரு பேட்ஸ்மன் + ஒரு பௌலர் உபரியாகக் கிடைக்கும்.

நீங்களும் நானும் தவித்தால் போதுமா? உண்மையில் என்ன நடக்கப் போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம் !

**

2 thoughts on “கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தடுமாறும் இந்தியா

Leave a reply to aekaanthan Cancel reply