வால்..வால்.. கேஜ்ரிவால் !

விளக்குமாறு படம் போட்ட (ஆம் ஆத்மியின் தேர்தல் சின்னம்) வெள்ளைத்தொப்பிகளை அணிந்து கொண்டு மாதக்கணக்கில் வால்..வால் என்று கத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில், ஆட்டோவில் பவனி வந்தவர்கள், பெரும்பாலோர் இளசுகள்- சும்மா வெறுமனே சுத்திச்சுத்தி வரவில்லை டெல்லியை. சமூகத்தின் அடிமட்டத்திற்குச் சென்று, சந்துபொந்துகளிலெல்லாம் போய் ஆம் ஆத்மியுடன் (திருவாளர் பொதுஜனத்தைக் குறிக்கும் ஹிந்தி வார்த்தை) பேசியிருக்கிறார்கள். சராசரி டெல்லிவாசியை ஆம் ஆத்மி கட்சியின்மீது நம்பிக்கை கொள்ளவைத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இன்று டெல்லி அரசியலில் வீசிய ’கேஜ்ரிவால்’ என்கிற கடும்புயல். ஆம் ஆத்மிக் கட்சியின் தாக்குதலில், பிரதானப் போட்டிக் கட்சியான பாரதிய ஜனதாவின் வண்டி தடம் புரண்டு விழுந்துவிட்டது. கடந்த 10 வருடங்களாக டெல்லியை ஆண்ட மகாமகோ தேசியக்கட்சியான காங்கிரஸின் கதி? ஐயோ! ஐயோ! கேட்காதீர்கள். அட்ரஸையோ காணோம் டெல்லியில்! கடைசிச்செய்தி கிடைக்கும்வரை அது இன்னும் கிடைத்தபாடில்லை.

2013-ல் நடந்த இந்திய யூனியன் பிரதேசமான டெல்லியின் 70-சீட் அசெம்பிளிக்கான தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் பண்டிட்டுகளின் கணிப்பையும் மீறி 28 சீட்டுகளை கைப்பற்றி ஒரு அசத்து அசத்தியது. 36 சீட் வென்றால் ஆட்சி அமைத்துவிடலாம் என்கிற நிலையில் பாரதிய ஜனதா (பிஜேபி) வுக்கு 32 சீட்டுகளே கிடைத்தன. மிச்சமிருக்கும் 4 சீட்டுகளின் ஆதரவைப் பெறமுடியாத நிலையில் ஆட்சி அமைக்கமுடியாது என கவர்னரிடம் கைவிரித்தது முதலாம் இடத்தைப் பெற்ற பிஜேபி. வேறுவழியில்லாமல் இரண்டாவது பெரிய கட்சியான ஆம் ஆத்மியைக் கவர்னர் அழைக்க, ஆட்சியைத் தயக்கத்துடன் ஏற்ற கேஜ்ரிவால், வேகவேகமாகத் தன் கட்சி எம். எல்.ஏக்களுடன் அசெம்பிளி வந்து கையிழுத்திட்டார். வெளியே ஓடினார். அசெம்பிளி மெஜாரிட்டி நிரூபிப்பதற்கு ஒருநாள் முன் விறுவிறுவென்று மின்கட்டணத்தை வெகுவாகக் குறைத்து உத்தரவிட்டார். எந்த நேரத்திலும் தங்களை எதிர்க்கட்சிகள் கலைத்துவிடலாம் என்கிற பதற்றத்தில் என்னென்னவோ செய்தார்; காங்கிரஸையும் பிஜேபியையும் சாடினார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த நேரத்தைக்காட்டிலும் வீதியில் கூச்சலிட்டதும், தர்னா செய்ததும் தான் அதிகநாட்கள். தானே தன் கட்சியின் 49- நாள் ஆட்சியை ஒரு முடிவுக்குக்கொண்டுவந்து, விடுவிடுவென ராஜினாமா செய்துவிட்டு ஓரத்தில் போய் நின்றுகொண்டார் கேஜ்ரிவால். அதற்குப்பிறகு அரசியல் வட்டாரங்களில் அவர்மீது வீசப்பட்ட கேலிகள், கிண்டல்கள். (கடந்த வருட பொதுத்தேர்தலின் பிரச்சாரப்போரின்போது 49-நாட்களில் பதவியை ராஜினாமாசெய்து ஓடியதற்காக, அரவிந்த் கேஜ்ரிவாலை ”AK-49” என்று விளாசினார் நரேந்திர மோதி!); பதில் தாக்குதல், பதவியிலிருந்து இறங்கியதற்காக மக்களிடம் கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்கும் படலம் என்று டெல்லி அரசியலின் சுவாரஸ்யமான ஒருவருட காலம் கடந்து சென்றது.

மே 2014-ல் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில், தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா வென்றது. மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. டெல்லி அரசியலில் குறைந்த காலத்தில் பரபரப்பு ஏற்படுத்திய மிதப்பில், தேசியப் பொதுத்தேர்தலில் நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஆர்ப்பரித்த ஆம் ஆத்மி கட்சியோ மண்ணைக் கவ்வியது. நரேந்திர மோதிக்கு எதிராக ஓபன் சேலஞ்சாக இறங்கிக் கோஷமிட்ட கேஜ்ரிவால், நாடெங்கும் வீசிய மோதி அலையில் தலைகவிழ்ந்து ஒளிந்துகொள்ளுமாறு ஆகிப்போனது அப்போது.

