என்ன ஒரு சந்தோஷமான ஆச்சரியம்! சற்றுமுன் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துவிட்டது. அதுவும் கொஞ்சம் எளிதாகவே!
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இருக்கிறது. கடந்த சிலமாதங்களாக ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றிருந்தது. உலகக்கோப்பை ஆரம்பிக்குமுன் இந்தத் தொடர் தோல்விகளினால் இந்திய வீரர்கள் உடலாலும், மனதாலும் களைத்திருக்கவேண்டும். பொதுவாகவே மோசமான விளையாட்டினால், இந்திய அணி வெளிநாடுகளில் ஒவ்வொரு தொடராகத் தோற்றுவந்தது. இதனால் இந்தியக் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கும்(M.S.Dhoni) அவப்பெயர். போன உலகக்கோப்பை வெற்றியில் இந்தியாவுக்குப் பெரிதும் பங்களித்த டெண்டுல்கர், சேவாக் (Sehwag) போன்ற ஜாம்பவான்கள் இல்லாத இந்த அணி, இந்த உலகக்கோப்பையில் என்ன பெரிதாகக் கிழித்துவிடும் என விமரிசனங்கள் நமது நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் சீறிப்பாய்ந்தன. அதுவும் முதல்போட்டியிலேயே பாகிஸ்தானைச் சந்திக்கும் இக்கட்டான நிலை. High voltage drama. பாகிஸ்தானிடம் அனுபவமிக்க வீரர்களும், சிறந்த புதுமுகங்களும் இருந்தனர். எப்படியிருப்பினும் அவர்களது வேகப்பந்து வீசும் பௌலர்கள் நமது பௌலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்தவர்களே. வெளிநாட்டு மைதானங்களில் நன்றாகவே ஆடிவருகிறது என்கிற போனஸ்பாயிண்ட்டும் பாகிஸ்தானுக்கு உண்டு. இதனால், இந்த முறை உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களும் கூறிவந்தனர்.
ஆனால் இன்று நடந்ததென்ன? என்ன ! பாகிஸ்தான் அணியின் சீறலை, சவாலைச் சிதறடித்து இந்தியா வெற்றி வாகை சூடிக்கொண்டது. இதுவரையில் ஆஸ்திரேலியாவில் சரியாக விளையாடாமல் அசடு வழிந்துகொண்டிருந்த சில இந்திய வீரர்களும், திடீரென உயிரூட்டப்பெற்றவர்கள் போல், சரியான தருணத்தில் மிகவும் உத்வேகத்துடன் அழகாக விளையாடிவிட்டார்கள் இன்று. இதைத்தான் ஆச்சரியம் என ஆரம்பத்தில் சொன்னேன்.
இந்தியாவின், இதுகாறும் தடுமாறிவந்த துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன்(Shikar Dhawan), தான் மறந்திருந்த தன் பேட்டிங் திறமையை இந்த மேட்ச்சில் வெளிக்கொணர்ந்தார். 76 பந்துகளில் 73 ரன். இவரைப்போலவே இதுவரை ஃபார்மில் இல்லாமல் மோசமாகப் பந்து வீசிவந்த இந்திய பௌலர்கள் உமேஷ் யாதவும், முகமது ஷமியும் பாகிஸ்தானுக்கெதிரான இந்த முக்கியமான உலகக்கோப்பை போட்டியில் விழித்துக்கொண்டார்கள்; திறமையாகப் பந்து வீசி பாகிஸ்தானை அடக்கி, இந்தியாவின் கௌரவத்தைத் தூக்கி நிறுத்தினார்கள். இந்திய ரசிகர்களுக்கு மிகவும் நிம்மதி தந்த விஷயம் இது. ஷமி 4 விக்கெட், யாதவ் 2, மோகித் ஷர்மா 2 என்கிற பட்டியல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியிருப்பதைக் காட்டுகிறது. This sudden and welcome transformation of the out-of-form Indian players has given India a facile victory today, over her arch-rival Pakistan. இந்திய வீரர்களின் திறமையும், பங்களிப்பும் இனிவரும் போட்டிகளிலும் இவ்வாறே சிறப்பாக வெளிப்படவேண்டும்
எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பாக ஆடிய விராட் கோலி (Virat Kohli), ஆட்டநாயகனாக திகழ்ந்தார். இந்தியாவின் முதல் மேட்ச்சிலேயே அருமையான சதம். 56 பந்துகளில் 74 ரன்னெடுத்து மைதானத்தைக் கொளுத்திப்போட்ட சுரேஷ் ரெய்னா மறக்கமுடியாத இன்றைய இந்திய கிரிக்கெட் வீரர்.
