என்னத்தச் சொல்ல! இப்ப்டித்தான் இருக்கு நம்ப கிரிக்கெட் டீமின் கத!
தென்னாப்பிரிக்காவிடம் பட்ட அடியிலிருந்து இன்னும் விடுபட்டபாடில்லை நமது டீம். ஒரு சைக்கலாஜிக்கல் மைண்ட்செட்டில் தடவிக்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவையாவது மிகவும் வலுவான அணி எனச் சொல்லலாம். ஒருநாள் தரவரிசையில் முதலாவது இடத்தில் இருந்த இந்திய அணி, எட்டாவது இடத்திலிருக்கும் நியூஸிலாந்திடம் முட்டுப்பட்டுக் கீழே விழுந்து இப்படித்தான் கால், கையை உடைத்துக்கொள்ள வேண்டுமா என்ன? இதில் கரண்ட் உலக சாம்பியன் என்கிற பதக்கம் வேறு நமது கழுத்தில் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது. எகிறும் வேகப்பந்துகளை எதிர் கொள்ள முடியவில்லை நமது பேட்ஸ்மன்களால். குறிப்பாக நமது இளம் துவக்க ஆட்டக்காரர்களால். துவக்க ஆட்டக்காரர்களே அடிக்கடி துவண்டு விழுந்தால், மிட்டில் ஆர்டர் என்ன செய்யும்? விராட் கோஹ்லி, மகேந்திர சிங் தோனி இவர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மன்கள் நியூஸிலாந்துக்கு டூரிஸ்ட் விசாவில் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஐந்திலுமா இப்படி வழிய வேண்டும்?
நமது வேகப்பந்துவீச்சு பற்றிப் பேசுவதற்கு ஏதுமில்லை. அப்படி ஒரு பந்துவீச்சு நம்மிடம் இருக்கிறதா என்பதே ஒரு கேள்விக்குறிதான். வீசும் காற்று, வேகமாக எகிறும் பந்து என ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் தோதாக அமைந்திருந்தும், நமது பந்துவீச்சாளர்களால், லைன், லென்த் சரியாகப் பிடித்துப் பந்து போடமுடியவில்லை. யார்க்கர் போடத் துப்பில்லாமல், ஃபுல் டாஸையும், ஹாஃப் வாலிகளையும் வாரி வழங்கி நியூஸிலாந்து ஒவ்வொரு மேட்சிலும் 300-தாண்டக் கடுமையாக ஒத்துழைத்தார்கள் நமது வேகப்பந்து வீச்சாளர்கள். ஓரளவுக்கு புவனேஷ்வர் குமாரும், கடைசி மேட்சில் வருண் ஆரோனும் பரவாயில்லை.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் உலகக் கோப்பை நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா மைதானங்களில்தான் நிகழவிருக்கிறது. இந்தமாதிரி சொதப்பல் பேட்ஸ்மன்கள், திசை தெரியா பந்துவீச்சாளர்கள் துணையுடன் நமது டீம் உலகக் கோப்பையில் இறங்கினால் என்ன ஆகும்? பரிதாபமான காட்சி ஒன்று கண்முன் தோன்றி மறைகிறது. தவிர்க்க முடியாத அவமானம்தான் நமக்காகக் காத்திருக்கிறதா?
* * *