ஐபிஎல் 2015: முதல் போட்டியில் கல்கத்தா அணி வெற்றி

இந்த வருட ஐபிஎல் (Indian Premier League)-ன் முதல் மேட்ச் இன்று (08 ஏப்ரல், 2015) மும்பை இண்டியன்ஸ்(Mumbai Indians) அணிக்கும், 2014-ன் ஐபிஎல் சேம்பியனான கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் (Kolkatta Knight Raiders) அணிக்குமிடையே கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்தது. சற்றுமுன், கல்கத்தா அணி மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற கல்கத்தா அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) மும்பை அணியை பேட் செய்ய அழைத்தார். ஆரம்ப முதலே கல்கத்தாவின் வேகப்பந்துவீச்சு மும்பைக்கு நெருக்கடியாக அமைந்தது. உமேஷ் யாதவும்(Umesh Yadav) மோர்னி மார்க்கெலும்(Mornie Morkel) பந்து வீச, ரோஹித் ஷர்மாவும்(Rohit Sharma) ஆரோன் ஃபின்ச்சும்(Aaron Finch) மும்பையின் ஆட்டத்தை துவக்கினர். ரன்கள் வருவது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. 145-147 கி.மீ வேகத்தில் பந்துகள் பாய ரோஹித் அதி ஜாக்ரதையாக ஆடினார். ஆனால் அந்தப் பக்கம் விரைவில் ஃபின்ச் அவுட் ஆனார். கம்பீர் ஸ்பின் வைத்து தாக்க, மும்பையின் ஆதித்யா தாரே (Aditya Tare), ஷகிப் அல் ஹஸனின் (Shakib al Hasan) சுழலில் வீடு திரும்பினார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு(Ambati Rayudu) முதல் ஓவரிலேயே மோர்க்கெலின் எக்ஸ்ப்ரஸ் பந்துவீச்சில் தடுமாறி, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ‘டக்’ எடுத்து வெளியேறினார். மும்பையின் திண்டாட்டம் அதிகரித்தது.

ராயுடுவுக்குப்பின் வந்தார் ஆட வந்தவர் கோரி ஆண்டர்சன் (Corey Anderson). தன் வழக்கத்துக்கு மாறாக, மிக நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். கல்கத்தாவின் ஸ்பின்னர்கள் ஹசனும், பியுஷ் சாவ்லாவும்(Piyush Chawla) நேர்த்தியாக பந்து வீசினர். மீண்டும் சர்வதேசக் கிரிக்கெட்டில் ஸ்பின் போடவந்த சுனில் நரைண்(Sunil Narine), சரிசெய்யப்பட்ட புதிய பௌலிங் ஆக்ஷனுடன் பந்து வீசினார். அவரை யாரும் அடித்து விளையாடவில்லை என்றாலும் அவரிடம் மும்பை விக்கெட்டைப் பறிகொடுக்கவும் இல்லை. ஹசனின் பந்துவீச்சில் இரண்டு கேட்ச்சுகளை நழுவவிட்டது கல்கத்தா. ஆனாலும் அசராது ரன் சேர்த்தனர் ரோஹித்தும் ஆண்டர்சனும். 14 ஓவர்களில் 86 க்கு 3 விக்கெட்டுகள் என மந்தகதியில் சென்ற மும்பையின் ஆட்டம் 15-ஆவது ஓவரில் சூடுபிடித்தது. அதிரடிக்கு கியர் மாற்றிய ரோஹித் ஷர்மா சில அபாரமான சிக்ஸர்களையும் பௌண்டரிகளையும் விளாசி ரசிகர்களுக்கு குதூகலமூட்டினார். ஆண்டர்சனும் வேகத்துக்கு மாறி ரன் விகிதத்தை ஏற்ற, அடுத்த 6 ஓவர்களில் இருவரும் 82 ரன்கள் சேர்த்தனர். 20-ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆண்டர்சன் சிக்ஸர் அடிக்க 168 க்கு 3 விக்கெட்டுகள் என மும்பையின் இன்னிங்ஸ் முடிவடைந்தது. ரோஹித் ஷர்மாவின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து. 4 சிக்ஸர்களுடன் 98 ரன்னெடுத்து நாட்-அவுட் ஆக இருந்தார் அவர். நன்றாக ஆடிய ஆண்டர்சன் 3 சிக்ஸர்களுடன் 55 ரன் எடுத்து அவுட் ஆகாதிருந்தார்.

கல்கத்தாவிற்கு இலக்கு 169 ரன்கள். கல்கத்தா கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பாவுடன் (Robin Uthappa) சேர்ந்து இன்னிங்ஸை துவக்கினார். மும்பை அணியிலிருந்து லசித் மலிங்காவும்(Lasith Malinga), வினய் குமாரும் அடுத்து கோரி ஆண்டர்சனும் வேகப்பந்துவீசினர். ஆரம்பத்தில் ரன் சேர்ப்பதில் தடுமாறியது கல்கத்தா. 9 ரன்னில் கோரி ஆண்டர்சனிடம் ஆட்டம் இழந்தார் துவக்க ஆட்டக்காரர் உத்தப்பா. அடுத்து வந்த மனிஷ் பாண்டே(Manish Pandey) அதிரடிதான் சிறந்தது என நம்புபவர். யோசிக்காமல் விளாசினார். மும்பையின் சுழல்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங்(Harbhajan Singh), ப்ரக்யான் ஓஜா (Pragyan Ojha) இருவரையும் தாக்கி ரன் வேகத்தை அதிகப்படுத்தினார். ஆயினும் 40 ரன்களில் ஹர்பஜனின் சுழலில் பாண்டே ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய இளம் வீரரான சூர்ய குமார் யாதவ் (Surya Kumar Yadav) நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வந்தவுடனேயே மும்பை பௌலர்களின் பந்துவீச்சைப் பதம் பார்க்க ஆரம்பித்தார். அடுத்த முனையில் நன்றாக ஆடிய கம்பீர், ஜஸ்ப்ரித் பும்ராவின்(Jasprit Bumrah) வித்தியாசப் பந்துவீச்சில் வீழ்ந்தார். அவர் சேர்த்த ரன்கள் 57. அவருக்குப்பின் வந்த யூசுஃப் பட்டானுடன் (Yusuf Pathan) சேர்ந்து இலக்கு நோக்கிப் பாய்ந்தார் சூர்யகுமார் யாதவ். 19-ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகள் நஷ்டத்துக்கு 170 ரன்கள் குவித்து கல்கத்தா, மும்பை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

கல்கத்தாவின் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அசாத்திய பேட்டிங் திறமையை இந்த மேட்ச்சில் மீண்டும் கோடிட்டுக் காட்டினார். An exceptional young batting talent – needs to be carefully nurtured for the future. 20 பந்துகளில் 46 ரன்னெடுத்து பிரகாசித்த இவர், 5 சிக்ஸர்களை அனாயாசமாகப் பறக்கவிட்டார். லசித் மலிங்காவை சூர்யகுமார் யாதவ் சர்வசாதாரணமாக மைதானத்துக்கு வெளியே தூக்கிய விதம் இன்றைய ஆட்டத்தின் கண்கொள்ளாக்காட்சி. மற்றுமொரு சிறப்பு மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் glorious lofted shots. From 46 to 98 he raced in a matter of 5 overs. மோர்னி மார்க்கெல் சிறப்பான வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர்.

நாளை(09 ஏப்ரல்) அடுத்த மேட்ச் சென்னை சூபர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையில். சென்னையில் மஞ்சள் வண்ண சிங்கக் கொடி விண்ணைத்தொடுமா?

**

Leave a comment