பாகிஸ்தானிற்கும் இந்தப் போட்டியில் இந்தியாவை எப்படியாகினும் வென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பு. ஒரு படபடப்பு. இன்றைய போட்டியில் அதன் வேகப்பந்து வீச்சு எதிர்பார்த்தபடி சிறப்பாகவே அமைந்தது. 7அடி 2அங்குல உயரப் பனைமரமான முகமது இர்ஃபான் (Mohammed Irfan) என்கிற வேகப்பந்துவீச்சாளரை வைத்து, அனுபவமற்ற இளம் இந்திய வீரர்களை பயமுறுத்தப் பார்த்தது பாகிஸ்தான். ஆனால், பாச்சா பலிக்கவில்லை. இந்திய வீரர்கள் அவரது பந்துவீச்சைப் பாய்ந்து துவம்சம் செய்தார்கள். ஆயினும், பாகிஸ்தானின் சோஹைல் கான், தன் துல்லியமான பந்துவீச்சினால் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களான தோனி, ஜடேஜா, ரஹானே போன்ற வீரர்களைத் திணற அடித்தார். இறுதி ஓவர்களில் அவருடைய பௌலிங் சிறப்பாக அமையாதிருந்தால், இந்தியாவின் ஸ்கோர் 330 வரை சென்றிருக்கும். கடைசி ஓவர்களில் இந்திய வீரர்களைத் துள்ள விடாது கட்டுபடுத்தியது அவர் பௌலிங். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் ஆல்ரவுண்டரான ஷஹீத் அஃப்ரிதி (Shahid Afridi) சோபிக்கவில்லை. அவரது ஸ்பின் பௌலிங்கை சுரேஷ் ரெய்னா தூக்கி அடித்து வானவேடிக்கை நிகழ்த்திவிட்டார். இந்தியாவின் 301 என்கிற இலக்கைத் துரத்துவதில், நிதானமாக ஆரம்பித்த பாகிஸ்தான், அவ்வபோது இந்திய பௌலர்களிடம் விக்கெட்டைப் பறிகொடுத்துவந்தது. திடீரென பாகிஸ்தானின் மிடில்ஆர்டர் விக்கெட்டுகள் இரண்டை உமேஷ் யாதவ் அடுத்தடுத்து வீழ்த்த, பாகிஸ்தானின் மூச்சுத்திணறல் மைதானத்துக்கு வெளியேயும் கேட்டது. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் (Misbah-ul-Haq) சிறப்பாக விளையாடி 76 ரன் எடுத்தார். வேகமாக ரன்னெடுக்கும் முயற்சியில் அவர் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 224 ரன்களில் இந்தியாவின் மிரட்டலுக்குமுன் மரவட்டையாய் சுருண்டது.
கிரிக்கெட் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து ஆறாவது முறையாக வீழ்த்தியுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு இன்றைய தினம் ஒரு பார்ட்டி தினம். கொண்டாடுவோம். இந்திய வீரர்களும் அடுத்த ஞாயிறு வரை கொஞ்சம் இளைப்பாறட்டும். அடுத்துவருவது தெற்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான கனல் பறக்கும் போட்டி. நம்மவர்களின் இளமை வேகமும், இன்றைய அனுபவ விவேகமும் கைகொடுக்கும் என நம்புவோம்.
**
MR AEKAANTHAN i always beleived that you could write like LA SA RAMAMIRTHAM JI…. only your analysis about indian victory is good
LikeLike