டெல்லி-பெங்களூர் என்று அவ்வப்போது ஷட்டில். சமீபத்தில் ராஜதானியில் பெங்களூருவிலிருந்து டெல்லி திரும்பிக்கொண்டிருந்தேன். கூடப்பயணிப்பவர்கள் அச்சுபிச்சு கோஷ்டியாக இருந்தால் கொண்டுவந்திருக்கும் புத்தகத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டியதுதான். இரவில் வண்டியில் ஏறியதால் தின்றுவிட்டுத் தூங்குவதில் எல்லோருக்கும் கவனம். அடுத்த நாள் காலையில் பேச்சுக்கொடுத்ததில் தெரிந்தது – இந்தியன் ஆர்மியில் வேலையாயிருப்பவர் தன் குடும்பத்தினருடன் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தார். எதிரே அமர்ந்திருந்த முதியவர்-அறுபதைத் தாண்டியவர். கொஞ்சம் ஸ்மார்ட்டான ஒல்லியான, well-dressed உருவம்– கையில் ‘Wordpower Made Easy ‘ என்று தலைப்புக் காட்டும் புஸ்தகம்! இந்த வயதிலும் தன் இங்கிலீஷ் வொகபுலரியை இம்ப்ரூவ் செய்து கொள்ள ஆசையா? இல்லை, வெறும் அலட்டல் கேசா?
அறிமுகப்பேச்சின் ஊடே தான் இந்திய வனத்துறை அதிகாரியாகப் பலவருடம் மத்தியபிரதேசத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாகச் சொன்னார். என்னைப்பற்றி கொஞ்சம் சொன்னேன். இன்னுமொரு இந்திய அரசு அதிகாரிதான் நம் எதிரில் என்ற நம்பிக்கை பெற்று தன் வனத்துறை அனுபவங்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வனப்பராமரிப்பு, மரம் செடி, கொடி வளர்த்தல் இதெல்லாம் எவ்வளவு முக்கியமான விஷயம் – `Global Warming`, ‘Depleting Ozone Layer’ என்றெல்லாம் கதைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் வாழும் இவ்வுலகில்.
நாக்பூரைச் சேர்ந்தவர். அந்தப்பகுதியின் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்குத்தான் 30+ ஆண்டுகளாக ஆற்றிய பங்கைப்பற்றி ஒரு சுருக்கம் சொன்னார். அந்த சமயம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆந்திரப்பிரதேசத்தின் குறுக்கே சீறி, மத்தியப்பிரதேசத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. மே மாதம். இந்தியக் கோடையின் உச்சம். பகல் நேரப் பிரகாசத்தில், தகதகப்பில், ஜன்னலுக்கு வெளியே ஓடும் வனக் காட்சிகள். திட்டுத்திட்டான, விதவிதமான பேர் தெரியா மரங்கள், புதர்களுக்கிடையே மஞ்சளும், ஆரஞ்சுமாய் குலுங்கும் பூக்கள். பொட்டல்வெளி வருகையில் தொலைவில் ஆங்காங்கே உயர்ந்து கம்பீரம் காட்டும் பனைமரங்கள். இடையிடையே நீர்த்திட்டுகளில், பாறைமுகட்டில் தன் இரைக்காகத் தவம் செய்யும் வெள்ளை நிற நாரைகள். ரயில் பயணத்தில், தெற்கிலிருந்து வட இந்தியா செல்லும் நீண்ட ரயில் பயணங்களில் ஜன்னலின் வழியாக ஓடும் இந்திய மகாதேசத்தின் காடுகளை, கண்குளிரவைக்கும் மரம் செடிகொடிகளை, பள்ளத்தாக்குகளைக் கண்டுகளிப்பது என் நீண்டநாளைய வழக்கம். இந்தமாதிரிப் பைத்தியம் நான் ஒருவன் தான் இந்த நாட்டில் என நினைத்திருந்தேன். எதிரே இப்போது அவர். வேகமாக ஓடி மறையும் மரங்கள், செடி கொடிகளில் லயித்திருந்தார். மனதைக் காட்டில் அலைய விட்டிருக்கிறார் என்பது அவரது கண்களில் தெரிந்தது. சரி, நம்மைப்போல் ஒருவனும் இவ்வுலகில் இருக்கிறான் என்றது மனம்.
