நேற்று (22-5-15) நடந்த ஈட்டிமுனைப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணியைத் தோற்கடித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எதிர்பார்த்தபடியே படுசுவாராசியமான மேட்ச்சாக அமைந்தது இது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணியை ரன் எடுக்கவிடாமல் நெருக்குவதிலேயே சென்னை குறியாக இருந்தது. ரான்ச்சி மைதானம் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை விரைவிலேயே இறக்கிவிட்டார் தோனி. பொதுவாக அட்டகாசமாகத் தாக்கி ஆடும் க்றிஸ் கேல்(Chris Gayle), அஷ்வினின் பந்துகளுக்கு வெகுவாக மரியாதை கொடுத்து ஆடுவதிலேயே தெரிந்தது -இந்த போட்டியில் அதிக ரன்கள் வர வாய்ப்பில்லை என்பது. அஷ்வினைத் தாக்காது தடுத்தாடினார் கேய்ல். பௌண்டரி, சிக்ஸர் முயற்சிக்காமல் வெறும் 6 ரன்களை சிங்கிள்களில் எடுத்தார் அவர். அந்தப்பக்கம் விராட் கோலி விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதிரடி ஸ்டாரான டி வில்லியர்ஸ் (AB de Villiers) அடுத்து காலியானார். டென்ஷன். அஷ்வினின் 4 ஓவர்களில் பெங்களூரு அணியால் 13 ரன்களே எடுக்க முடிந்தது. இடையில் வந்த மந்தீப் சிங்கை சாதுர்யமாகத் தூக்கி விட்டார் அஷ்வின். டென்ஷன் பில்ட்-அப் ஆக, ஆக, ரசிகர்கள் சீட் நுனியில்.. நகங்கள் பற்களுக்கிடையில்!
அஷ்வினின் பௌலிங் கோட்டா முடிந்தபிறகு சுரேஷ் ரெய்னாவைப் பந்து வீச அனுப்பினார் தோனி. ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த க்றிஸ் கேல், ரெய்னாவின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். மூன்றாவது ஒய்ட் பால்(wide ball). நான்காவது பந்தை சாமர்த்தியமாக முன்னே போட்டு கெய்லை, க்ரீஸுக்கு வெளியே இழுத்தார் ரெய்னா. கேய்ல் ஆவேசமாக முன்வந்து, ரெய்னாவின் தலைக்கு மேலே தூக்க, பந்து மைதானத்துக்கு மேலேயே உயர்ந்து பின் செங்குத்தாக பௌலருக்குப் பின்னால் இறங்கியது. ரெய்னா பின்பக்கமாகப் பெடல் செய்து நிதானமாகப் பிடித்தார் கேட்ச்சை. இந்த விக்கெட்டைத்தான் அதிகம் விரும்பினார் தோனி. ஏனெனில், நிதானமாக விளையாடிய கேய்ல் 41 ரன்களை ஏற்கனவே எடுத்துவிட்டார். அவர் இன்னும் கொஞ்சம் ஓவர் விளையாடினால் சென்னையின் விதியை மாற்றி எழுதியிருப்பார்!
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும், 17-வயது சிறுவனான சர்பராஸ் கானும் (Sarfaraz Khan) சிறப்பாக ஆடி பெங்களூருவின் ஸ்கோரை உயர்த்தினார்கள். சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் காலியானார் கார்த்திக். சர்பராஸ் கான், ஜடேஜா, ஹர்ஷல் பட்டேலின் பந்துவீச்சைத் தாக்கினார். சில அபாரமானபௌண்டரிகளை விளாசினார்.நெருக்கடி நிலைமையைக்கண்டு அஞ்சவில்லை. பின்பகுதியில் இவருடைய ஃபீல்டிங்கும் நன்றாக இருந்தது. இந்தியாவின் எதிர்கால ஸ்டாராக இருப்பாரோ இந்த சர்பராஸ் கான்! அவ்வப்போது விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பெங்களூரு அணியின் கதையை, 139 ரன்களில் முடித்துவைத்தது சென்னை அணி.