இந்தப் பிண்ணனியில்தான் பார்க்கவேண்டும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் இன்றைய ஹிமாலய வெற்றியை. பொதுத்தேர்தலுக்குப் பின் மாநிலங்களில் நடைபெற்ற அசெம்பிளித் தேர்தல்களில் வெற்றி நடை போட ஆரம்பித்திருந்தது பிஜேபி (பாரதிய ஜனதா) கட்சி. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்பார்த்தே அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கிரண் பேதியை முதல்வர் வேட்பாளராகத் தெரிவு செய்து பிரச்சாரம் செய்தது அமித் ஷா தலைமியிலான பிஜேபி. கேஜ்ரிவாலைப்போலவே, கிரண் பேதியும் அன்னா ஹஸாரேயின் இயக்கத்திலிருந்து வெளிவந்தவர். நேர்மைக்குப் பேர்போனவர் என்கிற பிம்பம் பிஜேபியின் தேர்தல் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இருகட்சிகளின் பிரச்சாரத்தில் அனல் பரந்தது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வீடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீர் இலவசமாகத் தரப்படும்; மின்கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும்; இலவச Wi-Fi internet என்றெல்லாம் வாக்குறுதிகளை விசிறி அடித்திருந்தார் கேஜ்ரிவால். அடிமட்ட ஆதரவுகொண்ட ஆம் ஆத்மியின் பெருகிவரும் செல்வாக்கைக் கருத்துக்கணிப்பில் மீடியா படம்போட்டுக் காட்டியது. மீடியாவின் மற்றுமொரு பகுதி “hot and neck and neck race between BJP and AAP” என்று சஸ்பென்ஸ் லெவலை ஒரேயடியாக ஏற்றியது. மாய எண்ணான 36-ஐ நோக்கிய படையெடுப்பில் இரண்டு கட்சிகளும் ஒரேயடியாக நெருக்கிக்கொண்டால், மீண்டும் ’தொங்கு அசெம்பிளி’யாகிவிடுமே என்கிற சாத்தியமும் சில தரப்பிரனரால் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. பிப்ரவரி 7-ல் நடந்த தேர்தல் முடிவுகள் இன்று (10-02-2015) மதியம் அறிவிக்கப்பட்டபோது, டெல்லியின் தேர்தல் சரித்திரம் ஒரேயடியாகப் புரட்டிப் போடப்பட்டுவிட்டது தெரிந்தது. பாரதிய ஜனதாவின் வலிமையை அலட்சியமாகப் புறம் தள்ளி, இந்திய அரசியல் சீனில் நெஞ்சை நிமிர்த்திக் காட்டியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. கிட்டத்தட்ட அந்தக் கட்சியாலேகூட நம்பமுடியாத ஒரு அசுரத்தனமான வெற்றி.70-க்கு 67 சீட்டுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு. பிஜேபி-க்கு 3. காங்கிரஸைக் காணவில்லை!

ஒரேயடியாக வெற்றிபோதையில் குதிக்காமல், அடக்கத்தோடு கொண்டாடுமாறு கேஜ்ரிவால் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக மீடியா இன்று மாலை கூறியது. இன்றைய மாலையில் இருந்து, டெல்லி நகரமே பட்டாசுச் சத்தத்தில் அதிர்ந்துகொண்டிருக்கிறது. ஸ்வீட் ஷாப்புகளில் லட்டுகள் நல்ல விற்பனை. இதனை எழுதும் இந்த இரவு நேரத்தில் கேட்கும் சத்தம் ஆம் ஆத்மித் தொண்டர்களின் கொண்டாட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறது. Surely, time for celebrations for AAP. But miles to go for Arvind Kejriwal. 49-நாள் ஆட்சியின்போது நடந்தது போன்ற பார்லிமெண்ட்டின் முன் தர்னா, ஜனதா தர்பார் என்கிற நாடக அரங்கேற்றம், மத்திய அரசை ஓயாது குறைகூறுதல், போலீஸுடன் தகராறு போன்ற கேலிக்கூத்துக்களை எல்லாம் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி தவிர்த்தால் அதன் பரிணாம வளர்ச்சிக்கு நல்லது. நல்லாட்சியில், மக்கள் சேவையில் கவனம் செலுத்துமேயானால், ஆம் ஆத்மி கட்சி வரவிருக்கும் உத்திரப்பிரதேச அசெம்பிளித் தேர்தலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும். எதிர்வரும் சில வருடங்கள் கேஜ்ரிவால் செயல்வீரரா இல்லை வெறும் வெத்துவேட்டா என்பதை டெல்லி வாசிகளுக்கு உறுதிப்படுத்திவிடும். அதுவரை பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் கன்னத்தில் கைவைத்துக் காத்திருக்கவேண்டியதுதான்.

**

2 thoughts on “வால்..வால்.. கேஜ்ரிவால் !

Leave a comment