ரயில் வேகமிழந்து மெல்ல ஊர்ந்தது. தண்டவாளத்துக்கு அருகே புதுப்புது வேப்பங்கன்றுகள் ஆளுயரத்தில் காற்றில் ஆடியவாறு நின்றிருந்தன. `வேப்பமரக்காடுகள் உண்டானால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது; இவைகளை யாரும் வெட்டிவிடாதிருக்க வேண்டுமே` என்றேன். `பறவை எச்சங்களால் இவைத் தன்னிஷ்டத்திற்கு ஆங்காங்கே முளைத்திருக்கின்றன. வெட்டமாட்டார்கள் . இவை பிழைத்துக்கொள்ளும். வெட்டுவதாயிருந்தால், சிறுபுதரோடு சேர்ந்து அப்போதே வெட்டியிருப்பார்கள்` என்றார். பனைமரங்களைப் பார்த்து ரசிப்பது தனக்குப் பிடிக்கும் என்றார். நான் க்யூபா நாட்டில் பார்த்த பலவகைப் பனைமரங்கள் பற்றி சொன்னேன் – `நெடும்பனை தவிர, கூதல் பனை, குட்டிப்பனை, விசிறிப்பனை என்று கிட்டத்தட்ட 86 வகைப் பனைமரங்கள் அங்கே உண்டு` என்றேன். ஆச்சரியத்தோடு பார்த்தார். பனையைப்பற்றித் தொடர்ந்து பேசினார். பனை ஓலை, பனம்பழம், பனங்கள்ளு என்று விரிவான ஞானம்! நானோ சின்னவயதில் புதுக்கோட்டைக்கு அருகில் கிராமச்சூழலில் வளர்ந்தவன். கிராமத்துப்பசங்களுடன் பக்கத்துக் காடுகளில் இஷ்டத்துக்கு அலைந்து திரிந்த ராபின்ஹூட்! வெட்டவெளியில் பாறைகள், பனைமரங்கள், ஈச்சை, எலந்தை, சூரப்பழப்புதர்கள். ஆகா அந்த நாட்கள். பொன்னாள் அதுபோலே..வருமா இனிமேலே? தண்ணீர் அதிகம் தேவைப்படாத பனையோடு, மூங்கில் காடுகள் வளர்ப்பு, பராமரிப்புப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.
நாக்பூருக்கு அருகே ஒருமணிநேர பஸ் தூரத்தில் ஒரு கிராமத்தில் விசாலமான இடமாக வாங்கிப்போட்டிருக்கிறார். இப்போது சொந்த வீடு கட்டி வசிக்கிறார். முன்பகுதியில் வீடு கட்டி, பின்பக்கத்தில் மிச்சமிருக்கும் 5000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பில் தன் இஷ்டத்துக்குக் காடு வளர்த்திருக்கிறார் இந்த மனுஷன். காம்பவுண்ட் சுவர் இருக்கும் இடத்தில் ஒருபக்கம் பனைமரங்கள், இன்னொரு பக்கம் மூங்கில்மரங்கள் நட்டு வளர்க்கிறேன். உட்பகுதியில், மற்ற மரம்,செடி, கொடிகளை நட்டு 10 வருடமாகப் பராமரித்துவருகிறேன் என்றார். அவர் சொன்ன இன்னொரு விஷயம் சுவாரசியமானது. பனைமரம் போலே, மூங்கில் மரத்திலும் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒருவகை மூங்கிலில் நீளநீளமாய் முட்கள் இருக்கும். அந்த வகை மூங்கில் மரங்களை தன் காம்பவுண்டின் பின்வரிசையில் நட்டு வளர்க்கிறாராம். `பகல் நேரத்தில் விதவிதமான பறவைகள் வரும். ஏதேதோ பழங்கள் – அவருடைய குட்டி வனத்தில் சாப்பிட்டு விளையாடும். இரவு வந்ததும், அந்தக்கடைசி வரிசை முள் மூங்கில் மரங்களில்தான் கூடுகளில் போய்த் தூங்குமாம். காரணமும் சொல்கிறார்: அவருடைய அந்த குட்டிக்காட்டில், பாம்புகள், கீரிகள் போன்ற விஷ ஜந்துக்களும் அவ்வப்போது தென்படும். அவர் அவற்றைக் கொல்வதில்லை; அகற்றுவதில்லை. அவை வசிப்பதற்கும் இடம் வேண்டுமல்லவா? அதே சமயத்தில் கூடு கட்டி முட்டையிடும் பறவைகளுக்கு இந்த ஜீவன்கள் எதிரிகள். பாம்புகள், கீரிகள் மரங்களில் ஏறி கூடுகளிலுள்ள பறவை முட்டை சாப்பிடும் உயிர்கள். இந்த முள் மூங்கில் மரங்களை நாடி அவை வராதாம். `அதனால் தன் கூட்டுக்கும் குஞ்சுக்கும் பாதுகாப்பான இடமாக இந்த முள் மூங்கில் மரங்களை நம்பி கூடு கட்டி வாழ்கின்றன இந்தப் பறவைகள்` என்றார் அவர். எவ்வளவு கனிவு, அக்கறை இருக்கிறது இவரிடம். எவ்வளவு சிறு, சிறு விஷயங்களைக்கூட இவர் கவனித்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமளித்தது.
இடையிடையே ஜன்னல் வழிக் காட்சியில், காட்டுப்பகுதியில் சில இடங்களில் மரங்களை வெட்டியிருப்பது, எரித்திருப்பது தெரிந்தது. மரங்கள் தாறுமாறாய் வெட்டப்பட்டுக் கிடப்பதும், பூமி கருத்துப்போய் சில இடங்களில் இருப்பதும் கண்களில் பட்டு வேதனையை உண்டுபண்ணியது. அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். விலை அதிகமான தேக்கு போன்ற உயர் ரக மரங்களை சட்டத்துக்கு மீறி வெட்டுபவர்களைப் பிடிப்பது, தண்டனைக்கு உட்படுத்துவது மிகவும் ….(தொடரும்)
You are a great writer and Rasigan too………………………………….
LikeLike
எங்களையும் கவர்ந்துவிட்டார் அந்த முகம் தெரியாத மனிதர். IPL பதிவுகளில் கிரிக்கெட் ரசிகரைப் படித்த எங்களுக்கு இப்போது ஒரு வித்தியாசமான ஏகாந்தன் தெரிகிறார். இவரை இன்னும் அதிகமாகப் பிடித்திருக்கிறது!
LikeLike