அடர்ந்து பரந்த விருக்ஷத்தின்
அடியில் விழுந்து கிடந்தது அந்தக் கிளை
துண்டிக்கப்பட்டு விழுந்தபின்னும் தன்
துணையால்தான் மரம் நிற்கிறது
வாழ்கிறது என நினைத்துவைத்தது
காற்று வெயில் நாளெல்லாம் அலைக்கழிக்க
காய்ந்து காய்ந்து விறகாகிப்போனது
இருந்தும் மரத்தை நோக்கும்போதெல்லாம்
நானிருக்கும் தைரியத்தில்தான் நீ இருக்கிறாய்
என்பதாக நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டது
விறகு பொறுக்கும் சிறுவன் ஒருநாள் தென்பட
விதிர்விதிர்த்தது வியர்த்தது கிளைக்கு
பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல்
மரத்தைப் பார்த்துத் தைரியம் சொல்லலானது
உன்னைவிட்டு அகன்றுவிடுவேன்
இன்றோ நாளையோ எரிந்து விடுவேன்
நான் போய்விட்டால் நடுங்காதே கலங்காதே
நிலைகுலைந்து நாளெல்லாம் வாடாதே
நிமிர்ந்து நில் கோழையாக இராதே
அஞ்சினால் வாழ்க்கையில்
எஞ்சுவது ஏதுமில்லை என்றெல்லாம் சொன்னது
மேற்கொண்டு கதைக்க அவகாசம் தராது
நெருங்கிய சிறுவன் அதனைத் தூக்கினான்
வாகாக முறித்துக் கட்டாகக் கட்டினான்
தலையில் வைத்தான்
நடந்தான் மறைந்தான்
நெடிதுயர்ந்த தாய்மரம்
நிஷ்டையில் ஆழ்ந்திருந்ததோ?
அமைதியை அடியோடு அசைக்க எண்ணி
அடர்ந்திருண்ட கிளையொன்றில்
அமர்ந்திருந்த கருங்குயில்
குக்கூ … என ஆரம்பித்தது மிருதுவாக !
**
Good one. Hope all well with you and with the family. I will be returning to CBE end of this month. shall contact you once in India. best regards, Jerald
LikeLike
👌👌
LikeLike
அன்பு பாண்டியன், உங்கள் பின்னூட்டம் சரியாகத் தெரியவில்லை(அச்சுரு ப்ரச்னை). தயவுசெய்து திருப்பி எழுதவும். நன்றி
-ஏகாந்தன்
LikeLike
அருமையான ஒரு சிறு கதை!
LikeLike
அருமை
LikeLike