140 என்கிற இலக்கைத் துரத்திய சென்னையின் துவக்க ஆட்டக்காரர் டுவேன் ஸ்மித் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. மைக் ஹஸ்ஸி (Mike Hussey) நிதானமாக ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தார். சுரேஷ் ரெய்னா, டூ ப்ளஸீ (du Plessis) ஆகிய சென்னையின் தூண்கள் பெங்களூருவின் தாக்குதலில் நிலைகுலைந்தன. கேப்டன் தோனி வந்தார். நெருக்கடி நிலைமையைப் புரிந்துகொண்டார். இந்தப் பிட்ச்சில். வேகமாகத் தாக்க ஆரம்பித்தால் விக்கெட் பறிபோகும். அடுத்த முனையில் ஹஸ்ஸியை ஆடவைத்து, சிங்கிள்களில் கவனம் செலுத்தி நின்று ஆடினார் தோனி. இருவரும் ஜாக்ரதையாக முன்னேறி 140-ஐ நோக்கி அணியைக் கொண்டுவந்தனர். 56 அபாரமான ரன்கள் எடுத்து அவுட்டானார் ஹஸ்ஸி. கடைசி ஓவரில் தோனி 26 ரன்களில் அவுட். 2 பந்துகளில் ஒரு ரன் என்கிற நிலையில் சென்னக்கு டென்ஷன் ஏறியது. அப்போதுதான் மைதானத்தில் இறங்கியிருந்த அஷ்வின், பட்டேலின் பந்தை முன்வந்து லாவகமாக, லெக்சைடுக்குத் திருப்பிவிட்டார். வெற்றி ரன் கிடைத்தது. சென்னை இறுதிப்போட்டிக்குள் மும்பையை எதிர்கொள்ள நுழைந்தது.
இந்த ஐபிஎல்-லின் இறுதிப்போட்டி மும்பை இண்டியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் முறைத்துக்கொள்ளும் கடும் போட்டியாக அமையும் எனத் தோன்றுகிறது. மும்பையின் துவக்க ஆட்டக்காரர்களான லெண்டல் சிம்மன்ஸ்(Lendl Simmons), பார்த்தீவ் பட்டேல் நல்ல ஃபார்மில் இருப்பவர்கள். கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கல்கத்தா மைதானம் என்றால் வெல்லக்கட்டி. கல்கத்தாவில் ரோஹித்தின் பேட்டிங் பிரகாசித்தால் அது சென்னக்குத் தலைவலி. அம்பத்தி ராயுடு, ஹர்தீக் பாண்ட்யா (Hardik Pandya) அருமையான மத்தியநிலை ஆட்டக்காரர்கள்.போறாக்குறைக்கு இருக்கவே இருக்கிறார் கரன் போலார்டு (Kieron Pollard). அசாத்தியமான தாக்குதல் ஆட்டக்காரர். பின்பகுதியில் இறங்கி மும்பையின் ரன்விகிதத்தை ஒரேயடியாக உயர்த்தும் திறன் உள்ளவர். ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர்கள் மெக்லனகன்(McClenghan), மலிங்கா போன்றவர்கள் மும்பையின் பௌலிங் ஸ்டார்கள். சென்னைக்கு ஏகப்பட்ட சோதனைகளைத் தரவல்ல அணி மும்பை அணி.
நேற்றைய போட்டியில் தடுமாறிய ஸ்மித், ரெய்னா, டூ ப்ளஸீ இறுதிப்போட்டியில் முனைப்பு காட்டி சென்னைக்கு விளையாட வேண்டியிருக்கும். ஜடேஜா பேட்டிங் செய்வது எப்படி என்பதை கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. `பாக்கெட் ராக்கெட்` என்று அழைக்கப்படும் சென்னை ஆல்ரவுண்டர் 20-வயதான பவன் நேகி (Pawan Negi), தன் சிறப்பான திறமையை அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான், ஜடேஜாவுக்கு முன்பாக பேட்டிங் செய்ய இவரை அனுப்புகிறார் தோனி. சென்னையின் முன்னணிப் பந்துவீச்சாளர்களான நேஹ்ரா, அஷ்வின், ப்ராவோ (Bravo) சிறப்பாக பந்துவீசினால், மும்பையைத் திணற அடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. மறக்கக்கூடாத விஷயம் ஃபீல்டிங். இரண்டு அணிகளும் இதனை நினைவில் கொண்டு முனைப்புக் காட்டினால் சிறப்பாக இருக்கும். சென்னையை விட, மும்பை அணிக்கு வெற்றிவாய்ப்பு சற்று கூடுதலாக இருப்பதாகத் தெரிகிறது. நாளை மற்றுமொரு நாளல்லவா? என்ன நடக்கும் ? எம்.எஸ்.தோனியா? ரோஹித் ஷர்மாவா? யார் கையில் கோப்பை? ஞாயிறின் இரவு, மிச்சமிருக்கும் கதை சொல்லும் !
**